Monday, May 16, 2016

முகநூல் குறிப்புகள் - 3

நண்பர் அபிலாஷ் கடந்த பல மாதங்களாக அச்சு ஊடகங்களில் எழுதும் கட்டுரைகளை தொடர்ந்து வாசிக்கிறேன். பல்வேறு இதழ்களில் தொடர்ச்சியாக அவர் எழுதுவற்கு பின்னுள்ள உழைப்பு குறித்து பிரமிப்பாக இருக்கிறது. மேலும் அவரது எழுத்தின் மூலம் வெளிப்படுகிற அவரின் பரந்து பட்ட வாசிப்பு குறித்தும் ஆச்சரியமாக இருக்கிறது.

என்னளவில் வார, மாத இதழ்களுக்கு அந்தந்த டெட்லைன்களுக்குள் எழுதுவதென்பது நிச்சயம் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் விஷயம். சமீபமாக அந்த அழுத்தத்தை என்னால் நன்கு உணர முடிகிறது. அது குறித்த அலாரம் மனதில் ஒரு சுமையாக அப்படியே உறைந்து மிரட்டிக் கொண்டேயிருக்கும் சமயங்களில் நடுஇரவில் கூட அது சார்ந்த அலாரம் உள்ளே பலமாக அடித்து பதறியடித்து எழுந்து உட்கார்நது எழுதியிருக்கிறேன்.

எப்போது பறக்கத் தோன்றுகிறதோ அப்போது சுதந்திரமாக பறக்கும் பறவையைப் போல் எழுத்தாளன் இயல்பாக இயங்க வேண்டியவன். ஆனால் இம்மாதிரியான நடைமுறை அழுத்தத்தையும் அதனால் படைப்புகளில் எதிரொலிக்கக்கூடிய கோர்வையின்மையையும் அவன் எதிர்கொள்ள வேண்டியிருப்பது சிக்கலான விஷயம்தான்.

ஆனால் சிலர் இம்மாதிரியான டெட்லைன்கள் இருந்தால்தான் அது சார்ந்த அழுத்தம் காரணமாக எழுதி முடிப்பார்கள். எழுதுவதற்கான ஊக்கத்தையே அத்தகைய அழுத்தங்கள்தான் தரும். பத்திரிகைகளின் துரத்துதல்களின் காரணமாகத்தான் பல படைப்புகளை எழுதியிருப்பதாக சொல்லியிருக்கிறார் சுஜாதா.

'எழுத்து எனக்கு சுவாசம் போல' என்று சிலர் சொல்வதெல்லாம் நிச்சயம் உட்டாலக்கடி என்பதாக எனக்குத் தோன்றுகிறது. பறவையை உதாரணம் சொன்னேன் அல்லவா? பறத்தல் என்பது ஒரு பறவைக்கு தன்னியல்பாக படிவது போல எழுதுவதென்பது அப்படியாக அமைந்தவர்கள் மட்டுமே அப்படிச் சொல்ல முடியும்.

என்னைப் பொறுத்த வரை அச்சு ஊடகத்திற்கு எழுதுவது என்பது ஒரு வாதை. எழுதுவது குறித்த திட்டவட்டமான கருத்துக்களும் வடிவமும் மனதில் ஏற்கெனவே தோன்றியிருந்தாலும் அவற்றை சொற்களின் வடிவத்தில் வலுக்கட்டாயமாக பிடுங்கி கோர்வையாக அமைப்பது என்பது சள்ளை பிடித்த வேலை. எவ்வளவு தூரம் ஒத்திப் போட முடியுமோ அத்தனை தூரம் ஒத்திப் போடத் தோன்றும்.

இணையத்தில் எழுதும் போது அது நம்முடைய ஏரியா என்பதால் எவ்விதப் பிழைகளையும் பற்றி கவலைப்படாமல் இயல்பாக எழுதி விட முடிகிறது. ஆனால் அச்சு ஊடகம் எனும் போது அது இன்னொருவரின் பொறுப்பில் இருக்கும் பிரதி என்பதால் தன்னிச்சையாகவே ஒரு பதட்டமும் ஒழுங்குணர்வும் உள்ளே வந்து விடுகிறது.

மட்டுமல்லாமல் எழுத்து மேஜையின் பின்னிருந்து ஒரு கற்பனையான வாசகன் நான் எழுதுவதையெல்லாம் கிண்டலடித்துக் கொண்டே இருக்கிறான், அதன் பிசிறுகளை, தவறுகளை திருத்தச் சொல்லி எச்சரித்துக் கொண்டே இருக்கிறான். அவனைச் சமாளிப்பது பெரும்பாடாக இருக்கிறது. திருத்தி திருத்தி எழுத வேண்டியதாக இருக்கிறது.

ஒரு திரைப்படக் கட்டுரைக்காக நான் என்னால் முடிந்த அத்தனை உழைப்பையும் தருகிறேன். ஒரு குறிப்பிட்ட திரைப்டத்தைப் பற்றி எழுத வேண்டும் என்றால் அதை குறைந்தது இரண்டு அல்லது மூன்று முறை பார்க்கிறேன். அதன் தகவல்களை தேடித் தேடி சரி பார்த்துக் கொள்கிறேன். அப்படியும் சில பிசிறுகள் அமைந்து விடுகின்றன. ஆனால் மிகுந்த உழைப்பைச் செலுத்தி எழுதப்படும் எழுத்து பரலவாக கவனத்திற்கு உள்ளாகாத போது அது சார்ந்த சோர்வும் ஏற்படுகிறது. என்றாலும் கூட எழுத வேண்டும் என்கிற ஊக்கம் குறையாததால் அடுத்ததற்கு நகர முடிகிறது.

()

இம்மாதிரியான சிக்கல்களை அபிலாஷ் எப்படி எதிர்கொள்கிறார் என்பதை பொதுவில் பகிர்ந்தால் நன்றாக இருக்கும்.

மே 2016 குமுதம் தீராநதி இதழில் 'நவீன புனைவுகளில் ஊனத்தை குறியீடாக்குவதின் சிக்கல்' என்கிற அவரது கட்டுரை முக்கியமானது மட்டுமல்ல சுவாரசியமானதும் கூட. நவீன தமிழ் இலக்கியத்தின் புனைவுப் பிரதிகளில் ஊனம் எனும் கருத்தாக்கம் நேரடியாகவும் மறைமுகமாகவும் எப்படியெல்லாம் கையாளப்படுகிறது என்பதை சில உதாரணங்கள் கொண்டு ஆராய முயல்கிறார் அபிலாஷ். அக ஊனங்களே அதிகம் கையாளப்பட வேண்டிய இலக்கிய வடிவத்தில் புற ஊனங்கள் வாயிலாக நிகழும் அகச்சிக்கல்கள் பற்றிய குறிப்புகளை ஒரு தேர்ந்த ஆய்வு நடையில் பதிவாக்குகிறார்.

அபீலாஷின் புனைவு எழுத்தை நான் அதிகம் வாசித்தது இல்லை. ஆனால் அபுனைவு எழுத்துக்களில் நான் உணரும் ஒரு நெருடலை அவருக்கு கவனப்படுத்த விரும்புகிறேன். இதை அவர் சரியான தொனியில் எடுத்துக் கொள்வார் என்கிற நம்பிக்கையுண்டு.

தான் அறிந்த எல்லாவற்றையும் உணர்ந்த அனைத்தையும் தன்னுடைய வாசகனுக்கு கடத்திவிட வேண்டும் என்கிற வேகமும் தத்தளிப்பும் அது சார்ந்த குணாதிசயமும் இளம் எழுத்தாளர்களின் எழுத்தில் அமைவது அவ்வகை எழுத்தில் உள்ள சிக்கல்களில் ஒன்று. இதன் காரணமாக அந்தப் படைப்பின் கலையமைதி சிதைவுறுவதை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

அபிலாஷின் அபுனைவு எழுத்திலும் இந்த நெருடலை உணர்கிறேன். அவர் தன்னுடைய மனம் நெய்யும் வார்த்தைப் பிரயோகங்களை அப்படியே தொடர்ச்சியாக பதிவு செய்து கொண்டே போகிறார். இதற்கு எப்படி உதாரணம் சொல்லலாம் என்றால், எவ்வித குறிப்புகளும் அல்லாமல் பேச முயலும் ஓர் அனுபவமற்ற பேச்சாளர், தம் மனதில் உருவாகும் கருத்துக்களையெல்லாம் பார்வையாளர்களுக்கு கடத்தும் வேகத்தில் கோர்வையற்று துண்டு துண்டாக பல விஷயங்களை சொல்லிச் செல்வதுடன் ஒப்பிடலாம். அவர் பேசியதில் பல ஆழமான நல்ல கருத்துக்கள் இருந்திருக்கும். ஆனால் மனம் இயங்கும் வேகத்தில் பேச்சும் இயங்க முயல்வதால் ஏற்படும் சிக்கல் காரணமாக கோர்வையற்று கச்சிதமற்று இருக்கும்

பின்பு எவராது அந்தப் பேச்சின் தேவையற்ற பகுதிகளை எடுத்து திருத்தி கோர்வையாக்கி ஒரு நல்ல கட்டுரையாக மாற்ற முடியும்.

கோர்வையாகவும் அதே சமயம் ஆழமாகவும் பேசுவதற்கு மிகுந்த உழைப்பும் பயிற்சியும் தேவைப்படுகிறது.

தமிழ் எழுத்து சூழலில் எடிட்டர் எனும் பிரத்யேகமான பணியின் அவசியம் பல காலமாக உரையாடப்பட்டுக் கொண்டு வந்தாலும் நடைமுறையில் அது பரவலாக சாத்தியப்படாதது துரதிர்ஷ்டமே. அபிலாஷின் எழுத்திற்கு தேவை அம்மாதிரியான ஒரு எடிட்டர். எழுத்தாளனே தன் எழுத்தை சீர்திருத்துவதென்பது மனஉளைச்சலை தரக்கூடிய வேலை.

ஒருவகையில் அபிலாஷிற்கு கூறுவதை எனக்கே கூறிக் கொள்வதாகவும் பார்க்கிறேன்.

***


விஜய்காந்த் NDTV -க்கு அளித்த நேர்காணலை தொடர்ந்து பார்க்க முடியாமல் நிறுத்தி விட்டேன். அதையொரு நகைச்சுவைப் பிரதியாகவும் காணலாம் என்பது ஒருபக்கம் இருக்கட்டும், எனக்கோ திகில் படம் பார்ப்பது போல் இருந்தது.

எவராவது மேடையில் பேசும் போது தாம் சொல்ல வந்த கருத்தை சுற்றி சுற்றி திக்கி சொல்ல முயலும் போது அந்த தவிப்பு கவனிக்கிறவனுக்கும் வந்து விடும். பேசுபவனை தலையில் தட்டி, இதுதானே சொல்ல வந்தே?" என்று பாயுமளவிற்கு ஓர் உணர்வு ஏற்படும், தலைமுடியை பப்பரப்பே என்று விரித்துப் போட்டிருப்பவனை இழுத்து வந்து முடிவெட்டி விட வேண்டும் என்று தோன்றுகிற உணர்வைப் போல.

நிற்க, ஆங்கில மொழிதான் உயர்வானதா என்பது போல இதை மொழியரசியல் நோக்கில் புரிந்து கொள்ள வேண்டாம். விஜய்காந்த் இயல்பாகவே தமிழில் பேசியிருக்கலாம். பாவம் பிரணாய் ராய், எத்தனையோ அரசியல்வாதிகளை ஆங்கிலத்தில் மடக்கி மடக்கி கேட்ட வயிற்றெரிச்சல்களும் பாவங்களும் விஜயகாந்த் அலுவலகத்தில் வந்து விடிந்திருக்கிறது. படிக்காதவன் திரைப்படத்தில் ரஜினிகாந்த்தின் தம்பி அவரை ஆங்கிலத்தில் திட்டுவது புரியாமல் 'எஸ் ..எஸ்..' என்பாரே, அப்படி பலியாடு போல தலையாட்டிக் கொண்டிருந்ததைப் பார்க்க பாவமாக இருந்தது.

பிரணாய் ராய்க்கு ஒருவேளை தமிழ் நன்றாக தெரிந்திருந்தாலும் கூட விஜய்காந்த் பேசியதை புரிந்து கொள்ள முடிந்திருக்காது என்பதுதான் இதிலுள்ள கூடுதல் நகைச்சுவை.

ஒருவேளை செய்தியாளர்கள் விஜயகாந்த்தை வைத்து காமெடி கீமெடி செய்து கொண்டிருக்கிறார்களோ? அல்லது vice versa வா?


***



 
கோபுர வாசலிலே வரும் 'காதல் கவிதைகள் படித்திடும் நேரம்' என்பது இளையராஜாவின் ரகளையான கம்போஷிஸனில் அமைந்த பாட்டு. இளையராஜாவின் நூறு சிறந்த தமிழ் திரையிசைப் பாடல்களை எவராவது கறாராக தொகுத்தால் அது நிச்சயம் இடம்பெறக்கூடிய தகுதி கொண்டது என்பது என் அனுமானம். அத்தனை நுணுக்கமான வேலைப்பாடுகளைக் கொண்டது இந்தப் பாடல்.

