Thursday, March 31, 2005

பெருமாள் முருகனுக்கு சர்வதேச அங்கீகாரம்

Image hosted by Photobucket.com

கொங்கு நாட்டு எழுத்தாளர் பெருமாள்முருகனின் பெயர் இப்போது சர்வதேச இலக்கியப்பரிசு ஒன்றிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அவர் எழுதிய கூளமாதாரி நாவல் வ.கீதாவால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு Seasons of the Palm என்ற பெயரில் தாரா வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டது. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த கிரியாமா இலக்கிய விருதுகள் வழங்கும் குழு தனது 9வது வருடாந்திர விருது வழங்கும் போட்டிக்கான இறுதிப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் பெருமாள் முருகனின் கூளமாதாரி மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.

இந்த நாவலின் முக்கிய பாத்திரங்கள் ஆடு மேய்க்கும் சிறுவர்கள். அவர்களின் உலகத்தை அழகுபட விவரிக்கும் இந்த நாவல், நடுவர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றிருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் கிரியாமா இலக்கிய விருது குழு 40 வயதை எட்டுவதற்கு முன்பு பெருமாள் முருகன் படைத்திருக்கும் இந்த நாவல் மிகவும் முக்கியமானது என்று குறிப்பிட்டுள்ளது. "இது பெருமாள் முருகனுக்கு கிடைத்திருக்கும் சர்வதேச அங்கீகாரம்" என்று குறிப்பிடுகிறார் இந்த நாவலை மொழிபெயர்த்த வ.கீதா.

(செய்தி: இந்தியாடுடே, மார்ச் 2005)

()

ஜெயகாந்தன் ஞானபீட விருதின் மூலம் தேசிய அளவில் அங்கீகாரம் பெற்றிருக்கும் இந்த சூழ்நிலையில் மற்றொரு தமிழ் படைப்பாளியும் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருப்பது உவப்பான செய்தியாகும்.
நவீன இலக்கிய படைப்பாளிகளில் முக்கியமானவர் பெருமாள் முருகன். மேற்குறிப்பிட்டுள்ள கூளமாதாரி நாவல் முழுக்க முழுக்க கூலிக்காக ஆடு மேய்க்கும் சிறுவர், சிறுமிகளின் உலகத்தினைப் பற்றியது. ஆட்டு புழுக்கைகளின் நாற்றத்தையும், அவற்றின் 'மே...' சத்தத்தையும் தவிர்க்க முடியாமல் இந்த நாவலை படிக்க முடியாது.

ஏறுவெயில் என்கிற இவரின் முதல் நாவலைத் தொடர்ந்து எழுதினது, 'நிழல் முற்றம்' என்கிற நாவல். முழுக்க சினிமாத் தியேட்டரை பின்னணி களமாக கொண்டு இதுவரை தமிழில் நாவல்கள் வந்திருக்கின்றனவா என அறியேன். அந்தக் குறையை போக்குகின்ற படைப்பு இது. தியேட்டரில், இடைவேளைகளில் முறுக்கு விற்கும் சிறுவனை முதன்மையான பாத்திரமாக கொண்டது. டிக்கெட்டுக்காக முண்டியடிக்கிறவர்களின் வியர்வை வாசனையும், தொப்பையன், கிழவன் என்று அந்தக் கால சூப்பர் ஸ்டார்களுக்கு ரசிகர்கள் வைத்திருந்த காரணப் பெயர்களும், குஷ்டரோகியான தன் அப்பன் பார்க்க வரும் போது அருவருப்போடு அந்தச் சிறுவன் விரட்டியடிப்பதுமாக மிகுந்த யதார்த்த உலகில் நகருகின்ற நாவலது.

சமீபத்தில் வந்திருக்கும் 'பீக்கதைகள்' (சிறுகதைத் தொகுதி) மலம் மற்றும் மலம் சார்ந்திருக்கின்ற இடங்களைப் பற்றினது (!?).

suresh kannan

Saturday, March 26, 2005

கண்ணாடி பூக்கள் - திரைப்படம் குறித்து என் பார்வை

எனது முந்தைய பதிவு என்ன காரணத்தினாலோ காணாமற் போய்விட்டதால் வேறொரு தலைப்பில் மீண்டும் பதிகிறேன். ஏற்கெனவே படித்த அபாக்கியவான்கள் பொறுத்தருளவும்.

