Sunday, April 15, 2012

காட்சிப் பிழைகள்



நீண்ட நாட்களுக்குப் பி்றகு 'கலைஞர்' தொலைக்காட்சியில் புதுமுக இயக்குநர்களுக்கான நடைபெறும் குறும்பட போட்டி நிகழ்ச்சியைப் பார்த்தேன். அதைப் பற்றி் random ஆக எழுதத் தோன்றியது. குறிப்பாக நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவராக இருந்த இயக்குநர் வெற்றிமாறன் குறிப்பிட்ட ஒரு விஷயம். ஒரு பாத்திரத்தை வடிவமைக்கும் போது எத்தனை நுட்பமாக கவனித்து வடிவமைக்க வேண்டும் என்பதை விளக்குவதாக இருந்தது. மேலும் விஷூவல் மீடியத்தை அதற்குண்டான பிரக்ஞையுடன் பயன்படுத்த வேண்டும் என்பதும்.

அதை இறுதியில் பார்ப்போம்.

முதல் குறும்படத்தை ஏறக்குறைய அது முடியும் போதுதான் கவனிக்க ஆரம்பித்தேன். 'காக்க காக்க' சூர்யா குழு போல் மூன்று கிராமத்து பெண்கள் லோ ஆங்கிளில் வாய்ஸ் ஒவருடன் அறிமுகமாகிறார்கள் போலிருக்கிறது. "எங்களுக்கு ஒரு ஆசை இருக்கிறது". ஆண்களைப் போல டீக்கடை பெஞ்சில் அமர்ந்து டீயை உறிஞ்சி சாப்பிட வேண்டும் என்பதுதான் அவர்களின் அந்த ஆசை என்பது படத்தின் இறுதியில் தெரிகிறது.

காட்சியாக காண்பிக்கும் விஷயத்தை பாத்திரங்களின் மூலமாக மீண்டும் வார்த்தைகளில் சொல்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்பதை வெற்றிமாறன் தனது விமர்சனத்தின் போது அழுத்தமாக வலியுறுத்தினார். குறிப்பாக டப்பிங் பேசுபவர்கள் காட்சிகளின் இடைவெளியை நிரப்புவதாக நினைத்துக் கொண்டு (இதை ஃபில்லிங் என்கிறார்கள்) வசன உச்சரிப்பு காண்பிக்கப்படாத கோணங்களின் போது அந்த காட்சி நிகழ்வை வார்தைகளாக பார்வையாளர்களுக்கு விவரிப்பது. உதாரணமாக ஒருவர் நிலத்தில் விழுந்து கிடக்கும் காட்சி என்றால் அது தொடர்பான காட்சி சட்டகம் (frame) மாத்திரம் பார்வையாளர்களுக்கு காண்பிக்கப்படுவது என்று வைத்துக் கொள்வோம். பி்ன்னணிக் குரலில் ஏதோ ஒரு பாத்திரம் அந்தக் காட்சியை "எப்படி விழுந்து கிடக்கிறான்?" என்ற வசனத்தின் மூலம் மீண்டும் அதை திரும்பச் சொல்வது காட்சி வடிவத்திற்கு செய்யும் நெருடலான அவமரியாதை. டப்பிங் பேசுபவர்கள் சற்று உரிமை எடுத்துக் கொண்டு சமயங்களில் ஸ்கிரிப்டில் இல்லாத வசனத்தைக் கூட இவ்வாறான இடைவெளிகளில் பயன்படுத்துவதை இயக்குநர் கவனித்து தவிர்க்க வேண்டும் என்பதாக வெற்றிமாறன் குறிப்பிட விரும்பினார் என்பதாக புரிந்து கொள்கிறேன்.

அடுத்த குறும்படம் ராஜேந்திரன் பிரதர்ஸ் என்கிற நகைச்சுவைப்படம். சில சுவாரசியங்களைத் தவிர்த்து அபத்தமான கிளிஷே நகைச்சுவையால் நிரம்பினது. (ஆனால் இதுதான் அந்த வாரத்து சிறந்த குறும்படமாக தேர்வு பெற்றது). பாட்டியின் பொக்கை வாயின் மூலமாக காண்பிக்கப்படுவதான ஒரு பார்வைக் கோணம் சிறப்பாக உபயோகப்பட்டிரு்நதது..

