Sunday, July 14, 2013

Carnage - படுகொலை - ரோமன் பொலான்ஸ்கியின் திரைப்படம். (2011)



மனிதன் என்கிற சமூக விலங்கு கூடிவாழ்வதில் உள்ள செளகரியங்களுக்காக அன்பு, பாசம், காதல் போன்ற கற்பிதங்களை ஊதிப் பெருக்கிக் கொண்டாலும் ஒவ்வொரு மனிதனும் அவர்களுக்கேயுரிய வன்மமும் சுயநலமும் கூடிய தனித் தனி தீவே. இந்த கசப்பான உண்மையை மெலிதான நகைச்சுவையுடன் நிர்வாணமாகக் காட்டுகிறது பொலான்ஸ்கியின் திரைப்படம்.

'Big Boss' என்கிற ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுண்டு.  சில கனவான்களை ஓர் அறையில் அடைத்து அவர்களின் செயல்பாடுகளை கண்காணித்து அதற்கேற்ப மதிப்பிடுவது மாதிரியான நிகழ்ச்சி. இப்படி ஒவ்வொரு குடும்பத்தையும் நேரடியாக கவனிக்க முடிந்தால், குடும்பம் என்கிற நிறுவனம் எத்தனை போலித்தனங்களைக் கொண்டிருக்கிறது என்பதை உணர முடியும்.

யாஸ்மினா ரேஸா என்கிற பிரெஞ்சு நாடக ஆசிரியை எழுதிய நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு படம் உருவாகியிருப்பதால், பெரும்பாலும் உரையாடலைக் கொண்டே அமைந்திருக்கிறது. படம் முழுவதுமே ஒரு வீட்டின் உட்புறத்தில் நிகழ்ந்தாலும் அதற்கான சலிப்பு ஏதும் ஏற்படாதவாறு திரைக்கதையை அமைத்திருக்கிறார்கள் இயக்குநரும் நாடகாசிரியையும்.

இரண்டு மரங்களுக்கிடையே உள்ள காமிரா கோணத்தில் சிறுவர் குழுவில் இரு சிறுவர்கள் மோதிக் கொள்ளும் மெளனமான லாங்ஷாட் காட்சிகளோடு படம் துவங்குகிறது. அதில் ஒருவன் இன்னொரு சிறுவனை கட்டையால் முகத்தில் அடித்து விடுகிறான்.  (இந்தக் காட்சிகளின் பின்னணி இசையும் அது முடியும் இடமும் அத்தனை அற்புதம்). கட்.

அடித்த சிறுவனின் பெற்றோர்கள் (Christoph Waltz  மற்றும் Kate Winslet ) அடிபட்ட சிறுவனின் பெற்றோர்களை (John C. Reilly மற்றும் Jodie Foster) இது குறித்து உரையாடுவதற்காக அவர்களின் வீட்டுக்கு காணச் செல்கிறார்கள். இந்த நால்வரின் உரையாடல்கள்தான் படம் முழுவதுமே. கலைடாஸ்கோப் வழி காட்சிகள் போல அவர்களின் குணாதிசயங்கள், கசப்புகள், சுயநலங்கள் போன்றவை அவர்களின் இன்டலெக்சுவல் வார்த்தைகளின் பசப்புகளையும் மீறி பொதுவில் வந்து விழுகின்றன. உரையாடலின் விவாதத்தில், தத்தம் மகன்கள் குற்றஞ்சாட்டப்படும் போது சுயநலமுள்ள பெற்றோராகவும், ஆண்களுக்கு எதிராக பெண்களும், பெண்களுக்கு எதிரான ஆண்களின் கூட்டணியாக மிக இயல்பாக பொருந்திக் கொள்கிறார்கள்.

நான்கு பேருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அதிலும் கிறஸ்டோப் வால்ட்ஸ், ஒரு குயுக்தியான வழக்கறிஞரர் சினிக் ஆக வருகிறார்.  உரையாடலின் இடையே நமக்கே எரிச்சல் ஏற்படும்படி கைபேசியில் இடைமறி்த்து பேசிக் கொண்டேயிருக்கிறார். பெண்கள் வெளியே இருந்தாலும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். மாறாக ஆண்கள் வீட்டிற்குள் இருந்தாலும் வெளியுலகிலேயே சஞ்சரிக்கிறார்கள் என்பது பூடக நகைச்சுவையுடன் வெளிப்படுகிறது. ஒரு கட்டத்தில் இவரின மனைவி எரிச்சலடைந்து கைபேசியை பிடுங்கி நீருக்குள் போட, இரண்டு ஆண்களும் பதற, இரண்டு பெண்களும் விடுதலையான தங்களின் மகிழ்ச்சியை வெறித்தனமான சிரிப்பில் வெளிப்படுத்துவது மிக முக்கியமான காட்சி.

கேத் வின்ஸ்லேட், மது அருந்துவதற்கு முன்பும் பின்புமாக நடிப்பில் காட்டியிருக்கும் வித்தியாசம் சிறப்பானது. 12 Angry men, திரைப்படத்தை நினைவுப்படுத்தும் திரைக்கதையென்றாலும் மனிதர்கள் சிக்கலான சூழலில் இயங்கும் சில விநோதங்கள், பொலான்ஸ்கியின் நுட்பமான இயக்கத்தில் வெளிப்பட்டிருக்கின்றன. உள்ளூர் சினிமா ரசிகர்களுக்காக தோராயமாக உதாரணம் சொன்னால், மணிரத்னத்தின் 'அலைபாயுதே' திரைப்படத்தில் மாதவனின் தந்தையான பிரமிட் நடராஜன், பெண் பார்க்க ஷாலினியின் வீட்டிற்கு வரும் போது இரு பெற்றோர்களின் உரையாடல்களைக் கவனித்திருக்கிறீர்களா? (இம்ப்பிரியாரிட்டி/சுப்பிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்). .இந்தப்படம் முழுவதுமே அதுதான்.

படம் முழுவதும் நிகழும் நாகரிகமான, தோழமையான, கசப்பான, வன்மமான உரையாடல்களை, இறுதிக் காட்சி ஒரு கேலிக்கூத்தாக்குவதுதான் பெரியதொரு நகைச்சுவை முரண்.

suresh kannan

4 comments:

PRABHU RAJADURAI said...

அப்பா, எவ்வளவு நாளாச்சி!

Anonymous said...

Definitely i'll try to see the movie soon... Thanks for the review...

Anonymous said...

come back soon. its really long time boss

Unknown said...

boss what happen to you?
why you took this many days?