குழந்தைகள் மனமும் உடைந்து போகும் கண்ணாடிப் பூக்களும்

சக போட்டி நடிகர்களை கேமிராவை பார்த்து மறைமுகமாக ஆவேசமாக திட்டும் வணிக படக் கதாநாயகர்களின் சலிப்பூட்டும் ஒரேமாதிரியான மசாலா படங்களின் மத்தியில் ஒரு திரைப்படம் சற்றே - சற்றேதான் - மாறுதலாக வந்தால் கூட 'இது நல்ல படம்' என்கிற மாதிரி அடையாளம் காணப்படும் அளவிற்கு தமிழ்ச்சினிமாவின் நிலைமை சீர்குலைந்து போயிருப்பது துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையாகும். எந்தவித வலுவான அடித்தளமுமில்லாமல் ஒரு கதாபாத்திரம் முடியை வளர்த்துக் கொண்டு முரட்டுத்தனமாக செயல்பட்டால் கூட, அதைப் பற்றி ஆராயாமல் கைதட்டி விசிலடிக்கும் ரசிகர் குழாம் ஒரு புறமும் விருது கொடுக்கும் அமைப்புகளும் திரைப்படம் என்கிற ஊடகத்தின் அடிப்படைகள் எப்படியிருக்க வேண்டும் என்கிற தெளிவோடுதானிருக்கின்றனவா என்று புரியவில்லை.

இந்த நிலையில் சற்றே நிம்மதி பெருமூச்சு விடக்கூடிய அளவில், 'எண்ட வீடு அப்பூண்டயும்' என்கிற மலையாள சினிமாவிலிருந்து ரீமேக்காக தமிழிற்கு ஆறுதலாக வந்திருக்கும் திரைப்படம், கண்ணாடி பூக்கள் (ப் இல்லை)


Image hosted by Photobucket.com

கதை மிகச் சுருக்கமானது, தெளிவானது.

தாயின் முழு அன்பும் அக்கறையும் தனக்கே வேண்டும் என்று எதிர்பார்க்கும் ஒரு பத்துவயது சிறுவனின்.. இல்லை ஒரு குழந்தையின் அதீத செயலால் ஏற்படும் அசம்பாவிதமும் அதன் விளைவுகளும்.

மனைவியை இழந்த, ஏழு வயது மகனுடைய பார்த்திபனை காதலித்து மணந்து கொள்கிறாள் காவேரி. அந்தச் சிறுவனுக்கு சிற்றன்னையாக இருந்தாலும் ஒரு தாயின் உண்மையான அன்பை அளவில்லாமல் வழங்குகிறாள் அவள். அவள் தன் தாயில்லை உண்மையை அறிந்திருக்கிற சிறுவனும் அவளைத் தன் தாயை போலவே பாவித்து அன்பை அள்ளி அள்ளி பருகுகிறான். இந்த நிலையில் அந்தத் தம்பதிகளுக்கென்று ஒரு குழந்தை பிறக்கிறது.

தனக்கு விளையாட்டுத் தோழன் கிடைத்த மகிழ்ச்சி இருந்தாலும் போகப் போக தாயின் அன்பும் கவனிப்பும் புதிதாக வந்திருக்கிற குழந்தை பக்கமே இருப்பதை எண்ணி எரிச்சலடைகிறான். கோபம் அதிகமாகிப் போனதொரு கணத்தில் அந்தக் குழந்தைக்கு சிறுதண்டனை அளிப்பதாக எண்ணி மருந்தடிக்கும் ஸ்ப்ரே பம்ப்பை குழந்தையின் முகத்தில் அடிக்கிறான், அதனால் குழந்தை இறந்துவிடும் என்கிற பின்விளைவை அறியாமல். பிறகு சட்டம் தன் குரூர கரங்களை அவனின் மீது நீட்டுவதும் அதனிடமிருந்து தன் மகனை மீட்க அந்த பெற்றோர்கள் போராடுவதும் அவனின் குற்ற உணர்ச்சியைப் போக்கி அவன் பழைய படி மீண்டெழ மனநல மருத்துவர் சொல்லும் முயற்சிசகளில் ஈடுபடுவதும் மீதிக் கதை.

