Tuesday, March 30, 2010

அங்காடித் தெரு - நவீன அடிமைகளின் உலகம்

முதலில் வசந்தபாலனுக்கு ஓர் அழுத்தமான கைகுலுக்கல்.

முதலாளித்துவமும் அதிகாரமும் அதன் பரிவாரங்களும் கைகோர்த்துக் கொண்டு எளிய மனிதர்களின் உழைப்பையும் வாழ்க்கையையும் சுரண்டிக் கொழுப்பதை தைரியமாக அப்பட்டமாக சித்தரித்திருக்கிறார் இயக்குநர். இவர் காட்டியிருப்பது பனிக்கட்டியின் முனையைத்தான் என்றாலும் பெருங்கடலின் ஆழத்தில் இன்னும் எத்தனை சுறா, திமிங்கலங்களின் கோரத்தாண்டவங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறதோ என்பதை நாம் யூகிக்கத்தான் வேண்டியிருக்கிறது.



படத்தின் தலைப்பை நியாயப்படுத்த வேண்டுமென்றால் சென்னை நகரின் மிக நெரிசலான அந்தத் தெருதான் படத்தின் மையமாக அமைந்திருக்க வேண்டும். ஆனால் இயக்குநர் குறிப்பிட்ட அந்த நிறுவனத்தோடு நிறுத்திக் கொண்டார், சில சொற்ப உப கதைகளோடு. தீப்பெட்டி தொழிற்சாலை பணியாளர்களைப் போல தெற்கத்திக் கிராமங்களிலிருந்து நகருக்கு அழைத்து வரப்படும் இளம் நவீன கொத்தடிமைகளை நகரம் எப்படி சக்கையாகப் பிழிந்தெடுத்துக் கொண்டு பளபளப்பாக நிற்கிறது என்பதை இயக்குநர் படம் நெடுக்க சொல்லிக் கொண்டே போகிறார்.

இதை ஏதோ அந்த குறிப்பிட்ட தி.நகர் நிறுவனத்திற்கு மட்டுமானதாக பார்க்கத் தேவையில்லை. "சீக்கிரம் டேபிளை தொடைப்பா" என்று நம்மாலும் அதட்டப்படும்  ஹோட்டல் சிறுவர்கள் முதற்கொண்டு பல கோடி செலவில் தலைமைச் செயலகம் கட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டு அதனருகிலேயே எந்தவிதமான அடிப்படை வசதிகளுமில்லாமல் மலக்கூடங்களின் அருகிலேயே உறங்க நேரும் வடக்கு மாநிலத்தவர்கள் வரை அனைவருக்கும் பொருத்திப் பார்க்கலாம். இன்னும் நீட்டித்தால் காண்டம் வாங்க அனுப்பப்படும் சினிமா உதவி இயக்குநர் முதற்கொண்டு சாப்ட்வேர் கம்பெனியின் டை கட்டின அடிமைகள் வரை (இதை எழுதிக் கொண்டிருக்கும் நான் உட்பட) இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

இப்படியொரு சமூகப் பிரச்சினையை இயக்குநர் மையமாக சொல்ல நினைத்தாலும் தமிழ் சினிமாவின் புளித்துப் போன கச்சாப் பொருளான ‘காதல்’ என்கிற சமாச்சாரத்தை போர்த்தித்தான் இதை சொல்ல வேண்டியிருக்கிறது என்பதை 'துரதிர்ஷ்டம்' என்றுதான் சொல்ல வேண்டும்.  படம் துவங்கின சில நிமிடங்களுக்கு ‘அய்யோ, இந்தப் படத்திற்கா வந்தோம்’ என்ற சலிப்பு தோன்றிய பின் கதைக்களம் கிராமத்திலிருந்தும் பிறகு நகரத்திற்கு வந்தவுடன் முகத்தில் அறையும் காட்சிகளுடன் சரசரவென்று நகர்கின்றன. பல நுட்பமான காட்சிகள்.

ஸ்ட்ராபெரி பழம் நுழைந்திராத கிராமத்திற்குள் கிரிக்கெட் எப்பபடியோ நுழைந்து விட்டிருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு கோயில் நுழைவு போல காட்டப்படும் அந்த துணிக்கடை நிறுவனம் திறக்கப்படும் காலைக்காட்சிகள் மதநிறுவனங்களுக்குப் பின்னும் அழுக்குகள் நிறைந்திருப்பதைப் போலவே இங்கும் அழுக்குகள் நிறைந்திருப்பதை சுட்டிக் காட்டுகிறது. ‘அண்ணன் கிளம்புறம்மா’ என்று நகரத்திற்குப் புறப்படும் சகோதரனிடம் இறுகிற பாறை போன்ற முகத்துடன் ‘சரிண்ணே’ என்கிற அந்தச் சிறுமியின் முகம் என்னை மிகவும் வதைத்தது.

சில சொற்ப காட்சிகளே வந்து போகும் நாயகனின் தந்தையிலிருந்து துணிக்கடையில் பணிபுரியும் பலரின் முகங்கள் அசலான கிராமிய மணத்துடன் பொருந்திப் போவது நிறைவாக இருக்கிறது. பிரதான பாத்திரங்களில் நடிக்க ‘வைக்கப்பட்டிருக்கும்’ இளைஞனும் யுவதியும் மிக அற்புதமாக தங்கள் பகுதியைச் செய்திருக்கின்றனர்.

இறுதிப்பகுதியில் நாயகியின் தந்தையாக வரும் கவிஞர் விக்கிரமாதித்யன் சொற்ப நேரமே வந்தாலும் நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறார். அந்த மாதிரி காட்சியை நானே பார்த்திருக்கிறேன். அரசு மருத்துவமனையில் எனது தந்தையை சிகிச்சைக்காக சேர்த்திருந்த போது, எதிர் படுக்கையில் இருந்தவர் இறந்து போனதுமே அந்த எளிமையான ஏழ்மைக்குடும்பம் சிறிது நேரத்தில் காணாமற் போய்விட்டது. பிணத்தை எடுத்துப் போக ஆகும் செலவை நினைத்து அஞ்சியிருக்கலாம்.

பணியிலிருந்து விலக்கப்படுவோம் என்கிற அச்சத்தில் சபை நடுவில் தன்னுடைய காதலையே மறுக்குமோர் இளைஞனும்  அதன் காரணமாக வெகுண்டெழும் அவன் காதலியும் பிறகான அவளின் தற்கொலையும்.... படத்தின் ஆகச் சிறந்த காட்சிக்கோர்வையிது.

நடிகர்களில் குறிப்பிட்டுப் பாராட்டப்பட வேண்டியவர் மூவர்.

கருங்காலி சூப்பர்வைசராக நடித்திருக்கும் இயக்குநர் வெங்கடேசன். பார்வையாளனிடம் நிறைய வெறுப்பைச் சம்பாதிக்கும் பாத்திரம். இவர் அடிவாங்கும் போது அரங்கமே குதூகலிக்கிறது. இந்த மாதிரியான வில்லன் பாத்திரங்களைப் பார்க்கும் போது நாம் செளகரியமாக ‘நாயகனின்’ பகுதியில் நின்று கொள்கிறோம். ‘ச்சே.. எவ்வளவு மோசமானவன்ப்பா..” ஆனால் நூற்றுக் கணக்கான இளம் பெண்களை மேய்க்கும் அதிகாரம் வாய்த்தால் நம்மில் எத்தனை பேர் அவர்களின் மார்களை கசக்காமலிருப்போம் என்கிற கேள்வி என்னுள் எழுந்தது.

‘அண்ணாச்சியாக’ பழ.கருப்பையா. சர்ச்சையான அந்த பாத்திரத்திற்குள் தைரியமாகப் பொருந்தியிருக்கிறார். ஒரு அப்பட்டமான வியாபாரி என்கிற நிலையில் அவரின் எல்லாச் செயல்களையும் நியாயப்படுத்தி விடமுடியும். “எத்தன ரூவா கொட்டி வேபாரம் பாக்கோம்... சவத்து மூதிக...தனது வியாபாரத்திற்கு தடையாக இருக்கும் எந்தவொரு விஷயமும் அவருக்கு எரிச்சலூட்டுகிறது. தம்மிடம் வேலைபார்க்கும் சூப்பர்வைசர் எவளை கசக்கிலாலென்ன, எவனை நையப் புடைத்தாலென்ன?... பணியாளர்கள் அடங்கி ஒடுங்கி முகம் சுளிக்காமல் வேலை செய்ய வேண்டும் என்பதுதான் அவரின் எதிர்பார்ப்பு.

அரசு இயந்திரங்களின் சக்கரங்களுக்கு இவர் தினம் எவ்வளவு படியளக்கிறார் என்றொரு லிஸ்ட் சில நொடிகள் காட்டப்படுகிறது. அந்த ஒரு ஷாட்டின் மூலம் அரசாங்கத்தின் மீது பலமாக காறி உமிழ்ந்திருக்கிறார் இயக்குநர். ‘அம்பதாயிரம் ரூவா பட்டுப்புடவைய திருடிட்டான்யா’ என்று சொன்னவுடனேயே காவல்துறை அந்த இளைஞனை காவல் நிலையத்தில் வைத்து நையப்புடைக்கிறது. அண்ணாச்சி அப்படி பொய்க்குற்றம் சாட்டக் கூட தேவையில்லை. வெறுமனை விரலைச் சுட்டியிருந்தால் கூட போதும். காவல் நாய் விசுவாசத்துடன் சுட்டப்பட்ட திசை நோக்கி பாயத் தயாராக இருக்கும். இளைஞன் நிறுவனத்திற்குள் நடக்கும் வன்கொடுமைகளைச் சொல்ல சொல்ல வாய் மேலேயே அடிவிழுகிறது.

மூன்றாமவர் நடிகை சிநேகா. நடிகையாகவே வருகிறார். சம்பந்தப்பட்ட நிறுவனம் எது என்பது பல காட்சிகளில் நிறுவப்பட்டாலும் இவர் 'எடுத்துக்கோ.. எடுத்துக்கோ' என்று விளம்பர மாடலாக நடிப்பதின்  மூலம் சந்தேகத்திற்கிடமின்றி அது நிரூபணமாகிறது. கதையின் போக்கு இவரிடம் விவரிக்கப்பட்டதா என தெரியவில்லை. தெரிந்தேதான் நடித்தார் என்றால் தைரியம்தான். இவரின் விளம்பர வாய்ப்பு சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் தொடருமா என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

()

வசனம் ஜெயமோகன். வசனத்திற்கு திரையரங்கு ஆரவாரிப்பதை ஆச்சரியத்துடன் கவனித்தேன். வசனங்களுக்காக திரைப்படங்கள் சிலாகிக்கப்பட்ட காலம் முடிந்து ஒரு மாமாங்கமாகி விட்டாலும் நவீன திரையில் நிகழும் இம்மாதிரியான விதிவிலக்குகள் ஆச்சரியப்படுத்துகின்றன. உண்மையில் ஒரு திரைப்படத்திற்கு வசனம் என்ற அங்கம் தனியாக உருவாக்கப்படக்கூடியதே அல்ல. திரைக்கதையின் ஊடாக அந்த சூழ்நிலையில் பாத்திரங்கள் இயல்பாக என்ன பேச வேண்டுமோ, அதை மாத்திரம் பேசினால் போதும். ஆனால் மிகு யதார்த்தமாக இருந்தால் வறட்சியாக இருக்கும்; அதில் கொஞ்சமாவது சுவாரசியம் இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் வசனகர்த்தா தேவைப்படுகிறார். ஜெயமோகன் இதை சரியாக செயல்படுத்தியிருக்கிறார். பிரதான பாத்திரங்களான இளைஞனும் யுவதியும் கூட்டத்தின் நெரிசலின் இடையில் உரையாடுகிறார்கள்.

அவள் சொல்கிறாள்: “தங்கச்சி உன்ன யாரு யாருன்னு கேட்டுட்டே இருந்தா?”

“நீ என்ன சொன்ன?”

“சிரிச்சேன்”


அவ்வளவுதான். படம் பார்த்தவர்களுக்கு இந்த வசனத்தின் பின்னணியிலுள்ள அழுத்தமும் எளிமையும் புரியும். என்றாலும் சில இடங்களில் நேர்ந்திருக்கும் நாடகத்தனமான அபாயங்களை ஜெயமோகன் தவிர்த்திருக்கலாம் என்று படுகிறது.

உதாரணமாக மற்ற பதிவர்களால் பெரிதும் சிலாகிக்கப்பட்டிருக்கும் “யானை வாழுற காட்டுலதான் எறும்பும் வாழுது” என்கிற வசனத்தை எடுத்துக் கொள்ளலாம். என்ன மாதிரியான சூழலில் இது பேசப்படுகிறது என்பதை முக்கியமாக கவனிக்க வேண்டும்.  பொய்க்குற்றம் சாட்டி காவல்துறையால் செமத்தியாக கவனிக்கப்பட்டு திரும்பும் இளைஞன் தன்னுடைய காதலியை நிறுவனத்திலிருந்து மீட்க வந்திருக்கிறான். கடையில் உள்ள சூப்பர்வைசர்கள் இணைந்து தாக்குகின்றனர். வியாபாரம் பாதிக்கப்படும் அபாயத்தை உணர்ந்த அண்ணாச்சி அந்த பெண்ணை விடுவிக்கச் சொல்கிறார். இருவரையும் வெளியில் துரத்தும் கருங்காலி சூப்பர்வைசர் சொல்கிறான். “இந்தத் தெருவுல எவனும் உங்களுக்கு வேலை தர மாட்டான். பிச்சைதான் எடுக்கணும்”.  இதுதான் அங்காடித்தெரு வியாபாரிகளின் தர்மம்.

