Monday, February 08, 2010

யுகமாய்த் தொடரும் வரலாற்றுப் பகை

எம் மக்காள்! ஆயிரத்தில் ஒருவன் என்கிற இந்த ஆடும் கூத்தை யான் சத்யமான கொட்டகையில் கண்டனன். நம்புங்கோள்.

இத்திரைப்படம் குறித்து வந்திருக்கும் இணைய விமர்சனங்கள் ஆயிரத்தைத் தாண்டியிருக்கும் என்கிற அச்சமிருந்தாலும் இதுவும் ஆயிரத்தில் ஒன்றாய் இருக்கட்டுமே என்கிற துணிச்சலில்  எழுதுகிறேன். அதுவரை வந்திருந்த விமர்சனங்களை மாத்திரமே வாசித்து முன்னதாக என்னால் எழுதப்பட்ட இந்த இடுகைக்கும் படத்தை நிஜமாகவே கண்டு எழுதப்போகும் இந்த இடுகைக்கும் அதிக வித்தியாசமேதுமில்லை என்பதை அறிய எனக்கே ஆச்சரியமாக இருந்தது.

இந்தப் படத்தை மிக மூர்க்கமாக நிராகரிக்கும் விமர்சனங்களையும் வாசித்தேன். அவரவர்களுக்கான அரசியல் மற்றும் புரிதலின் பார்வையில்தான் ஒரு பிரதியை அணுகுகிறார்கள் என்றாலும்  'ஆ.ஒ.வை விட வேட்டைக்காரனே தேவலை' என்கிற தொனியில் எழுதப்பட்ட பதிவுகள் சற்று அதீதமாய் மாத்திரமல்ல அபத்தமாயும் தோன்றியது. க்ளிஷேக்களுடன் தொடர்ந்து உருவாகிக் கொண்டிருக்கும் தமிழ்ச்சினிமா குப்பைகளின் மத்தியில் செல்வராகவன் போன்றோர் உருவாக்கித் தரும் புதிய முயற்சிகளை ஆதரிக்கவில்லையென்றாலும் தம்முடைய பலமனத்தையும் திரட்டி நிராகரிப்பது நல்ல சினிமா ஆர்வலர்களின் செயல் அல்ல.

இந்த மிகுபுனைவுப் படத்தின் காட்சிக் கோர்வைகளை பல்வேறு குறியீடுகளுடன் இணைத்துப் பார்த்த (அப்படி பார்க்காவிடில் இவர்களை புத்திஜீவிகள் என்று யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்று நினைக்கிறார்களோ, அறியேன்) விமர்சனங்களும் நகைப்பையே தந்தது. விட்டால் டாம் &ஜெர்ரி கார்ட்டூனுக்குக் கூட பொழிப்புரை எழுதிவிடுவார்கள் போலிருக்கிறது. பின்புறமுள்ள ஒளிவட்டத்தை சற்று இறக்கி வைத்து விட்டு சமயங்களில் நம்மிடம் மீதமுள்ள குழந்தைமையை உபயோகித்துக் கொண்டு சில சினிமாக்களை அணுகுவது நல்லது.

கலைப்பட ரசிகர்கள் கேளிக்கை சார்ந்த திரைப்படங்களை புறக்கணிக்கிறார்கள் என்கிற பொதுவானதொரு குற்றச்சாட்டு உண்டு. அது உண்மையில்லாதது. கலையின் அடிப்படையே கேளிக்கைதான். நீதி போதனை அல்ல. அவ்வகையில் சுவாரசியமாக உருவாக்கப்படும் கேளிக்கைத் திரைப்படங்களை எல்லாப் பிரிவினருமே ஏற்றுக் கொள்கிறார்கள். பிரச்சினை எங்கே என்றால், திரும்பத் திரும்ப மசாலாக்குப்பைகளை விழுங்கி செரிக்காமல் வாந்தியெடுக்கும் படங்களையும் தம்மை திருவுருக்களாக முன்நிறுத்திக் கொள்ளும் நாயக கோமாளிகளையும்தான் நிராகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இந்த அடிப்படைப் புள்ளிகளை மனதில் நிறுத்தி 'ஆயிரத்தில் ஒருவன்' குறித்தான என் பார்வையை கோர்வையல்லாத வார்த்தைகளின் மூலம் உங்கள் முன்வைக்க விரும்புகிறேன்.