()

சிறுவனாக மாஸ்டர் அஸ்வின் நடித்திருக்கிறார். படத்தின் பெரும்பான்மையான பகுதிகளை இவரே ஆக்ரமிக்கிறார். கனமான காட்சிகளைக் கூட தன் பிஞ்சு தோளில் அனாயசமாக சுமந்திருக்கிறார். பேச்சில் அடிக்கும் மலையாள வாடை சமயத்தில் எரிச்சலடைய வைத்தாலும் தன் பிரம்மாண்டமான நடிப்பால் அதை ஈடுகட்டிவிடுகிறார்.

கிரிக்கெட் போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கும் போது தன் பெற்றோர்கள் வராததால் சரியாக விளையாடமல் இருப்பதும் பிறகு தன் தாய் வந்து சேர்ந்ததும் ஆரம்ப சச்சின் போல் விளையாடி அணியை ஜெயிக்க வைப்பதுமாக, முன்னதில் சோகமுமாய் பின்னதில் உற்சாகமுமாய் நன்றாக வித்தியாசம் காட்டியிருக்கிறார். தன் தம்பிக் குழந்தையின் மீது பூச்சிமருந்தை தெளித்துவிட்டு அதனால் குழந்தை மூச்சு பேச்சின்றி கிடப்பதை பார்த்து அதிர்ந்து போவதும், பிறகு மருண்ட கண்களுடன் ஓடி ஒளிந்து கொள்வதும் தன் பெற்றோர்கள் குழந்தையை பார்த்து கதறும் போது குற்ற உணர்ச்சியோடு அழுவதுமாக பின்னியெடுத்திருக்கிறான் அந்தச் சிறுவன். குறிப்பாக நீதிமன்றத்தில் தான் தன் தம்பியை தெரியாமல் சாகடித்த காரணங்களையும் தாய் தன்னை புறக்கணித்ததற்காக இவ்வாறு செய்ததாயும் அழுகையும் பயமுமாய் கூறிவிட்டு பெற்றோரையும், வக்கீல், நீதிபதிகளை பார்த்து அழுகையின் உச்சத்துடன் 'ஸாரி' என்று கேட்கும் போது கலங்கிப் போகாதவர்கள் நிச்சயம் சிமெண்டினால் வேயப்பட்ட மனதுடையவர்களாக இருக்க வேண்டும்.

தாயாக காவேரி. முதிர்ச்சியாக பாத்திரத்திற்கு இவர் அநியாய இளமையாக இருக்கிறார். என்றாலும் சிறுவனின் மீது அன்பை பொழியும் காட்சிகளிலும் அவன் ஒரு முறை செய்யும் தவறுக்காகவும் சொல்லும் பொய்க்காகவும் அவனை கண்டிக்கும் காட்சியிலும் பின்னர் குழந்தைகள் நீதிமன்றத்தில் சிறுவன், 'அம்மா, நீ என் பெஸ்ட் பிரண்டில்லன்னு சொல்லிட்டாங்க' என்று குற்றத்திற்கான காரணத்தை சொல்லும் போது அதிர்ச்சியடைந்து நொறுங்கிப் போய் அழும் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

குரூப் போட்டோவில் ஒரத்தில் நிற்கும் நபரைப் போல வந்து போகிறார் பார்த்திபன். சென்சார் அதிகாரியாக வருகிறார். நல்ல படம் என்பதற்காக அவ்வளவாக முக்கியமல்லாத பாத்திரம் என்றாலும் நடிக்க ஒப்புக் கொண்டதாக இவர் ஒரு பேட்டியில் சொல்லியிருப்பதை பார்க்கும் போது பாராட்டத் தோன்றுகிறது. படத்திற்கு ஒரு commercial weight இவரால் கிடைப்பதை மறுக்க முடியாது. படத்தின் பிற்பகுதியில் வரும் ஒரு பாடல் காட்சியில் பெண் வேடத்தில் வந்து நம்மைப் 'படுத்துகிறார்'