என் வாழ்வில் இந்தப் பாடலை குறைந்தது ஆயிரம் முறைக்கு குறையாமல் கேட்டிருப்பேன். இதன் துவக்கத்தில் வரும் 'எஸ். ஐ லவ் திஸ் இடியட்' என்கிற குரல் மட்டுமே இந்தப் பாடலுக்கு ஒரு திருஷ்டிப் பொட்டு. அபஸ்வரமும் கூட. அது பின்னணிக் குரல் தருபவரது என்று நினைக்கிறேன். அதைக் கேட்கும் போதெல்லாம் எரிச்சல் வரும். சில நொடிகள்தான் என்றாலும் எப்போது அது கடந்து தொலைக்கும் என்று எரிச்சலோடு காத்திருப்பேன்.

தொடர்ந்து வரும் அற்புதமான இசையும் பாலுவின் குரலும்தான் அதை மட்டுப்படுத்தும்.

நான் இதை எழுத வந்தது வேறு ஒரு காரணத்திற்காக.

இதன் கடைசி பல்லவியை கவனியுங்கள்.

இதயம் இடம் மாறும்.. என்று சித்ரா பாடியவுடன் (4:46) பாலு மெலிதாக ம்.. சொல்லுவார்..

அமுதும் வழிந்தோடும் .. என்று பாலு பாடும் போது (4:52) அந்த ம்.. மின் முறை சித்ராவுடையது.

இந்த இரண்டு 'ம்'கள்தான் இந்தப் பாடலை எங்கோ ஒரு உயரத்திற்கு கொண்டு செல்கின்றன என்பது என் தாழ்மையான கருத்து. என் பிரச்சினை என்னவென்றால் இந்த 'ம்களை கவனமில்லாமல் முதல், இரண்டாவது பல்லவியில் தேடிக் கொண்டிருப்பேன். அது வராமல் ஏமாற்றமாகி விடும் அப்புறம்தான் அது கடைசி பல்லவியில் வருவது நினைவிற்கு வரும். சமயங்களில் நானே அந்த 'ம்'களை என் குரலில் இட்டு நிரப்பும் அராஜகத்தை செய்வேன்.

அந்த அளவிற்கு இந்த 'ம்'களுக்கு நான் அடிமை.

என்னைப் போன்ற சஹஹிருதயர் எவரேனும் உண்டா?

***


இசைக்கலைஞர் எம்.எஸ். பற்றி டி.எம். கிருஷ்ணா, கேரவன் இதழில் ஆங்கிலத்தில் எழுதியுள்ள நீளமான கட்டுரையொன்று மே 2016 காலச்சுவடு இதழில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு பிரசுரமாகியுள்ளது. சமீபத்தில் வாசித்த சிறந்த, தரமானதொரு கட்டுரையாக இதைக் குறிப்பிடுவேன். மொழியாக்கமும் சிறப்பு. அநாமிகா என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் இது சுகுமாரனின் மொழிபெயர்ப்பாக இருக்கலாம் என்பதென் தேவையில்லாத யூகம்.

எம்.எஸ்.என்கிற ஆளுமைக்கு பொதுவாக இரண்டு பரிமாணங்கள் உண்டு. ஒன்று பொது தளத்தில் ஓர் இசையாளுமையாக, ஆன்மிக அடையாளமாக, இசைப் பேரரசியாக அறியப்பட்டிருக்கும் விருதுகள் பல பெற்றிருக்கும் ஒரு வடிவம். இன்னொன்று, எம்.எஸ்.ஸின் வாழ்க்கை பின்னணி, அதிலுள்ள சர்ச்சைகள், புகைமூட்டங்கள், அவற்றிலிருந்து துடைத்தெறிந்து அவரை ஒரு புனிதப்பசுவாக வடிவமைத்த அவரது கணவர் சதாசிவத்தின் பங்கு, அவரது கட்டுப்பாடுகளால் ஒருவேளை இழந்து போன எம்.எஸ்.ஸின் சுதந்திரமும் கலையாற்றலும் ..

என பல்வேறு தளங்களில் சமநிலையுடன்கூடிய நிதானத்துடன் இந்தக் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. ஒரு கச்சிதமான ஆலாபனையைப் போலவே இந்தக் கட்டுரையை உணர்கிறேன். நண்பர்கள் இந்தக் கட்டுரையை தவறாமல் வாசிக்க வேண்டும் என வேண்டுகிறேன்.

முன்னொரு சமயத்தில் ஜெயமோகன் எழுதிய கட்டுரையையும் இதனுடன் இணைத்து வாசிக்கலாம்.

எம்.எஸ். வாழ்க்கை வரலாறு பற்றி டி.ஜே.எஸ். ஜாாஜ் எழுதிய (MS – ‘A Life in Music’ ,T.J.S George) என்கிற நூலை வாசித்தே தீர வேண்டுமென்கிற ஆவலை, இந்தக் கட்டுரைகள் உண்டாக்குகின்றன.

நண்பர்கள் எவரிடமாவது இந்த நூல் இருக்கிறதா என அறிய ஆவல்.


***



நண்பர் Lalitharam Ramachandran ஆசியோடு இன்று ரசித்த ஒரு பாடலைப் பற்றிய சில பாமர குறிப்புகள்.


சுசி கணேசன் இயக்கத்தில் வந்த ஃபைவ்ஸ்டார் எனக்கு பிடித்தமான திரைப்படங்களில் ஒன்று. அதைப் பற்றி எவ்வித அறிமுகமும் இல்லாமல் திரையரங்கில் முதன்முறை பார்த்த போது 'ச்சே.. ஸ்கிரிப்ட்ல கலக்கியிருக்காண்டா' என்று இயக்குநரை நினைத்து பரவசப்பட்டேன். அந்த சுசிகணேசன் பிறகு வெகுசன மசாலாவில் மூழ்கி காணாமற் போய் விட்டார் என்பதற்கு நாமும் ஒருவகையில் காரணம்.

அத்திரைப்படத்தில் வரும் எல்லாப் பாடல்களுமே எனக்குப் பிடித்தமானது.

குறிப்பாக இந்தப் பாடல் கூடுதலாக பிடிப்பதற்கு காரணம். இனிப்பும் உப்பும் இணைந்த 50-50 பிஸ்கட் போல மகிழ்ச்சியும் துயரமும் இணைந்த ஒரு விநோதமான கலவையில் உருவானது என்பதற்காக இருக்கலாம்,. உப்புச்சுவை சற்று தூக்கல் என்றாலும்.

ஒரு வடஇந்திய திருமணத்தின் உற்சாகமான மகிழ்ச்சியின் குரல்களுக்கு இடையில் ஒலிக்கிறது.

தாலி கட்டிய அடுத்த கணமே காணமாற் போய் விட்ட தன் கணவனைக் குறித்து அந்த துயரத்துடன் ஒரு தென்னிந்திய கிராமத்து இளம் பெண் பாடும் பாடல்.

தாண்டியா நடனத்தின் துள்ளலிசை பாணியில் அட்டகாசமாக துவங்கும் பாடல் பிறகு மெல்ல அடங்கி 'எங்கிருந்து வந்தாயடா' என்கிற துயரத்தில் கஜல் இசையை நினைவுப்படுத்தும் பாணியோடு இயல்பாக வந்து இணைந்து கொள்கிறது. எவ்வித உறுத்தலும் இல்லை.

