Monday, December 03, 2007

லா.ச.ரா ஓர் ஆமை...

லா.ச.ரா இறந்து போனதாக அறிந்து கொண்ட போது எனக்கு அதிர்ச்சியாகவெல்லாம் இல்லை. வயதான, நோயின் வாதையில் துயருற்றுக் கொண்டிருந்த "எப்ப வேணா செய்தி வரும்" என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஊரிலிருந்த தாத்தா ஒருவரின் மரணச் செய்தியை அறிந்து கொண்டாற் போல்தான் இருந்தது. வயதானவர்கள் இந்து பத்திரிகையின் sports page-ல் வெளியாகும் சாவு வரி விளம்பரத்தில் தனக்கு அறிமுகமானவரின் பெயரைக் கண்டவுடன் விடும் பெருமூச்சு போல்தான் அது.

எனக்கு முதன் முதலில் வாசிக்க கிடைத்த நூல் சிந்தாநதி. அவருக்கு சாகித்ய அகாடமியைப் காலந்தாழ்ந்தேனும் பெற்றுத்தந்த சுயசரிதையிலான நூல். அவருடைய பிறந்த ஊரான லால்குடியின் மண்ணை நுகரும் பரவசத்தையும் பெருந்திருவின் தரிசனத்தையும் வாசகனும் அடையும் உணர்வை ஏற்படுத்தித் தந்தது. பிறகு அவரின் நூல்களை தேடிப்பிடித்து படிக்க ஆரம்பித்தேன். "கண்ணாடியில் பிம்பம் விழும் சத்தத்தை" வாசகனும் கேட்கும் அளவிற்கு நுண்ணியமான படைப்பு நாளடைவில் எனக்கு சலிப்பைத்தந்தது. வெறும் அழகியலை மாத்திரம் பிரதானப்படுத்தி எழுதுவதில் எனக்கு இன்றளவும் உடன்பாடு கிடையாது. சமூகப் பிரச்சினைகளை எதிரொலிக்காத எந்தவொரு எழுத்தாளின் படைப்பு தரத்தின் அடிப்படையில் உச்சியில் இருந்தாலும், பிரச்சினைகளை சாதாரண மொழியல் வீர்யமாக எதிரொலிக்கிற ஒரு இளம் படைப்பாளியின் படைப்புதான் என்னளவில் சிறந்தது. ஜெயமோகன் எழுதின "நினைவின் நதியில்" நூலில் சுந்தர ராமசாமி லா.ச.ராவைப் பற்றிக் கூறும் போது "அவர் கதையில் எப்போதும் அம்பாள் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு உலாத்திக் கொண்டிருப்பார்" என்கிற மாதிரியான (சரியான வரிகள் நினைவில் இல்லை) குறிப்பைப் படித்ததும் தொடர்ந்து ஐந்து நிமிடங்களாவது சிரித்துக் கொண்டிருந்தேன்.

தீராநதி (டிசம்பர் 2007) இதழில் ந.முருகேச பாண்டியனின் "லா.ச.ரா என்ற கலைஞனின் உச்சமும் வீழ்ச்சியும்" என்ற கட்டுரையின் பெரும்பான்மையான பகுதிகளுடன் நான் உடன்படுகிறேன்.

... 'சின்ன வயதில்' அவருடைய நடையின் கவர்ச்சியில் பிரமித்துக் கிடந்ததாகவும், பிறகு சலிப்பேற்பட்டு விலகிவிட்டதாகவும், இந்த மாதிரியில், தமது 'வளர்ச்சி' பற்றிய பெருமிதத்தை சொல்வோர் சிலர் உண்டு'. - இது அதே இதழில் கவிஞர் அபி எழுதின அஞ்சலிக் கட்டுரையில் கண்டது.


()

உயிர்மை (டிசம்பர் 2007) இதழில் இந்திரா பார்த்த சாரதி எழுதின அஞ்சலிக் கட்டுரையின் சுவையான ஒரு பகுதியை கீழே குறிப்பிட்டிருக்கிறேன். (நன்றி: உயிர்மை)

.............லா.ச.ராவுக்கு ஆங்கில இலக்கியத்தில் நல்ல தேர்ச்சி இருந்தது. வர்ஜினா வுல்·பைப் பற்றியும், ஜேம்ஸ் ஜாய்ஸைப் பற்றியும் அவரால் மணிக்கணக்கில் பேச முடியும். தமிழ் சித்தர் நூல்களை அவர் நன்கு கற்றறிந்தார் என்பது அவர் பேசுவதினின்றும் விளங்கும். முதலில் ஆங்கிலத்தில்தான் எழுதத் தொடங்கியதாக அவர் என்னிடம் கூறினார். தமிழில் எழுத ஆரம்பித்ததும் அவருக்கு இம்மொழியில் இருந்த லாகவம் அவருக்கே முதலில் ஆச்சரியத்தைத் தந்ததாம். அவர் வாக்கின் உபாசகர். ஒவ்வொரு சொல்லையும் அதன் பொருள் ஆழத்துக்குச் சென்று அதை வெளிக் கொணர்ந்து தம் படைப்பில் அர்ப்பணிக்கும் நிர்வாகம் அவர் இலக்கியத்தின் பலம். படிக்கும் போது, அது பிரவாகமாகப் பெருக்கெடுத்துப் பாய்வது போல் தோன்றினாலும், அது அவரைப் பொருத்த வரையில் பகீரதப்பிரயத்தனம். "நீ, ஜானகிராமன் எல்லோரும் அடுப்பிலிருந்து உடனே இறக்கிச் சுடச்சுட பத்திரிகைகளுக்கு அனுப்ப முடிகிறது. என் சமையல் நேரந்தான் ஆகும். தவம் பண்ணாத்தான் சரியான வார்த்தை வந்து விழும். நான் உங்க மாதிரி முயல் இல்லே. ஆமைதான்!" என்றார் ஒரு சமயம். "கடைசியிலே ஆமைதான் ஜெயிக்கும், அப்படித்தானே?"... என்று நான் சொன்னதும் சிரித்துக் கொண்டே என்னைக் கட்டிக் கொண்டார். ஸ்பரிஸம் அவர் உரையாடலின் முக்கிய அம்சம்.

'லா.ச.ரா ஒரே கதையைத்தான் திரும்பத்திரும்ப வெவ்வேறு வகையாக எழுதுகிறார்' என்று கு.அழகிரிசாமி 'தீபத்தில்' ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். நான் அவரை இதுபற்றிக் கேட்டேன். அவர் சிறிது நேரம் மெளனமாக இருந்து விட்டு பிறகு புன்னகையுடன் சொன்னார்:

"நான் யாருக்கும் கதை சொல்லணும்னு கங்கணம் கட்டிண்டு எழுதலியே! நான் எனக்கு நானே பேசிக்கறேன். ஒட்டுக் கேக்கறதும் கேக்காமெ இருக்கறதும் உங்க இஷ்டம்."

"அப்படின்னா, உங்களுக்கு வாசகனைப் பத்திக் கவலையே கிடையாதா?"

"கொள்வார் இருந்தால் கொள்ளட்டும்"

"வள்ளலார்" என்றேன் நான். ..............

()

2 comments:

Anonymous said...

Neenga solrathu unmai thaan. Avaroda ezhuththu nadaiyum vaarthaigala payan paduthura vithamum alaathi thaan. Aanal salippum erpadum atheiye padikkum pothu. Sparisam, jananam intha mathri vaarthaigal nan payanpaduththa avara padichathu thaan kaaranam nu kooda sollalam.
Ambal thalaiya virichchu pottu aadurathu.... antha comment enakkum nagaisuvaiya thaan irukkum.

Natpirku iniyal.

Balaji said...

Repeating or not, I think he is one of the best writers in Tamil.