தங்களின் உழைப்பை சுரண்டிக் கொண்டதோடு மட்டுமல்லாமல் காகிதக் குப்பை போல் கசக்கி வெளியே எறியும் நிறுவன அடியாளிடம் அந்த இளைஞன் எப்படி பேசியிருப்பான். “போடா தேவடியாப் பயலே, நீயே உக்காந்து அண்ணாச்சி குண்டிய நக்கிட்டிரு. உன்னையும் அவன் வெளியே தூக்கிப் போடப் போறான். மவனே பாருடா. இதே தெருவுல உன் கண்ணு முன்னாடியே நானும் பொழச்சுக் காட்டறண்டா”... சென்சார் காரணமாக இத்தனை அப்பட்டமாக பேசமுடியாதென்றாலும் இதே போன்ற தொனியில்தானே வெடித்திருப்பான்? அந்தச் சமயத்திலும் எப்படி இலக்கிய நயத்துடன் யானை எறும்பு என்றெல்லாம் பேச முடியும்?. இதைத்தான் சினிமாத்தனம் அல்லது நாடகத்தனம் என்கிறேன்.

எல்லா வசனங்களுக்கும் வசனகர்த்தாவையே பொறுப்பாக்க முடியாது என்றாலும் எழுதியவர் ஜெயமோகன் என்பதால்தான் இந்த சொற்ப தடுமாற்றங்களை சுட்டிக் காட்ட வேண்டியிருந்தது. டி.ராஜேந்தர் வசனம் என்றால் காதைப் பொத்திக் கொண்டிருக்கலாம்.

()

வசந்தபாலன் பல நுட்பமான காட்சிகளை படம் முழுக்க இறைத்திருக்கிறார். குறிப்பாக இரவு நேரங்களில் காட்டப்படும் ரங்கநாதன் தெரு. பணியாளர்களைப் போலவே அட்டைக்குப்பைகளும் அதன் உபயோகம் முடிந்தவுடன் வெளியே எறியப்படுகின்றன. அந்த ராத்திரியின் சொற்ப வெளிச்சத்தில் ஒரு தந்தை தன்னுடைய குழந்தைக்கு சூடான டீயை ஊதி ஊட்டுகிறார். எல்லா அலவங்களையும் மீறி மனித இருப்பில் நிகழும் சின்ன சின்ன சந்தோஷங்கள்தான் அவனை தொடர்ச்சியாக இயக்குகின்றன என்பதை பல காட்சிகளில் காண முடிகிறது.

நகராட்சி கழிவறையின் மூலம் சம்பாதிக்கும் சுயமுன்னேற்ற நீதிக்கதைளெல்லாம் பாலச்சந்தர் படங்களிலேயே ரிடையர் ஆகிவிட்டது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். வசந்தபாலன் இந்த மாதிரியான கிளிஷேக்களை கைவிடுவது நல்லது. அவை இல்லாமலேயே மையக்கதையின் போராட்டத்தை வலுவாகச் சித்தரிக்க முடியும். மற்றபடி பிளாட்பாரத்தில் கைக்குட்டை விற்கும் இசுலாமியப் பெரியவரும், பாலியல் தொழிலாளியை மணந்து கொள்ளும் உயரம் குறைவானரும் அவர்களின் வாரிசு பிரச்சினையும் என சொற்ப நொடிகளில் உப கதைகள் விரிகின்றன.

ஏற்கெனவே சொன்னது போல் படத்தின் தலைப்பை நியாயப்படுத்துவது அந்தத் தெருவின் மனிதர்களையும் நிகழ்வுகளையும் பெரு, சிறு வணிகர்களின் தந்திரமான போக்குகளையும், நடுத்தர வர்க்கத்து வாடிக்கையாளர்களின் அல்பத்தனங்களையும் என... அந்தத் தெருவின் ஆளுமையை இன்னும் அதிகமாக உபயோகித்திருக்கலாம். இதன் மூலம் காதல் காட்சிகள் நீளும் அபத்தங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும். பாடல் காட்சிகளிலிருந்து தமிழ் சினிமா என்றைக்கு வெளியேறி வரப் போகிறதோ? பிராமண மாமியின் பாத்திரம் செயற்கை குரூரத்துடன் சித்தரிக்கப்பட்டிருந்து போல் பட்டது.

என்றாலும் குறைந்த அளவு சமரசங்களுடன் ஒரு நல்ல படைப்பை தந்ததற்காகவே வசந்தபாலனை நாம் ஆதரிக்க வேண்டும். உடனே இதை உலக சினிமா என்று கொண்டாட வேண்டியதில்லை. அதற்கான பயணத்தின் முன்னே வைக்கப்பட்ட காலடித் தடங்களுள் ஒன்று. வசந்தபாலனின் முந்தைய படமான வெயில் கூட அத்தனை பாராட்டிற்கு உகந்ததல்ல. சில நுட்பமான காட்சிகளைத் தவிர்த்து அதுவுமொரு வணிகநோக்குத் திரைப்படமே. ‘இவ்வளவுதான் செய்ய முடியும்’ என்கிற சூழலில்தான் தமிழ் சினிமா நின்று கொண்டிருக்கிறது. இயக்குநர்களை மாத்திரம் குறை கூறிப் புண்ணியமில்லை.

சரி. வசந்தபாலன் இந்த சமூக அவலத்தை திரைப்படமாக எடுத்து நம்முன் வைத்துவி்ட்டார். நாம் என்ன செய்யப் போகிறோம்.  பளபளப்பான வியாபாரங்களுக்குப் பின்னால் மனித உரிமை மீறல்களை ஒளித்து வைக்கும் வணிகர்களை புறக்கணிக்கப் போகிறோமா? ஒரு கரண்டி அரிசி மாவை தோசை என்கிற பெயரில் அறுபது ரூபாய்க்கு விற்றுக் கொழுத்து பணியாளர்களின் மனைவிமார்களை களவாடும் அண்ணாச்சிகளின் உணவகங்களுக்கு போகாமலிருக்கப் போகிறோமா? அடுத்த முறை ரங்கநாதன் தெருவிற்குப் போகும் போது விளையாட்டாகத்திரியும் இளம் பணியாளர்களை எரி்ச்சலோடு அல்லாமல் 'த்சொ' என்று அனுதாபமாக பார்க்கப் போகிறோமா.. தெரியவில்லை.

எப்படியோ அதிகார மையங்கள் தொடர்ந்து கள்ள மெளனம் சாதிக்கப் போவது நிச்சயமென்றாலும் நடுத்தர வர்க்கத்தின் சொரணையை சற்று சோதித்துப் பார்த்திருப்பதில் வெற்றியடைந்திருக்கிறார் இயக்குநர்.

()

தமிழ் சினிமாவின் அபத்தங்கள் குறித்து ஓயாது நாம் புலம்புகிறோம். ஆனால் விதிவிலக்காக சற்றே விலகி ஒரு நல்ல படம் வந்தால் என்ன செய்கிறோம்? சென்னை ஆல்பட் அரங்கில் மொத்தம் இருநூறு பேர்தான் இருந்திருப்போம். ‘நான் முடிவு செஞ்சிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்” என்கிற மென்ட்டல் கேஸ்களின் படங்களையெல்லாம் முதல் நாளே முண்டியத்து பார்க்கும் நாம் நல்ல படங்களுக்கு மாத்திரம் ‘ஆணா, பெண்ணா’ என்று உருவம்  கூட தெரியாத தேசலான பிரிண்ட்டுகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.

இதை வாசிக்கும் நண்பர்களிடம் நான் வைக்கும் வேண்டுகோள் இதுதான். இந்த மாதிரியான விதிவிலக்குத் திரைப்படங்களையாவது தியேட்டருக்கு சென்று பாருங்கள்.

இந்த வேண்டுகோள் ஐங்கரன்களுக்காக அல்ல; வசந்தபாலன்களுக்காக.


image courtesy: original uploader

suresh kannan

84 comments:

  1. தலைப்பிலிருந்து கடைசி வரி வரை எந்த வரிகளையுமே, மறுத்துச் சொல்ல முடியாத அருமையான விமர்சனம் சு.க.,

    ReplyDelete
  2. //முதலாளித்துவமும் அதிகாரமும் அதன் பரிவாரங்களும் கைகோர்த்துக் கொண்டு எளிய மனிதர்களின் உழைப்பையும் வாழ்க்கையையும் சுரண்டிக் கொழுப்பதை தைரியமாக அப்பட்டமாக சித்தரித்திருக்கிறார் இயக்குநர்.//

    அப்படிங்களா?

    டிவிஎஸ் க்ரூப்பும், அம்பானிங்களும் சுரண்டுறதை தெகிரியமா படமெடுக்குற தில்லு இந்த இயக்குனருக்கு இல்லையே?

    தியேட்டர் ஆர்ப்பரிக்கிறது என்று நீங்கள் எழுதியிருப்பதை காமெடி என்று எடுத்துக் கொள்கிறேன். படம் வெளியான நான்காவது நாளே காத்தாடி வருகிறது என்பதுதான் உண்மை.

    வேண்டுமானால் டிக்கெட்டுக்காக ஆன்லைனில் ட்ரை பண்ணி பாருங்க. ஈஸியா கிடைக்கும் :-)

    ReplyDelete
  3. \\ சாப்ட்வேர் கம்பெனியின் டை கட்டின அடிமைகள் \\

    மிகவும் ரசித்தேன்....

    நல்ல விமர்சனம்..

    ReplyDelete
  4. அன்பின் சுரேஷ் கண்ணன்,

    'யானை வாழற காட்டுலதான் எறும்பும் வாழுது' வசனத்துக்கு என் அம்மா கைத்தட்டினார்.

    அது நாடகபாணியால் என்று நான் நினைக்கவில்லை. இதற்கு பதிலாக நீங்கள் எழுதியுள்ள வசனம்தான் சற்றே நாடக பாணியில் இருக்கிறது :) 'உன் முன்னாடி நானும் பொழச்சு காட்டறேன் டா' என்று லிங்கம் பேசியிருந்தால் அது விஜய் அல்லது அஜித் படமாக மாறியிருக்கும்.

    இந்த வசனத்தை லிங்கம் பேசியது இறுதியில். ஒருவேளை நீங்கள் சொன்னதுபோல் சவுந்திரபாண்டி பேசியிருக்கக் கூடும். அல்லது வேறு யாராவது. ஆனால், அதேதெருவில் வேலை கிடைக்காமல் பித்துப் பிடித்து சவுந்திரபாண்டி அலைகிறான். அவனைப் பார்த்த பிறகுதான் லிங்கத்துக்கு பயம் வருகிறது. கனியிடம் ஸ்கேலை கொடுத்துவிட்டேனே என மாரிமுத்துவிடம் புலம்புகிறான்.

    அதன் பிறகு அந்த மழைநாளின் இரவில் டீ குடிக்கும் குழந்தையை பார்த்து வாழ முடியும் என்ற நம்பிக்கை அவனுக்குள் வருகிறது.

    கண்ணு தெரியாத தாத்தா, அந்த நம்பிக்கைக்கு வலு சேர்க்கிறார். ('மனுஷனை நம்பி கடை போட்டேன்... ஒரு குறையும் இல்ல'). இதெல்லாம் சேர்ந்துதான், 'கருங்காலி'யிடம், லிங்கம் 'யானை வாழற காட்லதான் எறும்பும் வாழுது' என அலட்சியமாக சொல்கிறான்.

    என்னளவில் இது நாடகப் பாணியாக தெரியவில்லை...

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்

    ReplyDelete
  5. படத்தின் ஆரம்பத்தில் கனியின் கால்கள் துள்ளும். சுதந்திரம் பெற்ற பறவையாக சிறகடித்துப் பறப்பார். இறுதியில் அந்தச் சிறகுதான் வெட்டப்படும்...

    சென்னை கோயம்பேட்டை முதலில் காண்பிக்கும்போது கருணாநிதி, ஜெயலலிதா என இருவரின் கல்வெட்டும் (!) காண்பிக்கப்படும். மகா கிண்டல்.

    ரங்கநாதன் தெருவுக்குள் ஊர்க்காரர்களுடன் லிங்கம் நுழையும்போது தன் ஆட்டோவை ஒருவர் துடைத்துக் கொண்டிருப்பார். 'சிறுவர்களை பணியில் அமர்த்தாதீர்கள்' என எழுதப்பட்டிருக்கும்.

    'எங்க ஜோடி பொருத்தம் எப்படி?' என ஊனமுற்ற தம்பதியிடம் கனி ஆரம்பத்தில் கேட்பார். அப்போது ஆண் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்க, பெண் அந்த வண்டியை தள்ளுவார். இறுதியில் இதே காட்சி லிங்கம் - கனி வாழ்க்கையில் தலைகீழாக மாறும்...

    ஆரம்பத்தில் சூப்பர்வைசர் மாரை கசக்கும்போது மவுனமாக இருந்ததாக கனி சொல்வார். வேலை அவசியம். ஆனால், இறுதியில் லிங்கத்தை கட்டிப் பிடித்தபடி, 'கண்ட இடத்துல கைய வைக்கறான்... இப்ப அத ஏத்துக்க முடியல' என கதறுவார். இந்த இரண்டு இடத்துக்குமான முரண் அல்லது வாழ்க்கைப் பயணம் காதலின் மறுபக்கம்.

