Thursday, October 16, 2008

ஆயிரம் பாயிண்ட்டும் மரண விளையாட்டும்

திகட்ட திகட்ட வன்முறையின் கோரங்களை அருவாளுடன் காட்டும் நம் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் இறுதிக் காட்சிகளில் "இவ்வாறாக வன்முறை கொண்டவனையே அழிக்கும்" என்று 'லுலுவாய்க்கு' மெசேஸ் சொல்லுவார்கள். இரத்த்தையும் அரிவாளையும் காட்டாமல் எப்படி வன்முறை காட்சிகளை அமைக்க முடியும் என்பது அவர்கள் பேட்டிகளில் வழக்கமாக கேட்கும் கேள்வி. ஒரு துளி ரத்தம் கூட திரைப்படச்சுருளின் மீது சிந்தாமல் அதே சமயம் வன்முறையின் உக்கிரத்தை நம் ஆழ்மனதில் உறைக்கும் படிச் செய்கிற இத்தாலி நாட்டுப் படமான Life is Beautiful (1997)-ஐ அவர்களுக்கு பரிந்துரைக்கிறேன்.

Photobucket

படத்தின் இயக்குநர் Roberto Benigni இந்தப் படத்தில் வன்முறையின் குருரத்தை மழுங்கடித்து அபாரமான நகைச்சுவையின் மூலம் அதை கடந்து சென்றிருக்கிறார். சில படங்களைப் பார்த்து முடித்தவுடன் அசைய முடியாமல் அதன் தாக்கத்தின் பாதிப்பில் சில நிமிஷங்கள் அப்படியே அமர்ந்திருப்போம். அப்படியொரு பாதிப்பை என்னுள் ஏற்படுத்திய படமிது.

()

இத்தாலியைச் சேர்ந்த யூதரான Guido Orefice வாழ்க்கையை மிகுந்த சாதுர்யமான நகைச்சுவை போக்கில் அணுகுபவர். புத்தகக்கடை ஒன்றை அமைப்பதற்காக Arezzo நகருக்கு வரும் அவர் யூதரல்லாத (இந்த குறிப்பு முக்கியமானது) இத்தாலியரான Doraவை பார்த்த கணத்திலேயே காதல் கொள்கிறார். Guido-வின் நகைச்சுவையான பேச்சும் அவரின் அதிரடி கலாட்டாக்களும் Dora-விற்கு பிடித்துப் போய் தனக்கு நிச்சயம் செய்திருந்த மணமகனை விட்டு Guido-வுடன் ஓடிப் போகிறார். (இந்தப் பகுதி சற்று சலிப்பை ஏற்படுத்தினாலும் Guidoவின் Slapstic காமெடி அதை ஈடுகட்டுகிறது. இதில் வரும் சில நகைச்சுவையான சம்பவக்கோர்வைகள் விஜய் நடித்த 'யூத்' எனும் தமிழ்ப்படத்தில் அப்படியே கையாளப்பட்டிருக்கிறது.)

இருவரும் தோட்டத்திற்கு செல்வதை காண்பிக்கும் காமிரா சற்று நேரத்தில் zoom out ஆகி வெளியே வரும் போது அவர்களின் மகனுடன் வெளிவருகிறார்கள். (தையல் இயந்திரம் சுற்றுவதை overlapping மூலம் காண்பித்து காலம் கடப்பதை தமிழ்ச்சினிமாக்களில் நிச்சயம் பார்த்திருப்பீர்கள்).

