Monday, January 25, 2010

ராஜா - இசை - ஷாஜி - சாரு

disclaimer 1: நான் இளையராஜாவின் திரையிசைப் பாடல்களின் ரசிகனே ஒழிய அவரின் குறிப்பிட்ட சில ரசிகர்கள் போல இசையையும் தாண்டி அந்த ஆளுமையின் மீதே வெறி கொண்டவன் அல்ல. ராஜாவின் இசை குறித்து எனக்குச் சரி என்று தோன்றுபவற்றை நண்பர்களுடனான உரையாடலிலும் பொதுவிலும் வைத்திருக்கிறேன். உதாரணமாக 'திருவாசகம்' வெளிவந்த புதிதில் அது பெரும்பாலோனாரால் - எழுத்தாளர் சுஜாதா உட்பட - ஆகா ஓகோ என்று கொண்டாடப்பட்ட போது ராஜா தவிர வேறு எந்த சிறந்த பாடகராவது பாடியிருந்தால் இன்னும் அந்த ஆல்பம் சிறப்பாய் வந்திருக்கும் எனக் குறிப்பிட்டிருந்தேன்.

disclaimer 2: இசை குறித்த என்னுடைய ஞானம் ஒரு பொதுவான பாமரனுக்கு ஈடானதே. நுணுக்கங்கள் தவிர்த்து தொடர்ந்து இசை கேட்டு வருவதனால் இயல்பாக மேலெழுந்து வரும் உணர்வுகளோடுதான் எந்தவொரு இசையையும் என்னால் அணுக இயலும். 





இசை விமர்சகர் ஷாஜி எழுதின இந்தக் கட்டுரையை உயிர்மையில் வாசித்த போது ஏதொவொரு அபஸ்வரம் தட்டியது.

ராஜாவின் இசை குறித்து ஷாஜி வைத்திருக்கும் அடிப்படையான மதிப்பீட்டை ராஜாவின் எந்தவொரு தீவிரமானதொரு ரசிகனின் மதிப்பீட்டிற்கு இணையாகத்தான் நான் புரிந்து வைத்திருந்தேன். ஏனெனில் நான் வாசித்த வரை ஷாஜி எழுதின கட்டுரைகளில் ராஜாவின் இசை குறித்து உயர்வான அபிப்ராயத்தையே இதுவரை தெரிவித்து வந்திருந்தார். டைம்ஸ் ஆ·ப் இந்தியாவின் 'இலக்கிய மலரில்' ஷாஜி எழுதியிருந்த கட்டுரையும் அதை உறுதிப்படுத்தியது. ஆனால் திடீரென்று ராஜாவின் இசை மட்டுமல்லாது ராஜாவின் தனிப்பட்ட குணங்களைப் பற்றியும் ஷாஜி விமர்சித்து எழுதியிருந்தது எனக்கு வியப்பை ஏற்படுத்தியது. அது ஷாஜியின் குரலாக எனக்கு ஒலிக்கவில்லை. ஏனெனில் அவர் முன்வைத்த விமர்சனங்களில், 'ராஜா பாப்மார்லியை 'குப்பை' எனச் சொல்லிவிட்டார்' என்பதும் ஒன்று.

எனக்குத் தெரிந்து இந்தக் குற்றச்சாட்டை சலிக்காமல் தொடர்ந்து சொல்லி வருபவர் சாருநிவேதிதாதான். அதையே இசை விமர்சகரான ஷாஜியும் எதிரொலித்த போதுதான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஷாஜியின் கட்டுரையைத் தொடர்ந்து சாருவும் அதைப் பயன்படுத்திக் கொண்டு எதிர்வினை என்கிற பெயரில் ஒரு கட்டுரையை எழுதியதும் ஆச்சரியம் தொடர்ந்தது. இதைத் தொடர்ந்து எனக்குள் எழுந்த கேள்விகளையும் சிந்தனைகளையும் இங்கே உங்கள் முன் வைக்கிறேன்.

()

ராஜாவின் ஆணவத்தையும் போலி ஆன்மீகத்தையும் அவரது ரசிகர்களே உணர்ந்திருப்பார்கள். சக படைப்பாளிகளோடும் இயக்குநர்களோடும் அவர் முரண்படுவதும் அது நேர்காணல்களில் கசியும் போதும் இசை நிகழ்ச்சிகளின் போது ராஜாவிடமிருந்து வெளிப்படும் உடல் மொழியும் சக இசைக்கலைஞர்களை அங்கீகரிக்காத பண்பையும் வைத்து ராஜாவின் ஆணவ வெளிப்பாடுகளை எளிதாகவே உணர முடியும். அதே போல் அவர் முன்வைக்கும் ஆன்மீகமும், ரஜினி போன்றோர் முன்வைக்கும் பகட்டுத்தனமான போலி ஆன்மீகத்திற்கு ஈடானதுதான். தம்மைத் தாமே புகழ்ந்து கொண்டு வெளிவரும் ராஜாவின் பாடல் வரிகளும், இமயமலைக்குக் கூட புகைப்படக்காரருடன் சென்று அதை பத்திரிகைகளில் வெளிவரச் செய்யும் ரஜினியும் ஆன்மீகமும் ஏறக்குறைய ஒன்றுதான்.

தனிமனத பலவீனங்கள் என்கிற நிலையில் இவற்றைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் எனக்குப் புரியாத விஷயம் இதுதான்.

இன்னொரு இசைக்கலைஞரை 'குப்பை' என்று சொல்லிவிடுவதாலும் ஆணவவாதியாய் சக மனிதர்களை மதிக்காத தன்மைக்காகவும் ஒரு கலைஞரையும் அவரது படைப்புக்களையும் புறக்கணிக்க முடியுமா? பிடிக்கவில்லை என்று சொல்லி விட இயலுமா? மனித நேயம் இல்லாதவர்களையும் ஆணவக்காரர்களையும் புறக்கணிப்பது; வெறுப்பது என்று ஆரம்பித்தால் இன்று எத்தனை கலைஞர்கள் மிஞ்சுவார்கள். உதாரணத்திற்கு சாருவையே எடுத்துக் கொள்வோம். அவரது எழுத்தில் வெளிப்படாத ஆணவமா? மாதத்திற்கு ஒன்றாய் சாமியார்களை மாற்றிக் கொண்டிருக்கும் அவரது ஆன்மீகத்தை எந்தத் தளத்தில் வைத்து புரிந்து கொள்வது?

இந்தக் காரணங்களையெல்லாம் வைத்து சாருவின் எழுத்தை 'நான் புறக்கணிக்கிறேன்; பிடிக்கவில்லை' என்று தெரிவித்தால் அது எவ்வளவு அபத்தமாய் இருக்கும்?. ராஜா பாப்மார்லியை 'குப்பை' என்பதற்காக அவரை வெறுக்க வேண்டும் என்றால் சாரு எத்தனை எழுத்தாளர்களையும் படைப்புகளையும் இதே போல் விமர்சித்திருப்பார் என்பதையும் பார்க்க வேண்டும். 'எப்பவும் நான் ராஜா' என்கிற வரியை வைத்துக் கொண்டு ராஜாவின் தற்புகழ்ச்சியைக் கிண்டலடிக்கும் சாருவால் அந்தப் பதிவிலேயே தன்னுடைய இரண்டு புகைப்படங்களை வைத்து நிரப்பாமல் இருக்க முடியவில்லை.

()

சாருவின் கட்டுரையில் உள்ள இன்னொரு குற்றச்சாட்டையும் கவனிக்க வேண்டும்... 'கர்நாடக இசையை நாட்டுப்புற இசையுடன் கலந்து கர்நாடக இசையை பிரபலப்படுத்தினார்.'. இதனால்தான் செம்மங்குடி உள்ளிட்ட பிராமணர்கள் ராஜாவைக் கொண்டாடினார்கள் ..என்பது சாருவின் வாதம்.