()

7 வயதிற்கு குறைந்தவர்கள் செய்யும் குற்ற்ங்களுக்கு மட்டுமே சட்டரீதியாக தண்டனைகள் இல்லை என்று படத்தின் ஒரு வசனத்தில் கூறப்படுகிறது. மேலும் பார்வையாளர்களின் அனுதாபம் முழுமையும் சிறுவனுக்கு கிடைக்குமாறு காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சிறுவன் அறியாமல் செய்த பிழையென்றாலும், வன்மத்துடன் செய்யப்படும் தவறின் மூலம் வெளிப்படும், அவன் மனதில் உறைந்திருக்கும் கெட்ட எண்ணங்களை களைய சிறைத்தண்டனைக்கு மாற்றாக ஒரு தீர்வும் இந்தப்படத்தில் மறைமுகமாக சொல்லப்பட்டிருக்க வேண்டும். இந்தக் கால குழந்தைகளுக்கு வன்முறை என்பது தாய்ப்பாலோடு சேர்த்தே புகட்டப்படும் அளவிற்கு இன்றைய சூழல் வன்முறை நிறைந்ததாய் இருக்கிறது.

இயக்குநர் ஷாஜ்ஜகான் இந்தப் படத்தை சுவாரசியாக சொல்லியிருந்தாலும், திரைக்கதை இன்னும் இறுக்கமாக்கப்பட்டிருந்தால் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும் என்று தோன்றுகிறது. சில இடங்களில் படம் மிகுந்த நாடகத்தன்மையோடு இருந்ததை தவிர்த்திருக்கலாம்.

சிறுவர் சீர்திருத்தப் பள்ளி அறிமுகமாகும் ஆரம்பக் காட்சிகள் யதார்த்த குரூரங்களோடு இருந்தாலும், போகப் போக அது ஏதோ ஒரு பொழுதுபோக்குப் பூங்கா போல இருப்பதாக முரணோடு சித்தரித்திருப்பதையும் தவிர்த்திருக்கலாம். சிறுவனுக்கு குழந்தையின் மீது வெறுப்பு வளரும் காட்சிகளை இன்னும் படிப்படியாக அழுத்தமாக கூறியிருக்கலாம். இசையமைப்பாளர் இன்னும் எவ்வளவு நாட்களானாலும் தன் 'லல்லலா' பாணியை மாற்றிக் கொள்ள மாட்டார் என்று தீர்மானமாகத் தெரிகிறது.

படத்தின் சிறுசிறு குறைகளைத் தாண்டி, எந்த வித வணிக அம்சமுமில்லாமல் எடுக்கப்பட்டிருக்கும் இந்த வித்தியாச முயற்சியை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.

இவ்வாண்டின் சிறந்த குழந்தை நடிகருக்கான தேசிய விருது மாஸ்டர் அஸ்வினுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

suresh kannan

Wednesday, March 09, 2005

அருண் வைத்யநாதனின் சில குறும்பட முயற்சிகள்

நேற்று சென்னை, தேவி ப்ரிவ்யூ தியேட்டரில் சக வலைப்பதிவாளர் அருண் வைத்யநாதன் இயக்கிய சில குறும்படங்களை பார்க்க நேர்ந்தது. அமெரிக்காவில் இருந்து வருகிற தமிழர்களின் பிரத்யேக தோற்றங்களோ, அலட்டல்களோயின்றி இயல்பாக வரவேற்றார் அருண். சென்னையில் ஓடுகிற ராமராஜன் படத்தின் 2வது நாளின் இரவுக்காட்சி போல அந்த சின்ன அரங்கம் காலியாக இருக்க ஒரு கணம் 'திக்'கென்று ஆகிவிட்டது. நம் தமிழ்ச்சினிமாக்களை ரணகளமாக விமர்சனமெழுதும் வலைப்பதிவாளர்களில், சென்னையில் உள்ளவர்கள் அனைவரும், ஒரு சகவலைப்பாதிவாளனின் வித்தியாசமான முயற்சிக்கான அழைப்பை ஏற்று வந்து குவிந்திருப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்த எனக்கு இது ஏமாற்றமாகவே இருந்தது.