உண்மையில் இந்தப்படம் இங்குதான் தொடங்குகிறது. இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமயமது. ஜெர்மனியின் நாஜிப்படை யூத இனத்தையே அழிக்க முயன்று மிகப்பெரிய இனப்படுகொலைக் கொடூரம் நிகழ்ந்து கொண்டிருக்கும் தருணம். யூதரான Guido-வையும் அவரது மகனான ஜோஷ்வாவையும் நாஜிப்படையினர் பிடித்துச் சென்று விடுகிறார்கள். தாமதாக வீடு திரும்பும் Dora இதைத் தெரிந்து கொண்டு யூதர்கள் கொண்டுச் செல்லப்படும் ரயிலில் தன்னையும் இணைத்துக் கொள்கிறார். யூத இனத்தவராக அவள் இல்லாதிருந்தும் தன்னுடைய குடும்பத்தை பிரிய மனமின்றி உயிர் போகும் அபாயத்தை எதிர்கொள்ள முனைகிறார். ஜன்னல் துவாரத்தின் வழியே தன்னுடைய மனைவியும் ஏறுவதை துயரத்துடன் பார்க்கிறார் Guido.

அனைவரும் வதை முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். பெண்களையும் ஆண்களையும் தனித்தனியாக பிரித்துவிடுகின்றனர். நாஜிப் படையினருக்கு வேலையாட்களாக அவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். பணிக்கு லாயக்கற்றவர்களாக இருப்பதால் குழந்தைகளையும் வயதானவர்களையும் விஷப்புகை கூண்டிற்குள் அடைத்து கொல்கின்றனர். ஜெர்மனியர்கள் யூதர்களின் உயிருடன் விளையாட்டும் இந்த ஆபத்து மகனுக்கு தெரியாமலிருக்க தன்னுடைய நகைச்சுவையான போக்கின் மூலம் அதை எதிர்கொள்ள தயாராகிறார் Guido.

படைவீரர்களுடன் இது ஒரு விளையாட்டு என்றும் ஆயிரம் பாயிண்ட்டுகளை சேர்ப்பவர்களுக்கு உண்மையானதொரு பீரங்கி தரப்படும் என்றும் தன் மகனை நம்ப வைக்கிறார். தன்னுடைய இருப்பிடத்திலேயே அவனை ஒளித்து வைக்கிறார். யார் கண்ணிலும் படாமல் ஒளிந்திருப்பதுதான் இந்த விளையாட்டின் முக்கிய அம்சம் என்றும் அதனாலேயே பாயிண்டுகளை அதிகம் சேகரிக்க முடியும் என்று கூறுவதால் சிறுவன் ஒளிந்து கொள்கிறான். சிரமமான பணிகளைச் செய்து களைத்துப் போய் வரும் Guidoவிடம் "இன்று எத்தனை புள்ளிகள் கிடைத்தது?" என்று ஜோஷ்வா நச்சரிக்கிறான். ஒருவாறு அவனைச் சமாளிக்கிறார் Guido. போர் இறுதிக்கு வருவதால் தம்முடைய கொடூரத்தின் அடையாளத்தை அழித்தொழிக்க நாஜிப்படையினர் அனைவரையும் சாகடிக்க முடிவு செய்கின்றனர்.

தன் மகனை ஒளித்து வைத்துவிட்டு மனைவியைத் தேடிப் போகும் Guidoவை ஒரு போர்ப்படை வீரன் தனியாக அழைத்துச் சென்று சுட்டுக் கொள்கிறான். மயான அமைதியுடன் காணப்படும் முகாமினுள் மறுநாள் அமெரிக்கப்படையின் டாங்கி நுழைகிறது. மறைவிடத்திலிரும் வெளியே வரும் ஜோஷ்வா தன்னுடைய பரிசுதான் அந்த டாங்கி என்று நினைத்து மகிழ்ச்சியடைகிறான்.

வளர்ந்த பிறகு தன் தந்தையின் தியாகத்தையும் பாசத்தையும் உணர்ந்த ஜோஷ்வாவின் நினைவலையாக இந்தப்படம் பார்வையாளர்களுக்கு சொல்லப்படுகிறது.

()

Guido தன்னுடைய மனைவியை (இதில் நடித்திருப்பவரும் இயக்குநரின் நிஜமான மனைவி) முதன்முதலாக சந்திக்கும் போது அவள் வீட்டின் மேலே இருந்து தவறி விழுகிறாள். அவளைத் தாங்கிக் கொள்ளும் அவன் "எப்பவும் இப்படித்தான் வீட்ல இருந்து கிளம்புவீங்களா?" என்கிறான்.

தன் மகனை காப்பாற்ற Guido தன்னுடைய சாதுர்யத்தை நகைச்சுவை தோய பல இடங்களில் பயன்படுத்தும் போது சார்லி சாப்ளினின் நினைவு வருகிறது.

வதை முகாமில் Guidoவின் மகன் 'விளையாட்டில்' கலந்து கொள்ளும் மற்ற சிறுவர்களைப் பற்றிக் கேட்க "முதல் பரிசைப் பெற அனைவரும் ஒளிந்து கொண்டுள்ளனர். நீயும் அவ்வாறு ஒளிந்து கொண்டால்தான் பரிசைப் பெற முடியும்" என்று சமாளித்து நம்ப வைக்கிறான். ஒரு சமயத்தில் ஜெர்மன் படையினரின் குழந்தைகள் கண்ணாமூச்சி விளையாடும் போது தன் மகனை மறைவிடத்திலிருந்து அழைத்து வந்து 'அங்கே பார். எல்லோரும் ஒளிந்து கொண்டுள்ளனர்" என்று அந்தக் காட்சியைப் பயன்படுத்தி "விளையாட்டின்" நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துகிறான். அப்போது இவர்களைப் பார்த்துவிடும் ஒருத்தி ஜோஷ்வாவையும் மற்ற குழந்தைகளுள் ஒருவன் என நினைத்து Guidoவிடமிருந்து பிடுங்கிச் செல்கிறாள். யூதச்சிறுவன் எனத் தெரிந்தால் உயிர்போய் விடுமே என்று மகனிடம் ஒரு வார்த்தையும் பேசக்கூடாது எனக் கட்டயாமாகக் கூறுகிறான். என்றாலும் மற்ற சிறுவர்களுடன் உணவருந்தும் ஜோஷ்வா தன் பேசு மொழியில் ஒரு வார்த்தையை கூறிவிடுகிறான். இதைக் கவனித்துவிடும் படைவீரனொருவன் தன்னுடைய உயரதிகாரியிடம் இதைப் பற்றி ரிப்போர்ட் செய்யப் போகும் இடைவெளியை உபயோகித்து அனைத்து ஜெர்மனியச் சிறுவர்களுக்கும் அதே வார்த்தையும் கற்பித்து உச்சரிக்கச் சொல்லி அதிகாரிக்கு குழப்பத்தை ஏற்படுத்தி மகனை தப்பிக்க வைக்கிறான்.

வீட்டில் குளிப்பதற்கு அடம்பிடிக்கும் சிறுவன் வதை முகாமிலும் அதே போல் குளிப்பதற்குச் செல்ல அடம்பிடிக்கிறான். ஆனால் 'குளிப்பது' என்பது வதைமுகாமின் சங்கேதமொழிப்படி குழந்தைகளை விஷவாயுவில் கொல்வது. இதை அறியாத Guido மகனை குளிக்கப் போகச் சொல்லி கட்டாயப்படுத்தும் போது பார்வையாளர்களுக்கு மனம் பதைக்கிறது.

விஷவாயுக் கூண்டிற்குச் செல்வதற்காக தன் உடைகளைக் கழற்றும் முதியவர்களில் ஒருவர் தன்னைக் கடந்துச் செல்லும் நாஜிப்படைப்பெண் கால்தவறி கீழே விழப்போகும் போது "பார்த்துச் செல்லுங்கள்" என்று சொல்லும் போது அந்தப் பெண்ணின் கண்களில் தெரியும் சங்கட உணர்வு நம்மையும் பாதிக்கிறது.

()

இவ்வாறாக பல காட்சிகளில் வன்முறையின் கொடூரமும் இனவெறுப்பின் அபத்தமும் மனிதஉரிமை மீறல்களின் அநியாயமும் பார்வையாளர்களுக்கு மிக மெலிதாக ஆனால் உறுதியாக பதிவாகுமாறு பதிவு செய்யப்படுகிறது. கடைசியான ஒரு இருட்டுக் காட்சியில் ஆயிரக்கணக்கான மனித உடல்கள் பிணமாகக்கிடப்பது ஒரு சர்ரியலிச ஓவியம் போல் காண்பிக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு ஓர் திடுக்கிடலை ஏற்படுத்துகிறது.