ராஜாவின் இசையை இப்படிக் கூட அபத்தமாக தலைகீழாக ஒருவரால் புரிந்து கொள்ள முடியுமா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ராஜாவின் இசையின் உடனடி பிரபலத்தன்மைக்கு காரணமே அவரது இசையிலிருந்த நாட்டார் இசையின் கூறுகள்தான். எனவேதான் அது மக்களை உடனடியாகச் சென்று சேர்ந்தது. பின்பு பண்டிதர்கள் வட்டத்தில் மாத்திரமே புழங்கிக் கொண்டிருந்த கர்நாடக இசையை எளிமைப்படுத்தி தன்னுடைய மெட்டுக்களில் இணைத்தார். இதனால் சில கர்நாடக இசைப் பண்டிதர்களின் வெறுப்பிற்கும் எரிச்சலுக்கும் கூட அவர் ஆளாக நேர்ந்தது. அதாவது ராஜாவால் பிரதானமாக நாட்டுப்புற இசையும் அதன் கூடவே ஆனால் அதனுடைய முகமில்லாமல் கர்நாடக இசையும் வெகுஜனங்கள் மத்தியில் பிரபலமடைந்தது. 'கர்நாடக இசையை ராஜா பிரபலப்படுத்தினார்' என்றால் எத்தனை ராஜாவின் ரசிகர்கள் அதிலிருந்து விலகி கர்நாடக இசையின் பக்கம் சென்றார்கள் என்று கவனிக்க வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை நான் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக ராஜாவின் திரையிசையைக் கேட்டு வருகிறேன். கர்நாடக இசையை ரசிப்பதற்காகவாவது அதன் அடிப்படையைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் உள்ளூற உண்டே ஒழிய, இன்று வரை எந்தவொரு திரையிசைப் பாடலின் ராகத்தையும் அதன் நுணுக்கங்களையும் என்னால் விளங்கிக் கொள்ள இயலாது. கர்நாடக இசையில் பாண்டித்தியம் உள்ள எவராவது விளக்கிச் சொல்லும் போதுதான் அதைப் புரிந்து கொள்ள முடியும். இதில் கர்நாடக இசை 'பிரபலமடைந்தது' என்கிற விஷயம் எங்கே வருகிறது?  இதற்கும் ராஜாவின் இசைக்கும் சம்பந்தமே கிடையாது.

சாரு முன்வைக்கும் இன்னொரு குறை. ராஜா நாட்டுப்புற இசையையும் கர்நாடக இசையையும் காப்பியில் சாராயத்தைப் போல கலந்து விட்டார். அசலான நாட்டுப்புற இசையை அவர் உபயோகிக்கவில்லை. மேலும் சுத்தமான நாட்டுப்புற இசைக்கு பருத்திவீரன், சுப்ரமணியபுரம் போன்ற திரைப்படங்களை சாரு உதாரணம் காட்டுகிறார். அந்தப் படத்தின் பாடல்கள் அசலான நாட்டுப்புற இசையைக் கொண்டதா என்பதை இசையைப் பற்றி நன்கு அறிந்தவர்களின் முன்னால் ஒரு கேள்வியாக வைக்கிறேன்.

அவற்றின் சில பாடல்கள் (ஊரோரம் புளியமரம்)  நாட்டார் இசையின் கூறுகளை தன்னுள் பெருமளவில் கொண்டவை . ஆனால் 'அறியாத வயசு' 'கண்கள் இரண்டால்' போன்ற பாடல்களை சுத்தமான நாட்டுப்புற இசை என்பது சரியல்ல என்பதை அடிப்படை ரசிகன் கூற உணர முடியும். அசலான நாட்டுப்புற இசைக்கு தமிழ்த் திரையுலகில் எந்த அளவில் இடமும் வரவேற்பும் இருக்கிறது, மின்னணு கருவிகள் அல்லாமல் நாட்டுப்புற இசைக்கருவிகளை வைத்து இன்று எவராவது இசையமைக்க முன்வருவார்களா என்பதும் என் பாமரத்தனமான கேள்வி.

அது மாத்திரமல்லாமல் இரண்டிற்கும் மேற்வகைப்பட்ட இசைகளை கலந்து உபயோகிப்பது, அவற்றின் கூறுகளை ஒன்றோடொன்று இயைந்தோடச் செய்வதை ஆகியவை Fusion என்று குறிப்பிடப்படுவது பாமர ரசிகனுக்கும் தெரியும்.  ஏன் சாரு சிலாகிக்கும் ரகுமானே இந்த மாதிரியான கலப்பிசையை பெரும்பாலும் உபயோகிக்கிறார். ஆனால் இதையே ஒரு குறைபாட்டுள்ள அம்சமாக சாரு முன்வைப்பது முரணாக இருப்பதுடன்  ராஜாவை விரும்பாததற்கு இதையொரு காரணமாக சுட்டிக்காட்டுவது பொருத்தமானதாக தோன்றவில்லை. இன்னும் அழுத்தமான பொருந்தக்கூடிய காரணங்களை சாரு முன்வைத்தால் அவர் ராஜாவின் இசையை புறக்கணிப்பதை ஒரளவிற்கு புரிந்து கொள்ள முடியும். ஆனால் அதற்கான நுணுக்கமான ஞானம் சாருவிற்கு உள்ளதா என்பது கேள்விக்குறி. ஏனெனில் 'பாப்மார்லி' என்கிற அபத்தமான உதாரணத்தைத் தவிர சாருவால் இத்தனை வருடங்களில் எந்தவொரு வலுவான காரணங்களையும் முன்வைக்க இயலவில்லை.

எதற்காகவேனும் அவர் ராஜாவின் இசையை வெறுக்கட்டும். அது அவரது தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. ஏனெனில் ஒரு இசையை நாம் அணுகுவது நம்முடைய நுண்ணுர்வுகளின் மூலமே. ஏன் இது உனக்குப் பிடிக்கவில்லை என்றெல்லாம் ஒருவரைக் கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் அதற்காக பொருத்தமில்லாத காரணங்களை முன்வைப்பதுவும் அதைப் பொதுவில் வைத்து அலட்டுவதுவும்தான்  எரிச்சலைத் தோற்றுவிக்கிறது. அதைத்தான் இந்தக் கட்டுரையில் முன்வைக்க முயன்றிருக்கிறேன். 

தொடர்புள்ள பதிவு: சாருவிற்கு ஒரு பரிந்துரை

image courtesy: original uploader

suresh kannan

53 comments:

  1. அரசியல் நிலைப்பாடுகள், தனிப்பட்ட விருப்பு/வெறுப்பு சாராமல் கலைஞர்கள் இயங்க முடியுமா? பாப் மார்லி, குப்பை எனச் சொல்லாவிட்டாலும், ஜாஸ்/ப்ளூஸ் வகைகளை வெறுத்தது சாருவுக்குத் தெரியுமா?

    கறுப்பின மக்களின் ஜீவனாக இருந்த ப்ளூஸ், நிறம் மாறி ஜாஸ் வகைக்குள் புகுந்த போது, அதைத் தத்து எடுத்த வேறு நிற மக்களைப் பற்றி பாப் மார்லி வகையறாக்கள் கூறியது முக்கியமானது.

    அதிலிருந்து கிளைத்து எழுந்த ரெகே மறைமுகமாக மற்ற வகைகளைச் சாடியது.

    வாக்னர் போன்றவர்கள் எழுத்தில் யூத வெறுப்பைக் கொண்டவர்கள். அவர்கள் இசையில் இது வெளிப்படவில்லை. ஆனாலும், ஆபரா மற்றும் மேற்கிசை மேதையாக இவரைக் கொண்டாடுவது அரசியல் சாயத்தைத் தாண்டிய இசையினாலேயே.

    இதைப் போல சுஜாதா பற்றி சாரு கூறியது - http://charuonline.com/may2008/sujathamanoj.html
    சுஜாதாவைப் பற்றிக் கூறும்போது.-
    //அரசியல் காரணத்தைச் சொல்லி அவரை நிராகரித்தால் இழப்பு நமக்குத்தான்.//

    இரு வருடங்களுக்கு முன் எழுதியது. இப்போது இதையே கேள்வியாக சாரு முன் வைக்கலாம்.

    அறம் சார்ந்த கேள்விகள் தனிப்பட்ட ஆளுமைக்கானவை. படைப்புகளையே இந்நிலைப்பாடு கொண்டு ஆய்வு செய்து நிராகரிப்பதும்/ஏற்றுக்கொள்வதும் , மேற்கில் நடந்து வந்தாலும், கலைஞனின் முழு கோணத்தைக் காட்டாது.

    அடித்துப் பிடித்து கலகம் செய்ய இவை தேவைப்படலாம் என்றாலும் ஷாஜி, சாரு சொன்ன ஆளுமை குறித்த கேள்விகள் நிலைக்காது. ஏனென்றால் அவற்றின் குறிக்கோள்கள் வெவ்வேறு.

    சாரு ஜே ஜே சில குறிப்புகளை கடுமையாக விமர்சித்த கட்டுரையிலிருந்து அவரைப் படிக்கத் தொடங்கினேன். இன்றும் படித்து வந்தாலும், அவர் நிலைப்பாடுகள் மிகவும் சரிந்துவிட்டதாகவே தோன்றுகிறது.

    ஆனாலும், எல்லாம் முடிந்து ஓயும் கட்டத்தில், இசை மட்டுமே நிற்கும்.

    இவ்விவாதங்களால் எந்த பயனும் கிடையாது எனத் தெரிந்தும்...

    ரா.கிரிதரன்.

    ReplyDelete
  2. அடேங்கப்பா...

    ஒரு சின்ன கேள்வி.

    வாழ்க்கைல கஷ்டப்பட்டு சாதிச்சவன் கொஞ்சம் கர்வபட்டால் என்ன தப்பு

    இசைல கூட வா உங்க அரசியல்

    ReplyDelete
  3. //இன்னொரு இசைக்கலைஞரை 'குப்பை' என்று சொல்லிவிடுவதாலும் ஆணவவாதியாய் சக மனிதர்களை மதிக்காத தன்மைக்காகவும் ஒரு கலைஞரையும் அவரது படைப்புக்களையும் புறக்கணிக்க முடியுமா? பிடிக்கவில்லை என்று சொல்லி விட இயலுமா? மனித நேயம் இல்லாதவர்களையும் ஆணவக்காரர்களையும் புறக்கணிப்பது; வெறுப்பது என்று ஆரம்பித்தால் இன்று எத்தனை கலைஞர்கள் மிஞ்சுவார்கள்.//

    இதுவே என் மனதிலுள்ள கேள்வியும். ஒரு கலைஞனுக்கும் ரசிகனுக்கும் தொடர்பு கலை மட்டுமே ..தனிமனித குணங்களை வைத்து கலையை எடை போடுவது என்ன வகையான லாஜிக் என புரியவில்லை.

    ReplyDelete
  4. //சாருவையே எடுத்துக் கொள்வோம். அவரது எழுத்தில் வெளிப்படாத ஆணவமா? மாதத்திற்கு ஒன்றாய் சாமியார்களை மாற்றிக் கொண்டிருக்கும் அவரது ஆன்மீகத்தை எந்தத் தளத்தில் வைத்து புரிந்து கொள்வது?

    இந்தக் காரணங்களையெல்லாம் வைத்து சாருவின் எழுத்தை 'நான் புறக்கணிக்கிறேன்; பிடிக்கவில்லை' என்று தெரிவித்தால் அது எவ்வளவு அபத்தமாய் இருக்கும்?. //

    சாரு கட்டுரை படித்ததும் , எனக்கும் தோன்றிய முதல் கேள்வி இதுதான்...

    ReplyDelete
  5. அவசியமான பதிவு சுரேஷ்.

    இளையராஜாவின் இசை மீது அப்படி ஒரு பைத்தியம் எனக்கு!

    அவரின் தனிப்பட்ட குணாதிசியங்கள் குறித்து விமர்சனம் செய்ய யாருக்கும் உரிமை இல்லை....பிரபலங்கள் என்பதால் பளிச்சென தெரியும் குறைபாடுகள் இங்கு சுவாரஸ்யம் கூட்டிட ஆராயப்படுகின்றன.

    இந்த சமயம் எனக்கு சாரு சீரோ டிகிரி நாவலில் மேற்கோள் காட்டிய வாக்கியங்களே நினைவிற்கு வருகின்றது..

    "என்னை பற்றி அறிந்து கொள்ள என் எழுத்தை படிக்காதே,என் எழுத்தை படித்து என்னை அறிய முயலாதே.."

    ReplyDelete
  6. ராஜாவின் ஆன்மீகம் போலி என்ற ஒன்று மட்டும் சற்று நெருடுகிறது ! மற்றபடி அவருக்கு கொஞ்சம் கர்வம் உண்டு.

    இசைப் பாமரனாக இருந்து கொண்டே நன்றாகத் தான் எழுதியிருக்கிறீர்கள், சுரேஷ் :-)

    ReplyDelete
  7. சுரேஷ்கண்ணன்

    ரொம்ப அருமையா அலசியிருக்கிறீர்கள்.

    சாருவுடைய வாதத்தை பார்த்தால் ஏதோ ஒரு இனம் புரியாத வெறுப்பினால் எழுதுவதை போன்று தோன்றுகிறது.

    Thanks for a good post.

    Venkat

    ReplyDelete
  8. ///இமயமலைக்குக் கூட புகைப்படக்காரருடன் சென்று அதை பத்திரிகைகளில் வெளிவரச் செய்யும் ரஜினியும் ஆன்மீகமும் ஏறக்குறைய ஒன்றுதான்///

    சம்பந்தமில்லாத டிராக்தான். ஆனாலும் ரொம்பநாளாகவே ப்ளே ஆகிக்கொண்டிருக்கிறது என்பதால்.

    இமயமலைக்கு ரஜினி புகைப்படக்காரருடன் சென்றாரா?

    அதை பத்திரிக்கைகளில் வருமாறு கேட்டுக்கொண்டாரா?

    இரண்டு கேள்விகளும் உங்களுக்குத்தான். சர்வநிச்சயமாக நீங்கள் நம்புவது போன்ற தொனி வாக்கியத்தில் இருப்பதால் முதலில் எதை வைத்து நீங்கள் நம்புகிறீர்கள் என்பதைச் சொல்லவேண்டும்.

    சம்பந்தப்பட்ட பத்திரிக்கை இதுவரை ஏதாவது சொல்லியிருக்கிறதா அதைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா என்பதையும் கொஞ்சம் தெரிந்து கொள்ள ஆசை.

    இல்லாவிட்டால் பாப்மார்லி பத்தி ராஜா சொன்னதாக ஷாஜி எழுதியதாக உயிர்மையில் வந்த கட்டுரையாக உங்களது பதிவும் இருந்துவிடும் :-))))
    - ராம்கி

    ReplyDelete
  9. எனக்கு ஒன்று புரியவில்லை , ஒரு மனிதன் அது ரஜினி ,இளையராஜா முனுசாமி அனாலும் சரி அவன் இஷ்டப்படி பேச , குறை சொல்ல, வாழ உரிமையில்லையா ? , நீங்கள் யாரு அவன் மனதை தீர்மானிப்பதற்கு ..உங்களுக்கு என உரிமை இருக்கிறது , முதலில் 'மனிதனுக்கு ' உங்கள் கருத்துக்களை influnece செய்கிறிர்கள் உங்கள் so called article முலமாக ..அதுவே தவறு.. முதலில் மனிதனை படியுங்கள் அப்புறம் 'மனிதம்' புடலங்காய் பத்தி பேசலாம்

    ReplyDelete
  10. @ரா.கிரிதரன்


    நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்தக் கட்டுரையிலேயே வாக்னர் பற்றி குறிப்பிட்டுள்ளார், கவனித்தீர்களா?

    //சாரு ஜே ஜே சில குறிப்புகளை கடுமையாக விமர்சித்த கட்டுரையிலிருந்து அவரைப் படிக்கத் தொடங்கினேன்.//


    இந்தக் கட்டுரை இணையத்தில் உள்ளதா? இணைப்பு தர முடியுமா?

    ReplyDelete
  11. நீங்கள் யார் ஒரு மனிதனனின் விருப்பு, வெறுப்பு களை தீர்மானிக்க .. ரஜினி, இளையராஜா, முனுசாமி கள் 'போலி வேஷம்' போடுகிறார்கள் சொல்வதற்கு நம்மில் யாருக்கும் உரிமை கிடையாது ..அவர் 'போலியோ இல்லையோ ' அது அவர் அவர் விருப்பம். அவர்கள் மாறட்டும் ..நீங்கள் உங்களை போன்ற எழுத்தாளர்கள் என்று சொல்லிகொள்பவர்கள் 'மனித நேயம்' இல்லை , போலி என்று சொல்வதன் மூலம் 'நீங்கள்' மனிதர்களை உங்கள் 'சொந்த விருப்பு , வெறுப்புக்கு ' உட்படுதுரீர்கள் . machine களை உங்கள் விருப்புக்கு வைக்கலாம் ..மனிதன் 'உயிர்' உள்ள பொருள் அல்லவே ..இப்படியுள்ள மனிதர்களால் 'மனிதம்' பத்தி பேச முடியுமே தவிர , மனிதனாக வழ முடியாது

    ReplyDelete
  12. மிகவும் தேவையான பதிவு !

    ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை குணங்களை-ஆளுமையை மேற்கோள் காட்டி அவற்றுடன் அவரது திறமைகளை-ஆற்றல்களை தொடர்பு செய்து கருத்துரைப்பது மிகவும் வருந்தத் தக்கது.

    ராஜாவின் இசைத் திறமையை அவரது படைப்புகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு கருத்து தெரிவிக்க வேண்டும். அதுவே ஒரு கலைஞனுக்கு தகுந்த மதிப்பீடாக அமையும்.

    அப்படி நியாமாக எழுப்பப்படும் கேள்விகளுக்கு ராஜாவின் இசைப் படைப்புகளே தன்னிலை விளக்கத்துடன் மறுமொழிகளாக உள்ளன.

    ReplyDelete
  13. aanmigathukku alavukol etharku? Ilayaraja poliyaga, aanavamaga irukirar enru neengal eppadi mudivu seyya mudiyum? appadiyendral Blog ezhudhuvathu kooda aanavamthan. Velithotrathai vaithu ethaiyum mudivu seyyatheergal.thannadakkam miga periya karvam allava?

    ReplyDelete
  14. dear friend, pls read my blog and tell your commmnets( its not related to reading a article)-thanking you !

