Tuesday, January 11, 2005

இந்தவருட புத்தக கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள் (?!)
முன்பு இட்ட பதிவில் நானிட்ட அறிவிப்பை சில மணிநேரங்களுக்குள் மீறுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. எந்தவித முன்தீர்மானங்களுமின்றிதான் இன்று மாலை 4 மணியளவில் கண்காட்சிக்கு சென்றேன். அலுவலக நாள் என்பதாலும் மதிய நேரம் என்பதாலும் கூட்டம் மிதமாகவே இருந்தது.

வெளியே உள்ள பிளாட்பாரக்கடைகளில் பல நூல்கள் இருந்தாலும் குனிந்து தேடுவதில் சிரமமிருந்தது.

கண்காட்சியின் உள்ளே சிலபல பதிப்பக கடைகளை சுற்றியபின்னர் கிழக்கு பதிப்பகத்திற்கு சென்றேன். பா.ராகவனைப் பார்த்ததும் நான் கேட்ட முதல் கேள்வி:

"'ஜெயேந்திரர் அருளிய பொன்மொழிகள்' புத்தகம் இருக்கா?"

பான்பராக் வாயுடன் அடக்க முடியாமல் சிரித்தவரின் சற்று தொலைவில் நகர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தேன். எழுத்தாளர் என்கிற நிலையிலிருந்து பதிப்பாசிரியர் என்கிற நிலைக்கு உயர்வு பெற்று கிழக்கு பதிப்பகத்தின் வெற்றிக்கு மூலகாரணங்களுள் ஒருவராயிருக்கிற அவரை நிச்சயம் பாராட்ட வேண்டும். புத்தக அட்டைகளை பாராட்டிய பின்னர் "யார் புத்தக அட்டைகளை வடிவமைக்கிறார்கள்?" என்கிற என் கேள்விக்கு தாம்தான் அதற்கான யோசனைகளை தருவதாகவும் தன் மேற்பார்வையில்தான் அட்டைகள் வடிவமைக்கப்படுகின்றன என்று தெரிவித்தார்.

"மக்களுக்கு நிஜமாகவே புத்தகம் வாசிப்பதில் ஆர்வம் கூடியிருக்கிறதா? அல்லது பிட்ஸா சாப்பிடுவது மாதிரி இதுவும் பேஷன்களில் ஒன்றாகி விட்டதா? என்ற என் கேள்விக்கு 'பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களின் முரண்பட்ட செய்திகளினால் அலுப்பும் சலிப்பும் அடைந்திருக்கும் மக்கள் ஒரு மாற்றாக புத்தக வாசிப்பை அதிகம் தேர்ந்தெடுக்க முன்வந்திருக்கலாம்' என்றார். தன் புத்தகங்களான 'டாலர் தேசம்' மற்றும் '9/11' புத்தகங்கள் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளதாக கூறினார். சோம.வள்ளியப்பன் எழுதிய 'அள்ள அள்ளப் பணம்' என்கிற புத்தகம் விற்றுத் தீர்ந்து எவ்வளவு பிரதிகள் மட்டும் மீதமுள்ளன என்பதை கிரிக்கெட் ஸ்கோர் போர்டு போல் அவ்வப்போது மாற்றிக் கொண்டிருந்தார்கள்.

ஓவியர் அரவக்கோன் அவர்களை கிழக்கு பதிப்பக அரங்கின் முன் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தேன். நண்பர்கள் ரஜினிராம்கி, பத்ரி, முத்துராமன் ஆகியோர்களையும் சந்தித்து உரையாட முடிந்தது ஒரு மகிழ்ச்சியான விஷயம். 'எனது பார்வை' என்கிற வலைப்பூவை எழுதுகிற மெய்யப்பனையும் ஒரு அகஸ்மாத்தான சூழ்நிலையில் சந்தித்து உரையாட முடிந்தது.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனிடம் என்னை ஞாபகப்படுத்திவிட்டு பேசிக் கொண்டிருக்கும் போது (அவரது 'உலக சினிமா' என்கிற புத்தகம் பரவலான வரவேற்பை பெற்றிருக்கிறது) உலக சினிமா புத்தகத்திற்காக மூன்று வருடங்கள் உழைத்ததாக கூறினார். இனிய உதயம் என்கிற இதழில் ஜெயமோகன் அளித்திருக்கிற பேட்டியில் 'எஸ்.ரா சினிமாவுக்கு வந்தபிறகுதான் நிறைய எழுதவாரம்பித்தார்' என்கிற கருத்தை உடனடியாக மறுத்தார். 'துணையெழுத்து' தொடருக்காக விகடன் அலுவலகத்தினர் தன்னை அணுகிய போது 'என் எழுத்துக்கள் எதனையும் எடிட் செய்யக்கூடாது' மற்றும் 'தான் விரும்புகிற மாதிரியான ஓவியங்களுடனும் லே-அவுட்களின் படியும்தான் தொடர் பிரசுரமாக வேண்டும்' என்கிற கருத்துக்களை அவர்கள் ஏற்றுக் கொண்டனர்' என்றார்.
கண்காட்சியில் நான் கண்ட குறைபாடுகள்:

1) கழிப்பறைக்கு செல்ல வேண்டுமானால் அரங்கத்தை விட்டு வெளியேறிய பின்னர்தான் செல்ல முடியும். மறுபடியும் உள்ளே வரவேண்டுமென்றால் புதிதாக நுழைவுச்சீட்டு வாங்க வேண்டும்.