திருமணத்தில் வழக்கமாக மணமக்களை கிண்டலடிக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான சூழலில் அதற்கு எதிர்திசை முரணாக, தன் கணவனின் பிரிவைப் பற்றி பாடும் அந்த காண்ட்ராஸ்ட் சூழலை யோசித்ததற்காகவே இயக்குநரைப் பாராட்ட வேண்டும். இரண்டு மனநிலைகளையுமே இப்பாடல் மாறி மாறி எதிரொலிக்கிறது.

'ஒருவர் வாழும் உலகில், மௌனம்தானே பேச்சு' என்று இந்த அடங்கிய துயரத்தின் சுவையை சொற்களில் கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார் Kavignar Thamarai

சந்தனா பாலா இந்தப் பாடலின் தன்மையை உணர்ந்து அருமையாக பாடியிருக்கிறார். ஓரிடத்தில் துக்கம் தாங்காமல் அழுகையின் உச்சத்தில் கேவல் ஒலி போல் தடுமாறி பின்பு தன்னை மெல்ல சமாளித்துக் கொண்டு பாடலில் இணையும் அந்த பாவம் அபாரம்.

அனுராதா Sriராம்.மற்றும் அவரது கணவன் பரசுராம் ஆகியோர் இணைந்து இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்கள். அத்தனை அருமையான பாடல்களை உருவாக்கிய இவர்கள் பின்பு வேறு எந்த படத்திலும் பணியாற்றியதாக தெரியவில்லை.

ஏன்?


***

இயக்குநர் பார்த்திபனின் 'புதிய பாதை' எனக்குப் பிடித்த தமிழ் திரைக்கதைகளுள் ஒன்று. வெகுசன வார்ப்பிற்குள் ஒரு நல்ல திரைக்கதைக்காக அதை மேற்கோள் காட்டுவேன்.

அதில் ஒரு காட்சி. அந்த தொகுதியின் அரசியல்வாதியான நாசர் முன்பு பாாத்திபன் கால் மேல் கால் போட்டு ஆட்டிக் கொண்டே அமர்ந்திருப்பார். அருகிலிருக்கும் விகே ராமசாமி, அவருக்கேயுரிய பிரத்யேகமான டபுள் மீனிங் மாடுலேஷனில் 'தொகுதி வயசுல சின்னவர்தான். அவரு முன்னாடி நானே ஆட்னதில்ல - காலை. நீ இப்படி ஆட்டறியே" என்பார்.

அதற்கு பார்த்திபன் தரும் பதிலை இன்னமும் மறக்காமல் இருக்கிறேன்.

"அவருக்கு நான் சம்பாரிச்சுக் கொடுக்கத்தான் வந்திருக்கேன். மரியாதை தர இல்லை"

()

தனியார் லிமிடெட் கம்பெனிகளில் கூட கார்ப்பரேட் கலாசாரத்தின் சாயல்கள் மெல்ல படிந்து கொண்டிருக்கும் சூழலில், இன்னமும் கூட சில நிறுவனங்கள் அந்தக் கால மளிகைக் கடை 'மொல்லாளி' பாணியிலேயே இயங்குகின்றன. எங்களுடைய வாடிக்கையாளர் நிறுவனம் ஒன்று, கோடிகளில் லாபம் காட்டுகிற சுக்கிர திசையில் இயங்குகிற பெரிய நிறுவனம் என்றாலும் அதன் அனைத்து முக்கியமான முடிவுகளையும் அந்த நிறுவனத் தலைவரே எடுப்பார். விசிட்டிங் கார்ட் பிரிண்ட் செய்வதாக இருந்தாலும் அவர்தான் முடிவு. அதிகாரப் பகிர்வு என்பதே கிடையாது. எதைக் கேட்டாலும் அங்குள்ள ஊழியர்கள் 'சாரைக் கேட்கணும்' என்பார்கள். சார் நிறுவனத்திற்கு வருகிறார் என்கிற செய்தி கிடைத்தவுடன் ஏறத்தாழ அப்போதே பரபரப்பாகி அட்டென்ஷனில் நின்று கொண்டிருப்பார்கள்.

இன்னும் சில முதலாளிகள். ஊழியர்கள் தங்களைக் கண்டவுடன் அந்தக் கால எஸ்.வி.சுப்பைய்யா.. போல இடுப்பில் துண்டை இறுக்க கட்டிக் கொண்டு 'மொதலாளி' என்று கண்கசிய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இது போன்ற நாடகங்களை கச்சிதமாக நிகழ்த்துபவர்களுக்குத்தான் ஊதிய உயர்வும் அங்கீகாரமும் தருகிறார்கள் இவை நாடகம் என்று 'மொல்லாளிகளுக்கு' தெரியும் .என்றாலும் அவர்களால் கிடைக்கும் போலிப் பெருமிதங்களுக்காகவே அவர்களை போற்றி வளர்க்கிறார்கள்.

ஓர் ஊழியரின் செயற்பாடுகள் எந்த அளவிற்கு அர்ப்பணிப்புடனும் சரியானதாகவும் இருக்கிறது? அவரால் நிறுவனத்திற்கு கிடைக்கும் ஆதாயத்தின் சதவீதம் என்ன? என்பதை வைத்து ஒருவரை மதிப்பிடுவது நல்ல முதலாளிக்கு அழகு. இன்றைய தேதியில் hard work என்பதை விட smart work-க்கிற்குதான் மரியாதை.

அவ்வாறானவர்களின் உழைப்பை கண்டும் காணாமலும் இருந்து விட்டு அவர்கள் தங்களுக்கு எப்போதும் மரியாதை தரவில்லை என்கிற அற்ப காரணத்திற்காகவே பல்வேறு வகையில் பழிவாங்கும் முதலாளிகள், அந்த நிறுவனத்தின் வளர்ச்சியை அவர்களே புதைகுழியில் தள்ளுகிறார்கள் என்பதை அறிவதில்லை. அறிந்தாலும் அவர்களின் ஈகோ அவற்றை ஏற்றுக் கொள்ள தடுக்கிறது.

இந்த விஷயத்தில், பணி தொடர்பான விஷயத்தை சிகரெட் புகைத்துக் கொண்டே தன் முதலாளியுடன் விவாதிக்க முடியும் என்கிற மேலை நாட்டுக் கலாச்சாரம் எவ்வளவோ தேவலை என்று தோன்றுகிறது, அங்கும் அடிமைக் கலாசாரம் இன்ன பிற வழிகளில் கசிந்து கொண்டிருக்கும் என்றாலும்.

'Job is done' என்கிற பதிலை விட 'வணக்கம் மொல்லாளி' என்கிற குரலில்தான் ஒரு முதலாளி மகிழ்வார் என்றால் அவர் முதலாளியாக இருக்கவே தகுதியில்லாதவர்.


