Sunday, August 09, 2009

பைத்தியக்கார விடுதிக்குள் ஒரு உற்சாக பறவை

முந்தைய பதிவின் தொடர்ச்சி

1975-ன் சிறந்த - படம், இயக்குநர், நடிகர், நடிகை, திரைக்கதை... என அகாதமி விருதின் பிரதான விருதுகள் அனைத்தையும் பெற்ற திரைப்படம் One Flew Over the Cuckoo's Nest. சம்பிதாயமாக இருந்தாலும் சொல்லத்தான் வேண்டியிருக்கிறது. McMurphy என்கிற அந்த பாத்திரத்திற்கு ஜாக் நிக்கல்சனைத் தவிர வேறு யாரையும் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. அந்தளவிற்கு ஒரு அற்புதமானதொரு நடிப்பைத் தந்து மறக்க முடியாத ஒரு அனுபவத்தை தந்திருந்தார் அவர்.

உளவியலின் ஆரம்ப வகுப்பில் ஒரு முறை எங்கள் ஆசிரியர் கேட்டார். "யார் யாரெல்லாம் நார்மலான நபர்கள் என்று உணர்கிறீர்கள்?. கையைத் தூக்குங்கள்". வகுப்பின் பெரும்பாலோனோர் கையைத் தூக்கினார்கள். சிலர் இதில் ஏதோ சூது இருக்கிறது என்கிற குருட்டு யோசனையில் கையைத் தூக்கவில்லை. ஆசிரியர் சிரித்துவிட்டு சொன்னார். "நாம் ஏற்படுத்தி வைத்திருக்கிற பொதுவான அளவுகோல்களின் படி நார்மல் என்று ஒருவருமே கிடையாது. நாம் ஒவ்வொருவருமே ஒவ்வொரு வகையில் அப்நார்மல் நபர்கள்தான்."


Nurse Ratched-ன் கண்டிப்பான தலைமையில் அந்த மனநல நிலையத்தின் பிரிவில் எல்லாச் சிகிச்சை செயற்பாடுகளும் ஒரு ஒழுங்குணர்ச்சியுடனும் இயந்திரத்தனமாகவும் நடைபெறுகிறது. அந்த மெளனத்தைக் கலைத்துக் கொண்டு ஒரு உற்சாக புயல் போல் உள்ளே நுழைகிறான் McMurphy. கற்பழிப்பு வழக்கு தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவனின் விசித்திரமான நடவடிக்கை காரணமாக இங்கு அழைத்து வரப்பட்டிருக்கிறான். அவன் உண்மையிலேயே மனநிலை பாதிக்கப்பட்டவனா அல்லது நடிக்கிறானா என்பதை மருத்துவர்கள் விசாரித்து தெரிவிக்க வேண்டும்.

அங்குள்ள விதிகளை மாற்ற முயல்வது, எல்லோரிடமும் உற்சாகமாக உரையாடுவது.. நோயாளிகளோடு பேருந்தை கடத்திச் சென்று அவர்களை போட்டிங் அழைத்துச் சென்று உற்சாக அனுபவத்தை தருவது.. என அந்த நிலையத்தை ஒரு கேளிக்கை விடுதியாக மாற்றி Nurse Ratched-க்கு ஒரு பெரிய சவாலாகவே இருக்கிறான் McMurphy. இம்மாதிரியான அதீதமான நடவடிக்கையில் ஈடுபடும் நபர்களுக்கு "ஷாக் ட்ரீட்மெண்ட்" தருவதின் மூலம் அவர்களுக்கு தண்டனை அளிக்கப்படுவது அங்குள்ள அராஜக சடங்காக இருக்கிறது. McMurphyயும் அதே தண்டனைக்கு உள்ளானாலும் அது அவனின் உற்சாகத்தை குறைப்பதில்லை. அங்கிருந்து தப்பிக்க முடிவு செய்யும் இரவன்று அனைவருக்கும் தன்னுடைய பெண் நண்பர்கள் மூலம் வரவழைக்கப்பட்ட மதுவை வழங்கி அந்த இரவை எல்லோருக்கும் மறக்க முடியாத அனுபவமாக ஆகும் அளவிற்கு உற்சாகமாக்குகிறான். தன்னுடைய தோழியின் மீது ஆசைப்படும் ஒரு இளம் நோயாளிக்கு அவளுடன் அந்த இரவை இன்பமாக கழிக்க வைக்கிறான். அளவுக்கதிகமான மதுவின் காரணமாக அனைவருமே அன்றிரவு உறங்கி விடுவதால் தப்பிக்கும் திட்டம் தவறிப் போகிறது.

மறுநாள் காலையில் நிகழும் அந்த கிளைமாக்ஸ் காட்சியை திரையில் பார்ப்பது நலம்.

