Wednesday, July 05, 2006

ஒரு வயோதிகத் தகப்பனின் நெடும் பயணம்

வெளியூரில் படித்துக் கொண்டிருக்கும் உங்கள் மகன் காவல் துறையால் கைது செய்யப்பட்டிருப்பதாக உங்களுக்கு தகவல் வருகிறது. அலறியடித்துக் கொண்டு ஓடுகிறீர்கள். காவல் துறையோ, அரசு இயந்திரமோ, அதிகார அமைப்போ எங்கிடமிருந்தும் உங்கள் மகனைப் பற்றிய தகவலை அறிய முடியவில்லை. உயிரோடு இருக்கிறானா அல்லது இறந்து போனானா... ஒன்றும் தெரிந்து கொள்ள முடியவில்லை. என்ன செய்வீர்கள்?

நீங்கள் என்ன செய்வீர்களோ தெரியாது. காவல்துறையிடமிருந்தும், அரசியல்வாதிகளிடமிருந்தும் முறையான பதில் பெறமுடியாத அவ்வாறான ஒரு தந்தை நியாயம் வேண்டி நீதிமன்றத்தின் கதவுகளை நடுங்கும் கைகளோடு வெகுநேரம் தட்டிக் கொண்டிருந்த நெகிழ்ச்சியான அனுபவங்கள்தாம் இந்தப் புத்தகம்.

()

ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள் - ராஜன் கொலை வழக்கு - பேராசிரியர் டி.வி. ஈச்சரவாரியர் - (தமிழில் குளச்சல் மு.யூசுப்) - காலச்சுவடு பதிப்பகம் - 208 பக்கங்கள் - ரூ.100/-

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக அறியப்படுகிற இந்தியாவின் பெருமைமிக்க அரசியல் வரலாற்றுப் பக்கங்களில் அழிக்கவே முடியாத ஒரு கறை 1975 ஜூன் 26 அன்று ஏற்பட்டது. இந்திரா காந்தியால் அமல்படுத்தப்பட்ட "இந்தியாவின் இருண்ட காலம்" என்று வர்ணிக்கப்படுகிற நெருக்கடி நிலையைத்தான் (Emergency) குறிப்பிடுகிறேன் என்பது சொல்லாமலே உங்களுக்குத் தெரிந்திருக்கும். இதற்கு முன்னர் அருகாமையில் உள்ள நாடுகளுடன் போர் ஏற்பட்ட போது தேசத்தின் பாதுகாப்பிற்காக இந்தியாவில் இரண்டு முறை நெருக்கடி நிலை பிரகனடப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் ஒரு தனிமனிதரின் சுயநலத்திற்காக, தன்னுடைய அதிகாரத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக, தன்னுடைய குடிகளை காப்பாற்ற வேண்டிய ஒரு பிரதமரே நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தியது துரதிர்ஷ்டவசமானது. அதிகார அமைப்பின் துணையுடன் காவல் துறையினர் நடத்திய துஷ்பிரயோகங்களில் பல மனிதர்கள் அடைந்த மனரீதியான, உடல்ரீதியான வலிகளில் இந்தியாவே வாதைகளின் ஒரு கூடாராமாக மாறிப் போன, நீதி என்பது இருட்டில் உறைந்து போன கடுமையான காலகட்டமாய் இருந்தது அது.

1976 மார்ச் 1ம் தேதி, முன்னிரவு நடந்த கல்லூரி கலைவிழாவினில் கலந்து கொண்டு அதிகாலையில் கல்லூரிக்கு பேருந்தில் சக மாணவர்களுடன் ஆசிரியர்களுடன் வந்திறங்கிய ராஜன் என்கிற, கோழிக்கோடு பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்றி அந்த கல்லூரி மாணவர் காவல் துறையினரால் கைது செய்யப்படுகிறார். இந்தச் செய்தி கல்லூரி முதல்வரால் மாணவரின் தந்தையான, ஒரு கல்லூரியின் இந்திப் பேராசிரியரான டி.வி. ஈச்சரவாரியருக்கு தெரியப்படுத்தப்படுகிறது. விசாரணை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக அதிகாரபூர்வமில்லாத செய்தியை அறிந்து கொள்கிற அவருக்கு காவல் துறையின் கடுமையான முகத்தைத்தான் தரிசிக்க இயல்கிறதே, மகன் எதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறான், எங்கே அடைத்து வைக்கப்பட்டிருக்கிறான் என்கிற நியாயமாய் தெரிவிக்கப்பட வேண்டிய எந்தச் செய்தியும் தெரிவிக்கப்படவில்லை.