2) வயதானவர்கள் இளைப்பாற அங்கங்கே ஓய்வு அரங்கங்கள் இல்லை.

3) தாகம் எடுத்தால் குடிக்க நீர் தொட்டிகள் எங்கும் தட்டுப்படவில்லை.

பலபேர் புத்தகங்கள் வாங்குவதைக் காட்டிலும் பாப்கார்ன் போன்ற நொறுக்கு தீனிகள் தின்பதிலும் காண்டீன் எங்கே விசாரிப்பதையும் பார்க்க எரிச்சலாக வந்தது. நூல் வாங்க வந்த இடத்தில் சாப்பாடு தேடுபவர்கள், சாப்பாடு கிடைக்குமிடத்தில் இலக்கியம் தேடுவார்களா என்றால் இல்லை.

O
நான் வாங்கிய புத்தகங்களை பட்டியலிட்டு விடுகிறேன்.

கண்காட்சிக்கு வெளியே உள்ள பிளாட்பாரக்கடைகளில் வாங்கியது:

யானை, குதிரை, ஒட்டகம் (நாவல்) - ஞானராஜசேகரன்
பெரியார் பன்முகம் - ச.அறிவுக்கரசு



என் வாசிப்பனுபவத்தில் சுஜாதாவின் நாவல்களை தாண்டி வெகுதூரம் வந்துவிட்டாலும் வெகுஜனங்களை சென்றடையும் விதத்தில் எழுதும் அவரின் எழுத்து ஆளுமையுடனான நடையில் எனக்கு எப்போதுமே பிரேமை உண்டு. எனவே ரொம்ப நாட்களாக தேடிக் கொண்டிருந்த அவரின் பல பழைய நாவல்களையும் மறுபதிப்பு செய்யப்பட்ட நாவல்களையும் வாங்கினேன். சில நாவல்கள் பழைய பதிப்பில் குறைந்த விலைக்கு கிடைத்ததும் ஒரு காரணம்.

உயிராசை - சிறுகதைத்தொகுதி
தேவன் வருகை - விஞ்ஞானக்கதைகள்
பாதி ராஜ்யம் - சிறுகதைகள்
தோரணத்து மாவிலைகள் - கட்டுரைகள்
வடிவங்கள் - விஞ்ஞானக் கதைகள்
இருள் வரும் நேரம் - நாவல்
கம்ப்யூட்டர் கிராமம் - நாவல்
நடனமலர் - கட்டுரைகள்
24 ரூபாய்தீவு - நாவல்
பேசும் பொம்மைகள் - நாவல் (1991 ல் குமுதம் இதழில் தொடராக வந்தது மறுபதிப்பு செய்யப்பட்டிருக்கிறது)

மற்ற நூல்கள்:
ஏழாம் உலகம் - நாவல் - ஜெயமோகன்
காகித மலர்கள் - நாவல் - ஆதவன்
இரவுக்கு முன்பு வருவது மாலை - சிறுகதைகள் - ஆதவன்
வாத்தியார் - சிறுகதைகள் - ம.வெ. சிவகுமார்.
என்றும் நன்மைகள் - சிறுகதைகள் - க.சீ.சிவகுமார்.

காலச்சுவடு இதழின் 2000-2001-ன் பழைய இதழ்கள்.
காலம் - மாத இதழ் (ஜீன் 2004)

O

நான் முக்கியமாக வாங்க நினைத்தது பெரியாரைப் பற்றின நூல்களை. திராவிட கழகத்தினரின் அரங்கம் கண்ணில் தட்டுப்படவில்லை. அடுத்த சுற்றில் பார்க்க வேண்டும்.


suresh kannan

3 comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

very informative suresh. aduththa book exhibition pathivai ethirpaarkkiren.

Anonymous said...

இந்த புத்தக காட்சிக்கு முன்னரே வெளியாக இருந்து தவிர்க்க முடியாத காரணங்களில் அது முடிந்த பிறகு அதாவது ஜனவரி 2005 இறுதியில் வெளிவர உள்ளது:
அமரர் கல்கியின் 10 புதினங்கள் மற்றும் 75 சிறுகதைகளைக் கொண்ட குறுந்தகடு
விலை 199

இது மட்டுமல்ல இந்த புதினங்கள் மற்றும் சிறுகதைகளை இலவசமாகவும் படிக்க எங்கள் இணைய தளத்திற்கு வருகை புரியவும்.
http://www.chennainetwork.com

மேலும் பல்வேறு நூல்களும் இந்த தளத்தில் இலவசமாகப் படிக்கலாம்.
பார்த்துவிட்டு பதிலளிக்கவும்
அன்புடன்
கோ.சந்திரசேகரன்
சென்னைநெட்வொர்க்.காம்


By: chandrasekaran

enRenRum-anbudan.BALA said...

Suresh,
Following is my comment on your earlier pathivu "ஒரு 'ஆய்' படம்". I was not sure whether you would go back and check for comments in that post dated 8th Jan'2005 :-)

±ÉìÌõ ÁÄì¸ø À¢Ã¨É ¯ñÎ :-( '²ö' À¼õ À¡÷ò¾¡ø, (Å¢ü¨Èì ¸Ä츢!) ¬ö ·ôã¡ §À¡¸ Å¡öôÒ þÕìÌ §À¡Ä þÕ째 :-)
¿¨¸îͨŠ¦¾¡ì¸¢ ¿¢üÌõ «Õ¨ÁÂ¡É Å¢Á÷ºÉõ!
Keep it up!
±ý¦ÈýÚõ «ýÒ¼ý
À¡Ä¡