ஒரு இனத்தையே அழிக்கும் நாஜியினரின் ஆபத்தான சூழல் அதனுடைய தீவிரமில்லாமல் மிதமாகவே பார்வையாளர்களுக்கு உணர்த்தப்பட்டாலும் Guido அதை மகனுக்காக நகைச்சுவையாக எதிர்கொள்ளும் போது அதனுள் அமிழந்திருக்கும் சோகத்தின் வீர்யம் இன்னும் அதிகமாகிறது. Roberto Benigniயின் கோமாளித்தனமான தோற்றம் அவர் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கு மிகப் பொருத்தமாய் அமைந்திருக்கிறது. (தமிழில் இந்தப்படம் ஒருவேளை எடுக்கப்பட்டால் அதற்கு பொருத்தமான நடிகரை யோசிக்கும் போது (பழைய) நாகேஷைத் தவிர வேறு யாரையும் யோசிக்க முடியவில்லை).

நான்கு ஆஸ்கர் விருதுகளை பெற்றிருக்கும் இந்தப்படம் (சிறந்த நடிகர்: Roberto Benigni) இத்தாலியில் அதிகம் நபர்களால் பார்க்கப்பட்டு கின்னஸ் சாதனையையும் பெற்றிருக்கிறது. உலகசினிமாப்பட ரசிகர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படங்களின் பட்டியலில் இந்தப்படமும் நிச்சயம் சேர்க்கப்பட வேண்டும்.

suresh kannan

7 comments:

கதிர் said...

இந்தப்படத்தின் நகைச்சுவைக் காட்சிகளை மட்டும் ஒரு விஜய் படத்துல காப்பி அடிச்சிருப்பாங்க. யூத் னு நினைக்கிறேன்.
தொப்பி மாற்றும் காட்சி
சாவி வரவழைக்கும் காட்சி அப்டினு அச்சு அசலா அடிச்சிருப்பாங்க.

படத்துல மிகவும் ரசிச்சது அவரோட உற்சாகமான உடல்மொழி மற்றும் முகாமில் அவரது மொழிபெயர்ப்பு.

படம் முழுக்க வன்முறையும் நகைச்சுவையையும் கலந்து படத்தோட கடைசி காட்சி மிகவும் நெகிழ்ச்சியுடன் அமைந்திருக்கும்.

தரமான படம்.

Ramesh said...

ரொம்ப ரசிச்சு எழுதியிருக்கீங்க. நன்றி.

Anonymous said...

Others understand movies as a medium to connect with characters, feelings, expressions.

Tamilians understand movies as a medium to appreciate visuals, provide intoxication, forget their reality.

Do you think movies like "Life is beautiful" would be appreciated with these expectations?

Raj Chandra said...

சுரேஷ் கண்ணன்,

இதனோடு தொடர்புடைய மற்றொரு படம் The Pianist. Roman Polanski இயக்கியது. Life is Beautiful-ன் மறுபக்கம். யூதர்கள் நாஜி முகாம்களில் நடத்தப் பட்ட விதத்தை விளக்கும். ரோமன் பொலன்ஸ்கியும் நாஜிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட போலந்தில் வாழ்ந்தவர். பார்க்க வேண்டிய படம்.

Anonymous said...

இந்த படத்தை பார்த்து கண்கலங்காதவர்கள் யாராயினும் கல் மனதுடையோர்.

Rajarajan Kannan said...

இந்த படத்தை பார்த்து கண்கலங்காதவர்கள் யாராயினும் கல் மனதுடையோர்
- I Repeat the same.

rajkumar said...

Suresh,

I recommend you to watch Il postino (Postman) and another movie-Pianist.

Anbudan

Rajkumar