***


தமிழ் திரையிசை தொடர்பான ஒரு பதிவு செய்யப்பட்ட இசைக் கச்சேரியை வீடியோவில் நண்பருடன் சேர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் ஒரு பாடகர், திரையிலும் அவரே பாடின ஒரு பாடலை சற்று விஸ்தரித்து ஆலாபனை செய்து பாடினார். சட்டென்று அது அசல் போல தெரியவில்லை. வேறு பாணியில் இருந்தது. கவனித்த நண்பர் முகம் சுருங்கி 'என்னத்த பாடுறான்' என்று சலித்துக் கொண்டார். அவருக்குப் புரியவில்லை. அவருடைய ரசனை இன்னமும் வளர வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

என்றாலும் எதனால் அவருக்கு ஏமாற்றம் வந்தது என்று யோசித்துப் பார்த்தேன். அந்த நிகழ்வில் முன்னர் பாடப்படட்ட சில பாடல்களை பாடகரின் கூடவே அவரும் கள்ளக்குரலில் பாடி அதில் தன்னை மறைத்துக் கொண்டு - தன்னையும் ஒரு பாடகராக நினைத்து மகிழந்து கொண்டிருந்தார். இந்தப் பாடல் வேறு நோட்டில் பாடப்படவே, நம் நண்பரால் அதைப் புரிந்து கொள்ள முடியாததால் ஏற்பட்ட ஏமாற்றமும் சலிப்பும் அது என்று யூகிக்க முடிந்தது.

ஆல்பத்தில் ஒலிக்கும் அதே ஒழுங்கில்தான் கச்சேரியிலும் பாடகர் பாட வேண்டுமென்று நாம் எதிர்பார்ப்பது அறியாமையினாலேயே. அதற்கு வீட்டிலேயே சி.டியில் கேட்டு விடலாம்.

அதே இனிப்பை வேறு வேறு சமயங்களில் சாப்பிட்டிருந்தாலும் அந்தந்த சூழல், மனநிலை ஆகியவற்றைப் பொறுத்து அந்த இனிப்பின் சுவை நிச்சயம் மாறுபட்டிருக்கும். இசையும் அவ்வாறே. ஸ்டுடியோவில் பாடிய போது பாடகர், இசையமைப்பாளர் உருவாக்கித் தந்த கட்டுப்பாட்டில் பாடியிருக்கலாம். அதையே கச்சேரியில் பாடும் போது தன்னியல்பாக இன்னும் சற்று விஸ்தரித்து அந்த இசையை விரிக்க முயல்கிறார். நாம் அந்த புது அனுபவத்தை அந்தப் பின்னணியில் புரிந்து கொண்டு ரசிக்க நம்மை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இசைக்கு சில அடிப்படை இலக்கணங்கள் வகுக்கப்பட்டிருந்தாலும் அதை ஆதாரமாகக் கொண்டு ஒரு பறவையைப் போல வானில் சுதந்திரமாக பறத்தல், கீழே இறங்கி வருதல், தரையில் சற்று உலாத்துதல், பின்பு எதையோ மறந்ததை எடுக்க விரைவதைப் போல சட்டென்று மேலே ஏறி பறத்தல் என்று பறவை அதன் சுதந்திரத்தில் இயங்குவதைப் போல ஒரு பாடகனும் அப்போதைய மனநிலையின் படி, மனோதர்மத்தின் படி தன் இசையை விஸ்தரித்து பாடுவதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

செவ்வியல் இசைகளில் நிகழ்வது இதுவே. கர்நாடக இசையை விட ஹிந்துஸ்தானியில் ஒரே ஒரு வரியை, வார்த்தையை வைத்துக் கொண்டு சுமார் இரண்டு மணி நேரம் கூட விதவிதமான அலங்காரத்துடன் ஆலாபனை செய்வார்கள். அந்த நுட்பம்தான் அதன் அழகியலே. செவ்வியல் பயிற்சியுள்ள பாடகர்கள் திரையிசையிலும் இயன்ற எல்லைக்குள் தங்கள் சுதந்திரத்தைப் பயன்படுத்த முயல்வார்கள். இதை அனுமதிக்கும் அல்லது கட்டுப்படுத்தும் இயக்குநர்கள் உண்டு.

இது மேடைகளில் நிகழும் போது நம்முடைய எதிர்பார்ப்பிற்கு ஏற்ப பாடகர் பாட வேண்டும் என்கிற சிறுபிள்ளைத்தனமான எதிர்பார்ப்பை கழற்றி பாடகரின் கூடவே பறப்பதற்கு முயல வேண்டும் அல்லது அதை குறைந்தபட்சம் புரிந்து கொள்ளவாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது.

இதையெல்லாம் அந்த நண்பரிடம் சொல்ல முடியவில்லை. சொலலியிருந்தால் அவர் நண்பராக தொடர்ந்திருப்பாரா என்பது சந்தேகமே.


***



சமகாலத்தில் இயங்கும் தமிழ் திரை இசையமைப்பாளர்களில் ராஜாவிற்கு இணையாக நிறுத்தக்கூடிய கலையுணர்வும் படைப்பூக்கமும் கொண்ட ஆளுமையாக ரஹ்மானை மட்டுமே சொல்ல முடியும்.

சமீபமாக ரஹ்மானின் சில தேர்ந்தெடுத்த பாடல்களை மிக நுணுக்கமாக பல முறை கேட்ட அனுபவத்தில் சொல்கிறேன்.

வெகுசன மனம் தன்னியல்பான திட்டமிடாத கூட்டுணர்ச்சியுடன் ஒரு கலைஞரை பரவலாக ஏற்றுக் கொள்வதிலும் கொண்டாடுவதிலும் பொருள் இல்லாமல் இல்லை என்பதை உணர்ந்தேன்.

இந்த வகையில் ரஹ்மானை கொண்டாட இந்தப் பாடல் ஒரு கச்சிதமான உதாரணம். சற்று நிதானமாக கேட்டுப் பாருங்கள். உள்ளுக்குள் எத்தனை ஆச்சரியங்களை ஒளித்து வைத்திருக்கிறார்? உன்னி கிருஷ்ணனும் ஹரிணியும் அபாரம்.


***




காதலுணர்வு சார்ந்து மற்றவர்கள் எடுக்கும் திரைப்படங்களுக்கும் கெளதம் வாசுதேவ மேனன், செல்வராகவன் போன்றவர்களுக்கும் நிறைய வித்தியாசமுண்டு. பின்னவர்களின் படங்களில் அது வெற்று, அசட்டு ரொமாண்டிசமாக அல்லாமல் காதலின் மென்மையும் வலியும் அவைகளில் ரத்தமும் சதையுமாக பதிவாகியிருக்கும்.