சமகாலத்தையும் தொன்மத்தையும் சாமர்த்தியமாக இணைக்கின்ற புதுமையோடு இத்தனை பெரிய பரப்பில் ஒரு கதையை யோசிக்கத் துணிந்த செல்வராகவனுக்கு அதைச் சாத்தியமாக்குவதில் துணைநின்ற குழுவினருக்கும் முதலில் ஒரு பூச்செண்டு.

12-ம் நூற்றாண்டிற்குப் பிறகு வெற்றிடமாக உள்ள சோழர்களின் வரலாற்றுப் பக்கங்களை தன்னுடைய சாதுர்யமான புனைவால் நிரப்பிய செல்வராகவனின் திறமை பாராட்டப்பட வேண்டியதே. இது ஒரு கற்பனை என்று சுயமாகவோ அல்லது தணிக்கைக் குழுவினரின் குறிப்பின்படியோ முன்ஜாக்கிரதையாக  போட்டிருந்தாலும் பதிவு செய்யப்படாத வரலாற்றின் தொடர்ச்சியை ஒரு படைப்பாளி தன்னுடைய விருப்பத்திற்கு தீர்மானிக்கும் படைப்புச் சுதந்திரத்தை பார்வையாளர்கள் அனுமதிக்கவும் புரிந்து கொள்ளவும் வேண்டும். 'தமிழர்களை காட்டுமிராண்டிகளாக சித்தரிப்பதா' என்று உணர்ச்சிவசப்படத் தேவையில்லை. குகைகளில் வாழாவிட்டாலும் இந்த 21-ம் நூற்றாண்டிலும் நம்முடைய ஆழ்மனதில் உறங்கும் காட்டுமிராண்டித்தனம் மங்கி விடவில்லை என்பதற்கு பேருந்துகளில் இடம்பிடிக்க முண்டியடிக்கிற அன்றாட நிகழ்வுகளிலிருந்து துவங்கி நிறைய உதாரணங்களை காட்ட முடியும்.

லும்பன் சமூகத்தின் பிரதிநிதியாக கார்த்தியின் பாத்திரம் முழுமையாக இல்லாவிட்டாலும் ஒரளவிற்கு அதனுடைய எல்லைகளைத் தொட்டிருந்தது. ஆனால் 'பருத்தி வீரனின்' தொடர்ச்சி போலவே அமைந்திருந்ததை தவிர்த்திருக்கலாம். 'பேலன்ஸ் பேமெண்ட் கொடுங்க' என்பது இயல்பான தொனியில் இருந்தாலும் எடுத்து எடுப்பிலேயே பெண்களை படுக்க அழைப்பதெல்லாம் சினிமாவில் மாத்திரமே சாத்தியமுள்ள மிகையான சித்தரிப்பு. இவர்தான் அந்த சோழத் தூதுவன் என்பதற்கான தடயங்களை ஆங்காங்கே பூடகமாக வைத்திருந்தது இயக்குநரின் திரைக்கதை சாமர்த்தியத்தை காட்டுகிறது. (ரீமாவின் துப்பாக்கி பழுதாவது, கார்த்தியை வெட்டவருபவன் மின்னல்தாக்கி இறப்பது போன்றவை). சட்டையில்லாமல் திரியும் இவரின் முதுகிலுள்ள புலி சின்னத்தை ரீமா எப்படி காணத் தவறினார் என்பது ஒரு கேள்விக்குறி.

ஆண்ட்ரியாவின் பாத்திரம் படத்திற்கு தேவையில்லாத சுமை. இவர் ஏன் படம் முழுவதும் மந்திரித்துவிட்டது போலவே திரிகிறார் என்பது புரியவில்லை. அந்த ஆபத்தான பயணம் குறித்து ஓலைச்சுவடியின் மூலம் இவர்தான் தெளிவாக அறிந்திருக்கிறார் எனும் போது ஆரம்பத்தில் ரீமா இவரை ஏதோ 'விருப்பமிருந்தால் வா' என்கிற ரீதியில் கூப்பிடுவதும் 'ஏன் இவ்வளவு ஆபத்து இருக்கிறது என்று முன்பே சொல்லவில்லை' என்று பாதுகாப்பு அதிகாரி இவரை கோபித்துக் கொள்வதும் முரணாக இருக்கிறது. ஆராய்ச்சியாளர்களால் நிறைய முறை முயற்சி செய்யப்பட்ட தோல்வியடைந்த இந்தத் திட்டத்தில் இத்தனை ஆபத்து இருக்கிறது என்பதை எப்படி அந்தக் குழுவால் எதிர்பார்க்க முடியவில்லை என்பது தெளிவாக இல்லை. பழங்குடி இனத்தவரின் மொழியிலே உரையாடக்கூடிய, ஓலைச்சுவடியை வாசிக்கிற அளவிற்கு தமிழறிவு கொண்டிருக்கிற இவர், 'ராஜா ப்ளீஸ் நான் சொல்றதக் கேளுங்கோ' என்று சமகாலத்தமிழில் (?!) திணறுவது ஏன் என்பதும் ஒரு நெருடல்.

நல்லதொரு இயக்குநரின் கையில் கிடைத்தால் எப்படி ஒரு மொண்ணையான நடிகர் கூட சோபிக்க முடியும் என்பதற்கு ரீமாசென்னின் பாத்திரம் ஒரு உதாரணம். திரைப்படத்தின் இரண்டாம் பகுதியின் பெரும்பான்மையை இவரே ஆக்ரமித்துக் கொள்கிறார். பாண்டிய வாரிசாக இவர் வெளிப்படுத்தப்பட்டவுடன் இவரின் உடல்மொழியும் வன்ம வெளிப்பாடும் சிறப்பாக இருந்தது. ஆனால் இவர் ஏன் மன்னனுடன் உடல்தொடர்பு வைத்துக் கொள்ள அத்தனை முனைப்பாக இருக்கிறார் என்பது தெளிவாக இல்லை. தாமே ஒரு 'சோழ இளவரசனை' உருவாக்கி அவனை கைப்பற்றுவதுதான் இவரது நோக்கமாக இருக்குமோ? :-)

மன்னர் என்பதற்காக வழக்கமான முறையில் திருவுருவாக சித்தரிக்காமல் சோழ மன்னனின் பாத்திரம் அதிகபட்ச யதார்த்தத்துடன் உருவாக்கப்பட்டிருந்தாகத் தோன்றியது.. எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் அதிகார மையங்கள் மக்களிடமிருந்து நெருங்கியிருப்பதான பாவனையிலேயே இருக்கும் என்பதற்கு இந்தப் பாத்திரம் ஒர் உதாரணம். 'மந்திரியாரே மாதம் மும்மாரி பொழிந்ததா' என்கிற கேள்வியும் 'அது தெரியாம நீ இன்னா மேன் பண்ணிட்டு இருந்தே' என்பதும் நகைச்சுவைத் துணுக்காக இருந்தாலும் அதில் பொதிந்திருக்கும் உண்மையையும் நாம் காண வேண்டும். 'ராசாவே, அரண்மனை அந்தப்புரத்தில் சொகமாய் இருக்கறீங்கோ. எங்களுடைய இடர்ப்பாடுகளை யாராவது உங்களிடம் உரைத்ததுண்டா' என்று மக்கள் கூட்டம் ஆற்றாமையுடன் கேட்கும் போது ஆத்திரத்துடனும் இயலாமையுடனும் கதவைத் சாத்திக்கொள்ளும் மன்னனின் அதே மனப்பாங்கை இன்றும் கூட காண முடியும். முதுகு சொறிவதற்கு கூட ஆள் வைத்திருக்கும் பூர்ஷீவாத்தனமும் தாய்த் தேசத்திற்கு பயணப்படும் செய்தியைக் கேட்ட மக்களின் உற்சாகத்தைக் கண்டு கண்கலங்க பரவசப்படுவதுமான கலவையான பாத்திரத்தை பார்த்திபன் சிறப்பாக கையாண்டிருந்தார். இந்தப் பாத்திரத்திற்கு இவரை விட்டால் பொருத்தமான இன்னொருவர் பிரகாஷ்ராஜ் மாத்திரமே.

எதையோ முறையிட வந்திருக்கிற பெண்ணைக்கூட தம்மிடம் கூடத்தான் விரும்புகிறார் என்னுமளவிற்கு பெண் என்றாலே அவளை உடலாகவே காண்கிற அளவிற்கு ராஜாவின் மனநிலை இருக்கிறது என்பதை சித்தரித்திருந்து இயல்பானதாக இருந்தது. தம்மை தொட வருகிற ராஜாவை ஆண்ட்ரியா மெல்ல தள்ளி விட்டதும் ராஜா உட்பட சுற்றியிருக்கும் பெண்கள் அனைவருமே அதிர்ச்சியடைகிறார்கள். ஒரு பெண் ராஜாவை புறக்கணிப்பதாவது? இம்மாதிரியான சின்னச் சின்ன நுட்பமான காட்சிக் கோர்வையை வைத்து இயக்குநரின் நுண்ணுர்வை சிலாகிக்க முடிகிறது.

()

திரையரங்கில் காணும் போது படத்தின் பிற்பகுதியிலுள்ள பல காட்சிகள் வெட்டப்பட்டிருந்ததை உணர முடிந்தது. இணையத்திலிருந்த uncut version-ஐ வைத்து இதை சரிபார்த்துக் கொண்டேன். பதிலாக படத்தின் முற்பகுதியிலுள்ள தேவையில்லாத (பாடல்கள் உட்பட) காட்சிகளை தூக்கியிருக்கலாம். முற்பகுதி விளையாட்டுத்தனமாகவும் பிற்பகுதி தீவிரமாகவும் இருந்ததால் இந்தப்படத்தை எவ்வகையில் சேர்ப்பது என்ற குழப்பம் ஏற்படுகிறது. திரைக்கதை முறையாக திட்டமிடப்படாதனின் விளைவு இது.

மிகுபுனைவின் உருவாக்கத்தில் தர்க்கத்தின் செல்வாக்கு சொற்பமேயென்றாலும் மிகுபுனைவும் தர்க்கத்தின் ஒரு சட்டகத்தில் அடங்கித்தான் ஆக வேண்டும். நான்-லீனியர் படைப்பென்றாலும் அந்த ஒழுங்கின்மையும் பார்வையாளனின் பொதுவான புரிதலுக்காக ஏதோ ஒருவகை ஒழுங்கோடு அமைந்திருக்க வேண்டும். அந்த வகையில் இந்தப் படத்திலும் பல தர்க்கப் பிழைகளைக் காண முடிகிறது. நவீன ஆயுதங்களும் புராதன ஆயுதங்களும் மோதிக் கொள்ளும் காட்சிகள் போன்றவை பெரும் காமெடியாகவே தெரிகிறது. இப்படி பல காட்சிகளை உதாரணம் காட்ட முடியுமென்றாலும் சமீபத்திய தமிழ்ச் சினிமாவில் நிகழ்ந்திருக்கும் ஒரு புதிய முயற்சிக்காகவும் அனுபவத்திற்காகவும் இந்தப் படத்தை நிராகரிக்க நான் துணிய மாட்டேன். 

suresh kannan

17 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

நானும் பார்த்தேன், இது ஒரு நல்ல முயற்சி என்ற அளவில் உள்ளது.

Athisha said...

// மிகுபுனைவின் உருவாக்கத்தில் தர்க்கத்தின் செல்வாக்கு சொற்பமேயென்றாலும் மிகுபுனைவும் தர்க்கத்தின் ஒரு சட்டகத்தில் அடங்கித்தான் ஆக வேண்டும்.//

ஹாரி பாட்டர் ஆல்சோ பேசிங் சேம் பிராப்ளம். திஸ் நாலாவது சேப்ட்டர். கேர்ள் டச்சிங் பிராப்ளம்..

sathishsangkavi.blogspot.com said...

உங்கள் பதிவு அருமை....

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான விமர்சனம் ..

செல்வராகவன் இன்னும் முயற்சி செஞ்சிருக்கலாம் ..

லேகா said...

பகிர்தலுக்கு நன்றி சுரேஷ்.

நல்ல திரை முயற்சியாகவே தோன்றியது :-))

கே.என்.சிவராமன் said...

அன்பின் சுரேஷ்,

உழைத்து, களைத்தவர்கள் ஓய்வுநேரத்தில் எதிர்பார்ப்பது உற்சாக களியாட்டத்தைத்தான் என்னும் அர்த்தத்திலேயே வினவு தோழர்கள் 'வேட்டைக்காரன்' திரைப்படமே மேல் என்று தங்கள் இடுகையில் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்பதாகவே இப்போதும் புரிந்து கொள்கிறேன்.

புதிய முயற்சி, அனுபவம் என்பதுடன் உடன்படுகிறேன். ஆனால், நான் அறிந்தவரை எந்தவொரு திரைப்படத்தின் - அது வெகுஜன சினிமாவோ அல்லது மாற்று படங்களோ - திரைக்கதையும் அடிப்படையான கேள்வியை கொண்டிருக்கும்போதே அது பார்வையாளர்களை ஈர்க்கிறது. அவர்களது அகப்பரப்பை விரிக்கிறது.

அப்படி எழுப்பப்படும் கேள்வியும் தொடக்கத்திலேயே இருக்கவேண்டும் என்பது காட்சி ஊடகத்தின் இதுவரையிலான மரபு; இலக்கணம்.

வெகுஜன சினிமாவான 'பாட்ஷா'வில் மும்பையை கலக்கிய தாதா ஏன் சென்னையில் ஆட்டோ ஓட்டி பிழைப்பை நடத்துகிறான் என்ற கேள்வியை சுற்றியே திரைக்கதை பின்னப்பட்டிருப்பதை பார்க்கலாம்.

சென்றமாதம் 'உரையாடல்' அமைப்பு திரையிட்ட கொரிய மொழிப் படமான 'தி வே ஹோம்' படத்தில் கிராமத்தில் வசிக்கும் பாட்டியை வெறுக்கும் நகரத்து பேரன், பாட்டியின் அன்பை புரிந்துக் கொள்வானா? என்ற கேள்வி தொடக்கத்திலேயே பார்வையாளர்களின் பரப்பை அடைந்திருக்கும்.

இந்த 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தில் முதலில் எழுப்பப்பட்ட கேள்வி வேறு... இரண்டாம் பகுதியில் சட்டென எழுப்பப்பட்ட கேள்வி வேறு...

இதனால்தான் பலருக்கும் 'ஃபர்ஸ்ட் ஆஃப் தனியாவும் செகண்ட் ஆஃப் தனியாவும் இருக்கு...' என்று தோன்றுகிறது.

இந்த திரைக்கதை குளறுபடியை செல்வராகவன் சரி செய்திருக்கலாம்.

'இந்தியானா ஜோன்ஸ்' சீரிஸில் படத்தின் தொடக்கத்திலேயே கேள்வி எழுப்பப்பட்டு, கதாபாத்திரத்தின் பயணத்தில் என்னென்ன ஆபத்துகள் வரும் என்பதும் பார்வையாளர்களுக்கு உணர்த்தப்பட்டிருக்கும்.

இது என்னளவிலான புரிதல்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

கையேடு said...

படம் பார்த்துவிட்டு நீங்கள் எழுதப்போகும் விமர்சனத்திற்காக காத்திருந்தேன்.. நன்றி.

//நவீன ஆயுதங்களும் புராதன ஆயுதங்களும் மோதிக் கொள்ளும் காட்சிகள் போன்றவை பெரும் காமெடியாகவே தெரிகிறது. //

இதுவும் இன்றைய அன்றாடங்களில் ஒன்றுதான், இதில் (எனக்கு) தர்க்கப் பிழை தெரியவில்லை. ஆயுதங்கள் மட்டுமே வேறுபடுகின்றன.
(அந்தமான் நிக்கோபார் - இந்திய அரசு ஒரு சமகால உதாரணம்.)

எனக்கும் படம் பிடித்திருந்தது, நிராகரிக்கத் தேவையில்லை என்றே தோன்றியது.

Mohan said...

உங்கள் விமர்சனம் மிகவும் பிடித்திருந்தது. பார்த்திபன்,கார்த்திதான் சோழத் தூதுவன் என்பதையும்,அப்பொழுது அவர் நினைவுக்கு வரும் ஓவியங்களும் படத்தில் நன்றாகவே பதிவு செய்யப்பட்டிருந்தன.

புருனோ Bruno said...

படத்தை பார்த்த போது எனக்கு பல சந்தேகங்கள் இருந்தன. உங்கள் பதிவில் சில சந்தேகங்களுக்கு விடை கிடைத்திருக்கிறது


:)

Anonymous said...

இலகு வழியில் இணையத்தினூடு பணம் தேட அந்த இணப்பை அழுத்துங்கள்=http://www.trekpay.com/?ref=169994

வினவு said...

//க்ளிஷேக்களுடன் தொடர்ந்து உருவாகிக் கொண்டிருக்கும் தமிழ்ச்சினிமா குப்பைகளின் மத்தியில் செல்வராகவன் போன்றோர் உருவாக்கித் தரும் புதிய முயற்சிகளை ஆதரிக்கவில்லையென்றாலும் தம்முடைய பலமனத்தையும் திரட்டி நிராகரிப்பது நல்ல சினிமா ஆர்வலர்களின் செயல் அல்ல.//

சுரேஷ் கண்ணன்

புதிய முயற்சி என்பதுதான் ஆதரிப்பதற்கு அளவுகோலா? அது நமது கலை உணர்ச்சியை பண்படுத்துவதோ, முன்னேற்றுவதோ தேவையில்லையா? ஆ.ஒ அப்படி என்ன பண்படுத்தியிருக்கிறது? இந்தப் படத்தை குழந்தைமையுடன் அணுகினால் அது வன்முறை மிகுந்த ஒரு வீடியோ கேம் அனுபவத்ததைத் தவிர வேறு என்ன தந்திருக்க முடியும்?

பார்த்துச்சலித்த காட்சிகளுக்கு பதில் புதிய படிமங்கள் காட்டப்பட்டதனாலேயே அது சிறப்பான ஒன்றா? பைக், கார், துப்பாக்கி என்று இருந்த வீடியோ கேமில் இப்போது பெண்களை கற்பழிக்கும் விளையாட்டு வந்திருக்கிறதாம். எனில் இந்த புதிய விளையாட்டு விடலைகளுக்கு கற்றுத்தரதும் சமூக கோரங்கள் என்னென்ன?

செல்வராகவனை உந்தித்தள்ளிய படைப்புணர்ச்சி என்ன என்று ஆராய்ந்தால் இந்தப்படம் ரசிகனுக்கு தரும் உணர்ச்சியையும் கண்டு கொள்ளலாம். இது வெவ்வேறு பிரதி வாசிப்பு தரும் வேறுபாடுகளால் பிரிந்து விடுவதில்லை. அத்தகைய சூட்சுமங்களோ, புதிர்களோ இந்தப்படத்தில் இல்லை.

கேள்விக்குறி said...

sk,

ஆஒ வை விட வேட்டைக்காரன் தேவலாம் என்று எழுதியதா வின்வின் மையமான விமரிசனம்..

//ஃபேண்டசியின் பால் மனம் கவரக்கூடிய கலைஞன் இத்தகைய வரலாற்றை அறியாத போது நிகழும் விபத்துதான் ஆயிரத்தில் ஒருவன்.//
//செல்வராகவன் முன்னரே சொன்னபடி எந்த அறவுணர்ச்சியிலோ, வரலாற்று உணர்ச்சியோலோ இந்தக் கதையை கட்டியமைக்கவில்லை. அவரது வினோதமான பாத்திரங்களும் அந்த வினோதத்தை விகாரமாக காட்சிப்படுத்தும் வடிவமும்தான் இந்தப்படத்தின் கலை ஊற்று.//
//தமது மலசல தங்கக் கழிப்பறையை பெருமையுடன் காட்டுவார்கள். இந்த ஃபேண்டசியின் உணர்ச்சி என்ன? வக்கிரம்? எனில் அதுதான் ஆயிரத்தில் ஒருவனின் உணர்ச்சியும் கூட.//

வினவின் மையமான விமர்சனம் இதுதான்!(நன்றி போராட்டம்)

இதைஒட்டி வினவின் உங்கள் விமரிசனத்தை முன்வைப்பது நலம்

Anonymous said...