    ReplyDelete
  15. இந்த சாருவும் காலம் காலமாக ஒவ்வொரு காரணமாக இளையராஜா வை எதிர்ப்பதற்கு சொல்லிக்கொண்டிருக்கிறார் இல்லை உளறிக்கொண்டிருக்கிறார். அதற்கெல்லாம் போய் பதிலெழுதீகொண்டு?,Just Ignore him. அவரே அதைத்தான் உளரிக்கொண்டிருக்கிறார். பிடிக்கவில்லையென்றால் படிக்காதே என்று.

    ReplyDelete
  16. படைப்பாளியை முன் வைத்து அவரின் படைப்புகளை புறந்தள்ள தொடங்குவேமேயானல் இந்த உலகில் ஒரு படைப்பு கூட மிஞ்சாது. மனிதன் என்பவனே முரண்களால் ஆனவன் என்ற பின்பு சாருவின் வாதங்கள் அர்த்தமற்றதாக தோன்றுகின்றன. என்றோ ஒருநாள் வைரமுத்துவுக்கு அவர் அனுப்பிய நோட்டிஸை இன்று காட்டுகிறார். அந்த காலத்தில்,ராஜாவின் மனநிலை என்ன என்பதை நாமறியோம். இன்று அவர் நிச்சயம் மாறியிருப்பார். சாரு ஏதோ தன் வாழ்க்கையில் இது போன்ற முரண்களை செய்யாதவர் போல் பேசுவது சிறுபிள்ளைத்தனம். இன்னமும் தனக்கு அபிமான கலைஞர்களின் படைப்புகளை அடிப்படையே இல்லாமல் ஆராதிப்பதும், தனக்கு ஒவ்வாத கலைஞர்களை அதே போன்று தூற்றுவதும் முதிர்ச்சியடைந்த எழுத்தாளர்களுக்கு அழகல்ல். டஸ் புஸ்ஸுன ஆங்கிலத்தில் யாராவது பாராட்டி எழுதினால் அதை உடனே வெளியிடுவதும், உலகிலே மைக்கேல் ஜேக்சனுக்கு அடுத்து தனக்குதான் விசிறிகள் அதிகமென எழுதி தொலைப்பதும் எதில் சேர்ப்பது? ராஜாவின் செயல்கள் இதை விட பல்லாயிர படங்கு குறைவே.

    சாரு சொல்வதுதான் உன் பிரச்சினையா? வேறு யாராவது இதே குற்றச்சாட்டை சுமத்தினால் என் பதில் என்னவென்றால்.. ராஜாவின் பாடல்களை மட்டுமே கேட்கிறோம். ராஜா எப்படியிருந்தால் நமக்கென்ன?

    பருத்தி வீரனில் இருப்பது சுத்தமான நாட்டுப்புற இசை. ஏனெனில் அதை வாசித்தவர்கள் நாட்டுப்புற கலைஞர்கள். அதற்காக ராஜாவின் சாதனைகளை ஒதுக்குவதா? 70களின் இறுதிகளும், 80களிலும் ராஜா தந்த சுத்தமான நாட்டுப்புற பாடல்களையெல்லாம் கேட்டு வளராதவர்கள் இருப்பார்களோ?

    ReplyDelete
  17. ரஜினி மேட்டர் தேவையில்லாத இடைசெருகலாக தெரிகிறது. ரஜினி கிட்டத்தட்ட 25 முறை இமயமலை சென்றதாக தெரிகிறது. எத்தனை முறை பத்திரிக்கைகளில் வந்திருக்கிறது?

    சந்திரமுகி இங்கே கொட்டோ கொட்டுவென வசூல் கொட்டிய போது கிழிந்த சட்டையோடு மலையேறிக் கொண்டிருந்தார். குங்குமம் அதை எப்படியோ ஃபோட்டோ எடுத்து போட்டது. அதற்கு அவர் இங்கே இருந்திருந்தால் எத்தனை ஃபோட்டோக்கள்..

    கட்டுரையின் தொடக்கத்திலே இப்படி சொல்லிவிடுவதால் கட்டுரையின் நம்பகத்தன்மை குறைவதாக எனக்கு தோன்றுகிறது, நீங்கள் சொல்லியிருக்கும் அனைத்திலும் நான் உடன்பட்டாலும்.

    ReplyDelete
  18. சுரேஷ் சார்,நல்ல அலசல்தான்.சாருவால் கூட அவரது போட்டோ போடாமல் எழுதமுடியாத போது ராஜாவை அப்படி விமர்சிக்க என்ன தார்மிக உரிமை இருக்கிறது என்ற உங்கள் கேள்வி ஞாயம்தானே?

    ReplyDelete
  19. // சந்திரமுகி இங்கே கொட்டோ கொட்டுவென வசூல் கொட்டிய போது கிழிந்த சட்டையோடு மலையேறிக் கொண்டிருந்தார் //

    எதற்கு கிழிந்த சட்டை? அது என்ன வேண்டுதலா? நூறு ரூபாய்க்கு சட்டை கிடைக்கும் போது ..! " ஒரு கோடீஸ்வரர் என்ன எளிமையா கிழிஞ்ச சட்டைல போறார்?" என்று வாயை பிளக்கும் இளிச்சவாய் தமிழனின் நிலை எண்ணி பரிதாபம்தான் வருகிறது. ஆன்மீகம் என்பது இளையராஜாவுக்கும் ரஜினிக்கும் வெறும் அடையாள பாவனைகள். அவர்களின் கவர்ச்சியை, ஆளுமையை அதிகரிப்பதாக எண்ணி அவர்கள் அணிந்து கொண்ட வேடம். அன்பே சிவம் நாசர் பாத்திரம் போன்று.

    ReplyDelete
  20. எனக்கு தெரிந்து ராஜாவின் இசை இரசிகர்கள், நான் உட்பட ராஜாவின் ஆளுமை மீது வெறி கொண்டவர்கள் அல்ல. அந்த ஆளுமையை அப்படியே ஏற்று கொள்கிறோம் நிறை குறைகளோடு. நமது கவணம் அவரது இசை மீது குவிய வேண்டுமே தவிர தேவையில்லாமல் மற்ற விஷயஙகளில் அல்ல. அப்படி சில விமர்சன்ங்கள் எழும் பொழுது தவிர்க்க இயலாமல் defend செய்ய வேண்டி உள்ளது.

    ஏதேனும் சமயத்தில் அவர் நடந்து கொண்ட விதத்தை வைத்து அதை குறையாய் எடுத்து யாரேனும் வைக்கும் பொழுது அதை ஒத்த மற்றொறு சமயத்தில் வேறு விதமாய்/ உயர் மனித பன்போடு அவர் நடந்து கொண்டதை சுட்டி காட்ட வேண்டி உள்ளது.

    A Man of extreme Eccentricities என்றே அவரை புரிந்து கொள்ள வேண்டும். இது புரிந்து கொண்ட பின் நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை. எவராவது அவரை பற்றி குறை சொல்லும் பொழுது நாம் சிரித்து கடந்து வந்து விடலாம். இதன் மூலம் நாம் அடைவது என்ன்வென்றால், தீராது அவர் அளிக்கும் இசை இன்பத்தை அள்ளி பருக முடியும்.

    காழ்ப்பு மட்டுமே நம் மனதில் நிறைந்து இருந்தால், சாரு போல் இரட்டை வேடம் தான் போட வேண்டும். உப்பு சப்பு இல்லாத விஷ‌யத்தை வைத்து அவருக்கு 'மிகவும்' பிடித்த ராஜாவின் இசையை 'மிகவும்' சிரமபட்டு ரசிக்க முடியாமல், அதற்க்கு 99% பேர்களுக்கு விளக்கம் வேறு அளித்து கொண்டு...ரொம்ப அவஸ்த்தையாக இருக்கும் அவருக்கு 'ராஸலீலா'வில் வந்த பைல்ஸ் அவதி போல்.

    புலிகேசி

    ReplyDelete
  21. BTW,

    My Partial Comments over these issues are here:
    http://pulikesi.wordpress.com/

    ReplyDelete
  22. About charu's comment on mixing liquor with coffee:

    This is called Irish coffee - hot coffee, Irish whiskey, and sugar, stirred, and topped with thick cream!
    It's popular and have a try!

    ReplyDelete
  23. சாரு மற்றவர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்வதில் உச்சக்கட்ட மகிழ்ச்சி அடைகிறார். அவர் மொழியில் சொல்லவேண்டுமானால் 'ஆர்கஸம்' அவருக்கு. அனுபவித்துப் போகட்டும்.

    நான் சாருவின் எழுத்தை தொடர்ந்து படித்து வருபவன் (காசு கொடுத்து புத்தகம் வாங்கித்தான்...). அவர் எழுத்தில் வசீகரம் இருக்கிறது. வாழ்க்கை இருக்கிறது. ஒத்துக்கொள்கிறேன். அதோடு அவர் பகட்டும், பனிவாக வெளிக்காட்டும் அகங்காரமும்.

