Wednesday, August 03, 2011

விசித்திர நிறப் பிரச்சினை



புதிதாக வாங்கின டப்பர்வேர் சோற்று மூட்டை டப்பாக்களை கடந்த ஒரு மாதமாக உபயோகித்துக் கொண்டிருக்கிறேன். பெரிதும் சிறிதுமாக நான்கு டப்பாக்கள். மஞ்சள் நிறத்தில் இரண்டு. பச்சை நிறத்தில் இரண்டு. அதே நிறத்தில் கச்சிதமான மூடிகள்.

ஏதோ ஒரு கணத்தில்தான் அதை உணர்ந்தேன். எப்போதுமே மஞ்சள் நிற டப்பாவிற்கு மஞ்சள் நிற மூடியையும் பச்சை நிறத்திற்கு அதே நிற மூடியையுமே மிகச் சரியாக பொருத்தி தொடர்ந்து உபயோகித்துக் கொண்டிருக்கிறேன். ஏன் நிறத்தை மாற்றிப் போட ஒரு முறை கூட தோன்றவேயில்லை? அப்படியே மாற்றிப் போட்டாலும் எலலா டப்பாக்களுக்கும் எல்லா மூடிகளும் பொருந்தும் வகையில்தான் இருக்கிறது. இருந்தும் ஏன்? சிறுவயதில் விளையாட்டு போல கல்வி கற்கும் பருவத்தில் நிறங்களைக் கலைத்துப் போட்டு அந்தந்த சரியான நிறத்துடன் பொருத்தும் பயிற்சி பெற்ற அதே குழந்தைப் பருவத்திலேயே இப்பவும் நிற்கிறேனா?. பிஞ்சில் ஆழமாக புதைக்கப்பட்ட இந்த மரபு சார்ந்த ஒழுங்குணர்ச்சியை என்னால் மீறவே முடியாதா? மந்தையிலிருந்து விலக நினைக்கும் ஏக்கம்தான் மூடியை மாற்றத் தோணும் புள்ளியை நோக்கி என்னை உந்தித் தள்ளுகிறதா?

குறுகுறுப்பான ஒரு தருணத்தில் வேண்டுமென்றே வேறு வேறு நிற மூடிகளை மாற்றிப் பொருத்தி வைத்தேன். ஏதோ தவறு செய்து விட்டாற் போல் உள்ளுணர்வு எச்சரித்துக் கொண்டே இருந்தது. அரை மணி நேரத்திற்கு மேல் தாங்கமுடியவில்லை. மறுபடியும் சரியான நிற மூடிகளைப் பொருத்தின பிறகுதான் மனது ஆசுவாசமடைந்தது.

இருந்தாலும் ஏன் என்னால் வேறு வேறு நிற மூடிகளைப் பொருத்தி விட்டு அமைதியாக, இயல்பாக இருக்க முடியவில்லை என்பதே எரிச்சலாகவும் குற்றவுணர்வாகவும் இருக்கிறது.

இந்தப் பிரச்சினையிலிருந்து எப்படி மீள்வது?

மூக்கு புடைப்பாயிருந்தால் இப்படியெல்லாம் யோசிக்கத் தோன்றுமோ? :)

suresh kannan

14 comments:

  1. பிடிக்கல பிரதர். மனிதனின் இயல்பான ஒரு பழக்கத்தை உள்ளார்ந்து பார்க்கும் இந்த பதிவை, மொக்கை என்று லேபிள் இட்டது பிடிக்கல.

    ReplyDelete
  2. எனக்கும் உண்டு இதுபோன்ற உந்துதல்கள். இதென்ன ஒரு மேட்டரா என ஒருபக்க மனசு சொல்லிக்கொண்டெ இருக்கும், மறுபக்கம் நம்மை அறியாமலேயே அதை சரியாக்கி வைத்துவிடும்.

    ஆனால் இதையெல்லாம் பதிவாய்ப் போடும் உங்கள் திறமையை மெச்சாமல் இருக்க முடியவில்லை.. :-))

    ReplyDelete
  3. செம்படம் மூடி மாறிடுச்சுன்னா எங்க அம்மாவுக்கும் இப்படி ஒரு depression வந்துரும். அன்னிக்கு முழுக்க எனக்கு திட்டு விழும்கிறதால எஸ்ஸாகிருவேன். அப்போ செம்படம் இப்போ டப்பர்வேர்

    ReplyDelete
  4. விசித்திரமான மனச்சித்திரம்.

    ReplyDelete
  5. \\மூக்கு புடைப்பாயிருந்தால் இப்படியெல்லாம் யோசிக்கத் தோன்றுமோ? \\

    :) :) :)

    வேற யாரும் சொல்றதுக்கு முன்னாடி முந்திக்கிட்ட உங்க அப்ரோச் எனக்கு புடிச்சிருக்கு... ஹி ஹி...

    @ இளா,

    அது செம்படம் இல்லை ஐயா... சம்புடம்.... :)

    ReplyDelete
  6. அருமையான கேள்வி..

    ஆயின் ஒழுக்கம் சார்ந்த கல்விமுறையிலும்,குடும்ப அமைப்பிலும் பதிவு செய்யப்பட்ட வாழ்வு முறைகள் பின்னாட்களிலும் பாதை மாற இயல்பு அனுமதிப்பதில்லை என்பதையே இது காட்டுகிறது.

    இப்படி ஒழுக்கம் சாரா மனிதர்களும், அவர்தம் வாழ்வும் கூட நாம் சகியா வண்ணம் நிகழ்ந்தவாறுதான் இருக்கின்றன்...அது சமூக சூழல் எனக்கொள்ளலாம் என தோன்றுகிறது.