    கனியின் தங்கை நாகம்மையின் சடங்கையும், செல்லியம்மனுக்கு நிகழும் அபிஷேகத்தையும் மாறி மாறி காட்டுவார்கள். அதற்கு பிறகு வரும் காட்சியில் அண்ணாச்சிக்கு பிறந்தநாள். சாஸ்திரிகளுடன் வைதீக முறைப்படி சடங்கு நிகழும்.

    முகத்தில் அறையும் முரண்

    -------

    கழிவறையை சுத்தம் செய்து சம்பாதிக்கும் கதாபத்திரத்தை கே.பி.டச் என கிண்டலடித்திருக்கிறீர்கள். இது க்ளிஷே அல்ல.

    லிங்கமும் மாரிமுத்துவும் ஊரிலிருந்து பையுடன் ரங்கநாதன் தெருவுக்குள் நுழையும்போது சற்றே அவுட் ஆஃப் போகஸில் இதேநபர் வேலை கேட்டுக் கொண்டிருப்பார்.

    கதையின் போக்கில் வேலை கிடைக்காமல் கழிவறையை சுத்தம் செய்து சொந்தமாக முதல் ஒரு ரூபாய் நாணயத்தை சம்பாதிப்பார்.

    இதை லிங்கத்தின் மனதில் ஏற்படும் மாற்றங்களின் வகையாகவும் புரிந்து கொள்ளலாம் அல்லவா?

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்

    ReplyDelete
  6. // உடனே இதை உலக சினிமா என்று கொண்டாட வேண்டியதில்லை. அதற்கான பயணத்தின் முன்னே வைக்கப்பட்ட காலடித் தடங்களுள் ஒன்று. //

    ஸ்ஸப்பா. முடியல!

    படத்துல முழுசும் ஒன்றாம படம் பாக்கறப்பவே எப்படி விமர்சனம் செய்யலாங்கற புத்தி இருக்கற வரைக்கும் இப்படித்தான் எழுதத்தோணும்னு நினைக்கறேன். உம்ம இந்த புத்திசாலி விமர்சனத்தை விட படம்முடிஞ்சு வெளில கலங்கிய கண்களோடு வர்ற ஒவ்வொருத்தரின் மவுனமும் வசந்தபாலனுக்கு ஒரு மெடல் குத்துனதுக்கு சமம்! எதுய்யா ஒலகப்படம்? எதுக்கய்யா ஒலகப்பட அங்கீகாரம்?!

    அய்யன்மீர், பர்மாபஜார்ல 15 ரூவாய்க்கு வாங்கி பாத்தப்பறம் IMDB ல கதையையும் படிச்சுட்டு (இதுவரைக்கும் தப்பில்லை! ) அதுக்கப்பறமா ஒலகசினிமான்னு ஒலக்க சினிமான்னு எழுதறதும் பிரச்சனையில்லை. ஆனா சம்பந்தமேயில்லாம மசாலா படங்களைப்பத்தி ஒரு திட்டு பிட்டைப்போட்டு சில்வண்டு பறக்கவிடற கெட்ட பழக்கத்தை என்னைக்குத்தான் விடப்போறீங்களோ?

    ஒலக சினிமா அடிஸ்கேலை எல்லாம் ஓரமா வச்சிட்டு உம்ம அளவுல ஒரு படம் எப்படி பாதிச்சது பிடிச்சது பிடிக்கலைன்னு மட்டும் எழுதுங்கன்னு உங்க நீண்ட நாள் வாசகனா தாழ்மையுடன் வேண்டிக்கறேன் ஓய்! படிக்கற எங்களுக்கும் நீங்க சொல்லறதை அப்படியே உணர ஏதுவாக இருக்கும். அதுபோக ஒரு படம்பத்தி பேசறீங்கன்னா அத்தோட நிறுத்துனாலும் நீங்க எங்களுக்கு உணர்த்த விரும்பற விசயங்கள் மேல கவனம் குவியும். அத்த விட்டுட்டு, ஓடற ஆத்துல ”ஒலகப்பட மக்கா மேலாக்க பொச்சு கழுறாய்ங்க...அது புனிதம்... ஆனா விஜய் ஆத்துக்கு கீழாக அளம்பிக்கிறாரு... அது அசிங்கம்”ன்னு நீங்க எப்பவும் விடற அலப்பரை அசிங்கமா இருக்குங்கப்பு! :(


    // ‘நான் முடிவு செஞ்சிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்” என்கிற மென்ட்டல் கேஸ¥களின் படங்களையெல்லாம் முதல் நாளே முண்டியத்து பார்க்கும் //

    அதானே... நவீன கால அடிமைகளைப்பத்தி நீங்க 200பேரு படம்பார்த்து புல்லரிச்சுட்டீங்க... அனா அதே அடிமைக வார இறுதில இதே விஜய் படத்துக்குத்தான் முண்டியடிச்சுக்கிட்டு படம் பார்த்து அவிங்க கஸ்ட்த்துல இருந்து ரிலிபாவுறாய்ங்க... அவங்களுக்கு தேவை உங்க ஒலகபடமா?! யோசிங்கப்பு... நீங்க ரசிக்கறதே... உங்க ரசனையே... உங்க கஸ்ட நட்டங்களே உங்களோட எலக்கிய லெவலையும் கலாரசனை லெவலையும் தீர்மானிக்கறதுன்னு தெரிஞ்சும் இப்படி பொத்தம்பொதுவான அளவுகோளை நீட்டி அனைவரது வாழ்க்கையையும் அவர்களது ரசனையையும் அளக்க முயலாதீங்க அப்படின்னும் கேட்டுக்கறேன்.

    நன்றி!

    ReplyDelete
  7. நுட்பமான விமர்சனம் சுரேஷ்...

    ReplyDelete
  8. அருமையான விமர்சனம் சுரேஷ்.

    கா.பா, தோழர் மாதவராஜ், நீங்கள் அனைவரும் பாராட்டுவதைப் பார்க்கும்போது, இந்த வாரக் கடைசியில் திரையரங்கில் பார்த்து விடும் ஆர்வம் வருகிறது.

    ReplyDelete
  9. நடிகர்களில் கனியாக நடித்திருக்கும் 'கற்றது தமிழ்' அஞ்சலி, பெரிதாக என்னை கவரவில்லை. இறுதியில் மருத்துவமனை படுக்கையில் படுத்தபடி வெறுமையான பார்வையை வழியவிடுவாரே... அங்கு மட்டும்தான் கதாபாத்திரமாக அவர் மாறியிருந்தார். மற்ற இடங்கள் முழுக்க, தானொரு நடிகை என்பதையே பாடிலேங்வேஜ் முதல், அனைத்திலும் நினைவூட்டியபடி இருந்தார்.

    ஆனால், செல்வராணியும், சோஃபியாவும்? சான்ஸே இல்லை. வாழ்ந்திருக்கிறார்கள். பாசாங்கற்ற அவர்களின் அழகு வசீகரிக்கிறது; ஈர்க்கிறது.

    தற்கொலைக்கு முன்பான செல்வராணியின் மூர்க்கமும், ரவுத்திரமும் ஜெயமோகனுக்கே உரிய பாத்திர படைப்பு...

    இதையும் இங்கு மறுமொழியில் குறிப்பிடத் தோன்றியதால்...

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்

    ReplyDelete
  10. இன்னும் முன்னமே எதிர்பார்த்தேன் , நல்ல விமர்சனம் , கிளிஷேக்கள்தான் எல்லா வகை ரசிகர்களையும் கவர்ந்த்தாக தோன்றுகிறது .

    பைத்தியக்காரனின் (பேர சொல்ல கஷ்டமா இருக்குங்க) பார்வை மிக நுண்ணியது

    ReplyDelete
  11. படத்தை மீண்டும் பார்க்க தூண்டுகிறது.

    ஆள பிறந்தவரே ,ஏன் ஐயா ஆத்திரம் ,ஜெயமோகன் வசனம் என்பதாலா..?
    " டிவிஎஸ் க்ரூப்பும், அம்பானிங்களும் சுரண்டுறதை தெகிரியமா படமெடுக்குற தில்லு இந்த இயக்குனருக்கு இல்லையே "

    என்ன மாதிரியான சுரண்டல் என்பதை இங்கு விளக்க முடியுமா ..அல்லது வெறும் ஜல்லி அடிப்பா. டிவிஎஸ் குரூப் -எந்த கம்பெனி ஐ சொல்ல வருகிறீர்கள் ..பொத்தம் பொதுவாக ஏதோ ஒன்னு.. ம்ம் ..
    இது என்ன கிசு கிசு வா.

    "படம் வெளியான நான்காவது நாளே காத்தாடி வருகிறது என்பதுதான் உண்மை."

    உங்களை மாதிரி ஆட்களுக்கு என்று சுறா படம் வருகிறது .

    ஏகன் ,வில்லு அட்டு படங்களை தயாரித்த ஐங்கரனை ஏன் யாருமே பாராட்டவில்லை ..

    ReplyDelete
  12. மேதகு பதிவர் பைத்தியக்காரன் அவர்கள் இப்படத்தின் இன்னின்ன குறியீடுகளை கவனித்து வைத்திருப்பார் என்று ஒரு அனுமான லிஸ்ட் தயார் செய்து வைத்திருந்தோம்.

    அந்த லிஸ்ட்டு அட்சரம் பிசகாமல் இருக்கிறது :-)

    ReplyDelete
  13. //என்ன மாதிரியான சுரண்டல் என்பதை இங்கு விளக்க முடியுமா ..அல்லது வெறும் ஜல்லி அடிப்பா. டிவிஎஸ் குரூப் -எந்த கம்பெனி ஐ சொல்ல வருகிறீர்கள் ..பொத்தம் பொதுவாக ஏதோ ஒன்னு.. ம்ம் //

    கிசுகிசுவெல்லாம் இல்லைங்க ஆளப்பட பிறந்தவரே!

    நம்ம க்ரூப்பின் அம்பத்தூர் சைட் ஃபேக்டரிங்களைப் போய்ப் பாருங்க. விஷயம் புரிஞ்சாலும் புரியும்.

    படத்தோட மிகப்பெரிய ஆறுதலே ஜெயமோகன்தான் என்பதை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். ஆனாலும் ஜெமோ டயலாக் எழுதும் படம் கஸ்தூரிமானிலிருந்து எதுவும் விளங்குவதில்லை என்பதையும் ஒப்புக்கொண்டே ஆக வேண்டியிருக்கிறது.

    ReplyDelete
  14. சுரேஷ், நீங்கள் சொன்ன செயற்கைத்தனமான வசனம், காட்சிகளெல்லாம் சரிதான். அவை செயற்கையாகத்தான் இருந்தன. யானை வாழுற காட்டுல எறும்பும் வாழுது என்பது நல்ல வசனம், ஆனால் இந்தக் காட்சிக்கு ஏற்றது அல்ல. :))

    ஆனால் தேவையில்லாமல் உலகப்படத்தையும், விஜயையும் (இரண்டும் ஒண்ணுதானோ?) இங்கே இழுத்திருக்கவேண்டியதில்லை. இது மாதிரித் திரைப்படம் அல்ல, ஒரு நல்ல திரைப்படம். அவ்ளோதான். எப்படியோ இன்னும் ஒரு பத்துப்பேர் உங்களை மொத்தப் போறாங்கன்னு நினைக்கும்போதே சந்தோஷமாத்தான் இருக்கு.

    ReplyDelete
  15. //ஆனால் தேவையில்லாமல் உலகப்படத்தையும், விஜயையும் (இரண்டும் ஒண்ணுதானோ?) இங்கே இழுத்திருக்கவேண்டியதில்லை. //

    ஹபி!

    ஐ லவ் யூ! :-)

    ReplyDelete
  16. நல்ல வாசிப்பனுபவம் தோழர்

    ReplyDelete
  17. யுவகிருஷ்ணா, :)))

    அதிஷா, ஏன் சுரேஷை கிண்டல் பண்றீங்க? :>

    ReplyDelete
  18. பதிவாளரே ஹரன் பிரசன்னாவை தயவு செய்து மாடரேட் பண்ணுங்க.. நான் சீரியஸா பின்னூட்டம் போட்டா காமெடினு நம்மள கோர்த்து விடறாரு

    ReplyDelete
  19. "நம்ம க்ரூப்பின் அம்பத்தூர் சைட் ஃபேக்டரிங்களைப் போய்ப் பாருங்க. விஷயம் புரிஞ்சாலும் புரியும்.
    "

    ha ha ..

    ReplyDelete
  20. நல்ல விமர்சனம். கட்சியில் நல்ல வேண்டுகோளும்.

    ReplyDelete
  21. தமிழில் இந்த மாதிரி படம் வருவது ( துணிக்கடை - சத்யராஜ் படம் ஒன்று ) அரிது. ஹிந்தி ட்ராபிக் சிக்னலில் இருந்து சில காட்சிகள் / கேரக்டர்கள்/ இன்ப்ளுயன்ஸ் இதில் அழகாக இடம் பெற்றுள்ளன. அந்த படம் பற்றி எழுதுனீங்களா?

    ReplyDelete
  22. மதி.இண்டியாMarch 30, 2010

    யுவகிருஷ்ணா , வயிற்றெரிச்சல் ?

    உங்க கிட்டயோ உங்க வாங்கி ... குருகிட்டயோ எந்த சரக்கும் இல்லை என்பது உலகுக்கே தெரியும் ,

    தலைப்பை மட்டும் பார்த்து விளம்பர உலகம் வாங்கினவனெல்லாம் (அதுக்கு நீங்க எங்க விளம்பரம் பண்ணீட்டிங்கன்னு நினைவிருக்கா?) பாவம் ,

    வாழ்க்கையில் எதையாவது முயற்ச்சியாவது பண்ணீருக்கீங்களா? எதுவும் வெளங்குனதா தெரியல , மாச சம்பளத்துக்கு அடிதடி , குருவுக்கு வசூல் பண்ணிதர்ரதுலதான் பொழப்பே ,

    இதுல அடுத்தவங்களை பாத்து வயிறெரிஞ்சு என்ன பண்ண ?

    ReplyDelete
  23. நல்ல விமர்சனம் சுரேஷ் கண்ணன். சில கருத்து வேறுபாடுகளும் உண்டு.

    //பிராமண மாமியின் பாத்திரம் செயற்கை குரூரத்துடன் சித்தரிக்கப்பட்டிருந்து போல் பட்டது. //
    இதுவே குரூரம் என்றால், இதை விட குரூரமான முதலாளியம்மாக்கள் நிஜத்தில் உண்டு என்பது என் கருத்து .

    எனக்கென்னவோ, நீங்கள் சொன்ன வசனம்தான் நாடகத்தனமாக தோன்றுகிறது. ஒருவேளை யானை - எறும்பு வசனத்தை கருங்காலிக்கு பதிலாக அண்ணாச்சி முகத்திற்கு நேரே பேசியிருந்தால் இந்த வசனம் இன்னும் பொருந்தியிருக்கலாம்.

    கடைசி வேண்டுகோள் - ஆதரிக்கிறேன்.

    மற்றபடி நுட்பமான விமர்சனம் உங்களுடையது.

    ReplyDelete
  24. அன்பின் சுரேஷ் கண்ணன்,
    நான் தவறாக எதுவும் சொல்லி விட வில்லையே.. எதற்காக என்னுடைய பின்னூட்டம் வெளியிடப்படவில்லை எனத் தெரிந்து கொள்ளலாமா?

    ReplyDelete
  25. அன்புள்ள கார்த்திகைப் பாண்டியன்,

    பொதுவாக பின்னூட்டங்களை நான் அதிகம் மட்டுறுத்துவதில்லை. திட்டி வருவதைக் கூட அனுமதிக்கிறேன்.

    இது தொழில்நுட்ப பிரச்சினையாக இருக்கலாம். Dashboard-ல் சென்று பார்க்கும் போது 12 comments இன்னும் மட்டுறுத்தப்படாமலிருக்கும் செய்தி போல் காட்டுகிறது. அதைக் கிளிக்கினால் no comments for moderation என்று வருகிறது. எனக்குத் தெரியவில்லை. உங்கள் பின்னூட்டத்தில் மறுபடியும் வேண்டுமானால் அனுப்புங்கள்.

    ReplyDelete
  26. அருமையான விமர்சனம்.

    ஆனால் நீங்கள் சொல்லி இருப்பது போல இந்த படம் சமூகத்தில் பாதிப்பு ஏற்படுத்தி இருக்கிறதா. உண்மையில் ரசிகர்களை பாதித்து இருந்தால், அந்த அங்காடிகளுக்கு வரும் வாடிக்கையாளர் கூட்டம் பத்து சதவீதம் குறைந்து இருக்க வேண்டும், அல்லது அங்கு வேலை பார்க்கும் இரண்டு சதவீதம் ஊழியர்களாவது ராஜினாமா செய்து வேற வேலை, வியாபரத்திற்கு சென்று இருக்க வேண்டும்.

    இன்றும் அந்த அங்காடிக்கு கூட்டம் போகத்தான் செய்கிறது. மற்ற அங்காடிகளை விட தரம் குறைந்தாலும் பரவ இல்லை, விலை இரண்டு ரூபாய் குறைவு என்று செல்லும் கூட்டம் நம் தமிழ் கூட்டம்.

    இந்த மாதிரி அங்காடிகள், மென்பொருள் நிறுவனங்களில் கப்பம் வாங்கி கொண்டு , கம்ம்யுனிச கட்சிகளும் இந்த அங்காடிகளில் தொழில் சங்கம் ஆரம்பிக்க எந்த வித முயற்சியும் செய்வது இல்லை.

    ReplyDelete
  27. சுரேஷ் கண்ணன்

    மிக அழகான விமர்சனம்...

    ஆழ்ந்து வாசித்தேன்..

    //யானை வாழுற காட்டுலதான் எறும்பும் வாழுது//

    ஒரு கிராமத்தான், அதுவும் பள்ளியில் முதல் மதிப்பெண் வாங்கும் அளவில் படித்தவனிடம், கோபத்தில் கூட இதுபோல்தான் வெளிப்படும் என்பது என் கருத்து..

    அந்த ”சிரிச்சேன்” சொல்லும் போது கனியின் முகத்தில் தெரியும் குறுகுறுப்பு மிக அழகானதொரு வெளிப்பாடு..

    ReplyDelete
  28. Neenga romba nallavar, Suresh kannan :)

    ReplyDelete
  29. உங்களுடைய எல்லாக் கருத்துக்களோடும் ஒத்துப் போக இயலாவிட்டாலும், படம் பற்றிய உங்களின் அவதானிப்பு ரொம்பவெ பிடித்து இருக்கிறது.. என்னைப் பொறுத்தவரை இது தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படங்களில் ஒன்று.. இது வரை எந்த ”டமில்ப்படங்களிலும்” பின்புலங்கள் பற்றிய இத்தனை தகவல்கள் காணக் கிடைத்தது இல்லை..

    சிவராமன் அண்ணே..
    நீங்க சொல்லி இருக்குற நுண்ணிய விஷயங்களை எல்லாம் கவனிச்சு பாக்குறதுக்காகவே மறுபடி ஒரு தடவை படம் பார்க்காலம்னு இருக்கேன்..:-))

    ReplyDelete
  30. கண்ணாடித் தொழுவத்தில் சிக்கியவர்கள்: http://3.ly/9miQ.

    ReplyDelete
  31. வியாபாரம் முன்னிலை; அதற்கு அடுத்த நிலை அத் தெருவின் ஓரொரு மனிதனுக்கும் சம்பாதித்து ஆக வேண்டிய கட்டாயம். ஆக, வியாபாரம்தான் முன் இருத்தப் படுகிறது; சிப்பந்திகளின் மீதான அடக்குமுறையோ அதற்குள் அடக்கம்.

    //...தன்னுடைய காதலையே மறுக்குமோர் இளைஞனும் அதன் காரணமாக... தற்கொலையும்....//

    சம்பாதித்து ஆக வேண்டிய கட்டாயத்தின் விளைவு.

    நாயகனும் காலிழந்த நாயகியும் கூட வியாபாரத்தில் கால்கொள்ளும் தீர்வையே தேர்கிறார்கள்.

    இந்த ஈனப்பாட்டுப் பிழைப்பு வேண்டாம் என்று ஒருவரும் ஒதுங்கி ஓடவில்லை.

    'அடிமைகளின் உலகம்' என்கிற கோணமும் உண்டுதான், ஆனால் அது வழிநிலை கூட அல்ல; மூன்றாம் நிலை.

    நம் மொத்த வாழ்க்கையும் இன்று 'அங்காடித் தெரு'தான். இதை உணரத் தருவதனால்தான் இது நல்ல படம்.

    ReplyDelete
  32. //தமிழ் சினிமாவின் புளித்துப் போன கச்சாப் பொருளான ‘காதல்’ என்கிற சமாச்சாரத்தை போர்த்தித்தான் இதை சொல்ல வேண்டியிருக்கிறது என்பதை 'துரதிர்ஷ்டம்' என்றுதான் சொல்ல வேண்டும்//

    ஹாலிவுட்டில் மட்டும் என்ன வாழுதாம் அங்கேயும் இந்த புளித்துப்போன் காதல்தானே “டைட்டானிக் முதல் அவதார்” வரை

    அன்புடன்
    அரவிந்தன்
    பெங்களுர்

    ReplyDelete
  33. அருமையான அலசல்.

    சிவராமனின் பின்னூட்டங்களும் அவதானிப்பும் அருமை.

    சினிமா வாழ்வைப் பிரதிபலிக்கவில்லை. மாறாக வாழ்வை பற்றிய உண்மையை வெளிப்படுத்துகிறது. காட்சிகளின் வழியே அந்த உண்மை நம்மை நெருங்கும் போது அதன் முன் செயல்ற்றவர்களாகின்றோம்.


    ஒரு படத்தை அதன் உருவாக்கத்தை அதன் ஆன்மாவை அணுகி ஆராயும் நுணுக்கம் வசந்த பாலனுக்கு கை கூடியிருக்கிறது.


    நன்றி சுரேஷ்.

    ReplyDelete
  34. //‘நான் முடிவு செஞ்சிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்” என்கிற மென்ட்டல் கேஸ்களின் படங்களையெல்லாம் முதல் நாளே முண்டியத்து பார்க்கும் நாம் நல்ல படங்களுக்கு மாத்திரம் ‘ஆணா, பெண்ணா’ என்று உருவம் கூட தெரியாத தேசலான பிரிண்ட்டுகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.//
    nachnu sollirukkinga.
    saravanan,
    kurumbalur.

    ReplyDelete
  35. சுரேஷ் மற்றும் பைத்தியக்காரன் sir அவர்களுக்கு ,

    எப்படி சார் இந்த மாதிரியெல்லாம் நுட்பமா விமர்சிக்க முடியுது ....,great ..,நானெல்லாம் அனந்த விகடன் ,குமுதம் போன்ற விமர்சனத்தை பார்த்து தான் படத்துக்கு போய் பல முறை பல்பு வாங்கியிருக்கேன் ....,

    ReplyDelete
  36. வாசித்த / பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி.

    அன்புள்ள இளவஞ்சி,

    சர்ச்சைகளை தவிர்க்க விரும்புகிற காரணத்தினாலேயே நான் பொதுவாக பின்னூட்டங்களுக்கு பதிலளிப்பதில்லை. என்றாலும் உங்களின் சூடான வார்த்தைகளுக்குப் பின் என்னால் உணர முடிந்த தோழமை உணர்வு காரணமாகவே இந்த பின்னூட்டம். அவ்வாறே இதையும் நீங்கள் வாசிக்க விரும்புகிறேன். நீங்கள் முன் வைத்த குற்றச்சாட்டுகள் போன்றதை பல சமயங்களில் நான் எதிர்கொள்கிறேன் என்பதனால் இந்த விளக்கம்.

    //படத்துல முழுசும் ஒன்றாம படம் பாக்கறப்பவே எப்படி விமர்சனம் செய்யலாங்கற புத்தி இருக்கற வரைக்கும் இப்படித்தான் எழுதத்தோணும்னு நினைக்கறேன்.//

    1) 'படம் பார்க்கும் போதே எப்படி விமர்சிக்கலாம் என்று உள்ளூர சிந்திப்பதை' ஒரு குற்றச்சாட்டாக
    நீங்கள் முன் வைத்திருப்பதை ஏற்றுக் கொள்கிறேன். வலைப்பதிவு எழுதுவதிலிருந்து அப்படித்தான் ஆகிவிட்டது. மேலும் எழுதுபவர்கள் அனைவருமே எதிர்கொள்ளும் விஷயமிது. உதாரணமாக பத்திரிகையாளர்கள், 'என்ன மேட்டர் கிடைக்கும்?' என்கிற நோக்கில்தான் பெரும்பாலான விஷயங்களை அணுகுவர். ஆனால் இவ்வாறு சிந்திப்பது நான் படத்தில் ஆழ்வதை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை என்றே நம்புகிறேன். இல்லையென்றால் அதைப் பற்றி எழுதும் போது நமக்கே ஒரு தெளிவிருக்காது.

    //எதுய்யா ஒலகப்படம்? எதுக்கய்யா ஒலகப்பட அங்கீகாரம்?!//

    2) 'உலகத்தரம்' என்கிற வார்த்தையை நகைச்சுவையான விமர்சன தொனியில் நிறைய முறை கேட்டுவிட்டாலும், கமல் போன்றவர்கள் கூட அப்படியொரு சொல்லாடலை ஏற்க மறுத்தாலும் நான் என்னுடைய விளக்கத்தை அளிக்க விரும்புகிறேன். எந்தவொரு திரைப்படம் மொழி, கலாச்சாரம் போன்ற தடைகளைத் தாண்டி பொதுவான மனிதனின் அகவயமான நுண்ணுர்வுகளை மிகுந்த கலைநயத்துடன் சித்தரிக்கிறதோ, அதை உலகத்தரமுள்ள திரைப்படம் எனலாம். சட்டென்று நினைவுக்கு வரும் உதாரணம். children of heaven. இந்த நோக்கில் 'அங்காடித் தெரு' உலகத்தரமானது அல்ல என்று சொல்ல விரும்புகிறேன். ஏனெனில் வழக்கமான மசாலா சினிமாக்களிலிருந்து சற்று விலகி நின்றாலே 'தமிழில் ஓர் உலக சினிமா' என்று போஸ்டர் போட்டுக் கொள்வதிலிருந்தும், அப்படியான நோக்கிலேயே -இணையம் உள்பட- விமர்சனங்கள் எழுதப்படுவதிற காரணத்தினாலேயே இவ்வாறு சொல்லத் தோன்றியது.

