Sunday, July 28, 2013

Cross My Heart - பிரெஞ்சு திரைப்படம் - சிறுவர்களின் அகவுலகம்



La fracture du myocarde - பிரெஞ்சு திரைப்படம் சிறுவர்களுக்கிடையே நிலவும் அற்புதமான தோழமையைப் பற்றி பேசுகிறது.

பெரியவர்கள், தாமே சிறுவர்களின் உலகை கடந்து வந்தவர்கள்தாம் என்றாலும் கூட கடந்து வந்த பிறகு சிறுவர்களின் உலகை புரிந்து கொள்ளவோ கணிக்கவோ தவறி விடுகிறார்கள். அவர்களுக்குள் நிரம்பியிருக்கும் அனுபவம், சிறுவர்களின் உலகிலுள்ள அறியாமையுடன் கூடிய களங்கமற்ற தன்மையை புரிந்து கொள்ள விடாமல் தடுக்கிறது. மாறாக சிறுவர்கள் பெரியவர்களை எத்தனை அற்புதமாக புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிய ஆச்சரியமாகவும் இருக்கிறது.

தகப்பன் யார் என்று அறியாச் சிறுவன் மார்ட்டின். படத்தின் துவக்கத்திலேயே அவனுடைய தாய் இறந்து விடுகிறார். தாம் அநாதை என்பது வெளிப்பட்டு விட்டால் அதற்குரிய விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு விடுவோம் என்பதால் வெளியுலகத்திற்கு தெரிவிக்காமலேயே இருக்கிறான். இதை அறிந்து கொள்ளும் அவனுடைய பள்ளி நண்பர்கள் பிணத்தை யாருக்கும் தெரியாமல புதைத்து விட்டு மார்ட்டினுக்கு மிக ஆதரவாக இருக்கிறார்கள். அவனுடைய தாய் இறந்து போனது வெளியுலகிற்கு தெரியாமல் மிக சாமர்த்தியமாக சமாளிக்கிறார்கள். அதுவரை பள்ளியில் மந்தமாக இருந்த மார்ட்டின் அதிக மதிப்பெண் பெற உதவுகிறார்கள். ஆனால் படத்தின் இறுதியில் உண்மை வெளிப்பட்டு மார்ட்டின் ஆதரவற்றோர் பள்ளியில் சேர்க்கப்பட்டு விடுகிறான். நண்பர்கள் அவனை சந்தித்து விட்டு சோகத்துடன் திரும்புவதுடன் படம் நிறைகிறது.

Cross My Heart எனும் திரைப்படத்தைக் காணும் போது இது ஒரு திரைப்படம் எனும் உணர்வே நமக்கு வருவதில்லை. அந்த அளவிற்கு நேர்த்தியான இயக்கமும் சிறுவர்களின் பங்களிப்பும் இப்படத்தில் நிரம்பியுள்ளது. மார்ட்டினாக நடித்திருக்கும் சிறுவன் இறுதிவரை தம்முடைய இறுக்கமான மனநிலையை கைவிடுவதில்லை. இப்படியாக ஒவ்வொரு நண்பர்களுக்கும் உள்ள தனித்தன்மை மிக கச்சிதமாக உருவாக்கப்பட்டு அதே நிலையில் நடித்திருக்கிறார்கள். அவர்களுக்குள் உள்ள நட்பு, ரகசியமான காதல், திருட்டுத்தனங்கள், அந்த வயதிற்கேயுரிய பிரத்யேக குணங்கள் போன்றவை மிகத் திறமையாக பதிவாக்கப்பட்டிருக்கின்றன.

குழந்தைகள் நம்மை மிகவும் விரும்புகிறார்கள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இது ஒரளவில் உண்மை என்றாலும் மறுபுறம் நம்மை எந்த அளவிற்கு வெறுக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்வதில்லை அல்லது புரிந்து கொள்ள விரும்புவதில்லை. கீழே இறங்கி அவர்களின் உலகிற்குள் உள்ளே நுழையாமல் இந்த மனத்தடையை தாண்டிவர முடியாது என்பதும் இந்தத் திரைப்படத்தில் அற்புதமாக பதிவாகியிருக்கிறது. 


 பொதுவாகவே பிரெஞ்சுத் திரைப்படங்கள், சிறுவர்களின் அகவுலகை மிக நுட்பமாகவும நேர்த்தியாகவும் பதிவாக்குகின்றன. The 400 Blows, The kid with a Bike  போன்ற திரைப்படங்கள் உடனடி நினைவுக்கு வருகின்றன. நம்முடைய தமிழ்த் திரைப்படங்களில் செயற்கையான புத்திசாலித்தனத்துடன் உருவாக்கப்படும், பெரியவர்களை மிமிக்ரி செய்யும் குழந்தைகளை இதில் காண முடிவதில்லை. மாறாக அவர்களின் வயதுக்கேயுரிய யதார்த்தமான மனநிலையுடன்தான் இயங்குகிறார்கள். குடும்பம், பள்ளி போன்ற நிறுவனங்கள் எத்தனை அபத்தமான சட்டதிட்டங்களை போட்டிருக்கின்றன என்பதும் சிறுவர்கள் எத்தனை புத்திசாலித்தனத்துடன் தங்களின் வழியில் அதை அணுகுகிறார்கள் என்பதையும் இத்திரைப்படத்தில் காண முடிகிறது.

யாருமே அறியாமல் எப்படி சிறுவர்களால் ஒரு பிணத்தை புதைக்க முடியும் என்கிற 'பெரியவர்களின்' கேள்விகள் எழுப்புகிற நம்பகத்தன்மையைத் தவிர இத்திரைப்படம் மிக இயல்பாகவும் யதார்த்தமாகவும் இயங்குகிறது.

இறுதிக் காட்சியில் ஆதரவற்றோர் பள்ளியில் சேர்க்கப்படும் மார்ட்டின் தன் நண்பர்களிடம் சொல்லும் ஒரு வசனம் அற்புதமானது. "நான் adult ஆகி விட்ட பிறகு சுதந்திரமாக இருப்பேன். அப்போது சந்திப்போம். ஆனால் அப்போது நாம் இதே மாதிரி இருப்போமா என்று தெரியாது". ஆம். பெரியவர்களாகி விட்ட பிறகு  நட்பு உட்பட, எவ்வித பிரதிபலனையும் எதிர்பார்க்காத எந்தவொரு செயலையும் நாம் பெரும்பாலும் செய்வதில்லை.

suresh kannan

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லது... ஊரில் திரையிடுகிறோம்... நன்றி... வாழ்த்துக்கள் பல...