இன்னொரு குறும்படம் கால்பந்து விளையாட்டு தொடர்பானது. ஆரம்பக்கட்ட இயக்குநர்கள் இவ்வாறான பெரிய கான்வாஸ் காட்சிகள் அடங்கிய விஷயத்தை எடுப்பது சற்று ரிஸ்க்கான விஷயம். விளையாட்டின் பிரம்மாண்டம் காட்சிகளில் நிச்சயம் வெளிப்பட்டே ஆக வேண்டும். இல்லையென்றால் சொதப்பி விடும். குறிப்பாக இதற்கு திறமையாக ஷாட் கம்போஷிஷன் செய்யும் ஒளிப்பதிவாளர் தேவை. இந்தக் குறும்படத்தின் ஒளிப்பதிவாளர் மிகத் திறமையாக இதை சமாளித்திருந்தார் என்றாலும் காட்சிகளின் நம்பகத்தன்மை பல்லிளித்தது. விளையாட்டுப் பயிற்சியின் போது பார்வையாளர்கள் யாருமில்லாதது கூட ஏற்றுக் கொள்ளலாம். பயிற்சி நாட்களை count down -ல் காண்பித்து விட்டு Tournament- இறுதி நாளில் கூட மொட்டை மைதானத்தில் விளையாடுவது காட்சியின் நம்பகத்தன்மையை முற்றிலுமாக குலைத்து விடுகிறது. என்றாலும் சில ஷாட்கள் சுவாரசியமாக இருந்தன. குறிப்பாக அந்தச் சிறுவன் அடிக்கும் back shoot coal ஷாட் சிறப்பாகவே பதிவாகியிருந்தது. விளையாட்டின் பரபரப்பைக் கூட்டுவதற்கு பார்வையாளர்களின் உணர்ச்சிகரகமான முகபாவங்களும் பின்னணி இசையும் முக்கியம். (சில்வஸ்டர் ஸ்டாலினின் ராக்கி சீரிஸை இங்கு நினைவு கூரலாம்). இந்தப் படத்தில் பார்வையாளர்கள் இல்லாதது மிகப் பெரிய குறை. சிறுவன் அடிக்கிற கோலுக்குக் கூட அந்தக் குழுவின் பயிற்சியாளர் உற்சாகமாக அல்லாமல் மிகச் சோகையான எதிர்வினையை தந்திருந்த காட்சிகள் இயக்குநர் கவனித்து சரி செய்ய வேண்டியவை.

சரி. இந்தப் படத்தில் வெற்றிமாறன் குறிப்பிட்டுச் சொன்ன பிழையை பற்றிப் பார்ப்போம். பாத்திரத்தின் வடிவமைப்புப்படி அந்தச் சிறுவனுக்கு பிறவியிலிருந்தே காது கேட்காது. இதை படத்தின் இறுதியில் சிறு அதிர்ச்சியாக பார்வையாளர்கள் உணரும் படி இயக்குநர் வடிவமைத்திருந்தாலும் ஒரு முக்கியமான விஷயத்தை கோட்டை விட்டிருந்தததை வெற்றி மாறன் சுட்டிக் காட்டினார். அதாவது பிறவியிலிருந்தே காது கேட்காதவர்களுக்கு பேச்சும் வராது. அதாவது மொழி என்கிற ஒலியமைப்பை மற்றவர்களிடமிருந்து கேட்க வாய்ப்பில்லாத காரணத்தினால் பேச்சு என்பதும் இருக்காது. ஆனால் இந்தப் படத்தின் நிகழ்வுகள் சிறுவனின் வாய்ஸ் ஓவரில் வெளிப்படுவதாக இயக்குநர் காட்சிகளை நகர்த்தியிருந்தார். இந்த நடைமுறை முரணை வெற்றிமாறன் உன்னிப்பாக கவனித்து சுட்டிக் காண்பித்த போதுதான் ஒரு பாத்திரத்தை எத்தனை நுட்பமாக கவனித்து வடிவமைக்க வேண்டும் என்பது அதிகமாக உறைத்தது.

()

விஜய் டிவிக்கு சானலை திருப்பினேன். பாலாவின் 'அவன் இவன்' ஆரம்பக் காட்சி நடனம். பல படங்களில் கிராமத்து நடனத்தை கவனித்திருக்கிறேன். அத்தனை பேர் ஆடும் போதும் மண்ணிலிருக்கும் புழுதி கிளம்பாமலிருக்கும். காட்சியின் அழகியல் பின்னணி கருதி இதை தவிர்த்து விடுவார்கள் போலிருக்கிறது. ஆனால் இந்தப் படத்தில் அதைச் சரியாக கவனித்து நடனத்தின் போது புழுதி கிளம்புவதாக காட்டியிருப்பது (தொடர்ச்சி அறுபட்டாலும்) ஒரு காட்சி அதன் முழு யதார்த்தத்துடன் பதிவாக எத்தனை கவனத்துடன் இருக்க வேண்டியிருக்கிறது என்பதை மறுமறுபடி உணர்த்துகிறது.

என்ன பிரச்சினையெனில் இவ்வாறான யதார்த்தப்பிழைகளை கூர்ந்து கவனிப்பது பழகி விட்டால் எந்தவொரு படைப்பையும் ரசிக்கும் அடிப்படை பாமரத்தனம் போய் விடும் என்பதுதான் இதிலுள்ள சோகம். 

suresh kannan

2 comments:

Jegadeesh Kumar said...

நீண்ட நாளைக்குப் பிறகு உங்கள் பதிவைச் சந்திக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. சமீபத்திய திரைப்படம் குறித்து நீங்கள் மற்றும் கருந்தேள் எழுதுவதை வைத்தே தெரிந்து கொள்வேன். ஏன் சமீபத்திய தமிழ் மற்றும் உலக மொழிப்படங்கள் பற்றி எழுதுவதில்லை.

More Entertainment said...

hii.. Nice Post

Thanks for sharing

Best Regarding.

chicha.in