    அவர் எழுத்தில் வெளிப்படும் அகங்காரத்தில் பாதி கூட இளையராஜாவிடம் வெளிப்படவில்லை என்பதுதான் உண்மை.

    சாரு மற்றவர்களை விமர்சிப்பதால் மட்டுமோ, அல்லது அவரின் 'தான்தோன்றி' நிலைக்காகவோ, அவரின் எழுத்துக்களை நிராகரிக்கப்போவதில்லை.

    ஆனால் ஒரு நல்ல வாசகனோ அல்லது ரசிகனோ எப்படி இருப்பான் என்பதை உலக இலக்கியமும், உலக இசையும் அள்ளிப் பருகும் சாரு தெரிந்து கொள்ளலாம்.

    ReplyDelete
  24. Jemo has written about Raaja...it is no way that Charu cannot write something bad about Raja.

    ReplyDelete
  25. நானும் ராஜாவின் தீவிர ரசிகன்.

    சாருவை சீரியஸ்ஸாக(ராஜா விஷயம் மட்டும் அல்ல) எடுத்துக்கொண்டுபதிவு
    எழுதுவதைவிட........

    அதற்குப் பதிலாக அந்த நேரத்தில் நம் வீட்டில் தூசு தட்டலாம்,ரேஷனுக்குப் போய் ஏதாவது வாங்கலாம்,துணி தோய்க்கலாம்,பதிவில் உள்ள
    டிராப்டைத் திருத்தலாம் அல்லது தமிழன் டீவியில் வரும் TSN பார்க்கலாம்.

    இதை முடிவு செய்து 1.5 வருடம் ஆகிவிட்டது.அவர் சைட்டும் போவதில்லை.

    விஷயத்திற்கு வருவோம்.

    //பின்பு பண்டிதர்கள் வட்டத்தில் மாத்திரமே புழங்கிக் கொண்டிருந்த கர்நாடக இசையை எளிமைப்படுத்தி தன்னுடைய மெட்டுக்களில் இணைத்தார்//

    தவறு.

    ராஜாவிற்கு முன்னமே நிறைய ஜாம்பவான்கள் கர்நாடக இசையை சினிமாவில் கொடுத்துள்ளார்கள்.

    அதாவது எம்கேடி,எஸ்.ஜி.கிட்டப்பா,
    பி.யூ.சின்னப்பா காலத்து “ரா” கர்நாடக இசையை(அதனால்தான் இனிமை வருகிறது) எளிமைப் படுத்தி
    அழகான் மெட்டுகளில்
    கொடுத்துள்ளார்கள்.அதாவது மெல்லிசையின் பின்னணியில்.
    இசை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தப்பட்டது.


    1.மயக்கும் மாலை பொழுதே
    2.கல்லெல்லாம் மாணிக்க
    3.பொன் ஒன்று கண்டேன்
    4.முத்துக்களோ கண்கள்
    5.மலரே குறிஞ்சி மலரே
    6.என்னை யார் யார் என்று நீ
    7.கல்லிலே கலை வண்ணம் கண்டான்
    8.ஆகாயப் பந்திலிலே(சூப்பர் பாட்டு)
    9.நந்தா என் நிலா
    10.ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா(முடிந்தால் இந்தப்பாட்டைக் கேளுங்கள்)எம்.பி.சீனுவாசன் இசை
    11.காதலின் பொன் வீதியில்
    12.ஹலோ மை டியர் ராங்க் நம்பர்
    13.இலக்கணம் மாறுதோ
    இன்னும் நிறைய இருக்கிறது.

    ராஜா இசையை இதற்கு அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தினார்.

    ராஜா இன்னும் பல படி மேலே போய்
    இன்னும் வித்தியாசமாக இதனுடன் பல இசைகளை புகுத்தி புத்திசாலித்
    தனத்துடன் கொடுக்கிறார்.

    உதாரணம்: “ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு”.இதில் வரும் வயலின் தீற்றல்கள் மற்றும் வேறு இசைக் கருவி நாதங்கள். இதில் folk and western classtical என்று இரண்டு மணம் வரும்.western classticalஐ
    உற்றுப்பார்த்தால்தான் தெரியும். இந்தப் பாட்டிற்கு அதான் இவ்வள்வு இனிமை என்று எனக்கு ஒரு நணபர் விளக்கிக் காட்டினார்.

    ஆனால் ஒன்று இப்போதும் சரி அப்போதும் சரி பாமரன் இதைத் தெரியாமல்தான் கேட்டுக்
    கொண்டிருக்கிறான்.

    ஷாஜி என்னப்பொறுத்தவரை புள்ளியில் நிபுணர்(statistician)

    ReplyDelete
  26. its a nice article and a proper reply to charu who used to always abuse ilayaraja which is unwarrented. i also note that you did not unnecessarily support ilayaraja's current musical form which many of the so-called supporters do. At the same time, shaji also discusses about the current musical output of raja for which you did not offer your comments / reply. and i feel shaji's article was not abusive in nature and its a fact that after 1992/1993, there was not much good music emerged from him. His form totally deteriorated since then. how will you rate his recent contributions in alagarmalai, uliyin osai, kadal kadai? pathetic raja!

    ReplyDelete
  27. Shaji's blog on Raja:

    http://musicshaji.blogspot.com/2008/11/blog-post.html

    ReplyDelete
  28. சந்தனபாண்டியன்January 26, 2010

    சுரேஷ்,

    "ராஜா தவிர வேறு எந்த சிறந்த பாடகராவது பாடியிருந்தால் இன்னும் அந்த ஆல்பம் சிறப்பாய் வந்திருக்கும் எனக் குறிப்பிட்டிருந்தேன்" - இதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்? ராஜா பாடிய திருவாசகத்தில் மெய்மறந்து மனதார அதை ரசித்து இன்புறும் பலரை விட நீங்கள் மேலானவர் என்பதையா? ’இல்லை இல்லை என் கருத்தைத் தான் சொன்னேன்’ என நீங்கள் மறுக்கலாம். அதே போன்று சுஜாதாவும் ராஜாவின் ரசிகர்களும் ஏற்றுக் கொண்ட ஒரு படைப்பை அவர்கள் விரும்புவது அவர்களின் விருப்பம். இதில் பெரிதாய் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எதனை உங்களுடைய தனித்துவமாக முன்வைக்க நினைக்கிறீர்கள்?

    "ராஜாவின் ஆணவத்தையும் போலி ஆன்மீகத்தையும் அவரது ரசிகர்களே உணர்ந்திருப்பார்கள்." - எது ஆணவம்? எது போலி ஆன்மிகம்? உண்மையில் உங்கள் நடுநிலைமை தான் போலியாக எனக்குத் தோன்றுகின்றது! “ராஜாவிடமிருந்து வெளிப்படும் உடல் மொழியும் சக இசைக்கலைஞர்களை அங்கீகரிக்காத பண்பையும் வைத்து ராஜாவின் ஆணவ வெளிப்பாடுகளை எளிதாகவே உணர முடியும். அதே போல் அவர் முன்வைக்கும் ஆன்மீகமும், ரஜினி போன்றோர் முன்வைக்கும் பகட்டுத்தனமான போலி ஆன்மீகத்திற்கு ஈடானதுதான். தம்மைத் தாமே புகழ்ந்து கொண்டு வெளிவரும் ராஜாவின் பாடல் வரிகளும்” - அடடா! இங்கே எந்த விதத்தில் நீங்கள் ஷாஜியிடமிருந்து வேறுபடுகிறீர்கள் எனக் கூற முடியுமா? என்னைப் பொறுத்த வரை ஷாஜியைக் குறை கூற உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை - ஏனெனில், நீங்களும் அவர் செய்ததைப் போன்றதொரு வேலையைத் தான் செய்திருக்கிறீர்கள் - அது - அனுமானங்களின் அடிப்படையில் ஒருவரின் நடத்தை இப்படித் தான் என்று சர்வ நிச்சயமாகக் கூறுவது, மன்னிக்கவும், திரிப்பது!

    ராஜா யாரையும் ‘குப்பை’ என்று புறந்தள்ளக்கூடியவர் அல்ல என்பது அவருடன் பழகிப் பார்க்கும் வாய்ப்பினைப் பெற்ற சிலருக்கு மட்டுமே தெரியும்! உங்களுக்கு அது தெரிய வேண்டும் என்பதற்காகவாவது அவருடன் சில நிமிடங்கள் பேசக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு சீக்கிரம் கிடைக்க வேண்டும் என நான் உளமாற என் இறையைப் பிரார்த்திக்கிறேன்!

    வாழ்க! வளர்க!

    ReplyDelete
  29. இளையராஜா, ரகுமான், ஜெமோ,சாரு ஆகியோரின் ஆக்கங்களை நான் ரசிக்கிறேன்.