    //பர்மாபஜார்ல 15 ரூவாய்க்கு வாங்கி பாத்தப்பறம்//

    3) பெரும்பாலான உலக திரைப்படங்களை நான் இணையத்திலிருந்து தரவிறக்கித்தான் பார்க்கிறேன். இதை எந்தவிதத்திலும் நான் நியாயப்படுத்த விரும்பவில்லையென்றாலும் சில நடைமுறை பிரச்சினைகளை பார்க்க வேண்டும். அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் பலமொழித் திரைப்படங்களின் விலை அதிகம். கீழ்நடுத்தர வர்க்கத்தினான எனக்கு கட்டுப்படியாகாது. சில அரிதான திரைப்படங்கள் காசு கொடுத்தாலும் கிடைக்காது. ஆனால் அவை இணையத்தில் கிடைக்கின்றன. சில இந்தித் திரைப்படங்களை அரங்கிற்கு சென்று பார்க்க விரும்பினாலும் மொழி தெரியாத காரணத்தினால் இயல்வதில்லை. ஆனால் அவையே ஆங்கில துணையெழுத்துக்களுடன் இணையத்தில் கிடைக்கின்றன. ஆனால் 'நல்ல தமிழ் சினிமா' என்று நான் கேள்விப்படுபவைகளை பெரும்பாலும் அரங்கிலேயே சென்று பார்க்க விரும்புகிறேன். அப்படி என் பதிவுகளில் நான் சிலாகித்து எழுதினவை அனைத்துமே அரங்கில் சென்று பார்த்தவைதான். எனவேதான் அதை ஒரு வேண்டுகோளாக என் பதிவில் குறிப்பிட்டேன். மசாலாத் திரைப்படங்கள் என்றால் எவ்வித குற்றவுணர்ச்சியுமில்லாமல் இணையத்திலேயே நல்ல பிரிண்ட் வந்தவுடன் பார்த்துவிடுவேன்.

    மேலும் எது தவறு, எது தவறில்லை என்பதற்கு அவரவர்களுக்கான வரையறைகளும் எல்லைகளும் இருக்கின்றன. இதில் மற்றவர்களின் உபதேசங்கள் பயனளிக்காது.

    //IMDB ல கதையையும் படிச்சுட்டு//

    4) இதைப் பற்றி முன்பே ஒரு பதிவாக எழுதியிருக்கிறேன். விருப்பமிருந்தால் வாசியுங்கள்.
    http://pitchaipathiram.blogspot.com/2010/03/blog-post_30.html


    //மசாலா படங்களைப்பத்தி ஒரு திட்டு பிட்டைப்போட்டு//

    (தொடர்ச்சி அடுத்த பின்னூட்டத்தில்)

    ReplyDelete
  37. 5) சமயம் கிடைக்கும் போதெல்லாம் வணிகநோக்குத் திரைப்படங்களை குறை கூறுவதை திட்டமிட்டெல்லாம் செய்வதில்லை. இயல்பாக நேர்கிற விஷயம்தான். வெளிநாடுகளில் எந்தவொரு நல்ல விஷயத்தைப் பார்த்தாலும் அட! நம்ம ஊரிலும் இப்படியில்லையே, என்று தன்னிச்சையாக எழும் உணர்வைப் போன்றதுதான் இது. மேலும் உலக சினிமாக்களைப் பற்றி எழுதும் போது பார்ப்பவற்றில் நல்ல படைப்புகளை மாத்திரம்தான் எழுதுகிறேன். என்னைக் கவராத திரைப்படங்களை பற்றி எழுதி மற்றவர்களின் நேரத்தையும் சேர்த்து வீணடிக்க விரும்பவில்லை. அவற்றிலும் குப்பைகள் என நான் உணருபவை நிறைய உண்டு.

    ஆனால் நான் அதிகம் புழங்குகிற மொழி, பிரதேசம் என்று வரும் போது அவற்றின் ஒட்டு மொத்த சூழலை மற்ற நல்ல சூழலுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது தவிர்க்க முடியாதது. தமிழகத்தை விட சிறிய பிரதேசங்களிலிருந்து கூட தரமான திரைப்படங்கள் வரும் போது நம்முடையதில் அவ்வாறான ஒன்றைக் கூட காண முடியவில்லையே என்கிற ஆதங்கத்தின், கோபத்தின் வெளிப்பாடுதான் இது. இவ்வாறு வெளிப்படுவதை ஒரு குறையாகவோ வெகுஜனசினிமா பார்வையாளனின் சிந்தனைக்கு எதிரானது என்பதாகவோ என்னால் பார்க்க முடியவில்லை.

    மேலும் என்னுடைய ரசனையின் அடிப்படையில்தான் எந்தவொரு திரைப்படத்தையும் அணுக முடியும். எல்லோருக்கும் பொதுவானதொன்றை யோசித்து எழுதினால் அது தினத்தந்தி விமர்சனம் மாதிரித்தான் இருக்கும். இவ்வாறு சுதந்திரமாக எழுதுவது இணையத்தில்தான் சாத்தியம். மேலும் வெகுஜன சினிமா ரசிகர்கள் உலக சினிமாக்களைப் பற்றி கிண்டலிட்டு எழுதும் போது அதைப் பற்றி யாரும் குறை கூறுவதில்லை. இவ்வகையான வேறுபாடுகளும் முரண்களும் அவற்றின் மீதான விவாதங்களும் தொடர்ந்து கொண்டுதானிருக்கும். யாரும், யாரையும் கட்டுப்படுத்த முடியாது.

    //ஒலக சினிமா அடிஸ்கேலை எல்லாம் ஓரமா வச்சிட்டு//

    6) 'நீங்கள் மேதாவித்தனமாக எழுதுவது எங்களுக்கு எரிச்சலைத் தருகிறது' என்ற ரீதியிலான குற்றச்சாட்டையும் பல முறை எதிர்கொள்கிறேன். அவ்வாறான நண்பர்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது இதுதான். அப்படி எரிச்சல்தரும் என் வலைப்பதிவை படித்து விட்டு உங்களையும் துன்புறுத்திக் கொண்டு, ஏன் என்னையும் துன்புறுத்துகிறீர்கள். என் வலைப்பதிவை புறக்கணியுங்கள். நான் சிந்திக்கிறபடிதான் என்னால் எழுதஇயலும். இதை நான் தலைக்கனத்துடன் சொல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். மிகுந்த தோழமை உணர்ச்சியுடனே சொல்கிறேன். ஏனெனில் நான் பின்பற்றுவதையே உங்களுக்கும் பரிந்துரைக்க விரும்புகிறேன். எனக்கு எரிச்சலையூட்டும் தளங்களுக்கு நான் செல்வதில்லை. சென்றாலும் பின்னூட்டம் இடுவதில்லை. ஒருவரை இப்படி எழுது, அப்படி எழுதாதே' என்பதே ஒருவகையான வன்முறையாகத் தெரிகிறது.

    இந்த விளக்கங்கள் உங்களுக்குமானது மட்டுமல்ல. நன்றி.

    ReplyDelete
  38. தோழமையுள்ள சு.க!

    வழக்கம்போல நீங்கள் எழுதும் ஒலகப்பட விமர்சனம் மாதிரியே, நீங்கள் இப்போது இளவஞ்சிக்கு தந்திருக்கும் குற்ற வாக்குமூலமும் செம மொக்கையாய் இருக்கிறது. ஒன்றும் புரியவில்லை :-(

    ReplyDelete
  39. யுவகிருஷ்ணா has left a new comment on your post "அங்காடித் தெரு - நவீன அடிமைகளின் உலகம்":

    தோழமையுள்ள சு.க!

    வழக்கம்போல நீங்கள் எழுதும் ஒலகப்பட விமர்சனம் மாதிரியே, நீங்கள் இப்போது இளவஞ்சிக்கு தந்திருக்கும் குற்ற வாக்குமூலமும் செம மொக்கையாய் இருக்கிறது. ஒன்றும் புரியவில்லை :-(

    ReplyDelete
  40. விமர்சனத்தின் வழி உங்கள் பண்முகப்பட்ட படிப்பறிவு மிளிர்கிறது.கண்டிபாய் இந்த படத்தை திரையில் மட்டுமே பார்ப்பேன்.கடைசியில் கேட்ட நாம் என்ன செய்ய போகிறோம் என்ற கேள்வி மனதை குடைந்து கொண்டிருக்கிறது.

    ReplyDelete
  41. //யுவகிருஷ்ணா has left a new comment on your post "அங்காடித் தெரு - நவீன அடிமைகளின் உலகம்":

    தோழமையுள்ள சு.க!

    வழக்கம்போல நீங்கள் எழுதும் ஒலகப்பட விமர்சனம் மாதிரியே, நீங்கள் இப்போது இளவஞ்சிக்கு தந்திருக்கும் குற்ற வாக்குமூலமும் செம மொக்கையாய் இருக்கிறது. ஒன்றும் புரியவில்லை :-( //

    யுவகிருஷ்ணா,

    உங்கள் பின்னூட்டத்தை அனுமதித்தும் எதனாலே பிரசுரமாகவில்லை. மீண்டும் நானே அதை நகலெடுத்து இட்டிருக்கிறேன்.

    இதில் புரியாமல் போவதற்கு என்ன இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. உங்களை எரிச்சலூட்டும் / மொக்கை என்று உணரும் வலைப்பதிவுகளை தேடிப் போய் வாசிக்காதீர்கள் / பின்னூட்டமிடாதீர்கள் என்பதுதான் நான் சொல்ல வருவது.

    நீங்கள் எழுதுபவைகளில் எத்தனை பதிவுகளில் நான் பின்னூட்டமிட்டிருக்கிறேன் என்று பாருங்கள். புரிந்துவிடும். :)

    ReplyDelete
  42. இதற்கு மேலும் புரியவில்லை என்று எவராது சொல்வார்களாயின் விளக்கிக் கொண்டிருக்க எனக்கு நேரமும் பொறுமையும் இல்லை என்பதை உணர்வீகளாக!

    யுவகிருஷ்ணா:

    என் பதிவுகளின் மீது நான் மதிக்கும் பதிவர்களின்/எழுத்தாளர்களின் விமர்சனங்களைத்தான் கணக்கில் எடுத்துக் கொள்வேன். போகிற போக்கில் சீண்டிப் போகிறவர்கள், எதற்கோ ஆத்திரப்பட்டு எங்கேயோ கொட்டுபவர்கள்,உள்நோக்கத்துடன் விமர்சிப்பவர்கள்..ஆளப்பிறந்தவன், மோளப்பிறந்தவன் என்று வெட்டி பந்தா செய்பவர்கள்.. இவர்களையெல்லாம் ஒரு போலிப் புன்னகையுடன் கடந்து செல்ல வேண்டியதுதான்.

    ReplyDelete
  43. " எதற்கோ ஆத்திரப்பட்டு எங்கேயோ கொட்டுபவர்கள்,உள்நோக்கத்துடன் விமர்சிப்பவர்கள்..ஆளப்பிறந்தவன், மோளப்பிறந்தவன் என்று வெட்டி பந்தா செய்பவர்கள்.. இவர்களையெல்லாம் ஒரு போலிப் புன்னகையுடன் கடந்து செல்ல வேண்டியதுதான்."

    well said.

    ReplyDelete
  44. //யுவகிருஷ்ணா:

    என் பதிவுகளின் மீது நான் மதிக்கும் பதிவர்களின்/எழுத்தாளர்களின் விமர்சனங்களைத்தான் கணக்கில் எடுத்துக் கொள்வேன். போகிற போக்கில் சீண்டிப் போகிறவர்கள், எதற்கோ ஆத்திரப்பட்டு எங்கேயோ கொட்டுபவர்கள்,உள்நோக்கத்துடன் விமர்சிப்பவர்கள்..ஆளப்பிறந்தவன், மோளப்பிறந்தவன் என்று வெட்டி பந்தா செய்பவர்கள்.. இவர்களையெல்லாம் ஒரு போலிப் புன்னகையுடன் கடந்து செல்ல வேண்டியதுதான்.//

    ம்ஹூம். இந்த பதிலும் மொக்கையாக இருப்பதால் கோபத்தோடு இங்கிருந்து வெளிநடப்பு செய்கிறேன் :-)

    பிளாக்கர் ஏனோ இன்று கமெண்டு செக்‌ஷன்களில் குளறுபடி செய்கிறது. நீங்கள் ஜிமெயிலில் இருந்து என் கமெண்டை எடுத்து போட்டபிறகுதான் நான் போட்ட கமெண்டே ரிலீஸ் ஆகிறது. எனவே இருமுறை ஒரே கமெண்டை நான் போட்டதாக நினைத்து நீங்கள் டென்ஷன் ஆகவேண்டாம்!

    மற்றபடி உங்கள் மீது ஆத்திரப்படுவதற்கோ, உள்நோக்கத்தோடு விமர்சிப்பதற்கோ நீங்கள் மைக்கேல் ஜாக்ஸனோ, ஏ.ஆர்.ரஹ்மானோ, இளையராஜாவோ, ஜெயமோகனோ, சுஜாதாவோ, இன்னும் ஏகப்பட்ட 'வோ'வோ அல்ல என்பதை தன்னடக்கத்தோடு தெரிவித்துக் கொல்கிறேன்! :-)

    ReplyDelete
  45. யுவகிருஷ்ணா,

    உங்களின் அறிவுப்பூர்வமான பதிலுக்கு நன்றி.


    நண்பர்களுக்கு:

    இது போன்ற சில்லறை விவாதங்களில் ஈடுபட எனக்கு ஆர்வமோ நேரமோ பொறுமையோ இல்லையென்பதால் இனி எந்தவிதமான பின்னூட்டமும் இந்த இடுகையில் அனுமதிக்கப்படமாட்டாது. பின்னூட்டப் பெட்டியை நிரந்தரமாக மூடிவிடுவது சிறந்ததாக இருக்குமோ என்று கூட யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

    விருப்பமுள்ளவர்கள் மாத்திரம் என் பதிவை வாசியுங்கள். ஏதேனும் சொல்ல வேண்டியிருந்தால் மின்னஞ்சலில் எழுதுங்கள். புரிதலுக்கு நன்றி.