    அந்த மன உறுத்தலே மற்றெல்லாவற்றுக்கும் ஆரோக்கியம்.

    ReplyDelete
  7. அதே நிற மூடி போடுவது 100 க்கு 99 பேர் வேறு நிற மூடி போடுவது 100 க்கு 0.0001 பேர்.அதே நிற மூடி போட்டுவிட்டு என் வேறு நிற மூடி போடக்கூடாது என (வெட்டியாக ) யோசிப்பவர்கள் மீதி 0.9999 பேர்.இதில் நீங்கள் எந்த ரகம் என உங்களுக்கே தெரியும்.

    ReplyDelete
  8. //மூக்கு புடைப்பாயிருந்தால் இப்படியெல்லாம் யோசிக்கத் தோன்றுமோ? :)//


    அதுதான் பதில் தெரியுதுல.. அப்புறம் என்ன கேள்வி வேண்டியிருக்கு??

    ReplyDelete
  9. its ocd. obsessive compulsive dosorder

    ReplyDelete
  10. "எந்த ஒரு புதிய விஷயத்தையும் உண்மையையும் தெரிந்து கொண்டால் அதை negativeவ்வாகவும் தந்திரமாகவும் யோசித்து அதை தனக்கு சதாகமாய் மட்டுமே மனிதன் உபயோகிப்பான்" என்று என் நண்பன் சில மாதங்கள் முன் சொன்னான். அது நிஜம் என்று தெரியும். இப்போது அதை நான் ஒரு அனுபவத்தில் உணர்ந்தேன். உங்களுக்கும் இன்னும் பிளாகில் உலக சினிமா கட்டுரைகள் எழுதும் பலருக்கும் உலக சினிமா feed urlகளை அனுப்பி வைத்தேன். அதில் கீழ்காணும் பிளாக் ஆசிரியருக்கும் அனுப்பி வைத்தேன்.

    http://umajee.blogspot.com/

    அவர் பிளாகில் உலக சினிமாக்களை எழுதுகிறார்.அவற்றை நான் கூகிள் ரீடரில் முழுதாய் படித்து வந்தேன். அவற்றை கூகிள் ரீடரில் நான் பாட்டுக்கு நான் மட்டும் படித்துக் கொண்டிருந்திருக்கலாம். அவருக்கு feed urlகளை நான் அனுப்பி வைக்க அவருக்கு ஒரு யோசனை தோன்றி விட்டது. நம் கட்டுரைகளை கூகிள் ரீடரில் முழுதாய் படிக்கின்றார்களா? அப்படியென்றால் எவனும் நம் பிளாகிற்கு வர மாட்டானே என யோசித்து feed settings சென்று feedஐ full என்பதிலிருந்து மாற்றி short என்பதற்கு set செய்து விட்டார்.

    இப்போது அவரது உலக சினிமா கட்டுரைகளை நான் என் கூகிள் ரீடரில் முழுதாய் படிக்க முடியாமல் போய் விட்டது. என்ன ஒரு அல்பத்தனம்?


    "எந்த ஒரு புதிய விஷயத்தையும் உண்மையையும் தெரிந்து கொண்டால் அதை negativeவ்வாகவும் தந்திரமாகவும் யோசித்து அதை தனக்கு சதாகமாய் மட்டுமே மனிதன் உபயோகிப்பான்"

    ReplyDelete
  11. என்னங்க, நீங்க எதை எழுதினாலு ஒரு பத்து பேர் கமெண்ட் போட்டுர்ராங்க?

    ReplyDelete
  12. வழக்கத்திலிருந்து மாறாக நடக்க (ஏன் எண்ண ஆரம்பித்தாலே) பழக்கப்பட்ட மனம் பதட்டம் காண ஆரம்பித்து விடும்...அதென்ன பழக்கப்பட்ட மனம்...கேட்வாசல், நடு சென்ட்டர் என்கிற மாதிரி...மனம் என்பதே 'bundle of habits' தானே...ஒரு சினிமா காமிரா புத்தகம் படித்தேன்...ஹீரோ இடது பக்கத்திலிருந்து ஓடி வலது பக்கம் போவதை விட...வலது பக்கத்திலிருந்து இடது பக்கம் ஓடுவது creates more tension in the screenplay...இதை ரசிகன் 'அறியாமல் உணர்ந்தாலும்'. கலைஞன் இரண்டு விதமான செயல்களையும் செய்து பார்த்து அதன் உணர்வுகளை ரசிகனும் உணரச்செய்ய முயற்சிக்கிறான்...இரண்டிலும் ஒட்டுதல் இல்லாமல் வெறும் கவனித்தல் மட்டும் நிகழ்த்துகிறவன் 'தியானிக்கிறான்'....

    ReplyDelete
  13. முதலில் உங்க பிச்சைபாத்திரம் போட்டோவுக்கு நன்றி.

    அடுத்து உங்க கவலை எனக்கு புறியுது.அதிகமாககூகிள் குழுமங்கள்ள உலாவினா இதுபோல சிம்டம்ஸ் வர அதிகசான்ஸ் இருக்கு.
    எனக்கு உங்க கையை பிடித்துக்கொண்டு வசூல்ராஜா படத்துல கமல் அட்மிசனுக்காக கியூல நிற்கும்போது ஸ்ட்ரச்சர தள்ளிவரும் அட்டெண்டர் சொல்லும் அதேவசணத்த சொல்லணும் போல தோணுது.

    ReplyDelete
  14. ஏதோவொரு அவசர நாளில், ஏதோவொரு மூடி தேவைப்படும்போது நிறங்கள் இயல்பாக மாறிப்போகலாம்..

    ReplyDelete