Wednesday, October 17, 2012

http://www.imdb.com/title/tt1922689/



Plan C  - நெதர்லாந்து திரைப்படம்.

சிறிய மிக கச்சிதமான, நேரான திரைக்கதை. எளிமையாகச் சொன்னாலும் அசத்தியிருக்கிறார்கள். கதையைப் பற்றி சொன்னால்தான் ஆர்வம் ஏற்படும் என்பதால் சற்று சுருக்கமாக...

ரொனால்டு காவல்துறை அலுவலகத்தில் பணிபுரியும் ஓர் ஊழியன். ஒரு நடுத்தர வர்க்க பொறுப்பில்லா மனிதனுக்கு உள்ள அனைத்து பிரச்சினைகளும் இவனுக்கு. Poker எனும் விளையாட்டில் பெருமளவு பணத்தை இழப்பதால் ஊரைச் சுற்றி கடன். கடன் கொடுத்த மாஃபியா கும்பலொன்று பணத்தை வட்டியுடன் திரும்பத் தரச் சொல்லி இவனின் சிறுவயது மகனை மிரட்டுகிறது. இவனது முன்னாள் மனைவியும் இந்தப் பிரச்சினையை தீர்க்காவிடில் காவல்துறையில் புகார் அளிக்கப் போவதாக நெருக்கடி தருகிறாள்.

ஆக.. ரொனால்டுக்கு உடனடியாக பத்தாயிரம் டாலர் பணம் உடனடியாகத் தேவை. வேறு வழியில்லாமல் ஒரு திட்டம் தீட்டுகிறான். சுலபத் தவணை மாதிரி எளிமையான திட்டம்.

இவன் சீட்டு விளையாடுமிடத்தில் புதன் கிழமை அன்று பெருமளவு பணம் புழங்கும். விளையாட்டு அரங்கின் பின்புறமுள்ள அறையில்தான் இரண்டு அப்பிராணிகள் பணத்தை எண்ணிக் கொண்டிருப்பார்கள். எவ்வித காவலும் கிடையாது.

திட்டம் என்னவெனில்... ரொனால்டின் கூட்டாளி, இருட்டியவுடன் பணமிருக்கும் அறைக்குச் சென்று அங்கிருக்கும் அப்பிராணிகளை மிரட்டி எல்லா பணத்தையும் பிடுங்கிக் கொள்வது.. மறுநாள் பணத்தை பங்கிட்டுக் கொள்வது. கள்ளத்தனமாக நடைபெறும் சூதாட்டம் என்பதால் அவர்கள் காவல்துறைக்கும் செல்ல முடியாது.

சிம்பிள். ரொனால்டின் நிதிப் பிரச்சினையோடு குடும்பப் பிரச்சினையும் தீர்ந்து விடும்.

ஆனால் அது எத்தனை எளிதாக இல்லை.

ரொனால்டு கூட்டாளித் தேவைக்காக ஒரு கோயிஞ்சாமியிடம் இந்தத் திட்டத்தை பற்றி சொல்கிறான். அவன் மறுநாள் எம்.என்.நம்பியார் கூட்டத்தைச் சோந்த கபாலியை அழைத்து வருகிறான்.

"ஏண்டா.. நம்ம ரெண்டு பேர் திட்டத்துல இன்னொருத்தனை கூட்டிட்டு வந்தே?"

"இல்ல வாத்யாரே... அவன் நம்மள மாதிரி இல்ல...கொஞ்சம் விவரமானவன்.. சாமான்லாம் சோக்கா யூஸ் பண்ணுவான். நம்மளுக்கும் சேஃப்டி தல"

சரி ஒழிந்து போகிறது என்று கபாலிக்கும் தன் திட்டத்தை விளக்குகிறான். கூடவே முக்கியமான ஒரு நிபந்தனையை சொல்கிறான். இந்த அறுவைச் சிகிச்சையில் .. அதான்.. ஆப்பரேஷனில் யாரும் ரத்தம் சிந்தக்கூடாது. அதாவது வன்முறை என்பது கூடவே கூடாது. வெறுமனே மிரட்ட வேண்டும். அவ்வளவுதான். காந்திக்குப் பிறகு ரொனால்டிடம்தான் அகிம்சை முறையைப் பற்றி கோயிஞ்சாமியும் கபாலியும் கேட்டிருப்பார்கள்.