    ReplyDelete
  46. .

    //பின்னூட்டப் பெட்டியை நிரந்தரமாக மூடிவிடுவது சிறந்ததாக இருக்குமோ என்று கூட யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

    விருப்பமுள்ளவர்கள் மாத்திரம் என் பதிவை வாசியுங்கள். //

    சுரேஷ்,
    உங்களின் பதிவுகளைப் படிக்கும்போது இலக்கியம் உலகப்படம் உலகத்தரம் ....என்று நீங்கள் சொல்லும் எல்லா விசயங்களிலும் எனக்கு டன் கணக்கில் கேள்விகளும் விமர்சனமும் கோவமும் ஆத்திரமும் இயலாமையும் வருத்தமும்.... இன்னபிற எல்லா உண‌ர்வுகளும் வந்துபோகும். :-)))))

    சிலசமயம் அதை பின்னூட்டமாகச் சொல்லுவேன் பலமுறை கடந்து செல்வேன்.

    உங்களின் பதிவு வழியாக சில நல்ல படங்களுக்கான அறிமுகம் எனக்கு கிடைத்துள்ளது. அதுபோல, சொல்லாவிட்டாலும் பலருக்கும் கிடைத்து இருக்கலாம்.

    *******
    உங்களுக்கு உங்களுக்கான கருத்து இருப்பதும் எனக்கு எனக்கான கருத்து இருப்பதும் சுயம்.

    நீங்கள் ஒன்றைச் சொல்லும்போது எதிர் துருவத்தில் இருந்து பார்ப்பவர்கள் அவர்களின் பார்வையின் ஊடாகவே பார்க்கமுடியும் . அவர்களின் உணர்வை வைக்க அனுமதியுங்கள்

    பிடிக்கவில்லையா ? ஏன் படிக்கிறீர்கள் ? என்று சொல்வது உங்களின் உரிமை என்றாலும் அது ஏதோ "எங்க ஏரியா உள்ள வராதே" என்ற "வொலக‌
    டமிழ் வளப்பதிவு குளும தலைகள்"
    சொல்வது போல உள்ளது.



    எதிர் துருவமாகவே இருந்தாலும் உறவாடவே விரும்புகிறேன்.

    .

    ReplyDelete
  47. //எதிர் துருவமாகவே இருந்தாலும் உறவாடவே விரும்புகிறேன்.//

    நிச்சயமாக. என்னுடைய நிலைப்பாடும் இதுவே.

    ஆனால் அதுவொரு அடிப்படை நாகரிகத்துடனும் எதிர்நிலையிலிருப்பவரையும் மதித்து நடைபெறும் போது அவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்வதற்கோ அல்லது தான் சரி நம்பும் கருத்துக்களுக்காக வாதிடுவதற்கோ ஏதுவாக இருக்கும். அதை விடுத்து தன்னை அதிமேதாவியாக பாவித்துக் கொண்டு மற்றவர்களைத் தேடிப் போய் சீண்டிக் கொண்டேயிருக்கிற அற்பங்களின் மீது எழுந்த எரிச்சலில்தான் பின்னூட்டப் பெட்டியை மூடலாமா என்றும் பிடிக்கவில்லையென்றால் படிக்காதீர்கள் என்றும் சொல்லத் தோன்றியது. ஆனால் சில நண்பர்களின் அன்பான தனிமடல்கள் அந்த எண்ணத்தை மாற்றச் செய்திருக்கின்றன.

    மீண்டும் மீண்டும் இதைத்தான் சொல்ல விரும்புகிறேன். யாரையும் எரிச்சலூட்டவோ தாழ்வாக உணர வைக்கவோ திட்டமிட்டு எழுதுவதில்லை. என்னுடைய எழுத்தின் இயல்பே அவ்வாறுதான் அமைந்து விட்டது. இதையெல்லாம் தவிர்க்கும் பிரக்ஞையோடு எழுதினால் அது செயற்கையாகத்தான் இருக்கும். அதற்கு நான் எழுதாமலே இருந்துவிடலாம். நானும் எரிச்சலான உணரும் மற்றவர்களின் பதிவுகளை வாசிக்காமலிருப்பதோ பின்னூட்டம் போடாமலிருப்பதையோதான் செய்கிறேன். நன்றாக எழுதப்பட்ட பதிவுகளை பாராட்டுவதோடு நின்று கொள்கிறேன்.

    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி கல்வெட்டு.

    ReplyDelete
  48. ஒரு நல்ல திரைப்படம் மற்றும் ஒரு நல்ல ஒரு விமர்சனம் வந்துள்ள இந்த பதிவை நான் அழுக்காக்க விரும்ப வில்லை. இருந்தாலும் உள்ளே எழுகின்ற கேள்வி.

    இந்த படத்திற்கு சாரு நிவேதிதாவின் விமர்சனம் எப்படி இருக்கும் (whats yr guess)

    ReplyDelete
  49. ராம்ஜி,

    இவ்வளவு அப்பாவியா நீங்க?

    அதுதான் இரண்டு விமர்சனங்கள் வந்தாச்சே?

    ReplyDelete
  50. "இதை வாசிக்கும் நண்பர்களிடம் நான் வைக்கும் வேண்டுகோள் இதுதான். இந்த மாதிரியான விதிவிலக்குத் திரைப்படங்களையாவது தியேட்டருக்கு சென்று பாருங்கள்". கண்டிப்பாக சுரேஷ்.

    ReplyDelete
  51. முணுக்குன்னா கோச்சிக்கிட்டு கெளம்படறீங்க. அதெல்லாம் கூடாது. இணையம்னா அசராம அடிக்கணும் அடிவர்ங்கணும். அவங்கள பாத்தாவது கத்துக்குங்க. இல்லைன்னா டவுசர கழட்டிடுவாங்கப்பூ. பாத்து சூதானமாக நடந்துக்குங்க. உங்க நன்மைக்குத்தான் சொல்றேன்.

    ReplyDelete
  52. நண்பர் இளவஞ்சியின் தனிமடல் அவர் விரும்பிபடியே பின்னூட்டமாக இங்கு இடப்படுகிறது. நன்றி இளவஞ்சி.

    (பின்னூட்டம் இடுவதில் பிளாக்கர் பிரச்சினை செய்கிறது. எனவே இரண்டு பகுதிகளாக)

    பிடிச்சது... பிடிக்கலை... உங்க கருத்தினை ஏற்கிறேன்... அல்லது அது தவறு என்ற வகையில் இல்லாமால் நானும் வலைப்பதிவராக இருந்துகொண்டு “இப்படியும் எழுதுங்களேன்” என வேண்டிகோள் வைப்பதுகூட உங்கள் சுயத்தின்மீதான எனது ஆதிக்கம் மற்றும் வன்முறைதான் என உணர்கிறேன். உலகப்படம் பற்றிய வரிகளைப் படித்தவுடன் எழுந்த உடனடி எரிச்சலின் காரணமாக வார்த்தைகளை இறக்கிவிட்டேன். தவறுக்கு வருந்துகிறேன் :(

    என் பின்னூட்டத்தின் கோவமான தொணி ஆரம்பத்தில் இருந்து உங்கள் பதிவுகளைப்படிப்பவன் என்ற உரிமையில் வந்ததுதான் என்பதால் நான் வித்தியாசமாக உணரவில்லை. அந்த உரிமையை அனுமதித்தமைக்கு நன்றி.

    மற்ற கேள்விகள் மீதான உங்கள் பதில்கள் அனைத்தும் உங்கள் பதிவுகள் வாயிலாக நான் முன்பே உணர்ந்தவைதான். ஆனால், இன்னமும் வணிகப்படங்கள் மீதான உங்கள் கருத்துக்களை உங்கள் ஆதங்கமாக மட்டுமே சொல்கிறீர்கள் என் நான் ஏற்கவில்லை. ஒரு தந்தையின் தவிப்பையோ ஒரு கண் தெரியாத குழந்தையின் பிரச்சனைகளையோ நீங்கள் எழுதியதன் வழியாகவே சொல்லவந்ததை அப்படியே உணர்ந்துகொள்ள முடிந்த என்னால் “விஜய் போன்ற லூசுகள்” என்ற சொற்களெல்லாம் நம்மிடமிருந்து “நல்ல” படம் வரவில்லை என்ற ஆதங்கமாக இல்லாமல், நீங்கள் பார்த்த உணர்ந்த தெளிந்த உலகப்படங்களை தூக்கிநிறுத்த, உறுதிப்படுத்த, அழுத்தம் கொடுக்க மற்றொன்றை தேவையில்லாமல் ஒப்புநோக்குகிறீர்கள் என்றே எனக்கு உடனடியாக தோன்றுவது. சந்தனம் மணக்கும் எனச்சொன்னாலே புரிகிற அளவில்தான் என்போன்ற வாசகர்கள் பலர் இருக்கக்கூடும். கூடவே உங்களவில் மலம் என நினைப்பது நாறுகிறது என்று சொல்லித்தான் சந்தனத்தின் அருமையை சொல்லவேண்டுமா என்பதே என்போன்றவர்களின் எரிச்சலாக இருக்கக்கூடும்.

    பிடிக்கவில்லையா ? ஏன் படிக்கிறீர்கள் ? - ஏன் படிக்கக்கூடாது? சாருவையெல்லாம் அப்பறம் எப்படி தவறாமல் படிக்கிறோம்? ஒரு நல்ல பதிவினை எந்தவித எதிர்வினைகளுமற்று அது தந்த திருப்தியுடன் மட்டுமே கடந்துபோக இயலும். பிடிக்கவே பிடிக்காத ஒரு பதிவினையும் அவ்வாறே. ஆனால் விருப்போ வெறுப்போ படித்தவுடன் எழுதனவருக்கு ஏதேனும் ஒன்றை சொல்ல விரும்பும்போது மட்டுமே பின்னூட்டம் போடுகிறேன்... றோம்... ”மீத பஸ்ட்டு” கூட உம்பதிவை நாந்தான் மொதல்ல படிச்சேங்கற ஒரு சின்ன சந்தோஷ நட்பின் வெளிப்பாடுதான். ”பதிவாயா இது? மொக்கை!” என்பதுகூட நம் எழுத்தின் மீதான படிப்பவரிம் சரியான/தவறானதான எதிர்வினையாக இருக்கக்கூடும். ஆனா என் எண்ணங்களோடு உங்களுக்கு பிடித்தம் இருந்தால் மட்டுமே படிக்கலாம் என்றால் நாங்களெல்லாம் நீங்கள் ஆறாம் வகுப்பு கணக்கு புஸ்தகம் எழுதினால் மட்டுமே படிக்க முடியும். அதுபோக படிச்சவுடந்தானே பிடிக்குதா இல்லையான்னு தெரியுது. உங்களையே பிடிக்கவில்லை என்றால் உங்கள் பதிவுகளை மொத்தமாக தவிர்க்கலாம். உங்கள் கருத்துக்கள் மட்டுமே பிடிக்கவில்லையெனில் உங்களை தொடர்து படித்துத்தான் அதை உறுதிப்படித்த வேண்டியுள்ளது :)

    (தொடர்ச்சி அடுத்த பின்னூட்டத்தில்)

    ReplyDelete
  53. எனினும்,

    வலையுலகில் ”மாற்றுக் கருத்துக்கள்” மீதான கடுமையான பின்னூட்ட விவாதங்கள் எல்லாம் பலர் மாற்றுப்பார்வைகளை அறியத்தரும் பலமும் பயனும் கொண்டது. ஆனால் ”நான் இப்படி.. இப்படி இல்லை” என நம்மை நிறுவ பக்கம்பக்கமாக எழுதப்படும் விளக்கங்கள் எல்லாம் நேரவிரயங்களாகவே போவதும் அதுவே ஒரு நேரில் பார்க்கையில் 5 நிமிடத்தில் ஒரு சிங்கிள் டீயில் தெளியப்படுவதுமான நிகழ்வுகளையெல்லாம் நான் அனுபவித்திருப்பதாலும் நம்புவதாலும்... நீங்கள் விரும்பும்படி நேரவிரயத்தை தவிர்க்கவாவது நீங்கள் நீங்களாகவே...உங்கள் எழுத்து உங்கள் இயல்பாகாவே... எங்கள் எதிர்வினை எங்களுடயதாகவே... அதது அப்படியப்படியே... ததாஸ்து :)


    என்ன இவன் வழக்கம்போலவே லூசுமாதிரி கேள்வி போட்டிருக்காருன்னு மக்கா நினைச்சிருப்பாய்ங்க.. ஆகவே, என்னுடைய இந்த வெளக்கத்தை பின்னூட்டமாகவே வெளியிட்டால் மகிழ்வேன். நன்றி.


    // எதிர் துருவமாகவே இருந்தாலும் உறவாடவே விரும்புகிறேன். // எளிமையாக அதேசமயம் அழுத்தமாக மீண்டும் உங்கள் கருத்து. நன்றி கல்வெட்டு :)


    // இந்த படத்திற்கு சாரு நிவேதிதாவின் விமர்சனம் எப்படி இருக்கும் (whats yr guess) //

    தற்போதைய மீடியா வலை மக்களின் பொதுப்புத்தி நல்ல படம் என்பதாகவே இருப்பதால், வசந்தபாலன் வெலிலைப்போலவே இந்த படத்தையும் கேவலமாக உழைக்கும் மக்களின் உணர்வுகளை இப்படி அருவருப்பாக டீல் செஞ்சிருக்காருன்னு எழுதுவாருன்னு என்னுடைய அனுமானம். பார்க்கலாம் :)

    அன்புடன்,

    இளவஞ்சி...