அப்போது உள்துறை அமைச்சராக இருந்த கருணாகரனை அவருக்கு நெருக்கமான பேராசிரியரின் மூலம் அணுகுகிறார் ஈச்சரவாரியர். திருப்திகரமான பதிலேதும் இல்லை. நக்ஸல்பாரிகளின் இருப்பிடத்திற்காக போலீஸாரால் அழைத்துச் செல்லப்படும் போது ராஜன் தப்பிவிட்டார் என்கிற அதிகாரப்பூர்வமற்ற செய்திதான் கிடைக்கிறது. ராஜனுக்கு இடதுசாரிகளின் மீது அனுதாபம் உண்டே தவிர, தீவிரவாத இயக்கங்களில் ஒருபோது ஈடுபட மாட்டான் என்ற உறுதியோடு இருக்கும் அவர் இதை நம்பவில்லை. அப்போதைய முதல்வரான ஸி. அச்சுதமேனோனை அணுகும் போதும் பூடகமான பதில்களே கிடைப்பதோடு, ஒரு சூழ்நிலையில் வெடித்துப் போய் "நான் ஒரு துண்டை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு கேரளம் பூராவும் உன் மகனைத் தேடி ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனா ஏறியிறங்க வேண்டுமா" என்கிற அவமதிப்பும் நேர்கிறது.

இங்கே ஒரு பழைய சம்பவத்தை நினைவுகூர்கிறார் ஈச்சரவாரியர். 1949 மார்ச் மாதம். பொதுவுடமைக்கார இயக்கத்தினர் அரசாங்கத்தால் வேட்டையாடிக் கொள்ளப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டம். அச்சுதமேனனும் மற்ற தோழர்களும் தலை மறைவாக இருந்தனர். நடுஇரவில் ஈச்சரவாரியரின் வீடு தட்டப்படுகிறது. அழுக்கடைந்த உடம்போடும், உடுப்புகளோடும் அச்சுதமேனோன் நின்று கொண்டிருக்கிறார். "அந்திக்காட்டிலிருந்து போலீசின் கண்களை விட்டுத் தப்பியோடி வந்திருக்கிறேன். பின்னால் போலீஸ் வருகிறது. எப்படியாவது ஒரு மறைவிடம் ஏற்பாடு செய்து தர வேண்டும்" ஈச்சரவாரியரும் பொதுவுடைமை இயக்க அனுதாபிதான். தன்னுடைய உறவுக்காரச் சிறுவர்களின் துணையுடன் சற்று தூரமுள்ள ஒரு கிராமத்தில் பாதுகாப்பாக தங்க அனுப்பி வைக்கிறார். இந்த நிலையில் அவர்கள் மொத்தமாக போலீசாரிடம் பிடிபட்டால் ஏற்படக்கூடிய ஆபத்தை அவர் உணர்ந்திருந்தாலும் வேறு வழிதெரிந்திருக்கவில்லை.

ஒரு காலத்தில் அப்படி தன்னால் உதவி செய்யப்பட்டு இப்போது முதல்வராயிருக்கும் அச்சுதமேனோனின் அலட்சியத்தால் உடைந்து போகிறார் ஈச்சரவாரியர். பொதுநல சிந்தனைகளின் தாக்கத்தால் அதிகார அமைப்பையே உயிரையும் துச்சமென மதிக்கும் இளைஞர்களில் சிலர், அதே அதிகாரம் தன்னிடம் வந்த பின்னால் தலைகீழாக மாறிப்போகும் விந்தை தொடர்ந்து கொண்டேயிருப்பதுதான் போலும். இப்படி அச்சுதமேனோன், கே.கருணாகரன் போன்ற அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற தன்மையினால் பந்தாடப்படும் அவர் அதிகார அமைப்பின் உச்சமான ஜனாபதி வரைக்கும் மனுக்களை அனுப்பி சலித்துப் போய் கடைசி புகலிடமாக நீதிமன்றத்தை அணுகுகிறார்.

