Tuesday, December 18, 2012

Amour / French / வயோதிக காதலும் துயரமும்



தீயணைப்பு வீரர்கள் அந்த வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைகிறார்கள். துர்நாற்றம். படுக்கையறையில் ஒரு கிழவியின் பிணம். மலர்களால் நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.

Flashback -ல் படம் பயணிக்கிறது. Georges மற்றும் Anne வயதான தம்பதிகள். தனியாக வாழ்கிறார்கள். திருமணமாகி வேறு இடத்தில் வசிக்கும் மகளும் இவர்களுக்கு உண்டு. தம்பதிகள் பரஸ்பர அன்புடன் வாழ்கிறார்கள். அதிலும் Georges, Anne மீது இன்னமும் தீவிரமான காதலுடன் இருக்கிறார் என்பது அவருடைய கண்களிலும் உடல் மொழியிலும் தெரிகிறது. ஒருநாள் கிழவி, இவருடைய கேள்விக்கு பதிலளிக்காமல் சில நிமிடங்கள் உறைந்து அமர்கிறார். 'என்ன விளையாடி பயமுறுத்துகிறாய்?" என்று கோபப்படுகிறார் கிழவர். பிறகு நிகழும் மருத்துவ ஆய்வில் மூளை நரம்புகளில் ரத்தம் உறைந்திருப்பது தெரிகிறது. மருத்துவ சிகிச்சைக்குப் பின் ரொம்பவும் பயந்து விடுகிறார் கிழவி. "இனிமேல் என்னை மருத்துவமனைக்கு செல்ல கட்டயாப்படுத்தாதே" என்று வேண்டிக் கொள்கிறாள். அறுவைச் சிகிச்சை கோளாறாகி முடக்குவாதம் ஏற்பட்டு சக்கர நாற்காலியில் முடங்குகிறாள் கிழவி. ஒரு குழந்தையைப் போல அவளின் அனைத்து தேவைகளையும் வீட்டிலேயே அன்புடன் பூர்த்தி செய்கிறார் கிழவர். 'மருத்துவனைக்கு கொண்டு செல்லாமல் என்ன பைத்தியக்காரத்தனம் இது?" என்று கோபிக்கிறாள் மகள்.

தானே ஒரு வயதானவராய் இருந்தாலும் கிழவியை மிக பொறுமையாக கவனித்துக் கொள்ளும் கிழவரின் பொறுமைக்கு சோதனை ஏற்படுகிறது. அவர் எடுக்கும் விபரீதமான முடிவு என்ன என்பதை திரையில் காணுங்கள்.

பெரும்பாலும் அனைத்துக் காட்சிகளும் ஒரு வீட்டிற்குள்ளேயே நிகழ்கின்றன. அதிலும் ஒரு கிழவர் மற்றும் கிழவியின் நடமாட்டங்கள் மாத்திரமே. அவுட்டோர் காட்சிகளே கிடையாது. மறுபடியும் மறுபடியும் ஒரே பின்னணியையும் நபர்களையும் காட்ட வேண்டிய நிர்ப்பந்தம், இயக்குநருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் சவாலை முன்வைக்கும் வேலை. அவர்கள் திறமையாக சமாளித்திருந்தாலும் சில காட்சிகள் எடிட் செய்யப்பட்டிருக்கலாமோ என்னுமளவிற்கு மிக மிக நிதானமாக, சாவகாசமாக காட்சிகள் நகர்கின்றன. 

ஆனால் அந்த அதிர்ச்சியான உச்சத்தை நோக்கி இயக்குநர் நம்மை மெல்ல மெல்ல நகர்த்திச் செல்வதால்தான் அந்தக் காட்சி பளீரென்று நமக்குள் உறைக்கிறது. என்னால் அந்த உச்சக்காட்சியை முன்பே யூகிக்க முடிந்தாலும், எந்த மாதிரியானதொரு காட்சிக் கோர்வையில் அதை இயக்குநர் நிகழ்த்த விரும்புகிறார் என்பதில்தான் அவருடைய மேதமை நமக்கு விளங்குகிறது. ஒரு காட்சியில் நீரருந்த மறுத்து அடம் பிடிக்கும் கிழவியை எதிர்பாராத தருணத்தில் அறைகிறார் கிழவர். நமக்கு வலிக்கிறது.

எந்த இடத்திலும் நாம் ஒரு திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்கிற உணர்வே ஏற்படாது. அந்தளவிற்கு மிக யதார்த்தமாக, இயல்பாக அந்த தம்பதிகளின் நெருக்கமும் அன்பும் அன்னியோன்மும் வெளிப்படுகிறது. இரண்டு பேருமே அற்புதமாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக நோய்வாய்ப்பட்டு மரணத்தை நோக்கி பயணிக்கும் கிழவியின் ஒப்பனை அந்த நோயின் வளர்ச்சி நிலைக்கேற்றவாறு மாறுவது அற்புதமாக இருக்கிறது. படம் மிக நிதானமாக நகர்வதால் சாவகாசமான மனநிலையில்தான் பார்க்க வேண்டும்.

கிழவி மிக மோசமாக நோய்வாய்ப்பட்டிருப்பதாக காட்டப்படும் அடுத்த காட்சியில் ஆரோக்கியமான கிழவி, பியானோ வாசிப்பதாக காட்டப்படுகிறது. கிழவி சுகமாகி விட்டாளோ என்று கூட தோன்றியது. ஆனால் சற்று தூரத்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கும் கிழவரின் அகம் தொடர்பான காட்சிப்பிழை என்பது பிறகு புலனாகிறது. இறுதிக் காட்சியின் முன்னோட்டமாக இதைக் கொள்ளலாம். ஜன்னலில் வந்து அமரும் புறாவை முதலில் துரத்தும் கிழவர், பிறிதொரு காட்சியில் பிடிக்க முயல்வதும் கிழவருடைய மனநிலையின் அடையாளங்களே. அனைத்தையும் ஒரு குறிப்பாக கிழவர் எழுதிக் கொண்டிருக்கிறார் என்பது பின்னர் புலனாகிறது.

பூட்டப்பட்ட அறையில் கிழவியின் பிணம்.. கிழவர் என்ன ஆனார்? ...

யாருக்குத் தெரியும்...?
கான் திரைப்பட விழா உள்ளிட்ட பல திரைவிழாக்களில் விருது பெற்ற திரைப்படமிது. 10வது சென்னை சர்வதேச விழாவில் துவக்க திரைப்படமாக திரையிடப்பட்டது. The Piano Teacher, The White Ribbon  உள்ளிட்ட பல சிறந்த திரைப்படங்களின் இயக்குநரான Michael Haneke இதை இயக்கியுள்ளார்.
suresh kannan

3 comments:

www.rasanai.blogspot.com said...

dear suka
i would like to conversate about this film with you in personal.
i may disagree with you i think.
the impact was forced artificially and it was neither substantiated nor made me feel sympathetic. upto that point i liked the movie and a big NO after that. hope my understanding of life and its value may differ because of society and circumstance. hope you may remember the gandhiji and diseased calf story. will meet you at the festival.
anbudan
sundar g rasanai chennai

www.rasanai.blogspot.com said...

dear suka
forgot to mention my earlier email to you. my contact no. is there in the mail. you can call me and we will talk about all the films at CIFF 2012
thanks
anbudan
sundar g rasanai chennai

Tamil Newspaper said...

நல்ல விமர்சனம்
பகிர்ந்தமைக்கு நன்றி.