    இந்தப்பதிவின் மூலம் சாருவுக்கு மேலும் ஒரு விளம்பரம். அவர் எதிர்பார்ப்பதும் அதுவாகவே இருக்கக்கூடும். எப்படியோ அவர் எழுத்தும் புத்தகமும் நிறைய பேரை அடைந்தால் சரி.

    ReplyDelete
  30. மதி.இண்டியாJanuary 27, 2010

    சுரேஷ் , நான் சொவது சரியா என பாருங்கள் ?

    ஜெயமோகனுக்கு இளையராஜா விருது தந்தற்க்கு பின்தான் சாரு இளையராஜா இசையை தாண்டி விமர்சிக்க துவங்கினார் என தோன்றுகிறது

    ReplyDelete
  31. Objective critisim என்பது சாருவால் பல நேரங்களில் முடிவதில்லை.

    பிற எழுத்தாளர்கள் மற்றும் அவர்களின் படைப்புகள் பற்றிய விமர்சனங்களில் ஒரு விருப்பு/ வெறுப்பற்ற நடுவுனிலைமை (neutral stand)இல்லாத தன்மை அவரிடம். புதுமைப்பித்தனின் அனைத்து (ரிபீட் : அனைத்து) சிறு கதைகளும் குப்பை, புல்ஷிட் வகை தரித்தர புலம்பல்கள் என்று விளாசுகிறார், ஒரு மதிப்பீட்டு கட்டுரையில். புதுமைபித்தனுக்கு 100க்கு 100 மதிப்பெண் போட வேண்டும், superlative எழுத்தாளார் என்று கொண்டாட வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் சாரு 100க்கு முட்டை (சுழி) மதிப்பெண் போடுகிறார். ஜ்ஸ்ட் பாஸ் கூட இல்லை ! கொத்து புரோட்டா போடுவது போல புதுமைபித்தனை குதறுகிறார். இது அவரின் இன்டெக்ரிட்டை (integrity) சந்தேகிக்க வைக்கிறது. இதே பாணியில் சாருவின் படைப்புகளை ஒரு எழுத்தாளர் குதறினால் தாங்கிவாரா என்ன ? objective critisism is totally different..

    ReplyDelete
  32. கார்க்கி, கே.ஆர்.அதியமான் போன்றவர்கள் தினமும் கூகிளில் ‘சாரு' என்று போட்டுத் தேடுவார்களோ? :-)

    BTW, சாரு இப்பதிவுக்கு லிங்க் கொடுத்திருக்கிறார்.

    நான் இசைராஜாவின் தீவிர ரசிகன். சாருவைப் பிடிக்காதவர்கள் எப்படி கைப்பட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் என்று அவரை சாடுகிறார்களோ, அதுபோலவே சாருவும் இளையராஜாவை சாட காரணங்கள் தேடிக்கொண்டிருக்கிறார் என்பது என் எண்ணம்!

    ReplyDelete
  33. @லக்கி,

    அபப்டி தேடித்தான் அவரின் குறைகளை சொல்ல வேண்டுமென்ற இக்கட்டான நிலைக்கு அவர் எப்போதும் தள்ளுவதில்லை. அவரின் எல்லா செய்ககளையும் ஆதரிப்பவர்கள் வேண்டுமென்றால் நல்ல காரணத்தை கூகிள் முதற்கொண்டு தேட நேரிடலாம். :))

    சுரேஷ் கண்ணனின் இந்தக் கட்டுரையை படித்த பின்னே சாருவின் கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. அதற்கு பின்னரே பின்னூட்டமிட்டேன் :))

    ReplyDelete
  34. சுரேஷ் ,
    சாரு இளையராஜா பற்றி மட்டும் தன விமர்சனம் செய்திருக்கிறார் ,இங்கே ஏன் ரஜினியை கொண்டுவந்திர்கள் என்று தெரியவில்லை ,மேலும் ஆவர் சுய தம்பட்டம் அடித்து கொள்ளும் ஆள்ளிலை என்பது அனைவருக்கும் தெரிந்ததே ..,

    இப்படிக்கு
    புத்தக பித்தன்

    ReplyDelete
  35. இங்கே கங்கை கொண்டான் புலிகேசி மற்றும் சந்தன பாண்டியனின் கேள்விகள் மிக முக்கியமானவை .

    கட்டுரை சரியான திசையில் அலசப்படவில்லை. மாறாக திசை திருப்புகிறது. நான் நேர்மையானவன் நல்லவன் என்றும் முன்னமே கருத்து சொல்லும் கந்தசாமிகள் தான் மேலும் அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள்.

    இவர் வெளியிட்ட கருத்துக்கள் எதிர்வினை அல்ல, மாறாக அதே கூட்டத்துடன் சேர்ந்து கொண்டு கும்மி அடித்திருக்கிறது.

    \\ராஜாவின் ஆணவத்தையும் போலி ஆன்மீகத்தையும் அவரது //

    இது ஒரு அப்பட்டமான தனி மனித தாக்குதல். கிளி ஜோசியத்தில் சீட்டு எடுப்பதைப் போல, இளையராஜாவையும் ரஜினியையும் இணைத்து அடிப்படையே இல்லாத அவதூறுகளை அள்ளி வீசியிருக்கிறார் நண்பர் சுரேஷ்.

    எந்த விதத்திலாவது நீங்கள் கூறியிருக்கும் கருத்துகளை நிறுவ முடியுமா? தனிமனித பலவீனங்கள் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பதே மிகவும் அபாயகரமானது.

    ராஜாவின் முன்னோர்களைப் பற்றி ராஜா எப்போதும் ஆணவமான கருத்துக்களே மேடை தோறும் முன்வைகிறாரா? S D பர்மன் , R D பர்மன் M S V மற்றும் பலர் பற்றி ராஜா வெளிப்படுதியதெல்லாம் ஆணவமான கூற்று தானா? இன்னும் ஒரு படி மேலே போய் இவர்கள் முன் நான் ஒரு சிறு புழு என்றாரே அதெல்லாம் தான் ஆணவமா? இதவரை எனக்கு கிடைத்ததெல்லாம் M S V போட்ட பிச்சை என்று மேடையிலே உணர்ச்சி ததும்ப கண்ணீர் வடித்ததெல்லாம் ஆனவவாதியின் உடல் மொழியா?

    திரைப்பாடல்களின் ஒரு சில வரிகளைக் கொண்டு ஏன் ராஜாவின் ஒட்டு மொத்த ஆளுமையை தங்களின் விருப்பத்திற்கு மாற்றி கொள்கிறீர்கள்?

    பாப் மார்லியை குப்பை என்று ராஜா எந்த இடத்திலும் சொல்லவே இல்லை என்பதை பலர் தரவுகளுடன் நிறுவி இருகிறார்கள். அதற்கான எதிர்வினை எல்லாம் இந்த கூட்டம் முன் வைக்கட்டும்.

    ReplyDelete
  36. //இன்னொரு இசைக்கலைஞரை 'குப்பை' என்று சொல்லிவிடுவதாலும் ஆணவவாதியாய் சக மனிதர்களை மதிக்காத தன்மைக்காகவும் ஒரு கலைஞரையும் அவரது படைப்புக்களையும் புறக்கணிக்க முடியுமா? பிடிக்கவில்லை என்று சொல்லி விட இயலுமா? மனித நேயம் இல்லாதவர்களையும் ஆணவக்காரர்களையும் புறக்கணிப்பது; வெறுப்பது என்று ஆரம்பித்தால் இன்று எத்தனை கலைஞர்கள் மிஞ்சுவார்கள்//

    தங்களின் மேற்கண்ட வாதம் தங்களின் பதிவின் சாரம் என்று நினைக்கிறேன், ஷாஜி மற்றும் சாரு இருவரும் விமர்சகர் என்ற நிலையில் அனுகும்போது கலை ஒரு மனிதனை நல்ல மென்மையானவனாக மாற்றும் தன்மை கொண்டது அந்த மென்மை வெளிப்படாதபோது அந்த கலையின் மீது ஒரு வேதனை அல்லது அவநம்பிக்கை வருவதுதான் இயல்பு. தனிப்பட்ட முறையில் சாருவிடம் பேசும்போது ஆணவம் தெரிவதில்லை அவர் எழுத்தில் அது கலையாக வெளிப்படக்கூடும் அது வேறு.