()

முன்னரே சொன்னது போல் ஜாக் நிக்கல்சன் தம்முடைய பாத்திரத்தை மிகத் திறமையாக கையாண்டிருக்கிறார். இரவன்று நிகழவிருக்கும் base ball விளையாட்டுப் போட்டியை தொலைக்காட்சியில் காண Nurse Ratched-ன் அனுமதியை கேட்கிறான் McMurphy. பெரும்பான்மையான நபர்கள் இதற்கு ஒப்புதல் அளித்தால்தான் இதை அனுமதிக்க முடியும் என்று vote counting-க்கிற்கு ஏற்பாடு செய்கிறார் செவிலி. எல்லோரிடமும் கெஞ்சி கெஞ்சி தன்னுடைய கடைசி நபரின் ஒப்புதலை வாங்கும் போது செவிலி அளித்த நேரம் முடிகிறது. ஓட்டளிப்பு நேரம் முடிந்ததாகக் கூறி அனுமதியை மறுக்கிறார் Nurse Ratched. எல்லோரும் ஏமாற்றத்துடன் திரும்பும் போது McMurphy தொலைக்காட்சியின் முன் அமர்ந்து விளையாட்டுப் போட்டியை காண்பதான உடல் மொழியுடன் ஆட்டக்காரர்களை உற்சாகப்படுத்தும் குரலையும் எழுப்புகிறான். பின்பு ஒருவர் ஒருவராக அவனுடன் இணைந்து அந்த இடமே ரசிகர்கள் விசிலடிக்கும் விளையாட்டு மைதானமாக மாறுகிறது. உண்மையில் தொலைக்காட்சியில் எதுவுமே ஒளிபரப்பாவதில்லை. அனுமதி மறுக்கப்பட்டதின் எதிர்ப்புக் குரலாக தன்னுடைய கலகத்தை நிகழ்த்துகிறான் McMurphy. படத்தின் மிகச் சிறப்பான காட்சி இது.

"ஷாக் ட்ரீட்மெண்ட்" தண்டனையை பெற்ற பிறகு அதனால் பாதிக்கப்பட்டவன் போல் விசித்திரமான முகத்துடனும் உடல்மொழியுடனும் வெளியே வருகிறான் McMurphy. எல்லோருமே திகைப்புடனும் பரிதாபத்துடனும் அவனைப் பார்க்கின்றனர். சற்று நேரத்திலேயே அவன் செய்கிற குறும்பு அது என்று தெரிய வந்ததும் அனைவருக்கும் சிரிப்பு பீறிட்டுக் கொண்டு வருகிறது.

துளிக்கூட உணர்ச்சியே வெளிப்படுத்தாத இயந்திரமான முகமும் தம்முடைய உத்தரவு பின்பற்றப்படவேண்டிய மெளன கண்டிப்புமாக Nurse Ratched பாத்திரத்தை Louise Fletcher ஏற்றிருக்கிறார். சிறந்த நடிகைக்கான அகாதமி விருது இவருக்கு கிடைத்தது நியாயமே. ஒருநிலையில் McMurphy மனநிலை சரியில்லையாதவனாக நடிக்கிறான் என்பதை மருத்துவர் குழு கண்டுபிடித்து அவனை வெளியேற்ற முடிவு செய்தாலும் Nurse Ratched தலையிட்டு அந்த முடிவை மாற்றுகிறார். McMurphy தனக்கு விடுக்கும் மறைமுக சவாலில் வெல்ல வேண்டும் என்கிற உணர்வே இந்த முடிவை நோக்கி அவளை நகர்த்துகிறது.

()

Ken Kesey படத்தின் தலைப்பிலேயே எழுதின நாவலை சிறப்பாக படமாக்கியிருக்கிறார் Milos Forman. மனித மனத்தின் சிடுக்குகளை அவிழ்க்க புத்தகங்களில் எழுதப்பட்டுள்ள சிகிச்சை முறைகளும் இயந்திரத் தனமான சடங்குகளும் மாத்திரமே தேவையில்லை. அவர்களை இயல்பான உற்சாகத்துடன் செயல்படுவதற்கான சூழ்நிலையை அமைத்துத் தருவதும் முக்கியமானது என்பதை இந்தப் படம் நமக்கு உணர்த்துகிறது. ராபர்ட் ராஜசேகர் இயக்கத்தில் 'மனசுக்குள் மத்தாப்பு' என்கிற தமிழ் திரைப்படம் இந்தத் திரைப்படத்தின் பாதிப்பில் உருவாகியது எனக் கருதுகிறேன். வசூல்ராஜா எம்.பி.எஸ்-திரைப்படமும் (இந்தி மூலம் - முன்னாபாய் )இந்தப் படத்தின் சில கூறுகளை உள்ளடக்கியது. IMDB-ன் 250 தர வரிசையில் நீண்ட காலமாக முன்னணியில் இருந்துவரும் இந்தத் திரைப்படம் அகாதமி விருதுகள் தவிர BAFTA உள்ளிட்ட மற்ற விருதுகளையும் பெற்றுள்ளது.

suresh kannan

15 comments:

RAMG75 said...

