Thursday, September 08, 2005

பிரியசகி

கடந்த வாரத்தில் ஒரு நாள் ஒரு இணைய நண்பர் என் வீட்டிற்கு தொலைபேசினார். "சுரேஷ் கண்ணன் இருக்காரா?" அந்த 'இருக்காரா' என்பதில் ஏதோ ஒரு வித்தியாசமும் அழுத்தமும் தெரிந்தது. ''நான் தான் பேசறேன்" என்றேன். "இல்லைங்க. ரொம்ப நாளா உங்களை பிளாக் பக்கம் காணோம். அதுவுமில்லாம காலை பேப்பர்ல உங்க பேர் போட்டு ஒரு ஆபிச்சுவரி விளம்பரம் வேற பாத்தேன். அதான் எதுக்கும் விசாரிச்சுருவோமேன்னு..... என்று இழுத்தார்.

அடப்பாவிகளா! சினிமா உலகில் ஒரு விஷயம் சொல்வார்கள். தூங்கும் போது கூட காலை ஆட்டிக் கொண்டே தூங்கச் சொல்லி. இல்லையென்றால் இறந்துவிட்டதாக சொல்லி புதைத்துவிடுவார்களாம். இணையத்திலும் அதே கதையாக இருக்கவே, அடித்து பிடித்து ஏதோ ஒன்றை எழுதி என் 'இருப்பை' தெரிவிப்பதற்காக இந்த அவசர 'சினிமாப் பார்வை' பதிவு.

பிரியசகி

Image hosted by Photobucket.com


இந்த மாதிரி கதையமைப்பை கொண்ட படங்களை நாம் பழைய படங்களில் நிறைய பார்த்திருக்கிறோம். ஏழை கதாநாயகனுக்கும் பணக்கார கதாநாயகிக்கும் எப்படியோ காதல் ஏற்பட்டு (சினிமாவைப் பொறுத்தவரை காதல் ஏற்படுவதற்கு எந்த எழவு காரணமும் தேவையில்லை. தடுக்கி விழப்போன நாயகியை வேலை வெட்டி இல்லாமல் அவள் பின்னாலேயே மூத்திரம் குடித்த மாடு சுற்றிக் கொண்டிருக்கும் காதலன் தாங்கிப்பிடிக்க பின்னணியில் 'நம்தன நம்தன' என்று பின்னணியில் இசை ஒலிக்க அடுத்த விநாடியே பட பட்ஜெட்டைப் பொறுத்து பிலிப்பைன்ஸிலோ அல்லது பிலிம்சிட்டியிலோ டூயட் பாட .......... காதல் உதயமாகிவிடும்.) கல்யாணமாகி எல்லாவித பாலியல் தேவைகளையும் பரஸ்பரம் தீர்த்துக் கொண்ட பிறகு அவர்களின் நாசூக்குகள் கழன்று போய் அசிங்கமான சுயரூபங்கள் வெளியாகி சண்டை ஏற்பட்டு பிரிந்து போய் அவர்களின் குழந்தைக்கு வில்லனின் மூலம் ஏதேனும் சங்கடம் ஏற்பட்டு அதன் காரணமாக இருவரும்....... நிறைய படங்களை இதுமாதிரி பார்த்திருக்கிறோம்தானே?

கதாநாயகன் என்றால் முத்துராமனோ, சிவகுமாரோ. திமிர்பிடித்த கதாநாயகிக்கு ஜெயசித்ராவோ அல்லது வாணிஸ்ரீயோ. வில்லி மாமியாருக்கு சி. சரஸ்வதி. அவருக்கொரு அப்பாவி புருஷன். (சகஸ்ரநாமம் அல்லது எஸ்.ராகவன்) இப்படியாக casting இருக்கும்.

இதே மாதிரி கதையமைப்பை பிட்சா மாதிரி அலங்காரம் செய்து நவீனப்படுத்தி கொடுத்திருக்கிறார் இயக்குநர் அதியமான்.

()

மாடலிங் விஷயமாக சென்னையிலிருந்து துபாய் வந்திருக்கும் சதாவை பார்த்த மாத்திரத்திலேயே காதல் கொண்டு விடுகிறார் மாதவன். தன்னைச் சுற்றுகிறவனை விட அலட்சியப்படுத்துபவனையே பிரதானப்படுத்தி நோக்குகின்ற பெண்களின் அடிப்படை குணத்தை நன்கறிந்த மாதவன் சதாவின் தோழியிடம் மட்டுமே பேசி சதாவை வேண்டுமென்றே உதாசீனப்படுத்துகிறார். ரொம்பவும் விளக்குவானேன்.... அவர்களுக்குள் காதல் ஏற்பட்டு அதோடு நின்றுபோகாமல் இக்கால வழக்கத்திற்கு மாறாக திருமணத்தில் முடிகிறது. இருவரும் அவரவர் பெற்றோர்களை எப்படியோ சம்மதிக்க வைக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு மிடில் கிளாஸ் மாதவனுக்கும் ஹைகிளாஸ் சதாவுக்கும் பொருளாதார மற்றும் கலாசார வேறுபாடுகளினால் மோதல் ஏற்படுகிறது. கர்ச்சீப் உடையில் நைட்டி போட்டுக் கொண்டு வரவேற்பறையில் உலாவரும் மருமகளை அந்த ஆர்தடாக்ஸ் குடும்பம் விநோதமாக உணர்கிறது.

இந்த நிலையில் சதா கர்ப்பமாக, இதற்குள் தாயானால் அழகு போய்விடும் என்று அவரின் அலட்டல் தாயார் (ஐஸ்வர்யா) அபார்ஷனுக்கு யோசனை சொல்கிறார். ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் குழந்தையை இழக்க விரும்பாத மாதவன் விவாகரத்திற்கும் ஒத்துக் கொண்டு குழந்தையை அடைய விரும்புகிறார். குழந்தை பிறந்ததும் கணவனை பிரியும் ஒப்பந்தத்திற்கு சம்மதிக்கும் சதா, குழந்தை பிறந்த பிறகு அதை பிரிய மனமில்லாமல் தனிமையாக உயர, சில பல சம்பவங்களுக்குப் பிறகு தம்பதிகள் இணைகிறார்கள். சுபம். (அப்பாடா!)

()

தொட்டாற்சிணுங்கி, சொர்ணமுகி, தலைமுறை போன்ற படங்களை இயக்கிய அதியமான் இந்தப் படத்தை எழுதி (?) இயக்கியிருக்கிறார். விநியோகஸ்தர்கள் சில பழைய படங்களை மறுவெளியீடு செய்யும் போது 'புத்தம் புது காப்பி' என்று போஸ்டரில் போடுவார்கள். மனிதர் இதே பார்முலாவை பயன்படுத்தி பழைய படங்களின் அரதப்பழசான கதையை தன் திறமையை பயன்படுத்தி சற்று சுவாரசியமாக சொல்லியிருக்கிறார்.

மாதவன் சதாவை வெறுப்பேற்றும் சம்பவங்கள் ஆரம்பத்தில் சுவாரசியமாக இருந்தாலும் அதையே ஏறக்குறைய இண்டர்வெல் வரைக்கும் ஜவ்வு மாதிரி இழுத்திருப்பதில் சற்று அலுப்புத் தட்டுகிறது. எப்படா இவர்களுக்கு கல்யாணம் நடந்து தொலைக்கும் என்று நமக்கே எரிச்சலாக இருக்கிறது. என்றாலும் மாதவனும், சதாவும் நிஜமான காதலர்களே வெட்கப்படுமளவிற்கு மிக அன்னியோன்யமாக இருக்கின்றார்கள். காதலன் கையைத் தொட்டவுடனேயே, புணர்ச்சியின் உச்சக்கட்ட முகபாவனையை அபிநயப்பிப்பது கதாநாயகிக்கு எப்படி சாத்தியமாகிறது என்று புரியவில்லை. தயாரிப்பாளர் சதாவை ஒப்பந்தம் செய்யும் போது சதாவின் தொப்புளுக்கும் தனியாக கால்ஷீட் வாங்கியிருப்பார் போலிருக்கிறது. பல காட்சிகளில் சதாவின் தொப்புள் சிறப்பாக நடித்து தம் பங்கை திறமையாக ஆற்றியிருக்கிறது.

'சாக்லேட் பாய்' என்றழைக்கப்பட்ட மாதவன் நிச்சயம் மாறியிருக்கிறார். ஆய்த எழுத்திலேயே அவரது வித்தியாசமான நடிப்பை பார்க்க முடிந்திருக்கிறது. இந்தப் படத்தில் தன் பாத்திரத்தை உணர்ந்து மிக பொறுப்பாக நடித்திருக்கிறார். பெரும்பாலான உணர்வுபூர்வமான காட்சிகளை அவரே முழுவதும் சுமந்திருக்கிறார்.

()

அதியமான் மென்மையான சில காதல் காட்சிகளை ஹாலிவுட்டை நினைவுப்படுத்தும் அளவிற்கு நிதானமாகவும் அழுத்தமாகவும் சொல்கிறார். திருமணம் வரை ஒழுங்காக செல்லும் கதை விவாகரத்து பிரச்சினைக்குப்பிறகு பயங்கர காமெடி படமாகி விடுகிறது. ஒரு வருடத்திற்கு பிறகு விவாகரத்து வழங்குவதாக சொல்லும் நீதிமன்றம், மாதவனின் வேண்டுகோளின்படி குழந்தையைப் பெற்று தந்தையிடம் ஒப்படைத்துவிட்டு செல்ல வேண்டும் என்று உத்தரவு போடுகிறது. (மேலும் கருக்கலைப்பு சட்டப்படி குற்றம் என்றொரு வசனத்தை வேறு நீதிபதி சொல்கிறார்). இப்படியெல்லாம் விவாகரத்து சட்டம் மூலம் ஒருவரை கட்டாயப்படுத்த முடியமா என்று தெரியவில்லை. ஒருவரின் தனிப்பட்ட உரிமையை மீறுகிற செயலாக இது தெரிகிறது. (இது மாதிரி சட்ட விதிகளை இஷ்டத்திற்கு வளைக்க்கூடிய காமெடிகளெல்லாம் தமிழ்ச்சினிமாவில் மட்டுமே சாத்தியம்).

குழந்தைக்கு அவளுடைய தாய் எந்தவித பாதிப்பையையும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காக சட்டத்துறையின் அறிவுறுத்தலின் பேரில் காவல்துறையின் பிரதிநிதியாக கோவை சரளா வருகிறார். காமெடி என்ற பெயரில் இவர் செய்யும் அபத்தங்கள் எரிச்சலையே ஏற்படுத்துகிறது. (வில்லத்தனம் நிறைந்த மாமியாரின் கொடுமைகளால் கொடுமைப் படுத்தப்படுகிற பாத்திரத்தின் மீது பார்வையாளர்களுக்கு நிறைய அனுதாபம் ஏற்படும். கொடுமைப் படுத்துகிறவரின் மீது எரிச்சலும் கோபமும் அதிகமாகி உஷ்ணமாகி உட்கார்ந்திருப்பார்கள். இந்த உணர்வுக்கு வடிகாலாக ஏதாவது ஒரு அடாவடி பாத்திரம் வில்லியை போட்டு புரட்டி எடுக்கும். பார்வையாளர்களும் தங்கள் எரிச்சல் தணிகிற உணர்வில் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். அந்த மாதிரி ஒரு பாத்திரத்திற்கே கோவை சரளா பயன்பட்டிருக்கிறார். அதே போல் கூஜா தூக்கி கணவராக வரும் அநியாயத்திற்கு மனைவிக்கு அடிபணிந்து போய் கிளைமாக்ஸ் காட்சியில் பொங்கியெழுந்து மனைவியை ஒர் அறை அறையும். அந்த அறையை பிரதாப் போத்தன் அறைந்திருக்கிறார். இதுவும் பார்வையாளர்களுக்கான வடிகால் காட்சியே)