நல்லவேளையாக பத்ரி என்னை கைகாட்டி வரவழைத்து ஆசுவாசப்படுத்தினார். எழுத்தாளர் மாலனையும், அருணா சீனிவாசனையும் முதன்முதலாக சந்தித்தேன். படங்கள் திரையிட சற்று தாமதமான அந்த நேரத்தைப் பயன்படுத்தி மாலனிடம் சற்று உரையாட முடிந்தது. சாவி தயாரிப்பில் மாலன் ஆசிரியராக இருந்து வெளியிட்டுக் கொண்டிருந்த திசைகள் அச்சுப்பத்திரிகையின் முக்கியமான பகுதிகளை, இன்றைய தலைமுறையினர் காணும் வகையில் ஒரு தொகுப்பாக கொண்டுவருவது பற்றியும், எழுத்தாளர் பாலகுமாரனின் இன்றைய படைப்புலகம் பற்றியும், சன் நியூஸில் முன்பு வந்து கொண்டிருந்த 'சங்கம்' என்கிற எழுத்தாளர்களை சந்திக்கிற நிகழ்ச்சியை மறுபடியும் தொடர முடியுமா என்பது பற்றியும் அவருடைய இயல்பாக உரையாட முடிந்தது.

()

பின்பு அருண் தம்மை முறையாக அறிமுகப்படுத்திக் கொண்டு அவர் பணியாற்றிய இடங்களைப் பற்றியும், திரையிடப்படப் போகின்ற குறும்படங்களைப்பற்றியும் கூறினார்.

அருண் இந்தப் படங்களை எடுத்த கால வரிசையில் திரையிடப்பட்டதை பார்க்கும் போது குறும்பட அனுபவத்தில் அவரின் பரிணாம வளர்ச்சியை நாம் உணர முடிகிறது. அவரது ஆரம்பப் படங்கள் அனைத்துமே எதிர்பாராத முடிவைக் கொண்ட 'ஓஹென்றி' பாணியைக் கொண்டதாகவே இருக்கிறது. இந்த sudden twist யுக்தியில் அவருக்கு நிறைய பிரேமை உள்ளதாகவே தெரிகிறது. இது எல்லா ஆரம்ப எழுத்தாளனுக்கும் ஏற்படுகிற, வாசகனை எப்படியாவது கவர முயல்கிற அதே யுக்தி. ஆனால் பின்னால் வருகிற படங்களில் மெல்லிய உணர்வுகளை வெளிப்படுத்தும் முதிர்ந்த முயற்சிகளை காண முடிகிறது.

திரையிடப்பட்ட குறும்படங்களில் என்னைக் கவர்ந்தவைப் பற்றி என் நினைவில் உள்ளதை வைத்து உங்களுக்கு விளக்க முயல்கிறேன்.

Forgiven

தன்னிடம் திருட வந்தவன் வலிப்பு நோயால் அவதிப்படுவதைப் பார்த்து அவனுக்கு உதவுகிறாள் ஒரு பெண். சுஜாதாவின் 'வந்தவன்' சிறுகதையை நினைவுபடுத்தும் இந்தப்படம் கறுப்பு வெள்ளையில் மங்கலாக படமாக்கப்பட்டிருக்கிறது.