    ReplyDelete
  54. நல்ல பதிவு

    ReplyDelete
  55. சுரேஷ் கண்ணன், யாரையாவது நோண்டிக் கொண்டேயிருக்கும் சில சைக்கோக்கள் இணனயத்தில் உலவுகின்றன. அவர்களின் குருநாதரை பாருங்கள். இன்னொரு எழுத்தாளரை சதா நோண்டிக் கொண்டேயிருப்பார். அவரின் அல்லக்கைகளும் அப்படித்தானிருப்பார்கள். தங்கள் காரியம் ஆக எந்த லெவலுக்கும் எறங்குவார்கள். எதையொ உளறிக் கொட்டி காக்காய பிடித்து நாலு புத்தகத்தை எழுதி விட்டால் தமிழையே தாம்தான் தாங்குவதாய் நினைப்பு. அவர்களின் விமர்சனங்களை குப்பையில் போடுங்கள். உங்களின் திரைப்பட அறிமுகங்கள் உபயோகமாக உள்ளன. அதைத் தொடருங்கள். எது மொக்கையானது என்பதை நேரம் தீர்மானிக்கும். அல்லக்கைகள் அல்ல.

    ReplyDelete
  56. Mr.Vasantha Balan don't have to take movie about Reliance or TVS because majority of the people work in those companies have/had Choice (people from City). Whereas the people shown in this movie doesn't have choice and kind of trapped.

    Good Work MR. Vasantha Balan.

    ReplyDelete
  57. பிராமண மாமியின் பாத்திரம் செயற்கை குரூரத்துடன் சித்தரிக்கப்பட்டிருந்து போல் பட்டது.

    ----------

    That's the rule no.1 for Kollywood. Villifying Brahmins for no reason.

    ReplyDelete
  58. இந்த சாருவை படித்து அல்லது அதுபோல நடித்து ஊறிய பன்றிகள் பற்றி நீங்க கவலை படாதீர்கள் சுரேஷ்கண்ணன்.விமர்சனம் அருமை.
    உங்கள் எழுத்து ந்டை மிகவும் அருமை

    ReplyDelete
  59. இந்த சாருவை படித்து அல்லது அதுபோல நடித்து ஊறிய பன்றிகள் பற்றி நீங்க கவலை படாதீர்கள் சுரேஷ்கண்ணன்.விமர்சனம் அருமை.
    உங்கள் எழுத்து ந்டை மிகவும் அருமை

    ReplyDelete
  60. சுரேஷ் கண்ணன் சார்,
    நானும் இந்த படத்தை தெலுங்கு டப்பிங்கில் பார்த்தேன்,ரொம்ப நல்லா இருந்தது,அந்த பிராமண மாமி நினைத்திருந்தால் அந்த பெண்ணுக்கு 500 ரூபாய் கொடுத்திருக்கலாமே?
    அவர்களுக்கு மனமே வராது.
    அந்த மாமி மட்டும் அஞ்சலியையும் தன் வீட்டில் வேலைக்கு வைத்திருந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும்.அவளௌக்கு தங்க இடமும் கிடைத்திருக்கும்.காலும் போயிருக்காது.
    வணக்கங்களுடன்
    சித்தூர்.முருகேசன்

    ReplyDelete
  61. அங்காடித்தெரு - படமும் அருமை. உங்களோட விமரிசனங்களும் ரசிக்கும்படியா இருந்தது.நன்றி.
    கேயேபி.

    ReplyDelete
  62. அங்காடி தெரு படத்தில் எந்த காட்சியில் குறை என்று யோசித்தேன் , ஓன்று புலப்படவில்லை , ஏனன்றால் நானும் பார்த்திருக்கிறேன் நான் வேலை செய்த இடத்திலேயே.... கனி தங்கை படுத்திருக்கும் நாய்கூடு , அந்த வீட்டு மாமி , கடையில் அடி வாங்கும் காட்சிகள், கிராமத்து காதல் மற்றும் மரண காட்சி, வேலை செய்யும் பசங்க தங்கும் இடம்...........
    நன்றி சொல்கிறேன் முதலாளிகளின் மறுபக்கத்தை காட்டிய இயக்குனருக்கும், அழகான விமர்சனம் எழுதிய உங்களுக்கும் .

    ReplyDelete
  63. In Trichy, I know a store called Sarathas where you can find lot of (or) only Srilankan tamilians works as a sales person. They all work for very low salary and all the charecterestics of stores in Ranganathan street matches with this store as well.

    My point is all these owners should learn what is real social enterprenural skills are and be a good philanthropist.
    This probelm can not be resolved only by bringing the owners of these stores under law. Rather doing that, teach them how they can help the poor people who come and work for him.
    I have seen companies in US (like Starbucks) help the low wage workers by paying their education fees, retirement etc.,

    ReplyDelete
  64. \\ சாப்ட்வேர் கம்பெனியின் டை கட்டின அடிமைகள் \\

    இந்த வரி உங்களின் கையாலாகத பொறாமையின் உச்சத்தை காட்டுகிறது.
    அவர்கள் மேல் அப்படியென்ன வெறுப்பு? கணினி பணி செய்து நன்கு சம்பாதிப்பதாலா?
    இதை பாராட்டுவோரும் கண்டிப்பாக அப்படிப்பட்ட மனிதர்கள்தான் என்பதை மறுக்க இயலாது.

    ReplyDelete
  65. UNMAIL THAMIL CINEMA ULLAGATHIRKU VELLICHEM POTU KATTA VENDIYA PADAM

    ReplyDelete
  66. REALLY NICE ONE IT MUST BE LESSON FOR THE CAPITALIST
    NEEDED THIS KIND OF FILM FOR TAMIL NADU GOVT

    ReplyDelete
  67. இந்த கமெண்ட் நான் போட்டதல்ல. நான் படம் பார்த்தே பல வருஷம் ஆகுது. யாரோ சில்மிஷம் பண்ணியிருக்காய்ங்க‌

    ReplyDelete
  68. Dear Suresh Kannan

    You by giving a review on Angadi theru.... Explained the realities in Life. We all part of the game
    Thanks
    Suresh

    ReplyDelete
  69. /* இப்படியொரு சமூகப் பிரச்சினையை இயக்குநர் மையமாக சொல்ல நினைத்தாலும் தமிழ் சினிமாவின் புளித்துப் போன கச்சாப் பொருளான ‘காதல்’ என்கிற சமாச்சாரத்தை போர்த்தித்தான் இதை சொல்ல வேண்டியிருக்கிறது என்பதை 'துரதிர்ஷ்டம்' என்றுதான் சொல்ல வேண்டும். */

    இந்த ஒரு விசயத்துக்காகத்தான் இப்படம் என்னை விமர்சனம் எழுதத் தூண்டவில்லை. அப்புறம் சில செயற்கையான சோகத் திணிப்புகள். ‘சடங்கெல்லாம் வேணாக்கா’ என தங்கையே தெளிவாக சொல்லும்போது அந்த சூழ் நிலையிலும் அக்கா ஆழ்ந்த சோகத்தில் மூழ்குவதெல்லாம் தியேட்டரில் கண்ணீர்விட விரும்பும் மக்களுக்காகவே... உங்கள் விமர்சனம் என் கருத்துகளோடு ஒத்துப்போவதால்... நண்பர்களுக்கு சுட்டி கொடுக்கிறேன் :-)

    அப்புறம்... என்னதான் நாம் நல்ல எண்ணத்தில் சொன்னாலும் ஆதங்கம் இருந்தாலும் பலருக்கும் உண்மை கசப்பதால் மசாலா படங்களின் மேல் ஈடுபாடு இருப்பதால் தொடர்ந்து உங்கள் பதிவில் எழுதுவதை தவிர்க்கலாம்... ஆனால் புதிய வாசகர்களுக்கு சொல்லவேண்டிய கடமையும் உள்ளது... ம்ம்... என்ன செய்யா..

    ReplyDelete
  70. அப்புறம், இந்த படத்தை பார்த்து ஜீரணித்த பிறகு எனக்கு தோன்றிய ஹைக்கூ...

    சோத்துப்பிரச்சனை தீர்ந்த
    நொடியில் துவங்கிவிடுகிறது
    காதல் பிரச்சனை
    ஜென்மங்களுக்கு!

    ReplyDelete
  71. இரண்டு விஷயங்கள் சொல்ல ஆசை.

    1. விலை மலிவு என்பதால் இந்தக் கடைகளில் குவியும் நம்மீது குற்றத்தின் எந்தப் பங்குமே கிடையாதா? எந்த வியாபாரியும் தன் லாபத்தில் இருந்து விலைக்குறைப்பு செய்வதில்லை. இப்படி சுரண்டிதான் அதில் நமக்கும் ஒரு பங்களிக்கிறார்.

    2. அங்காடித் தெரு மக்களின் இப்படத்தின் மீதான விமர்சனம் என்னவாக இருக்கும்?

    ReplyDelete
  72. இதெல்லாம் ஒரு படம்னு விமர்சனம் எழுதியிருக்கீங்க.. மாரைப் புடிச்சுக் கசக்கினான்..குசு விடுறாள்னு ஆபாசமான வசனங்களத்தான் எல்லோரும் பேசறா. குடும்பத்தோட இருந்து பார்க்க முடியற மாதிரியா இருக்கு? சென்சார்ல இருந்து எப்படியோ தப்பிச்சிருக்கு. இப்படி விமர்சனம் எழுதி நீங்க இன்னும் மக்களை தியேட்டருக்கு அனுப்பாதீங்க

    ReplyDelete
  73. "இந்தப் படத்த என்னால முழுசாப் பார்க்க முடியல..பாதியிலேயே போரடிக்குது..எதுக்காக மக்கள் இதைக் கொண்டாடுறாங்கன்னு தெரியல..நம்ம தமிழ் இயக்குனர்கள் என்னைப் போல தமிழ்ப் பெண்களுக்கு இந்த மாதிரி கேரக்டர்களைத் தர்றதில்ல..எங்கேயோ போய் கிராமங்கள்ல இருந்து ஹீரோயின்களப் பிடிச்சுட்டு வந்துர்றாங்க.. இந்தப் படத்தை நான் பண்ணியிருந்தா கனி கேரக்டரை இன்னும் சிறப்பா கொண்டு வந்திருப்பேன்.."

    - நடிகை த்ரிஷா அங்காடித் தெரு திரைப்படம் குறித்து தினகரனில்.

    ReplyDelete
  74. /* - நடிகை த்ரிஷா அங்காடித் தெரு திரைப்படம் குறித்து தினகரனில். */

    என்ன கொடுமை சார் இது...! :-)

    ReplyDelete
  75. AnonymousMay 01, 2010

    சாணக்கியன், த்ரிஷா சொன்னதில் என்ன தவறு? ஒரு தமிழ் இயக்குனர், ஒரு தமிழ் நடிகைக்குத்தான் வாய்ப்பு கொடுக்க வேண்டும். இப்படி கிராமங்களிலிருந்து கொண்டு வந்து நடிக்க வைப்பதால், அவர்கள் ஒரு படத்தோடு வீட்டுக்கு ஓடிவிடுவார்கள்.

    ReplyDelete
  76. Anonymous, முதலில் உங்கள் அடையாளத்தோடு வாருங்கள், நிறைய விவாதிக்கலாம்.

    இருந்தாலும் உங்களுக்கு பதில் சொல்கிறேன். த்ரிஷா ஏன் தெலுங்கில் நடிக்கிறார்? ஒரு தெலுங்குப் பெண் அங்கு கிடைக்கவில்லையா? த்ரிஷா ஒரு படத்தோடு தெலுங்கிலிருந்து ஓடி வந்துவிட்டாரா? இந்த மாதிரி குணச்சித்திர வேடங்களில் நடிப்பதற்கு எத்தனை ஹீரோயின்கள் தயாராக இருக்கிறார்கள்? வடக்கிலிருந்து சிம்ரன், ஜோதிகா, தமன்னா எல்லாம் வந்தால் உங்களுக்கு இனிக்கிறது... அண்டை மாநிலத்தில் இருந்து கருப்பாக இயல்பாக நடிக்கும் ஹீரோயின் வந்தால் பிடிக்கவில்லை... தமிழ் படங்களில் 10% கூட தமிழ் கதா நாயகிகள் கிடையாது... அப்புறம் ஏன் அஞ்சலியை பற்றி மட்டும் பேசுகிறீர்கள்... அப்படம் வெற்றியடைந்ததில் உங்களுக்கு ஏனோ அவ்வளவு எரிச்சல்...
    த்ரிஷா அந்தப்படத்தில் நடித்திருந்தால் பொருத்தமாக இருக்குமா? எவ்வளவு சம்பளம் கேட்டிருப்பார்? படத்தின் பட்ஜெட்டுக்கு தாங்குமா? அந்த இளைஞருக்கு ஜோடியாக நடிக்க சம்மதித்திருப்பாரா? அவர் ஏதோ கேனத்தனமாக சொல்ல... நீங்களும் ஏதோ கண்மூடித்தனமாக இங்கே வந்து சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்...

    வாழ்த்துகள்!

    ReplyDelete
  77. AnonymousMay 09, 2010

    //அப்படம் வெற்றியடைந்ததில் உங்களுக்கு ஏனோ அவ்வளவு எரிச்சல்... //

    சாணக்கியன், முதலில் இந்த மாதிரி படங்களை வெற்றியடையச் செய்வதன் மூலம் என்ன சாதிக்க முடியும்?