நெருக்கடி காலம் வாபஸ் பெறப்பட்ட 1977 மார்ச் 21ம் தேதிக்கு பிறகு நீதிமன்றம் சந்திக்கிற முதல் ஆள்கொணர்வு மனு (Habeas Corpus) அது. கேரளா மட்டுமன்றி தேசத்தின் கவனத்தையே ஈர்த்த வழக்கமாக அது அமைந்தது. "ராஜன் கைது செய்யப்படவில்லை" என்று முன்னர் சட்டசபையில் தவறான தகவல் கொடுத்த கருணாகரன், ராஜன் கைது செய்யப்பட்டது நீதிமன்றத்தால் ஊர்ஜிதப்படுத்தப்பட்ட நிலையில் பதவியேற்ற ஒரே மாதத்தில் ராஜினாமா செய்ய வேண்டியதாயிருந்தது. பத்திரிகைகளின் பொய்ச் செய்திகள், ஆதரவான சில பத்திரிகைகள், சாட்சியங்கள் காவல் துறையினரால் மிரட்டப்படுதல், ஆகிய பல்வேறு தடைகளைத் தாண்டி ராஜன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதும் விசாரணை முகாமில் துன்புறுத்தப்பட்டதும் நீதிமன்றத்தால் ஊர்ஜிதப்படுத்தப்படுகிறது. என்றாலும் ராஜன் கொலை செய்யப்பட்டது சந்தேகத்திற்கிடமின்றி நிருபிக்கப்படாததால் உயர் பொறுப்பில் இருந்த காவல்துறையினர் சிலருக்கு ஒரு வருட சிறைத் தண்டனை என்பதோடு முடிவுக்கு வந்தது. அதையும் அவர்கள் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்ததில் விடுதலை செய்யப்பட்டு விடுவிக்கப்படுகின்றனர்.

ஆக... ஒரு குடியரசு நாட்டில் ஒரு நிரபராதி எந்தவித முகாந்திரங்களுமில்லாமல் அதிகார அமைப்பின் கொடிய பிரதிநிதிகளால் கொலை செய்யப்பட்டதற்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை என்பதும் ஏதும் கிடையாது என்பதே இதன் மூலம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி. ஆக.. ராஜன் கொலை வழக்கின் மொத்த தீர்ப்பே இதுதான் என்கிறார் ஈச்சரவாரியர்.

தன் மகன் இறந்து போனதற்கு நஷ்டஈடு கேட்டு சிவில் வழக்கை தொடர்கிறார் ஈச்சரவாரியர். இந்த வழக்கிலும் பல சிரமங்களை கடந்த பின் ஆறுலட்சம் ரூபாய் நஷ்டஈடாக கிடைக்கிறது. "ராஜன் ரத்தத்த வித்த காசு உனக்கு வேணுமாடா?" என்று அவரின் மூத்த சகோதரரிடமிருந்து உட்பட பல எதிர்ப்புக்குரல்கள் கேட்கிறது. ஆனால் இதைக் கொண்டு அரசு பொது மருத்துவமனையில் ராஜன் நினைவாக ஒரு வார்டும் இன்னும் பல பொதுநலத்திட்டங்களுக்குத்தான் இந்த பணம் பயன்படபோகிறது என்பதை அறிந்தவுடன் அனைவரின் பாராட்டும் ஈச்சரவாரியருக்கு கிடைக்கிறது. ஏற்கெனவே சிறிதளவில் மனநோயாளியாக இருந்த ராஜனது அம்மா, அவர் நினைவாக புலம்பி 2000-ல் இறந்து போகிறது.

()

சரி. ராஜனுக்கு என்னதான் ஆனது? அவர் கைது செய்யப்படுவதற்கு முன்னிரவில் கலை நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்ற அதே இரவில் நக்ஸல்பாரி இயக்கங்களால் காயண்ண என்கிற இடத்தில் போலீஸ் ஸ்டேஷன் தாக்கப்பட்டு துப்பாக்கிகள் கைப்பற்றப்படுகின்றன. அதில் சம்பந்தப்பட்டிருக்கிற ராஜன் என்கிற பெயர் காவல்துறைக்கு கிடைக்கிறது. எனவே அதே பெயருள்ள கல்லூரி மாணவரை எந்தவித காரணமும் சொல்லாமல் விசாரணை முகாமிற்கு அழைத்துச் சென்று துன்புறுத்தி கொன்றதாக கருதப்படுகிறது. நீதிமன்றத்தாலும் "கருதப்படுகிறதுதான்" இதுவரை இந்த வழக்கில் ராஜனின் மரணத்தைப் பற்றின எந்தவிதமான அதிகாரபூர்வ தகவலும் காவல்துறையாலோ, நீதிமன்றத்தாலோ தெரிவிக்கப்படவில்லை.

இந்த வழக்கிற்குப் பிறகுதான் "ஒருவரை கைது செய்தபின் அவரின் உறவினருக்கு தகவல் அனுப்பப்பட வேண்டும்" "குற்றம் சாட்டப்பட்டவரை 24 மணிநேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய வேண்டும்" என்கிற வி.ஆர்.கிருஷ்ணய்யரின் பிரசித்திபெற்ற அந்த ஆணைகள் காவல்துறையினரின் வழிகாட்டுதலுக்கு இடப்படுகின்றன.

()

.... ராஜனைப் போன்று அதிகாரத்தின் ராட்சசக் கால்களால் மிதித்து அழிக்கப்பட்ட மனித உயிர்கள் ஏராளம். அந்த ஜீவன்களுக்கு ஈச்சவாரியரைப் போனற கல்வியறிவு பெற்ற அயராமல் உரிமைக்காகப் போராடும் ஒரு பாதுகாப்பாளர் இல்லை. ஆனால் ஈச்சரவாரியரின் இந்த நூலைப் படிக்கும் போது நாமறிந்திராத அந்தத் துயர முகங்களும் அவர்களது அவலங்களும் தவிர்க்க இயலாமல் நினைவுக்கு வரும்.... என்று இந்தப் புத்ககத்தின் முன்னுரையில் சுகுமாரன் குறிப்பிடும் போது ஆமோதிக்கத் தோன்றுகிறது.
சந்தனக் கடத்தல் வீரப்பனை தேடுகிறேன் பேர்வழி என்று ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களும், பழங்குடியினரும் அதிரடிப்படையினரால் முகாமில் கொடுமைப்படுத்தப்பட்ட அவலங்கள், சதாசிவம் விசாரணைக் கமிஷன் மூலம் நாம் அறிய நேரும் போது, இதுபோன்ற கொடுமைகள் காலங்காலமாக நிழலாக நம்மை தொடர்ந்து வரும் விஷயங்கள்தான் எனப் படுகிறது.

()

புத்தகத்தின் பல இடங்களில் ஈச்சரவாரியர் தன்னுடைய மகனைப் பற்றின நினைவுகளையும், மன உளைச்சல்களையும் வர்ணிக்கும் போது கண்ணீரை அடக்க பெரும் பிரயத்தனம் எடுக்க வேண்டியதாயிருந்தது. மொழிபெயர்ப்பு நூல் என்கிற ஞாபகம் வராதவாறு மொழிபெயர்த்த குளச்சல் மு.யூசுப் மிகுந்த பாராட்டுக்குரியவர்.

அலுவலத்திலிருந்து வீட்டிற்கு கிளம்புகையில் ரயிலில் மிகவும் அசுவாரசியத்துடன்தான் இந்தப் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன். நான் இறங்க வேண்டிய இடத்திலிருந்து இரண்டு நிலையங்கள் தாண்டி ரயில் சென்றுக் கொண்டிருப்பதை பிறகுதான் கவனித்தேன். வீட்டிற்குச் சென்று ஒரே அமர்வில் இதை முடித்த போது உணர்ச்சியின் சோக உச்சியில் என்னையே நான் ஈச்சரவாரியாக உணர்ந்தேன்.

7 comments:

Unknown said...

இவருக்காவது முதல்வர் வரை சென்று நியாயம் கேட்கும் வாய்ப்பு இருந்திருக்கிறது...நல்ல நிலையில் இருந்த இவருக்கே இப்படி என்றால் சாமனியன்?

போலீசாரின் பல அடக்கு முறைகள் கண்முன் வந்து போகிறது.வீரப்பன் தேடுதலின் போது நடந்ததையும் சேர்த்து.போலீஸ் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

Anonymous said...

Many say India is a democratic Country,but after reading this tragedy that image is a myth.Everywhere the law enforcing
officers are kakhi clad thugs.Often
they misuse their power.

PKS said...

உயிர்மையா காலச்சுவடா என்று நினைவில்லை. இந்நிகழ்வு பற்றி சுகுமாரனும் சிலகாலம் முன்பு ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.

அன்புடன், பி.கே. சிவகுமார்

சன்னாசி said...

நேர்த்தியான அறிமுகம்; நன்றி.

Narain Rajagopalan said...

நல்ல அறிமுகம், இதை காலச்சுவட்டில் படித்த நினைவிருக்கிறது. அடுத்த முறை பார்க்கும் சந்தர்ப்பம் வாய்ப்பின், புத்தகம் இரவல் :)

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

Thanks for the intro suresh.

rajkumar said...

இதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட மலையாளப்படம்- "பிறவி" என்று நினைக்கிறேன்.