Noose

தற்கொலை செய்து கொள்ள தயாராகும் ஒருவன் ஏதோ மிகுந்த யோசனையில் இருப்பதும், தொங்கவிடப்பட்டுள்ள தூக்கு கயிற்றை இழுத்து சோதிப்பதும் மிக நிதானமாக காட்டப்படுகிறது. 'ஏன் இவன் தற்கொலை செய்துக் கொள்ளப் போகிறான்' என்று நாம் கவலையுடன் உட்கார்ந்திருக்கும் போதே, உள்ளறைக்கு அவன் செல்லும் போதே பின்னால் செல்லும் காமிரா மூலம் ஒரு பெண் கொலை செய்யப்பட்டு இருப்பதை அதிர்ச்சியான பின்னணி இசையுடன் நமக்கு காண்பிக்கிறது. பிறகு அந்த உடலை அவன் இழுத்துவந்து தூக்குகயிற்றுக்கு அருகில் இழுத்துவருவதன் மூலம், அவன் ஒரு கொலைகாரன் என்பதும் கொலையை மறைக்க அவன் மேற்கொண்ட முயற்சிகளே அவை என்பது நமக்கு உறைக்கிறது. நான் ரசித்த குறும்படம் இது.

Int(a)elligent

இதுவும் ஒரு திடுக்கிடும் முடிவைக் கொண்ட funny thriller படம்.
பூட்டப்பட்டிருக்கிற அறைக்குள் நுழைகிற திருடனொருவன் தன் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் போது, யாரோ வருவதை கேட்டு ஒளிந்து கொள்கிறான். உள்ளே நுழையும் பார்வையற்ற அந்த வீட்டின் சொந்தக்காரர், தான் அறியாமலே திருடனின் கையை மிதித்தும், சிகரெட் பற்றவைத்த தீக்குச்சியை அவன் மேல் போடுவதுமாக திருடன் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிற காட்சிகள் மெலிதான நகைச்சுவையுடன் சொல்லப்படுகிறது. திருடன் 'விட்டால் போதும்' என்று அறைக்கு வெளியே ஓடுகிறான். பின்பு மகிழ்ச்சியுடன் நடனமாடும் அந்த பார்வையற்றவர், தன் கருப்பு கண்ணாடியை விலக்குவதன் மூலம் அவர் இத்தனை நேரம் பார்வையற்றவராக நடித்துக் கொண்டிருந்தார் என்பது நமக்கு விளங்குகிறது. திடுக்கிடும் முடிவாக, அவரும் திருட வந்த ஒருவர்தான் என்பது அவர் பொருட்களை எடுப்பதின் மூலம் நமக்கு தெரிகிறது.
திரையிடப்பட்ட குறும்படங்களிலேயே ஒரு முழுமை இருக்கிறது என்று நான் உணர்ந்தேனென்றால் அது இந்தப்படத்தில்தான். மிகவும் ரசித்துப் பார்த்த குறும்படம் இது. ஆனால், பார்வையற்றவராக நடித்தவர் அவ்வாறு அல்ல என்பதையும் அவரும் திருட வந்த ஒருவர்தான் என்பதையும் என்னால் முன்னாலேயே யூகிக்க முடிந்தது. சிறுவயதில் நிறைய டிடெக்டிவ் டைப் நாவல்களை படித்திருந்ததனால் இது சாத்தியமாகி இருக்கலாம். யார் மீது உனக்கு சந்தேகம் வராமல் இருக்கிறதோ, அவன் மீது முதலில் சந்தேகப்படு என்கிற ஆதார விதியின் படி.

As you wish, Stinking Cigar படங்களைப் பற்றி பத்ரி தன் வலைப்பதிவில் ஏற்கெனவே எழுதிவிட்டதால் அதன் கதைச்சுருக்கத்தை தவிர்க்கிறேன்.

As you wish திரைப்படத்தில், நிகழ்காலக் காட்சிகள் கறுப்பு வெள்ளையிலும், இறந்தகால காட்சிகள் வண்ணத்திலும் காட்டப்பட்டன. இதை பின்பு விளக்கின அருண், நான் உணர்ந்திருந்த படியே, அவர்களின் வசந்த இளமைக் காலங்கள் இன்பமயமாக இருந்ததனால் வண்ணத்திலும், நிகழ்காலத்தில் அந்தக் காதலி மரணப்படுக்கையில் இருக்கும் சோகக்காட்சிகள் கருப்பு வெள்ளையிலும் காட்டப்பட்டதாக விளக்கினார்.

இதிலும் அந்த எதிர்பாராத முடிவைத்தரும் உத்தியின் மூலம், காதலியின் வேண்டுகோளின்படி அவன் தலையணையை அழுத்தி அவளை கொலை செய்கிறான். கருணைக் கொலை சரியா, தவறா என்பது எப்போதும் விவாதத்திற்கு உரிய விஷயம். என்றாலும் இந்த sudden twist யுக்தியை முதல் படத்திலிருந்து பார்த்துக் கொண்டு வந்து ஒரு ரெடிமேட் உணர்வில் இருந்த காரணத்தினால், ஒரு காட்சியில் அவன் காதலியின் வேண்டுகோளின் படி புல்லாங்குழலை எடுத்து வாசிக்கும் போது, எங்கே அவள் தலையில் போட்டு கொல்லப் போகிறானோ என்று நான் எதிர்பார்த்தேன்.

()

காகிதத்தில் எழுதப்படும் வரிகளை திரையில் கொண்டு வருவது மிகுந்த சிரமமானது என்பதை நான் ஒரளவு அறிவேன். 'அவன் தன்னிடம் வைத்திருந்த கூரிய கத்தியினால் அவள் முகத்தில் இரக்கமின்றி கோலமிட்டான்' என்று நான் எளிதாக காகிதத்தில் எழுதி விட முடியும். ஆனால் இதையே படமாக கொண்டுவரவேண்டுமென்றால், நடிப்பதற்கு ஒரு ஆணும் பெண்ணும், கத்தியும் ரத்தமும் தேவை. எந்த மாதிரியான காட்சி பின்னணி என்பதிலிருந்து, லைட்டிங் பற்றியும், பின்னணி இசை பற்றியும் யோசிக்க வேண்டும்.
காமிராவை எங்கே வைப்பது? அவன் முதுகிற்கு பின்னாலா? எந்த மாதிரியான கோணம்? குளோசப்பா? மிட் ஷாட்டா? காமிராவை வைப்பது இருக்கட்டும். காமிரா வாடகை கட்டணத்திற்கு, போட்டிருக்கும் தங்கச் செயினை எந்த மார்வாடிக் கடையில் அடகு வைப்பது என்றும் யோசிக்க வேண்டும், பொருளாதாரப் பற்றாக்குறை இருக்கும் பட்சத்தில். உடல், மன ரீதியான சிரமங்கள் மட்டுமன்றி பொருளாதார ரீதியாகவும் செலவு வைக்கக்கூடியது இந்த மாதிரியான முயற்சிகள்.

எனவே, பகோடாவை மென்று கொண்டே இருக்கையில் சாய்ந்து கொண்டு, "இன்னாத்த படம் எடுத்திருக்கான்?" என்று நொட்டு & நொள்ளை சொல்லாமல் இந்த மாதிரியான வித்தியாச முயற்சிகளை பொதுவாக நாம் ஊக்குவிக்க முயல வேண்டும் என்று கருதுகிறேன்.

()

இத்தனை குறும்படங்கள் எடுத்தனின் மூலம் அருண் என்ன மாதிரியான அனுபவத்தை பெற்றிருப்பார் என்று நான் யோசிக்கிறேன். அவர் தனது அடுத்த குறும்படத்தை மிக தைரியமாக அணுகுவார் என்றே எனக்குப் படுகிறது. அவரின் படங்களில் Narration ஆகட்டும், தொழில்நுட்ப விஷயங்களில் ஆகட்டும், ஒரளவிற்கு சிறப்பாகவே இருப்பதாக எனக்குப் படுகிறது, இன்னும் அவர் போக வேண்டிய தூரம் நிறைய இருப்பதை அவர் உணர்ந்திருப்பார் என்றே நான் நம்புகிறேன்.

அருணின் எதிர்கால முயற்சிகளுக்கு என் வாழ்த்துகள்.

டெயில் பீஸ்: இந்த விழாவில் கலந்துகொண்டதின் விளைவாக நண்பர் ரஜினி ராம்கி எழுதிக் கொண்டிருக்கிற ஒரு 'சூப்பர்' புத்தகம் விரைவில் வெளிவரும் என்பதையும் அறிந்து கொண்டேன். அவருக்கும் என் வாழத்துகள்.