    ஹிந்தி, தெலுங்குப் படங்களில் எவ்வளவு அழகாக நடிகர்களை, ஊரைக் காட்டுகிறார்கள். ஆனால் இது போன்ற படங்களை வெளிநாட்டவர்களுக்கு இது என்னுடைய நாட்டுப் படம் என்று போட்டுக் காட்டமுடியுமா? காட்சிக்குக் காட்சி அழகாகவா இருக்கிறது? வியர்வை வழியும் முகங்களும், சாக்கடை நாற்றமெடுக்கும் தெருக்களும்..சே.. தியேட்டருக்குப் போய்விட்டு வந்தாலே குமட்டுகிறது.

    நான் இந்தியாவை விட்டு வந்து 21 வருஷமாறது. இது வரை அஜித், விஜய், த்ரிஷா, சிம்பு படங்களைத் தவிர வேறு படங்களை இது எனது நாட்டுப்படம் என்று சொல்லி இங்குள்ளவர்களுக்குக் காட்டமுடியவில்லை. ஆனால் ஹிந்திப் படம், தெலுங்குப் படங்களைக் காட்டலாம். காட்சிக்குக் காட்சி அழகாக இருக்கும்.

    அங்காடித் தெரு, பூ, நான் கடவுள் மாதிரியான படங்களை எடுத்து சாதிக்கப் போறது என்ன?

    ஒரு இடத்துக்கு வேலைக்குப் போறதுன்னா கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும். கீழே உள்ளவாதான் அனுசரிச்சுப் போக வேண்டும். ஏன் அந்தளவு கொடுமைப்படுத்துகிறார்களெனில் தொழிற்சங்கம் அமைத்து போராட வேண்டியது தானே? ஜூனியர் விகடன் மாதிரியான ஒரு பத்திரிக்கைக்கு ஒரு போன் எடுத்துச் சொல்லிவிட்டால் கூட வந்து விசாரித்து பத்திரிக்கையில் போட்டு நியாயம் வழங்கியிருப்பார்களே.

    சும்மா நாலு அடி வாங்குறத காட்டுறதுக்காக படம் எடுத்து இந்தியாவக் கேவலப்படுத்துறா.

    அதுல ஒரு கதாபாத்திரம்.. காதலன் ஏதோ சொன்னதற்கு உடனே தற்கொலை செய்யும். அவ்ளோ ரோஷம் இருக்குறவ எதுக்கு இந்த வேலைக்கு வர்றா? வீட்லயே இருந்துக்க வேண்டியதுதானே? இதுல மாரைப் பிடிக்கிறது அது இதுன்னு ஆபாசமான வசனங்கள் வேற..குடும்பத்தோட உட்கார்ந்து பார்க்க முடியுறதா? இயக்குனர் இந்த நடிகர்களை எங்கே இருந்து பிடிச்சாரோ? எல்லோருமே ஓவர் ஆக்டிங்.

    சாணக்கியன், த்ரிஷா விஷயத்துக்கு வருவோம். த்ரிஷா ஒரு கோடி சம்பளம் வாங்கறா. சிறந்த நடிகைக்கான விருது நான்கு தடவை வாங்கியிருக்கிறார். அவர் அவ்வளவு சம்பளம் கேட்டும் அவரை ஒப்பந்தம் செய்ய ஹிந்தி, தெலுங்கு, தமிழ் முண்ணனி இயக்குனர்கள் காத்திருக்கிறார்கள்.

    ஆனால் 'நான் கடவுள்' பூஜா, 'பூ' பார்வதி ஆகியோரின் கதியென்ன? அவர்கள் இப்பொழுது எங்கே? ஏன் வாய்ப்புக்களில்லை? அவர்களுக்கு சிறந்த நடிகைக்கான விருதுகள் கூட கிடைக்கவில்லை. இந்த லக்ஷ்ணத்தில் இதுபோன்ற படங்கள் தொடர்ந்து வந்தால் இது போன்ற படங்களில் நடித்தவர்கள் வீட்டுக்கு ஓட வேண்டியதுதான்.

    முதலில் போய் ஆனந்தவிகடனில் வந்திருக்கும் அங்காடித் தெரு ஹீரோ, ஹீரோயினின் பேட்டிகளைப் பாருங்கள். அசட்டுத்தனமாக தங்கள் ஏழ்மையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஒரு பத்திரிக்கைக்கு எப்படிப் பேட்டி கொடுக்கவேண்டுமென்று கூடவா தெரியாது இவாளுக்கு?

    இயக்குனர்களே அழகான படங்கள் எடுங்கள். இது எனது நாட்டுப்படம்னு எல்லா நாட்டவர்களுக்கும் காட்டக் கூடிய மாதிரி.

    ReplyDelete
  78. அனானி, முதலில் நீண்ட பதிலுக்கு நன்றி. முதலில் நீங்கள் ஒரு சினிமாக்காரர் ஏதோ உள்குத்தோடு எழுதுகிறீர்கள் என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் எழுதுவதை நீங்கள் முழுமையாக நம்பிக்கொண்டிருக்கிறீர்கள் எனும்போது பரிதாபமாக உள்ளது. ஏனெனில் இலக்கியத்தின் கலைவடிவத்தின் தேவை என்ன? கடமை என்ன? என்பதில் l.k.g. பாடத்தில் இருக்கிறீர்கள்!. உங்களுக்கு இப்போதைக்கு புரியவைக்க முடியாது என்னால்...சிலவற்றை சொல்கிறேன்..

    நீங்கள் உங்கள் சொந்த நாட்டுப்படம் என்று சொல்லிக்கொள்வதற்காக ஏன் வசந்த பாலன் படம் எடுக்கவேண்டும்? எங்களைப் போன்றவர்களுக்கு எடுத்துவிட்டுப் போகட்டுமே? மகிழ்ச்சி நுகர்வு மட்டுமே கலையின் பணி அல்ல...அப்புறம் எந்நாட்டுபடம் என்று சொல்லமுடியவில்லை என்பது உங்களது மனப்பிரச்சனையே அன்றி வெளி நாட்டவர்கள் அதை பார்க்கமாட்டார்கள் என்பது உண்மையில்லை. பொருத்திருந்து பாருங்கள்... உலக திரைப்பட விழாக்களில் அங்காடித்தெரு இடம்பெறும். யதார்த்தம் என்பது அழகும் அழுக்கும் சேர்ந்துதான் உள்ளது... அழகை மட்டும்காட்ட வேண்டுமென்பது போலித்தனத்தின் வெளிப்பாடகத்தான் இருக்கும்...

    அப்புறம் உலகத்திரைப்படங்களின் 100 முதல்தர படங்களின் பட்டியல் இணையத்தில் கிடைக்கிறதாம். அவற்றைப் பாருங்கள். அவை எல்லாம் அழகானகாட்சிகளை மட்டுமே கொண்ட படங்களாக இருக்காது. ஆப்பிரிக்காவிலும்,தென் அமெரிக்காவிலும் வளைகுடா நாடுகளிலும் நடக்கும் கொடுமைகளும் அழுக்குப்புறங்களும் சேர்ந்தே அப்படங்களில் இடம் பெற்றிருக்கின்றன... ஹிட்லரின் கொலைகளைப் பற்றி 10 படங்களாவது இருக்கும். எந்த ஜெர்மானியரும் உங்களைப்போல் இதை எந்நாட்டுப் படமாக சொல்லமுடியவில்லையே என்று புலம்பவில்லை. மாறாக அப்படங்கள் உலகம் முழுவதும் கவனம் பெற்றிருக்கின்றன. ஸ்பீல் பெர்கின் schiendler's list படத்தைப் பாருங்கள்.

    நீங்கள் மிக சௌகரியமான இடத்தில் இருந்துகொண்டு அவ்வளவு ரோசம் இருந்தால் வீட்டிலேயே இருக்க வேண்டியதுதானே எனக் கேட்கிறீர்கள். நீங்களும் அந்த அண்ணாட்சியைப் போல் முதலாளி வர்கத்தின் ஒரு பிரதிநிதியாகத்தான் இதன் மூலம் தெரிகிறீர்கள். தற்கொலை செய்துகொள்ளும் பெண்ணின் செயல் சரியானது என்று இயக்குநர் எங்கும் சொல்லவில்லை. மாறாக அப்பெண்ணைப் போல் நீயும் ஒரு முட்டாள் என நாயகன் நாயகியை திட்டுவதாகத்தான் காட்சி அமைந்துள்ளது. !!!????

    மாரை அமுக்கினான் என்ற ஒரு வசனத்தை பிடுத்துக்கொண்டு வாதிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். ’டாடி மம்மி வீட்டில் இல்ல தடை போட யாருமில்லை’ என்று உங்கள் பெண் குழந்தை பாடி ஆடுவதை ரசிக்கிறீர்கள்!! வணிகப் படங்களில் வசனங்களிலும் பாடல்களிலும் இல்லாத ஆபாசம் இந்த ஒற்றை வசனத்தில் வந்து விட்டதாக புலம்புகிறீர்கள். போலித்தனங்களை ஆதரிக்கிறீர்கள், நிதர்சனங்களை வெறுக்கிறீர்கள். நாட்டில் ஆயிரம் பிரச்சனைகளை வைத்துக் கொண்டு தேனாறும் பாலாறும் ஓடுவதாக காட்டினால் உங்களுக்கு உச்சி குளிர்ந்துவிடும். தமிழில் ஒரு சொலவடை உண்டு...’ஒய்யாரக் கொண்டையாம்...உள்ளே ஈறும் பேனுமாம்’. ஒய்யாரத்தைப் பார்த்து மெய்மறந்திருங்கள்.

    இதன்பின் நீங்கள் எழுதப்போகும் பதில்களுக்கு நான் பதில் சொல்லவில்லை என்றால் என்னிடம் பதில் இல்லை என்று அர்த்தம் இல்லை. சோர்வடைந்துவிட்டேன் என்று அர்த்தம்..

    ReplyDelete
  79. இடுகையும், பின்னூட்டங்களும் அருமை..
    குறிப்பாக இறுதியாக உள்ள அனானி-சாணக்கியன் பின்னூட்டங்கள்.. அனானி மாதிரியும் மக்கள் இருக்கிறார்கள் என்பதுதான் interesting..

    ReplyDelete
  80. Suresh and Paithiyajaran enna sir ithu ivvlavu nunukkama parkka mudiyuma ore thadavaila! chanse illa.. Excellent ... solla varthaigale illai. Thanks a lot. Ithuthan ennudaiya mudal varugai. Ana Asanthutten sir.

    ReplyDelete
  81. Address illatha anony, Ungalukku Thrisha vai pidikkum enral Avarai vaithu padam edungal. En aduthavarai kindal pannukireerkal. Muthirchi illatha vimarsanangal manathai pun paduthukirathu. I am working in France. I have shown this film to others they liked it very much. They don't like that askar's Indian movie. Its true.

    ReplyDelete
  82. மயூராJune 05, 2010

    --சாணக்கியன், த்ரிஷா விஷயத்துக்கு வருவோம். த்ரிஷா ஒரு கோடி சம்பளம் வாங்கறா. சிறந்த நடிகைக்கான விருது நான்கு தடவை வாங்கியிருக்கிறார். அவர் அவ்வளவு சம்பளம் கேட்டும் அவரை ஒப்பந்தம் செய்ய ஹிந்தி, தெலுங்கு, தமிழ் முண்ணனி இயக்குனர்கள் காத்திருக்கிறார்கள்.

    ஆனால் 'நான் கடவுள்' பூஜா, 'பூ' பார்வதி ஆகியோரின் கதியென்ன?--

    அனானி,
    பூஜாவின் நிலையென்ன என்று கேட்டிருக்கிறீர்கள்.

    அவர் தற்பொழுது இலங்கையில் இருக்கிறார். படம் நடித்து, சம்பாதித்த பணத்தில் சுயமாக ஒரு அனாதை விடுதி நடத்தி வருகிறார். வயதான தனது தாத்தா, பாட்டியைக் கூட இருந்து கவனித்து வருகிறார்.

    கொழும்புக்கு வந்தால் நீங்கள் அவரைக் காண முடியும். மின்சாரக் கட்டணம் செலுத்தவோ, தண்ணீர்க் கட்டணம் செலுத்தவோ வங்கியின் வரிசையில் சாதாரண பெண்ணாக நின்றுகொண்டிருப்பார். ஆட்டோவில் காய்கறி வாங்க சந்தைக்குப் போய்க் கொண்டிருப்பார். இவ்வளவும் செய்து கிடைக்கும் இடைவேளையில்தான் நல்ல தமிழ்ப் படங்களை ஏற்றுக் கொண்டு நடித்து வருகிறார்.

    இந்தியாவின் கனவு நாயகியொருவர் இவ்வளவு சாதாரணமாக உலவுவதை வேறெங்கும் காணமுடியாதென நினைக்கிறேன். இத்தனைக்கும் இவர் இலங்கை சினிமாவின் முண்ணனி நடிகையும் கூட.

    அரசே சிறப்பு விருந்தினராக அழைத்தும், இலங்கையில் இருந்துகொண்டு இலங்கையில் நடக்கும் IIFA நிகழ்வுக்கு வர மறுத்த அவரது தைரியத்தைப் பாராட்டவேண்டும்.

    அனானி, த்ரிஷா வாங்கும் ஒரு கோடியைப் போல இவரும் வாங்கினால், இன்னும் பல சேவைகள் செய்வாரென நம்புகிறேன்.

    அனானி, பூஜாவுக்கு பட வாய்ப்புக்கள் இல்லையென்று நீங்கள் கவலைப்பட வேண்டாம். அவர் செய்யும் சேவைகள் அவரை ஓர் நாள் உயர்த்திவைக்கும்.

    ReplyDelete
  83. நல்லதொரு விமர்சனம் !

    ReplyDelete