பிரபு மற்றும் சரத் பாபு நடித்த பூ பூ வா பூத்திருக்கு படத்தின் காப்பி இந்த படம் என்று நினைக்கிறன். என்ன தமிழ் படம்m இந்த படம் வந்த பிறகு வந்தது. ஹி ஹி ஹி

RAMG75 said...

sorry last para padikkamal padhivittuvitten :-). You are correct. Manasukkul Mathappu padam thaan.

RAMG75 said...

sorry last para padikkamal padhivittuvitten :-). You are correct. Manasukkul Mathappu padam thaan.

இளவட்டம் said...

அருமையான பதிவு ....படம் பார்த்துவிட்டு சொல்கிறேன்....ஆமாம் ...நீங்கள் Alejandro González Iñárritu ன் BABEL படம் பார்த்துவிட்டீர்களா?

சென்ஷி said...

நல்லதொரு படத்தை பற்றிய விமர்சனம். தவறாது பார்க்க மனம் விழைகிறது. பகிர்விற்கு நன்றி சுரேஷ்கண்ணன்!

Madhan said...

நல்ல அறிமுகம் சுரேஷ். ஜாக் நிக்கொல்சன் ஒரு மிக சிறந்த நடிகர். அவரது அனாயசமான நடிப்பு படத்தில் மிகவும் அழகு.

இந்த படத்தை தமிழில் பிரபு- சரண்யா நடிக்க, சற்று காதல் கலந்து மனசுக்குள் மத்தாப்பு என எடுத்து சொதப்பினர்.

மிலாஸ் போர்மன் நேர்த்தியாக இயக்கிய படம் இது. மொசார்ட்டின் வாழ்க்கையை வைத்து இவர் எடுத்த Amadeus திரைப்படத்தை அவசியம் ஒருமுறை பாருங்கள்.

மஞ்சூர் ராசா said...

Intha padam Malayalaththil Mohanlal nadiththu oru sila matrangaludan velivanthathu piragu Pirabu nadiththu tamizil.

Jack in nadippu abaaram.

Subbaraman said...

Nice review, Suresh Kannan.

Jack Nicholson is an excellent actor. I loved his acting in Chinatown and the recent one "The Bucket List".

Vijay said...

நானும் இந்தப் படத்தைப் பார்த்திருக்கிறேன். அருமையான படம். ஜாக் நிகல்சனின் அருமையான இன்னொரு படம், Anger Management. விழுந்து விழுந்து சிரிக்கலாம் :-)

Beski said...

படத்தைப் பற்றி சொன்னதற்கு நன்றி.

ரா.கிரிதரன் said...

நல்ல விமர்சனம். நான் இன்றும் பயப்படும் ஒரு படத்தில் கலக்கியிருப்பார் Jack Nicholson. ஒரே படத்தில் இத்தனை முக,உடல் வெளிப்பாடுகளா என வியக்க வைத்த படம் - The Shining.

போஸ்டரைப் பார்த்தே பல நாட்கள் பயந்திருக்கிறேன்!

கண்டிப்பாக தனியாக பார்க்க முடியாது. இந்த புத்தகத்தையும் தனியாக படிக்க முடியாது.

Toto said...

SureshKannan.. That's a nice post. Though I am not a fan of this film, I liked the characterization of the 'Chief' [ the big guy ].

Anonymous said...

In the book, the story is told from the perspective of the Big Chief, a (Red) Indian, who pretends to be deaf-and-dumb just to escape harassment. This brings a kind of balance to the narrative, which the film lacks. The film is considered inferior to the book by many critics, and accused of playing to the gallery.

Towards the end, there is a surrealistic passage where Big Chief remembers the trauma of growing up in a Reservation (செவ்விந்தியர்களுக்கான தடுப்பு முகாம்)and a nursery rhyme of those days from which the title of the book (and the film) is taken.

"Wire, blier, limber, lock
Three gheese in a flock
One flew east and one flew west
One flew over the cuckoo's nest"

I think it's unfair to compare the film version to the book; books , after all, don't have a 'gallery' to play to.

களப்பிரர் - jp said...

//In the book, the story is told from the perspective of the Big Chief, a (Red) Indian, who pretends to be deaf-and-dumb just to escape harassment. This brings a kind of balance to the narrative, which the film lacks.//

If there was a narration by chief, then the moment he was seen in the film, you know that he is acting as deaf and dump. so in my view, it is good the film has no narriation.

Suresh: thanks for the good post

RP RAJANAYAHEM said...

intha padam naan innum paarkkavillai. paarkkavendum.ungal pathivu romba nandraaga irukkiradhu.