கெளதமின் காதல் திரைப்படங்களின் வரிசையில், மின்னலே, விண்ணைத் தாண்டி வருவாயா, நீதானே பொன் வசந்தம் ஆகியவற்றில் கடைசியாக குறிப்பிட்டது என்னுடைய மகா ஃபேவரைட். என்னை பெருமளவில் பாதித்த திரைப்படம் அது. அந்தப் பிரதியுடன் குதூகலித்திருக்கிறேன், அழுதிருக்கிறேன், பரவசமடைந்திருக்கிறேன். அப்படியொரு கொண்டாட்டத்தை என்னுள் உணர்த்திய படம் அது.

கெளதம் ஓர் உண்மையான நல்ல காதலர். காதலின் அத்தனை உணர்வுகளையும் அவர் தனிப்பபட்ட வாழ்வில் உண்மையாக ஆழ்ந்து விழுந்து பிரண்டு எழுந்திருக்கிறார். காக்க காக்க, வேட்டையாடு விளையாடு என்று ஆக்ஷன் திரைப்படங்களிலும் கூட லவ் டிராக் அத்தனை உயிர்ப்புடன் இருக்கும்.

'நீஎபொவ' -வில் இந்தப் பாடலை கவனியுங்கள்.

காதல் துணையுடன் ஏதோ ஒரு சச்சரவில் (அதற்கான காரணம் அற்பமானதாக கூட இருக்கலாம்) அது சார்ந்த மிகையான உணர்வில் அமைந்த சண்டையில், அது ஏற்படுத்திய கசப்பில், மனஉளைச்சலில் நீங்கள் எப்படி எதிர்வினையாற்றுவீர்கள்,?

அந்தவுணர்வு இதில்அபாரமாக பதிவாகியிருக்கிறது. 'பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா?' எடுத்த எடுப்பிலேயே உயர் ஸ்தாயியில் துவங்கும் பாடல் இந்தவுணர்வின் உளைச்சலை, மிகையை சரியாக உணர்த்துகிறது.

இதில் ஜீவாவின் உடல்மொழியை கவனியுங்கள்...தோழி தன்னை நிராகரித்த திகைப்பும், ஏமாற்றமும் அது சார்ந்த சினமும் அவரது அசைவுகளில் நன்றாக வெளிப்படும்.

கடற்கரை மணலை காலால் ஆத்திரத்துடன் உதைத்து விட்டு பிறகு ஒருவேளை தோழியின் மனம் திரும்புமா என்கிற நப்பாசையுடன் மீண்டும் சென்று ஏக்கத்துடன் பார்க்கிறார். விதியின் கரங்கள் வலிமையானவை. இவா் திரும்பிச் சென்ற சமயத்தில்தான் தோழியும் திரும்பிப் பார்க்கிறார்.

கடற்கரை ஒருவகையில் மரணத்தின் குறியீடு. அங்கு விரக்தியுடன் செல்லும் இவரின் கை முஷ்டிகள் இறுகும் ஒரு குளோசப் காட்சி அவரது மனதின் உளைச்சலை பதிவாக்குகிறது.

ஊருக்குத் திரும்பும் முடிவுடன் நடக்கத் துவங்குகிறார். அங்கிருந்து வெளியேற பேருந்து மட்டுமே வழி. ஆனால் அதை நிராகரித்து நடக்கிறார். கடந்து செல்லும் பேருந்தின் மீது ஆத்திரத்துடன் குத்த நினைத்து கடைசி நொடியில் அதை கைவிடுகிறார். உணர்வை அறிவு நிலை கடந்து செல்லும் துளியின் தருணம் அது.

அந்த தூரத்தை சாலையில் நடப்பதின் மூலம் கடந்து செல்கிறார். அந்த துயரத்தை, உளைச்சலை தன்னைத் தானே தண்டித்துக் கொள்வதின் மூலம்தான் அவர் கடந்து வர முடியும், தற்காலிகமாக.

படம் பூராவும் ஆக்ரமித்திருந்த, என்னை அந்தரங்கமான நெருக்கத்துடன் உணரச் செய்த சமந்தாவை, இந்த ஒரு பாடலில் மட்டும் ஓவர்டேக் செய்திருந்த ஜீவாவை பிடித்திருந்தது.

ஓர் அசலான காதலனால்தான் இப்படிப்பட்ட நுட்பங்களை காட்சிகளில் படிய வைக்க முடியும். கெளதம் அப்படிப்பட்ட ஓர் ஆசாமி என்பது நன்கு புலனாகிறது..

ஓர் ஆணின் பார்வையில் இந்தக் காட்சிகளை ரசித்திருக்கிறேன் என்பது வெளிப்படை. இதற்கு இன்னொரு பக்கமும் உண்டு.


***



தோழி சமந்தா 2010 முதல் 'பாணா காத்தாடி' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் போலிருக்கிறது. நான் கவனித்ததில்லை. 'நான் ஈ''யில் கூட 'அட அழகாக இருக்கிறாரே' என்று வழக்கமான நடிகையைப் பார்ப்பது போல அவரைக் கடந்து விட்டேன்.

ஆனால் நீதானே என் பொன் வசந்தத்திற்குப் பின்னால் பிடித்தது சனி. 'நித்யா வாசுதேவன்' என்கிற மறக்க முடியாத பாத்திரத்தின் மூலம் எனக்குள் அழுத்தமாகப் பதிந்து விட்டார். ஒரு நடிகை தன் அழகின் மூலமாக மட்டுமல்லாது தன் கலைத் திறமையின் மூலமாக இத்தனை கவர முடியும் என்கிற பிரமிப்பை ஏற்படுத்திய படம் அது. முழுதாக பதினைந்து முறைக்கும் மேல் பார்த்திருப்பேன் என்றாலும் நினைக்கும் போதெல்லாம் துண்டு துண்டாக காட்சிகளை பார்த்தது பல முறை. குறிப்பாக அந்த கடற்கரை காட்சி, மொட்டை மாடி விவாத காட்சி.

இதற்குப் பிறகு சமந்தா எனதின் ஒரு பகுதியாகி விட்டார். அவரை ஒரு வேற்று நபர் என்பதை கூட என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. இவருக்காகவே மொழி புரியாத பல தெலுங்கு மசாலாக்களை, அதிலும் இவரை மட்டுமே 'ஆ'வென்று பார்த்துக் கொண்டிருப்பேன்.

ஒரு நடிகையின் மீதான எதிர்பாலின கிளர்ச்சி சார்ந்த மனோபாவம் என்று இதை மற்றவர்கள் மலினமாக புரிந்து கொள்வதை வெறுக்கிறேன். அதையும் தாண்டியதொன்று. அவர் என்னை தன் சிறந்த நண்பனாக ஏற்றுக் கொள்வது உள்ளிட்ட பல பகற்கனவுகளில் மூழ்கியிருக்கிறேன்.