ஆச்சா...

புதன்கிழமை. தன் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக ரொனால்டும் சூதாட்ட அரங்கிற்கு சென்று விளையாடுகிறான். அவ்வப்போது பரபரப்பாக கடிகாரத்தை பார்த்துக் கொண்டிருக்கிறான்.

கோயிஞ்சாமியும் கபாலியும் வழியில் மிக சாவகாசமாக KFC சிக்கனாக தேடி... தேடி... உப்பு உறைப்பு எல்லாம் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டு வருகிறார்கள். ரொனால்டு அவர்களுக்கு ரகசியமாக போன் செய்து.. "பேமானிங்களா... என்னடா பண்றீங்க?" என்று கேட்க "இதோ வந்துகினே இருக்கோம் வாத்யாரே" என்கிறார்கள்.

அதற்குப் பிறகு  ரெனால்டிற்கு ஓர் இனிய அதிர்ச்சி ஏற்படுகிறது. சூதாட்டத்தில் எப்போமே அவனுக்கு தோல்விதான் ஏற்படும்  இருக்கும் பணத்தையெல்லாம் இழந்து பஸ் டிக்கெட்டிற்கு கடன் வாங்கிப் போகும் ரொனால்டு, எந்நாளும் இல்லாத திருநாளாக... இன்று பார்த்து கெலித்துக் கொண்டே போகிறான். கூட இருக்கும் விளையாட்டாளர்களும்... என்னடா இது Poker-க்கு வந்த சோதனை? என்று மூக்கின் மேல் விரல் வைத்து அவனை ஆச்சரியமாய்ப் பார்க்கிறார்கள்....

இப்படியே தொடர்ந்து கிட்டத்தட்ட 15000 டாலர் வரை கெலித்து விடுகிறான். வியப்பில் அவனுக்கே வியர்த்துப் போகிறது. அதாவது கொள்ளையடித்து பிற்பாடு வரப் போகிற பங்கை விட அதிக பணம். அவசரம் அவசரமாக கூட்டாளிகளுக்கு தொலைபேசி... 'பாருங்க. கண்ணுங்களா.. பிளான்லாம் ஃபணால்..நீங்க ஒண்ணியும் கிளிக்க வேணாம்...உங்க ரெண்டு பேருக்கும் ஒரு கட்டிங்கும் சிக்கன் லெக்பீஸ் பிரியாணியும் வாங்கித் தந்து தொலைக்கிறேன். அப்படியே திரும்பி ஓடிப் போயிடுங்கோ" என்கிறான்.

அவர்களோ சமர்த்தாக திரும்பிச் சென்று பரங்கி மலை ஜோதியில் படம் ஏதும் பார்க்கப் போகாமல் "பாரு வாத்யாரே.. ராகுகாலம் கழிச்சு நல்ல நேரம் பார்த்து பூஜையெல்லாம் போட்டுட்டு கிளம்பியிருக்கோம். அதெல்லாம் அப்படியே போட்டுட்டு மின்னே வெச்ச காலை பின்னே வெக்கற பழக்கம் எங்க வம்சத்துலயே கிடையாது" என்கிறார்கள் கறாராக.

()

பிறகு என்ன ஆச்சு?

ரொனால்டிற்கு அவர் ஜெயித்த பணம் கிடைத்தா? அல்லது பணம் கொள்ளையடிக்கப்பட்டதா? பாகப் பிரிவினை ஒழுங்காக நடந்தா...? அகிம்சை திட்டம் என்னவாயிற்று?