நடுத்தர வர்க்கத்தினராக சொல்லப்படும் மாதவனுடைய வீடு பைவ் ஸ்டார் ஓட்டல் மாதிரி இருக்கிறது. அவர்களுடைய படுக்கையறையில் கலை இயக்குநரின் கை வண்ணம் தெரிந்தாலும் இதுவா நடுத்தர வர்க்கத்தினருடைய அடையாளம்? என்கிற கேள்வி நம்முள் நெருடுகிறது. (நான் சமீபத்தில் பார்த்த நடுத்தர வர்க்கத்தினருடைய வீட்டுக்கு உதாரணமாய் 'அலைபாயுதே' படத்தில் வரும் ஷாலினியின் வீட்டை சொல்வேன்).

()

என்றாலும் பல்லி ஹீரோ நூறுபேரை தூக்கிப்போட்டு பந்தாடும் அசட்டு சண்டைக் காட்சிகளோ, ஒருத்தரை ஒருத்தர் உதைப்பதே காமெடி என்றாகிவிட்ட தமிழ்ச்சினிமாவின் சம்பிராதயமான நகைச்சுவைக் காட்சிகளோ இல்லாமல் நூல் பிடித்தாற் போன்று தெளிவான திரைக்கதை மூலம் படத்தை சொல்லியிருப்பதற்காக அதியமானை பாராட்டலாம்.

7 comments:

பாலதர்ஷன் said...

உண்மையை சொன்னீர்கள்! கண்ணா!

Boston Bala said...

Wired News: Are Dead People Really Dead? :: Michelle Delio: "Security coffins allowed the not-dead person to release themselves from the confines of the grave, or to alert cemetery watchmen with bells, horns or flags, all designed to be easily activated by a presumably traumatized person enclosed in a dark coffin. "

மயிலாடுதுறை சிவா said...

வாங்க சுரேஸ் கண்ணன்,
ரொம்ப நாளா ஆளே காணோமே?
ப்ரியசகி படத்தை பார்கலாமா? அல்லது வேண்டாமா?
நன்றி
மயிலாடுதுறை சிவா...

ரவி ஸ்ரீநிவாஸ் said...

Did you write an article in Uyirmai.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

so you want to keep alive the blogging spirit by writing such
reviews :).

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

சிவா, பொழுது போகாவிட்டால் ஒரு முறை இந்த படத்தை பார்க்கலாம். ஆனால், போயும் போயும் இந்த படத்திற்கு இவ்வளவு மெனக்கெட்டு விமர்சனம் எழுதியிருக்க வேண்டுமா என தோன்றுகிறது

பிச்சைப்பாத்திரம் said...

பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி.

பாஸ்டன் பாலா: என்ன சொல்ல வருகிறீர்கள்? :-)

ரவி: இளையராஜாவின் பாடல்களைப் பற்றி உயிர்மையில் வந்திருக்கிற கட்டுரை என்னால் எழுதப்பட்டது அல்ல. அது பட்டிமன்ற பேச்சாளரான நெல்லை கண்ணனின் மகன் எழுதியது. பெயர் ஒற்றுமை காரணமாக இந்த குழப்பம்.

சிவா, விசாரிப்புக்கு நன்றி. சில மூன்றாந்தர வணிகப்படங்களை விட இதை பார்க்கலாம். குறிப்பாக கருத்து வேறுபாடுகள் மிகும் இன்றைய காதல் மண இளம் தம்பதிகள் பார்க்க வேண்டியது என்று நம்புகிறேன்.

ரவிசங்கர்: உங்கள் கேள்விக்கு பதில் என் பதிவின் ஆரம்பத்தில் இருக்கிறது. :-)

- சுரேஷ் கண்ணன்.