பாவனையாக அல்லாமல் உண்மையாகவே சமூக சேவைகளுக்காக உதவும் நல்லியல்பு,

ஒரு நடுத்தர வர்க்கத்துப் பெண்ணாக போட்டி நிறைந்த சூழலில் பல சிரமங்களுக்கு இடையே தன்னையொரு வெற்றிகரமான நடிகையாக நிலைநிறுத்திக் கொண்டிருந்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் சட்டென்று ஒரு பிரேக் அடித்து 'என்னுடைய குடும்பத்தினருடன் செலவு செய்வதற்காக சில மாதங்கள் நடிக்கப் போவதில்லை' என்கிற சமீபத்திய அறிவிப்பின் துணிச்சல்

உள்ளிட்ட பல காரணங்களுக்காக அவரை அப்படிப் பிடித்திருக்கிறது.

எனக்குப் பிடித்தமானதொரு நபரின் சாயலில் அவர் இருப்பது இன்னொரு கூடுதல் காரணம்.

சுருக்கமாகவும் தெளிவாகவும் கூற வேண்டுமெனில்..

உயிரும் உடலும் தலைவிக்கே..


***


இரண்டு விளக்கங்கள்:

1) என்ன சார்.. நீங்க பாட்டுக்கு சமந்தாவை ஜொள்றதையெல்லாம் பப்ளிக்கா சொல்றீங்க.. இன்னொரு பக்கம் சினிமா சீரழிவு -ன்னு தீவிரமா எழுதறீங்க.. ஏதாவது ஒண்ணுல நில்லுங்க. இமேஜ் என்ன ஆகும் -னு கவலைப்பட்டு உபதேசம் செய்யற மெசேஜ் ஒண்ணு.

இது என் டைம்லைன். தனிநபர் சார்ந்த அனைத்துப் பிரச்சினைகளையும் கூடுமானவரை பாசாங்குகளைக் களைந்து, என்னுடைய அனைத்துப் பக்கங்களையும் வெளிப்படையாக்குவதே என் விருப்பமும், நோக்கமும். ஒளித்து வைக்க ஏதுமில்லை. பாசாங்கு நான் வெறுக்கும் விஷயங்களில் முக்கியமானது. பெண்களின் புரொஃபைல்களுக்கு லைக் அட்டெண்டென்ஸ் போடும் நபர்களை விட இது தேவலை என்றே நினைக்கிறேன்.

2) உங்களுக்கு வேறெந்த பிரச்சினையும் இல்லையா? எப்பவும் சினிமாதானா?

ஒரு சராசரி நபருக்கு உண்டான அத்தனை லெளகீகப் பிரச்சினைகளும் சிக்கல்களும் எனக்கு சற்று அதிகமாகவே உண்டு. சமயங்களில் அதிலிருந்து தப்பிக்கவும், இளைப்பாறவுமே இங்கே எழுதுகிறேன். இங்கயும் வந்து டென்ஷன் பண்ணாதீங்க.


***


இது விதண்டாவாதம் என்று நினைக்காமல் இதனுள் உள்ள ஒரு பக்க அல்லது ஒரு பகுதி நியாயத்தை சரியான தொனியில் நண்பர்கள் அணுக வேண்டும் என வேண்டுகிறேன்.

'வாக்களிக்க பணம் பெற வேண்டாம்' என்று தேர்தல் ஆணையம் தொடர் பிரச்சாரம் செய்து வருகிறது. அறம் சார்ந்து இது சரிதான். இது எல்லோருக்கும் தெரிந்த நடைமுறை நாடகமும் கூட.நிஜத்தில் என்ன நடைபெறுகிறது என்பது நாம் அறிந்ததுதான்.

வாக்களிப்பவர்கள் பணம் வாங்கினால் அரசியல்வாதிகளுக்கு ஊழல் செய்ய கூடுதல் துணிவு வந்து விடும் என்றும் ஒரு கருத்து சொல்லப்படுகிறது.

ஒரு பேச்சுக்கு இந்த தேர்தலில் வாக்காளர்கள் எவருமே ஒருவர் கூட ஒரு ரூ பணம் வாங்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். அப்போது ஊழல்களே நடைபெறாது என்கிற உத்தரவாதம் ஏதேனும் உள்ளதா?

கோடிக்கணக்கில் வருமான வரி பாக்கி வைத்திருக்கிற பிரபலங்களின் பெயரை வெளிப்படையாக அறிவிக்காமல் அது குறித்து சம்சா தின்று கொண்டே சம்பிரதாயத்திற்கு அது குறித்து பொதுவாக பாராளுமன்றத்தில் விவாதித்து விட்டு,

மாதச்சம்பளம் வாங்கும் மிடில் கிளாஸ் கோயிஞ்சாமிகளை 'வரி கட்டுங்கள்,.வரி கட்டுங்கள்' என்று வருமானவரித் துறை கழுத்தை நெறிப்பதைப் போல,

ஊழல் செய்யாதீர்கள், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் என்று அரசியல்வாதிகளுக்கு உபதேசம் செய்யாத தேர்தல் ஆணையமும் இன்னபிற அமைப்புகளும் அடித்தட்டு மக்களிடம் போய் 'வாக்களிக்க பணம் வாங்காதீர்கள்' என்று மேட்டிமைத்தனத்துடன் உபதேசிப்பது எவ்வகையான அறம்?


***

கருணாநிதி அராஜகமாக கைது செய்யப்பட்ட செய்தி அறிந்த அந்த விடியற்காலை நேரத்தில் திமுக காரர்களுக்கு நிகராக ஏன் அதற்கு அதிகமாகவும் கூட கொதித்துப் போனவன் நான். தன்னிச்சையாக என் வாயில் இருந்து ஆபாச சொற்கள் வந்து விழுந்தன.

ஆனால் அந்த வீடியோ இந்த தேர்தல் சமயம் பார்த்து சுற்றுக்கு வருவதில் உள்ள அபத்தமும் அனுதாபக் கோரலும் குமட்ட வைக்கிறது. அப்படியே எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வீடியோவையும் பதிலுக்கு சுற்றுக்கு விட்டால் பதிலுக்கு சமனாகி விடும்.

நல்லா பண்றீங்கய்யா அரசியல்.

***


'டைம்டேபிள் கணக்கா லஞ்ச் ஒரே மாதிரியே இருக்கே. ஏதாவது மாத்தம் செய்யக்கூடாதா?' -ன்னு வீட்டம்மணி கிட்ட கொஞ்ச நாளா புலம்பிட்டு இருந்தேன்.

இன்னிக்கு மாத்தம் தெளிவா இருந்தது.

லஞ்ச் டப்பா அடியில், ஒருவேளை சாம்பார், குழம்பு கசிஞ்சு கொட்டினா கறையாகம இருக்கிறதுக்காக ஒரு கறுப்பு கவர் இருக்கும். ரொம்ப நாளா இருந்தது.

இன்னிக்கு அந்த கவர் பிங்க் கலர்ல மாறியிருந்தது.