என்பதையெல்லாம் அறிய திரைப்படத்தைப் பாருங்கள்...

இத்திரைப்படத்தின் இயக்குநர் quentin tarantino வின் மஹா ரசிகர் போலிருக்கிறது. மிகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கும் காட்சிக் கோர்வைகளின் அடியாழத்தில் நகைச்சுவை கொப்பளித்துக் கொண்டு போகிறது. உதாரணத்திற்கு: ரொனால்டு தன்னுடைய கூட்டாளி கோயிஞ்சாமியை ஒரு இடத்திற்கு வரச் சொல்கிறான். கோயிஞ்சாமி வரத் தாமதமாகிறது. ரொனால்டு எரிச்சலுடன் காத்திருந்த நேரத்தில் என்னவெல்லாம் செய்தேன் என்று பட்டியலிடுகிறான். அது போல் கோயிஞ்சாமியும் கபாலியும் KFC சிக்கனைப் பற்றி விவாதிப்பது.

ரொனால்டாக Ruben van der Meer நடித்திருக்கிறார். அண்டர் பிளேவாக நடிப்பதென்றால் எப்படி, என்பதை இந்தப் பாத்திரத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். மனிதர் அப்படி நடித்திருக்கிறார். இவரது வழுக்கைத் தலையைப் பற்றி யாராவது சொன்னால் ரோஷம் பொத்துக் கொண்டு வருகிறது. ஏற்கெனவே இன்னொரு ரொனால்டு இருப்பதினால் சூதாட்ட அரங்கில் இவரது பெயரை ஒரு அடையாளத்திற்காக 'வழுக்கை ரொனால்டு' என்று குறித்து வைத்திருக்கிறார்கள். . 'ஏன் மீசை ரொனால்டு' என்று போடக்கூடாதா என்று ஆவேசமாக கேட்கிறார்.

ஏற்கெனவே குறிப்பிட்டபடி எளிமையான கதையென்றாலும் நேர்மையான திரைக்கதையின் மூலம் படத்தை சுவாரசியப்படுத்தியிருக்கிறார்கள். நம்மாட்கள் இதை படமாக எடுத்தால் சூதாட்ட அரங்கில் நிச்சயம் ஒரு ஐட்டம் பாடலைச் செருகியிருப்பார்கள். என்ன செய்ய, நாம் வாங்கி வந்த வரம் அப்படி...

suresh kannan

7 comments:

மணிஜி said...

தமிழ்ல ரீமேக்கலாம் போல இருக்கே:-)

manjoorraja said...

இப்ப எல்லாம் குத்து பாட்டு இல்லேன்னா அது படமே இல்லேன்னு இல்லெ சொல்றாங்க.

-தோழன் மபா, தமிழன் வீதி said...

விமர்சனம் சோக்காகீது.
ஆகா மொத்தம் காமடியும் வந்துவிட்டது.
வாழ்த்துகள்.

மாலோலன் said...

சுஜாதாவிலிருந்து பாராவிற்கு மாறிவிட்டீர்களா ?? :))) அருமையான விமர்சனம் !

Anonymous said...

மிக மிக அருமையான விமர்சனம்...

Anonymous said...

An outstanding share! I have just forwarded this onto a colleague who had been conducting a little homework on this.
And he actually bought me breakfast because I
discovered it for him... lol. So allow me to reword this.
... Thanks for the meal!! But yeah, thanks for spending the
time to discuss this topic here on your blog.
Here is my web site : article

Anonymous said...

Definitely believe that which you said. Your favorite justification appeared to be on the net the simplest
thing to be aware of. I say to you, I definitely
get annoyed while people consider worries that they plainly don't know about. You managed to hit the nail upon the top and defined out the whole thing without having side-effects , people can take a signal. Will probably be back to get more. Thanks
Also visit my site file management