////நவீன ஆயுதங்களும் புராதன ஆயுதங்களும் மோதிக் கொள்ளும் காட்சிகள் போன்றவை பெரும் காமெடியாகவே தெரிகிறது. //
இந்தப் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை... பார்க்கும் எண்ணமும் எனக்கில்லை. ஆனாலும் நீங்கள் மேலே சொன்னது இடிக்கிறது. நவீன ஆயுதங்களும் புராதன ஆயுதங்களும் மோதிக் கொள்ளும் காட்சிகளை அவடாரில் ஆவென வாயைப் பிழந்து பார்த்தோமே. அதை ஏற்பவர்கள் இதையும் ஏற்கத்தானே வேண்டும். இங்லிஷ்படமும் அதே கூத்தைத் தான் காட்டுகிறார்கள். என்ன அங்கு மரத்தைச்சுற்றி ஆடும் டூயட் இல்லை. கிராபிக்ஸ் ஒழுங்காக செய்யப்பட்டிருக்கும். இது இரண்டும் தமிழ் சினிமாவில் இருந்தால் ஹொலிவுட் ஆக்சன் படமும் தமிழ் ஆக்சன் படமும் ஒரே குப்பைகள் தான்.

Anonymous said...

////நவீன ஆயுதங்களும் புராதன ஆயுதங்களும் மோதிக் கொள்ளும் காட்சிகள் போன்றவை பெரும் காமெடியாகவே தெரிகிறது. //
இந்தப் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை... பார்க்கும் எண்ணமும் எனக்கில்லை. ஆனாலும் நீங்கள் மேலே சொன்னது இடிக்கிறது. நவீன ஆயுதங்களும் புராதன ஆயுதங்களும் மோதிக் கொள்ளும் காட்சிகளை அவடாரில் ஆவென வாயைப் பிழந்து பார்த்தோமே. அதை ஏற்பவர்கள் இதையும் ஏற்கத்தானே வேண்டும். இங்லிஷ்படமும் அதே கூத்தைத் தான் காட்டுகிறார்கள். என்ன அங்கு மரத்தைச்சுற்றி ஆடும் டூயட் இல்லை. கிராபிக்ஸ் ஒழுங்காக செய்யப்பட்டிருக்கும். இது இரண்டும் தமிழ் சினிமாவில் இருந்தால் ஹொலிவுட் ஆக்சன் படமும் தமிழ் ஆக்சன் படமும் ஒரே குப்பைகள் தான்.

ரௌத்ரன் said...

நிதானமா சொல்லியிருக்கீங்க...

பழக்கமில்லாத முயற்சி என்பதால் செல்வா திரைக்கதையில் கொஞ்சம் சறுக்கியிருக்கிறார் என்றே தோன்றியது.

விமர்சனங்களை வாசிக்காமல் பார்த்ததாலோ என்னவோ தெளிவில்லாத பிரிண்டிலும் படம் நன்றாகவே இருந்தது.

நன்றி!

Selvakumar said...

//
இந்த 21-ம் நூற்றாண்டிலும் நம்முடைய ஆழ்மனதில் உறங்கும் காட்டுமிராண்டித்தனம் மங்கி விடவில்லை என்பதற்கு பேருந்துகளில் இடம்பிடிக்க முண்டியடிக்கிற அன்றாட நிகழ்வுகளிலிருந்து துவங்கி நிறைய உதாரணங்களை காட்ட முடியும். //
அட்டகாசம்.

Unknown said...

ஜாண் ஆபிரகாம் படம் ‘அக்கிரகாரத்தில் கழுதை’ பத்தி சொன்னதுக்கு உஙக எஜமானர் ஜெ மோ கிட்ட மன்னிப்பு கேட்டாச்சு. இந்த பதிவ போடறதுக்கும் அந்த எஜமானர் கிட்ட அனுமதி வாங்கீட்டிங்களா ? இல்லைன்ன உஙள போலி அறிவு ஜீவின்னு அவரும் அவர் ஜால்ராக்களும் சொல்லிடுவாஙக இல்லையா ? எதுக்கும் அவர் கிட்டெ அனுமதி வாங்கிட்டே சினிமா பத்தி எழுதுறது உஙகளுக்கு பெட்டர். ஏன்னா பாக்கி சினிமா பாக்கிற எல்லாரும் போலி அறிவு ஜீவிங்க அண்ணே.

இல்லீன்னா சாரு அண்ண்ன் கிட்ட அனுமதி வாங்க வேண்டிதிருக்கும். அவரு ஸ்பானிய சினிமா தவிர வேற எதுக்கும் பதிவு போட விடமாட்டாரு. பதிவர்கள் நிலமை இந்த அளவுக்கு மோசமாக வேண்டாம்.