    பழசிராஜாவின் பாடல் ஆசிரியர் மீது குறை கூறிய இளையராஜாவின் பொறுப்புணர்வும், பத்ம விருது கிடைத்தபோது பத்திரிக்கையாளர்களிடம் "கிடைத்தது என்பதில் இருந்து தெரிகிறது வாங்கப்படவில்லை என்பது" என்று கூறியதும் பார்க்கும் போது தெரிகிறது ஷாஜியின் கருத்தில் உள்ள நியாயம்

    ReplyDelete
  37. நண்பர் சி.தவநெறிச்செல்வன்,

    சாரு மற்றும் ஷாஜி எழுதியது விமர்சனம் என்பது நகைப்புக்குரியது. அவர்கள் எழுதிய இரண்டு நீண்ட கட்டுரையில் எங்கே அவர்கள் இசை சார்ந்து விமர்சிகிறார்கள் என்பதை விளக்க வேண்டும்? மற்றபடி சாரு ஆனவமனவறா என்பதுவிவாதத்தை தாண்டி செல்கிறது.
    பழசிராஜா ஒலிநாடா வெளியீடு விழாவில் பாடல் ஆசிரியர் மீது குறை கூறினார் என்பது திட்டமிட்டு பரப்பப்படும் திரிபுவாதமே.
    சாரு மற்றும் ஷாஜியின் கட்டுரை முழுக்க முழுக்க உள்நோக்கம் கொண்டது .
    ராஜாவின் வீடியோ இங்கே:
    http://www.sivajitv.com/events/Ilayaraja-Released-Pazhassi-Raja-Audio-Launch-Video.htm

    ReplyDelete
  38. நண்பர் சி.தவநெறிச்செல்வன்,

    \\"கிடைத்தது என்பதில் இருந்து தெரிகிறது வாங்கப்படவில்லை என்பது" என்று கூறியதும் பார்க்கும் போது தெரிகிறது ஷாஜியின் கருத்தில் உள்ள நியாயம்\\

    இதென்னங்க இது, இவரு இப்படி செஞ்சாரு அதனாலே அவரு அப்படி செஞ்சது நியாயம்னு சொன்ன என்னங்க அர்த்தம். சின்ன புள்ள தனமா இல்லே.

    நான் விருதுக்காக யாரையும் போய் அணுகவில்லை என்று சொல்வது எந்த விதத்தில் தவறு என்று அண்ணன் விளக்குவாரா? அதற்கு முன் பத்திரிகையாளர் என்ன கேள்வி கேட்டு இருப்பார் என்று கூட ஆராயாமல் எழுதுவீர்களா?

    ReplyDelete
  39. தயவு பண்ணி RSSஇல் ஃபுல் ஃபீட் கொடுங்களேன்

    ReplyDelete
  40. \\ராஜா தவிர வேறு எந்த சிறந்த பாடகராவது பாடியிருந்தால் இன்னும் அந்த ஆல்பம் சிறப்பாய் வந்திருக்கும் எனக் குறிப்பிட்டிருந்தேன்.//

    இதில் தங்களது தனிமனித விருப்பு வெறுப்பு தாண்டி ராஜாவின் பாடும் திறமையை கேள்விக்குள்ளகுவதால் இந்த கேள்வி. நீங்கள் சொல்லி இருப்பது சரி என்று நீங்கள் கருதும் பட்சத்தில், திருவாசகத்தில் எந்த பாடலில் எந்த வரியில் ராஜாவின் குரல் ஸ்வரத்தை தவற விட்டிருக்கிறது அல்லது எந்த ஸ்வரத்தை ராஜாவின் குரல் வெளிப்படுத்த திணறுகிறது என்பது தான் நீங்கள் வைக்க வேண்டிய விமர்சனம். என் கருத்து என்று நீங்கள் கூறிவிட்டால் வேறு சிறந்த பாடகருக்கு பரிந்துரைக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது?

    உங்கள் கட்டுரை நேர்மையாக எழுதியிருக்கும் பட்சத்தில், நான் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு விளக்கம் தர வேண்டியது தங்களது கடமை என்று நான் கருதுகிறேன். இதை விடுத்து அறிவு ஜீவிகள்[?] என்னை போன்ற பாமரர்களுக்கு விளக்க முடியாதென்றால், உங்களால் "புறக்கணிக்க முடியாதவர்களைப்" போலவே நீங்களும், சொல்வது தவறாக இருந்தாலும் மீண்டும் மீண்டும் சத்தம் போட்டு கூவி விட்டு தேவையான கேள்விகள் வரும்போது கள்ள மௌனம் சாதித்து விடுங்கள்.

    ReplyDelete
  41. //
    இன்னொரு இசைக்கலைஞரை 'குப்பை' என்று சொல்லிவிடுவதாலும் ஆணவவாதியாய் சக மனிதர்களை மதிக்காத தன்மைக்காகவும் ஒரு கலைஞரையும் அவரது படைப்புக்களையும் புறக்கணிக்க முடியுமா?
    //

    சாரு கூடத்தான் ஜெயமோகன் புத்தகத்தை பொது மேடையில் கிழித்துப்போட்டார். அதுக்காக...! சாரு எழுதுவதை நாம் படிக்காமலா இருக்கோம்...!

    ReplyDelete
  42. ...மேலும்,
    திருவாசகம் என்பது ஒரு உள்ளார்ந்த அனுபவம் சார்ந்த படைப்பு. சிவன் மீது உள்ள வெறித்தனமான பக்தி…காதல்! மற்றும் தன்னிலை மறுத்து அவனே தஞ்சம் என்னும் என்னம் தோற்றுவிக்கும் ஒரு பிரபஞ்ச பிதற்றல்/கதறல். இந்த கதறலை, அதில் உள்ள பாவத்தை 'ராஜாவை' தவிர்த்து வேறு யாரெனும் தொழில்முறை பாடகர்கள் பாடியிருந்தால், தங்கள் அதி மேதாவித்தனம், உத்தி மற்றும் கமகங்கள் மூலமாக சாகடித்து இருப்பார்கள்.
    எனக்கு நன்றாக நினைவுள்ளது 'பொல்லா வினையேன்' பாடலை முதல் முறையாக Fர். ஜெகத் கஸ்பர் அவர்களின் ஸ்டுடியோவில் வைத்து கேட்டு விட்டு, குழுமியிருந்த ரசிகர்கள் முன் எழுந்து நான் சொன்னது "நான் ஒரு நாத்திகன், ஆனால் ஆன்மீக அனுபவம் / உச்சநிலை, என்பது என்னவென்று இன்று புரிந்து கொண்டேன்". அது மட்டுமே அந்த இசையாக்கத்தின் மய்ய நோக்கம் என்று இன்று வரை நினைக்கிறேன். சிவனை புரியாதவர்களுக்கு புரிய வைக்கும் அல்லது அறிமுகப்படுத்தும் ஒரு முயற்சி. அவர்கள் என் போன்ற கடவுள் மறுப்பாளராய் இருக்கலாம் அல்லது திருவாசகத்தை அதன் மொழியால் அறிந்து கொள்ள முடியாதவர்களாய் இருக்கலாம்.
    ஒரு ஜேசுதாஸோ, பாலசுப்பிரமனியோ பாடியிருந்தால்:
    "புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
    பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
    வல் அசுரராகி முனிவராய்த் தேவராய்ச்"

    என்று உச்சஸ்தாயியை அடைந்து விட்டு அடுத்த வரியில்

    "செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள்
    எல்லாப் பிறப்பும் பிறந்திலைத்தேன்"

    என சடுதியில் கிழிறங்கும் ஸ்வரங்களை 'பாவத்தோடு' அடைய சிறிது சிரமபட்டிருப்பார்கள். சங்கீத விதிகளுக்கு உட்பட்டும், விலகியும் தங்கள் அதி புத்திசாலிதனத்தினால் அங்கு ஒரு ராக ஆலாபனை நிகழ்த்தி காட்டி இருப்பார்கள். ராஜாவின் குரலில் வெளிப்படும் அந்த சரனடைதலும், அழுகையும் அவர்களால் தொட்டு இருக்க முடியாது.
    அடுத்து வரும் வரிகளில்
    "உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யே..."
    என்பதில் உள்ள ஓங்காரத்தை ஏன் 'ஓம் சிவோஹம்'மில் உள்ளது போல் உச்சத்தில் ஒலிக்காமல் கீழுக்கும் மேலுக்கும் இடையில் இருத்தி பனிவோடு பாட வேண்டும் என்பதை அவர்களுக்கு சொல்லி புரிய வைப்பதற்க்கு கூட ராஜாவால் முடியாது. மாணிக்கவாசகரிலும்/சிவனிலும் அவர் கண்டதை அவர் எப்படி மற்றவர்களுக்கு புரிய வைத்து பாட வைப்பது? அதற்க்கு அவர் பாடித்தான் காட்ட வேண்டும். அதைத்தான் செய்து இருக்கிறார், ஒட்டு மொத்த உலகம் முன்னாலும்.
    இனி யாராவது அவரை நகல் செய்து பாடி கொள்ளட்டும்.
    அப்படி பாடினாலும், ராஜாவின் குரலில் "கறந்த பால் கன்னலோடு நெய்கலந்தாற் போல" என்ற வரிகளில் மிளிரும் அந்த கருனையும் அன்பும் எவருக்கேனும் வாய்க்க பெற்றால் அவர்கள் பாக்கியவான்கள்!

    இதே போன்ற ஒரு சப்பை காரணத்தை ஷாஜியும் முன் வைக்கிறார். பழசிராஜாவின் அக சிறந்த பாடலாய் 'அம்பும் கொம்பும்'மய் படைத்து விட்டு அதில் சுமாரான பாடகியான 'மஞ்சரி'யை பாட வைத்து கெடுத்து விட்டார் ராஜா என்று. அது ஒரு பழங்குடியினர் பாடும் பாடல் என்பதும், அந்த பாட்டில் தேர்ந்த மற்றும் ஸ்ருதி சுத்தமான குரல்வளம் தேவை இல்லை என்பதும் சாதாரன ரசிகர்கள் நமக்கே புரிகிறது. பெரும் இசை விமர்சகர் இவர்... ஹும்ம்ம். பாவம் ராஜா, அதே படத்தில் 'குன்னத்து கொன்னக்யம்' பாடலை சித்ராவை பாட வைத்த அவருக்கு இந்த பாட்டையும் சித்ராவை பாட வைக்க வேண்டும் என்று தோன்றவில்லை அல்லது அதை சொல்லுவதற்க்கு கூட சாரு/ஷாஜி போன்ற அறிவுஜீவிகள் அவர் அருகில் இல்லை! என்ன செய்வார்?

    நெம்ப கஸ்டம்ன்ணேன்!

    ReplyDelete
  43. tell me raja is monster.....i dont care about that as far as i m interested in his music(only music).......no one can be 100percent "nallavan".
    there r some aspects we like and some we dont...
    a good artist may not always be a good person to society...its not a must.

    ReplyDelete
  44. நண்பர் புலிகேசி,

    அருமையான அலசல். மாற்று கருத்து ஏதும் இல்லை. இங்கே பிற பாடகர்களைப் பற்றி நீங்கள் குறிப்பிட்ட கருத்துக்கள் திசை திரும்பக்கூடலாம் என்பதனால் தெளிவு படுத்த வேண்டியதுஅவசியமாகிறது.

    புலிகேசியின் வாதத்தில் அடுத்த பாடகரை குறைவாக மதிப்பிடவேண்டிய எண்ணம் இல்லை என்றே நினைக்கிறன். மாறாக பாடகர்களது கட்டற்ற பயிற்சி முறை அல்லது [professionalism] எளிமையான ஆத்திகவாதிக்குரிய குரலானதாக வெளிப்படுவது இயல்பாக இருக்காது என்பது தான் புலிகேசியின் வாதம்.
    இதில் ஏதேனும் மாற்ற அல்லது மேலும் எதாவது தகவல் இருந்தால் அவரே எழுத வேண்டும் என்பது என் விருப்பம்.

    இதை விடுத்து ஒற்றை வரியில் தொனிக்கும் எந்த வித பொறுப்புணர்வும் இல்லாத வம்படிக்கும் விமர்சன முறையை கையாள்பவர்கள் புரிந்து கொள்வார்கள் என்றே நம்புவோம்.

    ReplyDelete
  45. நண்பர் சுரேஷ் கண்ணனுக்கு,

    ராஜாவின் ஆன்மீகம் போலியானது என்று அடுத்தவரின் தனி மனித விருப்பு வெறுப்புகளை விமர்சனமாக வைக்கும் உங்களுக்கு, எல்லா புகழும் இறைவனுக்கே என்று மேடையில் முழங்கிய "பச்சைத்" தமிழனுடையது மட்டும் "ஒரிஜினல் அசல் அக்மார்க்" ஆன்மீகமா? அல்லது தோழர்களை புரட்சிக்கு ஒருங்கிணைத்து அறைகூவல் விடுக்கும் எழுச்சி முழக்கமா?

    நிற்க, இங்கு ரஹ்மானை விமர்சிப்பதோ அல்லது விவாதத்தை திசை திருப்ப வேண்டும் என்பதோ என் நோக்கம் அல்ல, மாறாக போலி ஆன்மீகம் என்ற ஒன்று உண்டா என்பதற்கான வினாவே? இது என்னுடைய disclaimer .

    தக்க இடங்களில் தங்களது பகுத்தறிவு பல்லிளித்து தன்னுடைய நேர்மையை காட்டி விடுமா? தோழர் விளக்குவாரா?

    வினாவுடன்
    ஸ்ரீதர்

    ReplyDelete
  46. நண்பர் புலிகேசி,

    மஞ்சரி பற்றிய "நேர்மையாளர்" ஷாஜியின் விமர்சனமும் உலக புகழ் சாருவை போன்றதொரு எந்த அடிப்படையும் இல்லாத ஒற்றை வரி குற்றச்சாட்டு தான். யார் அதிகமாக முதுகு சொரிந்து விடுவார்களோ அதைத்தான் இவர்கள் எதிர்வினை என்று பிறரிடம் காட்டிக்கொள்ளும் அசாத்தியமான நேர்மை படைத்தவர்கள்.
    சமீபத்தில் கூட, பார்பனர்களின் கைக்கூலி என்று ராஜாவை திட்டமிட்டு விமர்சனம் செய்துவிட்டு அதற்கான எதிர்வினை ஷாஜியிடம் இருந்து எதிர்பார்கிறாராம்.
    பலி ஓரிடம் பாவம் ஓரிடம்!
    அந்த நேர்மையாளர் கொடுத்த link தான் இந்த கட்டுரையும். இதன் நேர்மையும் எப்படி இருக்குமென்று ஊகிக்க முடிகிறதல்லவா.

    ReplyDelete
  47. //சாரு கூடத்தான் ஜெயமோகன் புத்தகத்தை பொது மேடையில் கிழித்துப்போட்டார்.//
    இவர்கள் தான் கருத்து சுதந்திரம் பற்றியும் மனித அபிமானம் பற்றியும் முரசு கொட்டுபவர்கள். வெட்கம்!

    ReplyDelete
  48. ம்ம்ம்... எப்படியெல்லாம் limelightக்கு கீழேயே நாற்காலி போட்டு அமர்ந்திருக்கணுங்கிற ஆசையில அடிப்படை(இசை) விசயங்களில் கொஞ்சமும் பரிச்சியமே இல்லாமல் கூட எவ்வளவு ஈசியாக விமர்சிக்க வைக்கிறது மனுசன, அந்த Ego.

    இங்கே "புலிகேசி" சொன்ன கருத்துக்களை கவனத்தில நிறுத்திப் பார்ப்பது அவசியமெனப் படுகிறது.

    ReplyDelete
  49. //உதாரணம்: “ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு”.இதில் வரும் வயலின் தீற்றல்கள் மற்றும் வேறு இசைக் கருவி நாதங்கள். இதில் folk and western classtical என்று இரண்டு மணம் வரும்.western classticalஐ
    உற்றுப்பார்த்தால்தான் தெரியும். இந்தப் பாட்டிற்கு அதான் இவ்வள்வு இனிமை என்று எனக்கு ஒரு நணபர் விளக்கிக் காட்டினார்.//
    I would like to add more of this song after the first line 'Rasathi unnai kannatha nenju katadi polachu there will be a long trumpet like music playing the music instrument used is "Bagpiper" which is basically and UK instrument the melody of that piece is mind blowing,hear it to believe it.

    ReplyDelete
  50. http://www.vallinam.com.my/issue14/column1.html

    மிகப்பெரிய புத்திசாலித்தனமோ உயர்ந்த கற்பனை வளமோ
    மேதைகளை உருவாக்குவதில்லை.
    மாறாத அன்பு, அன்பு, அன்பு மட்டுமே
    ஓர் உண்மையான மேதையின் ஆன்மாவாக இருக்கிறது
    - மொஸார்ட்

    ReplyDelete
  51. //இன்னொரு இசைக்கலைஞரை 'குப்பை' என்று சொல்லிவிடுவதாலும் ஆணவவாதியாய் சக மனிதர்களை மதிக்காத தன்மைக்காகவும் ஒரு கலைஞரையும் அவரது படைப்புக்களையும் புறக்கணிக்க முடியுமா? பிடிக்கவில்லை என்று சொல்லி விட இயலுமா? மனித நேயம் இல்லாதவர்களையும் ஆணவக்காரர்களையும் புறக்கணிப்பது; வெறுப்பது என்று ஆரம்பித்தால் இன்று எத்தனை கலைஞர்கள் மிஞ்சுவார்கள்.//

    சரியான வார்த்தைகள்.. எனக்கும் ராஜாவைப் பிடிக்காது.. ஆனால் பாடல்களில் அவரை ’மிஞ்சி’ இன்னும் யாரும் வசீகரிகவில்லை..அவரின் 80களில் வந்த பாடல்களுக்கு இணையாக இதுவரை வேறு யாரும் கொடுத்ததில்லை.

    ReplyDelete