Wednesday, April 28, 2021

ஓடும் ரயிலில் ஒரு நிற்காத வம்பு

 
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மூன்றாவது நிறுத்தத்திற்கு முன்பாக ஏறினேன். ஓர் இருக்கை காலியாக இருந்தது. பக்கத்தில் ஒரு சிறுவன். எதிர் இருக்கையிலிருந்த சிறுமி அந்தக் காலி இருக்கையின் மேல் கால் வைத்திருந்தது. வெயில் தந்த எரிச்சலில் 'எடும்மா' என்றேன் மென்அதட்டலாக. என்னை ஒரு மைக்ரோ செகண்ட் வெறுப்புடன் பார்த்தது.

என்ன இருந்தாலும் சிறுமிதானே? ரயிலில் வரும் காண்டாமிருகங்களே ஷூக்காலை தூக்கி இருக்கையில் பந்தாவாக வைத்துக் கொண்டு வரும் போது சிறுமிக்கு என்ன தெரியும் என்று நினைத்துக் கொண்டு ஒரு வலுக்கட்டாயமான புன்னகையுடன் மூலம் சிறுமியைச் சமாதானப்டுத்த முயன்றேன். இருந்தாலும் அம்மணிக்கு கோபம் போகவில்லை. என்னைக் குறுகுறுவென்று பார்த்தவாறிருந்தது. 
 
என்னுடைய மகளின் நினைவு வந்து போயிற்று. அவளும் அப்படித்தான். வழியில் இப்படி அவளிடம் யாராவது குறும்பு செய்தால் அங்கு அடக்கி வாசித்து வீட்டிற்கு வந்து சம்பந்தப்பட்டவர்களைப் பற்றி புலம்பித் திட்டி தீர்த்து விடுவாள். எனவே எனக்கு உள்ளுற சிரிப்பு வந்தது.

எழுத வந்தது இதுவல்ல. சிறுமியின் பக்கத்திலிருந்த அவர்களின் தாய். யாரிடமோ கைபேசியில் பேசிக் கொண்டே...... இருந்தார். நிச்சயம் குடும்ப அரசியல். அது சார்ந்த வம்பு. தொலைக்காட்சி சீரியல்களில் கேட்டுப்பழகிய தொனியில் யாரிடமோ சுவாரசியமாக பேசிக் கொண்டிருந்தார்.

என் பக்கத்தில் அமர்ந்திருந்த சிறுவன் அவரின் மகன் போலும். சற்று எரிச்சலுடன் தாயின் நீண்ட தொலைபேசி உரையாடலை பார்த்துக் கொண்டேயிருந்தான். பின்பு மெல்ல "பேசின் பிரிட்ஜ் வரப் போகுதும்மா" என்றான். தாயின் கவனத்தைக் கலைப்பதே அவனுடைய நோக்கம் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. பேசின் பிரிட்ஜ் நிறுத்தம் வர குறைந்தது ஒரு வாரம் ஆகும் என்பது தினமும் போகும் அனுபவஸ்தர்களுக்கு தெரியும்.
 
சிறுவனின் எச்சரிக்கையைக் கேட்டதும் தாயும் சற்று பதட்டத்துடன் 'பையை எடுத்து வெச்சுக்கோ' என்பது போல் சைகை காட்டினார். அப்போதும் உரையாடலை நிறுத்தவில்லை. 

ஒருவழியாக பேசின்பிரிட்ஜ் வந்தது. பையன் பையை எல்லாம் தூக்கப் போக தாயாரோ 'இரு. இரு.. ' என்று சைகை காட்டி உரையாடலைத் தொடர்ந்தார்.
 
"ஒண்ணு வூட்டை எழுதி வை.. இல்லைன்னா.. 20 லட்சம் கொடுன்னு சொல்றாங்களாம்.. அவங்க நாத்திதான் சொன்னா.... என்ன அநியாயம் பாரேன்.."

இவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எனக்கு சற்று பதைபதைப்பு எழுந்தது. ஒருவேளை பேசின் பிரிட்ஜில் இறங்க வேண்டிய அவர்கள், அம்மணியின் உரையாடல் சுவாரசியத்தில் தவற விட்டார்களோ என்று தோன்றியது.  எச்சரிக்கலாமா என்று நினைத்தேன். ஆனால் அப்படியில்லை. அவர்கள் சென்ட்ரலில்தான் இறங்க வேண்டும் போல. தாயாரின் சாவகாசமான உடல்மொழியில் இருந்து அப்படி தெரிந்தது. எனக்கும் சற்று நிம்மதி.

தாயார் எப்போது  உரையாடலை முடிப்பாரோ என்று சிறுவன் பொறுமையிழந்து பார்த்துக் கொண்டேயிருந்தான். பொறுப்புள்ள சிறுவன்தான் போல. பைகளை தயாராக கையில் வைத்திருந்தான். அவனின் பொறுமையின்மை எனக்குள்ளும் பரவி விட்டதுதான் ஆச்சரியம். அம்மணியின்  உரையாடல் அந்த லட்சணத்திற்கு நீண்டது.

சிறுமிக்கு இந்தப் பிரச்சினை எதுவுமில்லை. அது பாட்டுக்கு ஜன்னலின் வெளியே பராக்கு பார்த்தபடி அவளின் பிரத்யேக உலகத்தில் ஆழ்ந்திருந்தது. சமயத்தில் என்னை நோக்கி ஒரு குறுகுறு. நான் புன்னகையை மறைத்து அவளைக் கவனிக்காமலிருக்க சிரமப்பட்டேன்.

சிறுவனின் பொறுமையின்மையையும் தாயின் நீண்ட வம்பு உரையாடலையும் மாற்றி மாற்றி பார்க்க எனக்கே சுவாரசியமாகத்தான் இருந்தது. சமயங்களில் அந்த தாயாரின் முகத்தையும் சற்று குறும்போடு பார்த்தேன். அப்பவாவது உரையாடலை முடிப்பாரோ என்கிற நப்பாசையோடு. எனக்கு தொடர்பில்லாததுதான். இருந்தாலும் சிறுவனுக்காக இதைச் செய்ய வேண்டும் என்று தோன்றிற்று. ம்..ஹூம்.. அவர் பாட்டுக்கு கைபேசி உரையாடலில் சுவாரசியமாக இருந்தார்.

ஒருவழியாக சென்ட்ரல் நிறுத்தம் நெருங்கியது. சிறுவனும் சிறுமியும் ஏறக்குறைய எழுந்து நின்று விட்டார்கள். அப்போதும் உரையாடலைத் துண்டிக்க மனமின்றி விடைபெற்றுக் கொண்டு அந்த அம்மணி சொன்ன கடைசி வாக்கியம்தான் என் வாயிலிருந்து புன்னகையை வெடிக்க வைத்து விட்டது.  

"சென்ட்ரல் வந்துடுச்சுக்கா.. எறங்கப் போறேன். சரியா பேச முடில. கீழ இறங்கிட்டு திரும்பவும் போன் போடறேன்”

எதே!

suresh kannan

No comments: