Wednesday, December 17, 2008

கேசவனும் ஜெயமோகனும்

தினமும் உறங்கப் போவதற்கு முன்னால் ஏதாவதொரு முழு அல்லது அரைத் திரைப்படத்தைப் பார்ப்பது வழக்கம். எப்படியும் உறங்கப் போக பின்னிரவு ஒரு மணியாவது ஆகிவிடும். Quentin Tarantinoவின் இயக்கத்தின் பகுதியையும் உள்ளடக்கிய Four Rooms திரைப்படத்தை இயன்ற வரை பார்த்து விட்டு உறங்கப் போக நேற்றிரவு திட்டமிட்டேன். ஆனால் offline-ல் சேமித்து வைத்திருந்த முக்கியமான வலைப்பதிவுகளை வாசிக்காமலிருந்ததும் நினைவுக்கு வந்தது. அதை சிறிது நேரம் வாசித்து விட்டு பின்னர் திரைப்படத்தை காணலாம் என்று முடிவு செய்தேன். ஜெயமோகனின் வலைப்பதிவிலிருந்த 'மத்தகம்' குறுநாவல் கண்ணில்பட்டது. நீள நீளமான ஐந்து அத்தியாயங்கள். ஒரு அத்தியாயத்தை மாத்திரம் இன்று படித்து முடித்து விட்டு பின்னர் திரைப்படத்தை காண்போம் என்று ஆரம்பித்தேன்.

ஆனால்....

கேசவன் தன் துதிக்கையால் என்னை இழுத்து படைப்புக்குள் தள்ளிவிட்டான். ஆவல் தாங்காமல் அடுத்த அத்தியாயத்திற்குள்ளும் நுழைந்தேன். மூன்று... நான்கு... ஐந்து.... ஒரே மூச்சில் முழுவதையும் படித்த முடித்தவுடன்தான் சூழலே புலனாயிற்று. வாசித்துக் கொண்டிருக்கும் போதே உள்ளே ஏதோ ஒன்று தொடர்ந்து வாசிக்காதே.. போதும்.. என்று எச்சரித்துக் கொண்டேயிருந்தது. உடம்பெங்கும் குளிர் படர்ந்து அடங்கியது. படைப்பு முழுவதையும் தியானத்திற்கான மனநிலையுடன் வாசித்திருக்கிறேன் என்று தோன்றியது. வாசிப்பு நிறைந்தவுடன்தான் சுயநினைவிற்கு வந்து நாற்காலியின் பின்னால் ஒய்வாக சாய்ந்தேன். இறுகப்பபற்றிக் கொண்டிருந்த கைகள் தளர்வடைந்தன.

பின்னாலிருந்து யாரோ விட்ட பெருமூச்சு கழுத்தில் முட்டிற்று. யானையோ? திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தேன். பின்னால் ஒரு யானை நின்றிருந்தால் கூட பெரிய ஆச்சரியமாயிருந்திருக்காது என்று பிற்பாடு தோன்றிற்று. கேசவனின் பிளிறல் எழுத்தாக படரும் போதெல்லாம் அது ஒலியாக மாறி என் காதில் ஒலித்தது. தம்புரானும் கேசவனும் சந்திக்கும் இடங்களிலெல்லாம் மனம் மெல்ல உற்சாகமடைவதை கவனித்தேன். வாசிப்பின் ஊடே அந்தக் கட்டங்களை மனம் ஆவலுடன் எதிர்பார்த்தது.

Photobucket

யானையும் ரயிலும் எந்த வயதிலும் பார்க்கச் பார்க்கச் சலிப்பு ஏற்படுத்தாது என்பது உண்மையோ என்னவோ. வேண்டுதலுக்காக ஒருமுறை சபரிமலை செல்லும் போது இயற்கையாகத் திரியும் காட்டு யானைகள் எங்காவது தூரத்தில் தட்டுப்படுமா என்று மனம் அலைபாய்ந்தது. நாங்கள் கடந்தவொரு இடத்தில் யானையின் சாணத்தை கண்டேன். சாணம் இளஞ்சூடாக இருந்தால் இப்போதுதான் அந்த இடத்தை கடந்திருக்கும் என்று ஒருவர் துப்பறிந்து திகிலுடன் சொன்னார். என்னை விட குருசாமிக்குத்தான் மிக ஆவலாக இருந்தது. இருபத்தைந்து வருடங்களில் அவர் ஒரு முறை கூட யானைகளைப் பார்த்ததில்லை என்றா¡ர். சீசன் சமயங்களில் யானைகள் அங்கு வராது என்றார்கள் கடைக்காரர்கள். ஏதோவொரு வருடத்தின் சீசனின் இறுதிக் கட்டத்தில் மனித நடமாட்டம் குறைந்து போய் பெருத்த பிளிறல் ஒன்று கேட்டதையும் கடைக்காரர்கள் அலறியடித்து ஒன்று கூடி கையிலிருந்த டப்பாக்களை அடித்து ஒலி எழுப்பியதில் அது காணாமற் போனதையுடன் அவர் விவரிக்க சுவாரசியமாய் கேட்டுக் கொண்டிருந்தோம்.

ஜெயமோகனின் முந்ததைய சிறுகதைகளிலும் யானைகளும் பாகன்களும் உலவியிருக்கிறார்கள். 'காடு' நாவலில் ஒரு கொம்பன் புத்தகம் முழுக்க உலவிக் கொண்டிருப்பான். குட்டப்பன் ஒரு முறை சொல்வான். (நினைவிலிருந்து தோராயமாக) "காட்டுக்கு ராஜா என்று சிங்கத்தை தெரியாத்தனமா சொல்லிப் போட்டான்கள். சே..என்ன ஒரு மிருகம் அது. கிண்ணத்தை களவாண்டவன் மாதிரி எப்பவும் ஒரு தாழ்ந்த பார்வை. ராஜ கம்பீரம்னா அது யானையல்லோ"... களவாணி மாதிரி பதுங்கிப் போகும் சிங்கத்தின் பிம்பம் மனதில் வந்து வாசிக்கும் போதெல்லாம் சிரிப்பை வரவழைக்கும் பகுதி அது.

ஆனால் 'மத்தகம்' போன்றதொரு பெருத்த அதிர்வை அவை ஏற்படுத்தினதில்லை. குறுநாவலை வாசித்து முடித்து சில கணங்களுக்கு எதுவும் செய்யத் தோன்றாமல் அமர்ந்திருந்தேன். உறங்கச் செல்வதற்கு முன் பல் துலக்கும் செயலையும் நேற்று தவிர்த்து விட்டிருந்தேன். மனம் முழுக்க கேசவனே நிரம்பியிருந்தான். வழக்கத்திற்கு மாறாக உடனே உறங்க முடியாமல் குறுநாவலின் பல வரிகள் மனதிற்குள் ஓடிக் கொண்டேயிருந்தன. பக்கத்தில் படுத்திருந்த மகள் தூக்கத்தில் காலை தூக்கி என் மீது போட்டாள். யானையின் தும்பிக்கை மேலே விழுந்தாற் போல் தோன்றியது. சிரிப்புடன் எண்ணங்களை வேகமாக கலைத்தபடி உறங்கப் போனேன்.

()

என்னால் இதைப் போன்றதொரு படைப்பை எழுத முடிந்திருக்குமா என்று நப்பாசையுடன் யோசித்துப் பார்த்தேன். மனம் ஒரு கணம் பதறி அடங்கியது. ஒருவேளை முடியலாம்தான். ஆனால் அதற்குப் பின்னால் தேவைப்படும் பிரம்மாண்டமான உழைப்பும் காலமும் மலைக்க வைத்தது. நூறு வருடங்கள் பின்னோக்கிய மலையாள தேசத்தின் கலாச்சாரத்தையும், தம்புரான்களின் சடங்கு, சம்பிரதாயங்களையும் பற்றின தரவுகள் தேவை. யானைகளையும் பாகன்களையும் அருகிலிருந்து குறைந்தது ஒரு வருடத்திற்காவது கூர்ந்து அவதானித்திருக்க வேண்டும். யானையின் சாணத்தை அதன் வெதுவெதுப்புடன் அள்ளி முகர்ந்திருக்க வேண்டும். தமிழின் வார்த்தைகளை அதனுடைய அழகியல் உணர்வுடன் நுட்பமாக பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். அதற்கும் மேலாக ஏதோ ஒன்று நிச்சயம் இருக்க வேண்டும். அதைக் கண்டுபிடித்துவிட்டால்....

ஜெயமோகனின் 'ஏழாம் உலகம்' படித்து விட்டு இடிந்து போய் உட்கார்ந்திருந்தது நினைவுக்கு வந்தது. அவர் மற்ற எழுத்துகளின் மீது எனக்கும் விமர்சனங்கள் உண்டு. 'எனது இந்தியா' கட்டுரை குறித்து சொல்ல என்னிடமும் சில வார்த்தைகள் உண்டுதான். ஆனால் இலக்கியம் என்று வருகிற போது அவருக்குள் ஒரு பிரம்ம ராட்சஸம் ஏறி அமர்ந்து கொள்ளும் போல. அவரின் சமீபத்திய பெருங்கதையான 'ஊமைச் செந்நாய்' கூட என்னை பெரிதாக கவரவில்லை. ஆனால் இந்த 'மத்தகம்'தான்...

யானை குறித்த பல நுட்பமான சங்கதிகள் இந்தக் குறுநாவலில் பொதிந்துள்ளன. சில பெருத்த வியப்பை ஏற்படுத்தினாலும் சில விஷயங்கள் அதீதமானதோ என்று எண்ண வைக்கிறது. யானை தன்னுடன் கூடவே உள்ள பாகன்களை விட எப்பவோ ஒரு முறை சந்திக்கிற தம்புரானைத்தான் மேலே அமர வைக்க சம்மதிக்கும் என்பது என் அறிவுக்கெட்டிய வரையில் ஒப்புக் கொள்கிறாற் போல் இல்லை. ஒருவேளை சொல்ல முடியாது. கேசவன் அப்படிப்பட்டவனாக இருக்கக்கூடும். ஜெயமோகன் மிக சுவாரசியமாக கட்டமைத்திருக்கும் கேசவனின் ஆளுமையில் இம்மாதிரியான நெருடல்களை பொருட்படுத்த தேவையில்லை என்றுதான் தோன்றுகிறது.

இப்போதைக்கு இதை எவற்றையும் ஆராய்வதாய் இல்லை. இன்னும் அந்த வாசிப்பனுபவம் தந்த பிரமிப்பிலிருந்து விலகாமலேயே இருக்க விரும்புகிறேன்.

()

எந்தவொரு சர்வதேச இலக்கியப் படைப்பாளியின் தரத்திற்கு சற்றும் குறைவில்லாமல் நம்முடைய தமிழிலும் படைப்பாளிகள் இருக்கிறார்கள் என்கிற பெருமித உணர்வு சாத்தியப்படுவதற்கு ஜெயமோகன் போன்ற ஆளுமைகள் காரணமாய் இருக்கிறார்கள். 'ஜெயமோகன் என்னுடைய ஆசான்' என்றார் ஜெயகாந்தன் ஒருமுறை. வயதான காலத்தில் ஏன் இப்படி அலட்டிக் கொள்கிறார் என்று அப்போது தோன்றியது. உணர்ந்துதான் சொல்லியிருக்கிறார் என்று இப்போது தோன்றுகிறது.

மத்தகம் - குறுநாவல் - ஜெயமோகன்

அத்தியாயம் 1,2 | அத்தியாயம் 3 | அத்தியாயம் 4 | அத்தியாயம் 5

suresh kannan

17 comments:

  1. அம்மாடி யானைய பார்த்தா

    பேமாக்கீது

    ReplyDelete
  2. ஜெயமோகனின் எழுத்து வீர்யமிக்கது். சாரு போன்ற கரமைதுன ஆசாமிகளுக்கெல்லாம் சுட்டுப் போட்டாலும் இவ்வாறு எழுத வராது. ஆத்தா அம்மா என்றே காலம் தள்ளி வந்து வி்ட்டார்.

    ReplyDelete
  3. ஒரு நல்ல குறுநாவலுக்கு லின்க் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி.

    ReplyDelete
  4. yes boss
    very nice one to read...cant gorget "kesavan&thamburan"
    what a relationship between them?!

    ReplyDelete
  5. என்ன ஆச்சு? நல்லாத்தானே இருந்தீங்க? உடம்பு கிடம்பு சரியில்லையா? நல்ல டாக்டரா பாருங்க.

    உடம்பப் பாத்துகங்க.

    ReplyDelete
  6. ஒரு வாழ்நாள் முழுவதும் யானைகளைக் கூர்ந்து அவதானித்தால் கூட இப்படி எழுதமுடியுமா என்று தெரியவில்லை.

    ”நாமெல்லாம் மணம் பிடிக்கது மூக்காலே. ஆனை மணம் பிடிக்க அதுக்க ஆத்மாவலயாக்கும்டே”

    Amazing ..

    ReplyDelete
  7. ஜெயமோஹனிடம் எனக்குப் பிடித்த விஷயங்கள் இரண்டு.

    1. அவரது அயராத உழைப்பு விவரங்களைத் தேடி.
    2. அதைப் படைப்பாக்கி அளிக்கும் வேகம்.

    தமிழினியில் இதைப் படித்தபோது எழுந்த பிரமிப்பு இன்னும் அடங்கவேயில்லை. கேசவனுக்கும் ராஜவுக்கு இருக்கும் உறவைச் சொன்ன விதமும், பாகன்கள் தவறிழைக்கும் ஒவ்வொரு முறையும் அதை சகிக்காமல் உறுமும் விவரனைகளுமென ஒரு தேர்ந்த வாசிப்பனுவம் இந்த குறு நாவல்.

    இலக்கியப் பரப்பிற்கு வெளியே அவரது ஆளுமையின் மீதெனக்கு சில விஷயங்களில் ஒப்புமையில்லயெனினும் படைப்பாளியாக அவரது பங்கு பிரமிக்க வைப்பத்து.

    ReplyDelete
  8. ம்ம்ம் ... பரிதாபம்தான் :)

    A so called பிரம்மாண்டத்தில் வாசகனைக் கட்டிப்போட யத்தனிக்கும் இலக்கியம் ... அது நாவலோ, குறுநாவலோ, கவிதையோ ... அற்பத்தனத்தின் உச்சம் ... அதற்கு ஆட்படும் வாசகர் எந்நாளும் எழுத்தாளரை உச்சி மோந்து கொண்டிருக்க வேண்டியதே விதி.

    சுயமோகனின் அற்ப உத்தி இலக்கியம் எந்நாளும் இதைத் தாண்ட இயலாது ...

    நீங்கள் எந்த மேற்கத்திய இலக்கிய மேதைகளை கற்பனை செய்துகொண்டு சுயமோகன் அவர்களுக்கு ஒப்பானவர் என்று சிலாகிப்பதை விளக்குவது உங்களுக்கும் ... வாசகர்களுக்கும் ... அனைவருக்கும் நல்லது.

    யோசிக்க வேண்டிய தொடர்புடைய மற்றொரு விடயம்.

    அசோகமித்திரன் பல சந்தர்ப்பங்களில் வெகுவாக புகழ்ந்த அமெரிக்க நாவலாசியர் ஃபாக்னர். ஃபாக்னரின் நாவல்களை வாசித்த எவராவது அவரது எழுத்துக்களின் சிறு பனிமுனையாவது அசோகமித்திரன் எட்ட முடிந்திருக்கிறதா என்று யோசிக்க வேண்டும்.

    இயலவில்லையெனில் ஏன் என்ற கேள்வி.

    ஃபாக்னர் மீது வெள்ளை இனவெறியாளர் என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டதுண்டு.

    ஆனால், அவை அனைத்தையும் மீறி அமெரிக்க கருப்பின எழுத்தாளர்கள் மட்டுமின்றி தற்சமயம் மிகப்பல விமர்சகர்கள் அவருடைய எழுத்துக்கள் எங்ஙனம் அமெரிக்க வெள்ளை இன வாழ்வை விமர்சனக் கண் கொண்டு நோக்குகிறது என்று காட்டத் தொடங்கியுள்ளனர்.

    மிஸ்டர் அசோக்கினுடைய எழுத்துக்களிலோ அல்லது திருவாளர் சுயமோகனுடைய எழுத்துக்களிலோ மற்றவர்களுடைய பார்வைகளுக்கு என்ன ஆரோக்கியமான இடம் இருந்திருக்கிறது என்ற கேள்வியுடன் இதை யோசிக்க வேண்டுகிறேன்.

    இலக்கியம்/கலை என்பவை புல்லரிப்புக்கான விசயங்கள் அல்ல.

    (புரச்சிகர வாய்ச்சவடால் இலக்கியம் குறித்து பேசுபவனல்ல என்பதை இதுகாறும் நான் எழுதியவற்றை வாசித்திருப்பின் அறிந்திருக்க வாய்ப்புண்டு என்று கருதுகிறேன்.)

    இலக்கியம்/கலை இவை வாழ்வை, மானுட வாழ்வு மீறிய இன்னொரு புலத்திற்கு மானுடர்களை இழுத்துச் செல்பவை (எல்லா எழுத்துக்களும் அல்ல.) அவற்றின் அரசியல் இதற்கு உட்பட்டவை.

    இதன் சிறு அம்சம் அற்ற எழுத்துக்கள் சுயமோகத்தை வளர்ப்பவை என்ற அளவில் தெங்கி நிற்பவை.

    அத்தகையவற்றை எழுதி புளகாங்கிதம் கொள்ளும் 'எளுத்தாளர்களும்' வாசித்து புல்லரித்து உறக்கமற்ற இரவைக் கழிக்கும் வாசகர்களும் இயல்பான நிகழ்வுகளே :)

    அன்புடன்
    வளர் ...

    ReplyDelete
  9. இந்த வார இறுதியில் படிச்சுட வேண்டியது தான்

    ReplyDelete
  10. //யானையும் ரயிலும் எந்த வயதிலும் பார்க்கச் பார்க்கச் சலிப்பு ஏற்படுத்தாது என்பது உண்மையோ என்னவோ. //

    கூடவே விமானமும்

    ReplyDelete
  11. //கிண்ணத்தை களவாண்டவன் மாதிரி எப்பவும் ஒரு தாழ்ந்த பார்வை. ராஜ கம்பீரம்னா அது யானையல்லோ"... களவாணி மாதிரி பதுங்கிப் போகும் சிங்கத்தின் பிம்பம் மனதில் வந்து வாசிக்கும் போதெல்லாம் சிரிப்பை வரவழைக்கும் பகுதி அது.//
    I laughed too!! :-)))))))))))))
    Enjoyed reading your post.

    ReplyDelete
  12. அண்ணாத்தே வளர்..

    இன்னின்னது எலக்கியம், இன்னின்னது எலக்கியமுல்லங்கறத கொஞ்சம் தெளிவா எங்கள மாதிரி ஆளுங்களுக்கு விளக்கினா ரெம்ப நல்லாருக்கும்.

    ReplyDelete
  13. //(புரச்சிகர வாய்ச்சவடால் இலக்கியம் குறித்து பேசுபவனல்ல என்பதை இதுகாறும் நான் எழுதியவற்றை வாசித்திருப்பின் அறிந்திருக்க வாய்ப்புண்டு என்று கருதுகிறேன்//

    அய்யோ பாவம் வளர்மதி , எழுதவும் துப்பில்லை . எழுதினாலும் எவரையும் கவர்வதில்லை , (வளர்மதி , நெசமா மத்தகம் படிச்சீங்களா ?

    போய் சுகுணாவிடம் ஜாதி சண்டை போடவும் , அதுகுதான் நீங்க ...

    ReplyDelete
  14. //சுயமோகனின் அற்ப உத்தி இலக்கியம் எந்நாளும் இதைத் தாண்ட இயலாது ...//

    எழுத்தாளர் எழுதிய கதையை பற்றி ஏதாவது விமர்சிக்கலாம் , சுமோகம் அது இது என எழுத வேண்டாம் ,

    கேசவன்

    ReplyDelete
  15. வளர் அண்ணாத்தே.. நம்ம கொஸ்ஸினுக்கு பதில சொல்லாம எஸ்கேபு ஆகிறிங்களே..

    இன்னின்னது எலக்கியம், இன்னின்னது எலக்கியமுல்லங்கறத ஒரு சார்ட்டு போட்டு கொடுத்தீங்கின்னா சூப்பராட்டும் இருக்கும்...அடிக்கடி புல்லரிச்சி புல்லரிச்சி எங்கள மாதிரி ஆளுங்க எல்லாம் நெம்ப கெஷ்டபடுறோம்..

    அப்றம் வேற என்ன விஷேஷம்.. ”தார்மீகக் கோபம் கொண்டு பல் உடைத்தல்”, பிறகு ”ஃபுல் அடித்தல்”, அடித்த குழப்பத்தில் ஒரு சார்ட் ஃப்லிம் எடுத்தல் போன்ற தங்களின் திருப்பணி தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. //அப்றம் வேற என்ன விஷேஷம்.. ”தார்மீகக் கோபம் கொண்டு பல் உடைத்தல்”, பிறகு ”ஃபுல் அடித்தல்”,//
    :):) ஸூப்பர் மாமே...

    //இலக்கியம்/கலை இவை வாழ்வை, மானுட வாழ்வு மீறிய இன்னொரு புலத்திற்கு மானுடர்களை இழுத்துச் செல்பவை //

    இதத்தாண்ணே ஜெ.மோ எளுதுறாரு.."புரச்சி"கர வாய்ச்சவடால்
    இல் லண்ணே...

    மறுபடி ஒரு புல் அடிக்கவும்...:)

    ReplyDelete