மாற்றம் - முன்னேற்றம் - கவுண்டமணி..


***


ஜெயமோகன் எழுதிய இந்தப் பதிவின் மையக்கருத்து மிக முக்கியமானது. குறிப்பாக இலக்கிய, சினிமாக் கனவுடன் தங்களின் சொந்தக்கால்களை நழுவ விட்டுக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு.

என் இளம் வயதில் ஒரு பத்திரிகையாளனாக அல்லது சினிமா இயக்குநராக அல்லது அதில் பணிபுரிவனாக இருக்கும் பெரும் கனவு இருந்தது. அந்தக் கனவுகளை அடைவதில் உள்ள நடைமுறைச்சிக்கல்கள் குறித்த யூகமும் கூடவே இருந்தது. எனவே வீட்டின் வறுமை காரணமாக கிடைத்த பணியில் சேர்ந்தேன். லாட்டரிச் சீட்டு விற்பவனாக, பை தைக்கும் கடையில் கத்தரிக்கோலால் மண்டையில் அடி வாங்கிய உதவியாளனாக , பைண்டிங் கடை, மருந்துக் கடை என்று உதிரி மனிதர்களின் அத்தனை பணிகளையும் செய்திருக்கிறேன்.

சமயங்களில் அந்தக் கனவுகளின் வெம்மை என்னை சுட்டெரித்துக் கொண்டே இருக்கும். கருகி கருகி சாவேன். ஆனால் அப்போது எடுத்த யதார்த்தமான முடிவு எத்தனை சரியானது என்று ஒரு கட்டத்தில் உணர்ந்தேன். பிறகு அந்த அதிருப்தி மெல்ல சரியாற்று.

கடந்த வருடத்தில் கூட ஒரு பெரிய இயக்குநருக்கு உதவி இயக்குநராகவும் வாய்ப்பு தேடி வந்தது. சினிமா ஆர்வமுள்ள இளைஞர்கள் கனவு காணும் இடம் அது. ஆனால் நான் உறுதியாக மறுத்து விட்டேன். அதற்குப் பின்னால் இருக்கும் நிலையின்மையை என்னால் துல்லியமாக யூகிக்க முடிந்தது. ஒருவேளை என் குடும்ப பின்னணி சற்று வளமாக இருந்திருந்தால் கூட என் கனவுகளைத் தேடி பறந்திருப்பேன். அவ்வாறு இல்லை.

என்றாலும் இப்போது அது குறித்து பெரிதாக எந்த வருத்தமும் இல்லை. ஆனால் மெல்லிய ஏக்கமும் அது சார்ந்த துக்கமும் உள்ளுக்குள் அலையடிக்கும். அடுத்த மாதத்திற்கான செலவு குறித்து யோசித்தால் அலை திரும்பிப் போகும்.

'பிளாட்பாரத்துல படுத்து தூங்கியிருக்கேன்' என்று வெற்றியடைந்தவர்களின் நேர்காணலில் உள்ள பெருமிதங்களைப் பார்த்து பிளாட்பாரத்தில் தூங்க பல இளைஞர்கள் துணிவுடன் கிளம்புகிறார்கள். பிறகு லாட்டரி அடித்து விடும் என்கிற கற்பனையுடன்.

ஆனால் வெற்றியடைந்தவர்களின் சதவீதம் எத்தனை என்பதையும எண்ணிப் பார்க்க வேண்டும். பல வருடங்களாகியும் பிளாட்பாரத்திலேயே தூங்குபவர்கள்தான் அதிக எண்ணிக்கை.

லெளகீக தளத்தில் ஒரு காலை அழுத்தமாக ஊன்றி நின்றபடிதான் உங்கள் கனவுகளுக்காக அடுத்த காலை எடுத்து வைக்கலாம். பறவையின் சிறகுகள் போல.

ஒற்றை சிறகின் மூலம் மட்டுமே உங்கள் கனவுகளை நோக்கி பறக்க முடியும் என்பது ஒருவகையான துயரம்தான் என்றாலும் அதுதான் யதார்த்தமும் கூட.

இந்த அற்புதமான விஷயத்தை இந்த ஒற்றைப் பதிவின் மூலம், கவிஞர் விக்ரமாதித்யன் மூலம் பதிவாக்கியிருக்கிறார் ஜெயமோகன்.


***


பென்சில் - பார்த்துக் கொண்டிருக்கும் போதே கொரியப் படங்களின் வாசனை அடிக்கிறதே என்று யோசித்தேன். நினைத்தது சரி. 4th period mystery படத்தின் ரீமேக் என்கிறது விக்கி.

இயக்கியவர் கெளதம் வாசுதேவனிடம் உதவி இயக்குநராக இருந்தவராம். என்ன சொல்ல?

கொஞ்சம் சகித்துக் கொண்டாலும் முதல் பாதி ஓரளவிற்கு சுவாரசியமாகவே இருக்கிறது. அந்த புத்திசாலித்தனத்தை அப்படியே மெயின்டெயிண் செய்திருந்தாலாவது சற்று தேறியிருக்கும்.

சஸ்பென்ஸ் படங்களின் மிக அடிப்படையான வடிவம். ஒரு கொலை. அதற்கான பல யூகங்களை பார்வையாளர்களிடம் விதைக்கிறார்கள்.இறுதியில் நம் சந்தேக வட்டத்தில் இல்லாத ஒருவர் என்கிற தேய்வழக்கு முடிவு.

நான் கூட ஹீரோவே அந்தக் கொலையை செய்து விட்டு பார்வையாளர்களை குழப்புவதற்காக அவரே துப்பறிவது போல் நடிக்கிறாரோ என்று கூட யோசித்து வைத்திருந்தேன். ம்ஹூம். தமிழ் சினிமா அப்படியெல்லாம் வளரக்கூடாது என்று அடம் பிடிக்கிறார்கள்.

இரண்டாம் பகுதி மகா அபத்தம். 10000 மாணவர்கள் படிக்கிற இண்டர்நேஷனல் ஸ்கூல், ஏதோ பூத் பங்களா மாதிரி காலியாக இருக்கிறது.

தர அடிப்படையில் தம்மை தகுதியானதாக காட்டிக் கொள்வதற்காக 'இங்லீஷ்' ஸ்கூல்கள் செய்யும் தகிடுததங்களை ஒரு நீதியாக சொல்லி படத்தை முடிக்கிறார்கள். அப்பாடா என்றிருக்கிறது.

படத்தின் தலைப்பு பென்சில். அது சீவுவதற்காக உபயோகப்படும் பொருளை தலைப்பாக வைத்திருக்கலாம்.

அது என்னமோ ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் படங்களை பார்க்கும் போதெல்லாம், தலையிலேயே தட்டி 'வீட்ல பெரியவங்க இருந்தா கூட்டிட்டு வா' என்று சொல்ல வேண்டும் போலவே தோன்றுகிறது.


suresh kannan

No comments: