Thursday, August 22, 2013

சேரனை முன்னிட்டு சில விஷயங்கள்....



இயக்குநர் சேரன் vs மகள் விவகாரத்தை இச்சமூகத்தைச் சார்ந்த ஒரு தனிநபரின் பிரச்சினையாக சமூக நோக்கில் அணுகிப் பார்க்கலாம். ஆனால் சேரன் சமூகத்தில் ஒரு பிரபலமான நபர் என்பதாலேயே இந்த விவகாரத்தின் மீதான கவனம் அதிகமாக குவிகிறது என்பதை மறுப்பதற்கில்லை.

இந்த விவகாரத்தின் சமீப திருப்பமாக, சேரனின் மகள் தன் குடும்பத்தினருடன் செல்ல முடிவெடுத்திருப்பதாக சொல்லப்படுவது - ஒரு தற்காலிகமான முடிவாக - சரியானது என்றே எனக்குத்  தோன்றுகிறது. இதை ஒரு சம்பிதாயமான நோக்கில் சொல்லவில்லை. இப்போது அந்தப் பெண்ணுக்குத் தேவை, மனரீதியான எவ்வித நெருக்கடியும் அல்லாமல் சிந்திப்பதற்கான கால அவகாசம். அதை இந்த முடிவு தரும் என நினைக்கிறேன்.

ஏனெனில், தன்னுடைய காதலனுடன் செல்வதாக முன்னர் எடுத்த முடிவும் சரி,  பெற்றோருடன் செல்வதாக எடுத்த இப்போதைய முடிவும் சரி, இரண்டுமே பல நபர்களின் இடையூறுகளினாலும் உளவியல் ரீதியான நெருடிக்கடியினாலும், உணர்ச்சி குவியல்கள் சார்ந்த அழுத்தத்தினாலும் குழப்பத்தினாலும் எடுத்ததாகவே தோன்றுகிறது. இப்போது எல்லாவற்றிலும் இருந்து விலகி நின்று யோசிப்பதற்கான சந்தர்ப்பம் அமைய வேண்டும். சுற்றியுள்ளவர்களும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்.

இந்தச் சமயத்தில் இந்தப் பெண்ணை விடவும் அதிகம் கவனிக்கப்பட வேண்டியதும், உளவியல் ஆலோசனை தேவைப்படுவதும் அந்தப் பையனுக்குத்தான் என நினைக்கிறேன். 'தான் ஏமாற்றப்பட்டோம்' என்கிற எண்ணமும் சுயபச்சாதாபமும் அதிகாரத்தின் முன்பு ஒரு சாதாரணன் உணர்கிற உளவியல் தாக்குதலும் அந்த நபரை நிலைகுலைய வைத்து விடலாம். இளவரசன் - திவ்யா விவகாரத்தில், இளவரசனும் இதே போன்றதொரு சூழலில்தான் தற்கொலை முடிவை நோக்கி (அது தற்கொலையாக இருக்கும் பட்சத்தில்) நகர்ந்தார் என யூகம் செய்ய வேண்டியிருக்கிறது.

காதல் திருமணங்கள் பரவலாக பெருகிக் கொண்டிருந்தாலும் இன்னமும் நாம் கட்டுப்பெட்டியான சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதையே இந்த விவகாரம் நமக்கு உணர்த்துகிறது. ஓர் இயக்குநராக காதல் தொடர்பான திரைப்படங்களை உருவாக்கின, முதிர்ச்சியான மனநிலையைக் கொண்டிருப்பார் என்று நாம் கருதக்கூடிய ஒரு படைப்பாளியே தம்முடைய சுய வாழ்க்கையில் காதலுக்குத் தடையாக நின்றிருக்கக்கூடிய முகாந்திரங்களை இந்த விவகாரம் நமக்கு உணாத்துகிறது. ஒருவேளை அந்தப் பையனின் பின்னணியும் நடவடிக்கைகளும் ஆட்சேபகரமானதாக இருக்கும் பட்சத்தில் அதை தன் மகளிடம் விளக்கிப் புரிய வைக்கலாம். ஆனால் தன்னுடைய செல்வாக்கின் மூலமும் பணபலத்தின் மூலமும் இந்தக் காதலை அவர் தடுக்க முயன்று கொண்டிருந்தால் அது சரியானதாக இருக்காது.

சேரன் பிரபலமான நபர் என்பதாலேயே மீடியாக்களின் வெளிச்சமும் பரபரப்பும் கவனமும் அவர் மீதே பெரும்பாலும் இருந்தது. இதை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டார். ஒரு பெண்ணின் தகப்பனாக உருக்கமுடனும் கண்ணீருடன் அவர் நின்ற சித்திரத்தினால் பொதுப்புத்தியின் அனுதாபம் அவர் மீதே குவிந்தது. மாறாக எதிர்தரப்பினருடைய விளக்கம் பரவலாக வெளிப்படாததால், அவர்களின் தரப்பு கவனிக்கப்படாமல் போனது மாத்திரமல்லாமல், இந்த அனுதாபமே வெறுப்பாக அவர்கள் மீது பாய்ந்தது. அந்தப் பையன் மது குடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, இது போன்ற பையனுக்கு யார் பெண் தருவார்கள் என்ற பத்தாம்பசலித்தனமான கேள்வியை சிலர் கேட்டிருந்தனர். மது குடிப்பதை ஒழுக்கம் சார்ந்தும் அறம் சார்ந்தும் சிந்திப்பதுமான கலாச்சார எண்ணங்களே இது போன்ற முட்டாள்தனங்களுக்கு காரணம். மாறாக மதுவருந்துவதை ஒரு கட்டுப்பாடுடன் கூடிய பழக்கமாக நமக்கு பின்பற்றத் தெரியவில்லை என்பதே உண்மை.

இந்த விவகாரத்தில் சேரனுக்கு மிக பக்கபலமாக நின்ற திரைத்துறையினரின் நட்பும் ஆதரவும் ஒருவகையில் பாராட்டத்தக்கது என்றாலும் தம்முடைய சுயதுறை சார்ந்த 'தலைவா' பட விவகாரத்தில் பெரும்பாலும் அனைவருமே மெளனம் சாதித்தது ஒரு நகைமுரண்.

suresh kannan

Thursday, August 15, 2013

நீங்கள்தானே சுரேஷ் கண்ணன்?

நண்பர்களுக்கு,

இப்போதுதான் நண்பர் சுகா எழுதியிருக்கும் இந்தப் பதிவை பார்த்தேன்.

http://venuvanamsuka.blogspot.in/2013/08/blog-post.html

(நானாகத்தான் பார்த்தேன். நண்பர்களோ வாசகர்களோ யாரும கவனத்திற்கு கொண்டு வரவில்லை).

சங்கடமாகவும் வேதனையாகவும் இருக்கிறது. அது குறித்து சில விளக்கங்கள். 

சுகா என்ற பெயரில் எழுதும் நண்பர் சுரேஷ், நானறிந்த வரை நண்பர்களின் மூலம்  முதலில் மடற்குழுமம் ஒன்றில் இணையத்திற்குள் எழுத வந்தார். இயல்பான அற்புதமான நகைச்சுவை எழுத்துக்குச் சொந்தக்காரர். திருநெல்வேலி மண் வாசனை கமழ எழுதும் இவர் மூங்கில் முடிச்சு, தாயார் சன்னதி போன்ற நூல்களின் சொந்தக்காரர். எனக்கு மிகவும் பிடித்தமான திரைப்பட இயக்குநரான பாலுமகேந்திராவிடம் பல திரைப்படங்களில் பணியாற்றியவர்...

இப்போது பிரச்சினை என்னவெனில் அவருக்கும் எனக்குமுள்ள பெயர்க்குழப்பம்தான். நான் சுமாராக 2002-ம் ஆண்டு முதல் ராயர்காப்பி கிளப், மரத்தடி போன்ற மடற்குழுமங்களிலும் பின்னர் 'பிச்சைப்பாத்திரம்' என்கிற இந்தத் தளத்தின் மூலமும் 'சுரேஷ் கண்ணன்' என்கிற பெயரில் எழுதிக் கொண்டு வருகிறேன். இதன் பின்னர் இணையத்தில் எழுத வந்த நண்பர் சுகாவிற்கும் எனக்கும் ஒரே மாதிரியுள்ள பெயர்க்குழப்பத்தினால் மாற்றி மாற்றி விசாரணைகளும் பின்னூட்டங்களும் வந்தன. நீங்கள்தான் அவரா என்று பலர் என்னிடம் கேட்டனர். அவரிடமும் இது போல் சிலர் கேட்டிருக்கலாம். அந்தத் துன்பத்தை அவர் என்னிடம் அத்தனை பெரிதாக சொன்னதில்லை. என்றாலும் இரண்டொரு சந்தர்ப்பங்களில் இந்தச் சங்கடத்தை வேடிக்கையாக இருவரும் பரஸ்பரம் பகிர்ந்து கொண்டிருக்கிறோம். முதலில் பொறுமையாக விளக்கமளித்துக் கொண்டிருந்த நான் இந்தக் கறுப்பு நகைச்சுவை தானாக தீரட்டும் என்று அப்படியே விட்டுவிட்டேன்.

நண்பர் சுகாவும் 'சுரேஷ் கண்ணன்' என்ற பெயரில் முதலில் எழுதி (உயிர்மையின் துவக்கத்தில் இளையராஜா இசை பற்றி ஒரு கட்டுரை வந்திருக்கிறது) பின்பு இந்தத் தொந்தரவு தாங்காமல் 'சுகா' என்று தன் அடையாளத்தை பெருந்தன்மையாக மாற்றிக் கொண்டார்.  பிறகு அந்தப் பெயரில்தான் அவர் தொடர்ந்து எழுதி வருகிறார். திரைத்துறையிலும் இயங்கி வருகிறார். (எழுத்தாளர் சுஜாதாவும் இதே போன்றதொரு காரணத்தினால் தன் பெயரை மாற்றிக் கொண்டார் என்பது நினைவுக்கு வருகிறது).

'சுரேஷ் கண்ணன்' என்கிற பெயரில் திரைப்பட விமர்சனங்களை எழுதி வரும் என்னால் நண்பர் சுகாவிற்கு சில சங்கடங்கள் வந்திருக்கலாம் என அவரின் பதிவின் மூலம் யூகிக்கிறேன். சில தருணங்களில் மாத்திரமே பழகியிருந்தாலும் நண்பர் சுகா பழக மிக இனிமையானவராக இருந்தார். மிகுந்த தன்னடக்கத்துடன் இருக்கிறார். திரையிசை பற்றி சொல்வனம் தளத்தில் அவர் எழுதி வரும் கட்டுரைகள் அற்புதமானவை.

பெயர்க்குழப்பம் என்கிற இந்த அபத்தமான காரணத்தினால் அவரின் எழுத்துக்கோ அல்லது அவருக்கோ துளியளவும் சங்கடமோ இன்னபிற தொந்தரவுகளோ வந்துவிடக்கூடாது என்பது என் இமாலய விருப்பம். நானாவது என் கட்டுரைகளில் என் கருத்துக்களை சற்று காரசாரமாக முன்வைப்பேன். ஆனால் அவர் எழுத்தினால் எவருக்கும் இதுவரை துளி கூட சங்கடமோ வருத்தமோ வந்ததில்லை என்று நம்புகிறேன். மேலும் ஆனந்த விகடன் கட்டுரைகளின் மூலம் பலநூறு வாசகர்களைக் கொண்டிருக்கும் அவரையும் என்னையும் குழப்பிக் கொள்வது அநியாயம்.

எனவே இதன் மூலம் இணைய நண்பர்களுக்கும் திரைத்துறையில் உள்ளவர்களுக்கும் தொடர்புள்ள இன்னபிற நபர்களுக்கும் தெரிவிக்க விரும்புவது என்னவெனில் 'சுரேஷ் கண்ணன்' என்ற பெயரில் இணையத்திலும்  இதழ்களில் திரைவிமர்சனங்கள் எழுதுபவன் நானே. 'சுகா' என்ற பெயரில் எழுதுபவர் அவர்.

தயைகூர்ந்து இனியும் அவரிடம் 'நீங்களா சுரேஷ் கண்ணன்' என்று எவரும் கேட்காதீர்கள். 

நண்பர் சுகா: என்னையும் அறியாமல் உங்களுக்கு ஏதோ சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறேன் என யூகிக்கிறேன். என்னை மன்னியுங்கள் சகா.


suresh kannan

Tuesday, August 13, 2013

மரியான்: மாற்று சினிமாவின் பாவனை



முன்னோட்டக் காட்சிகளைக் (டிரைய்லர்) கண்டு ஒரு திரைப்படத்தைப் பற்றி தீர்மானிக்க கூடாது என்பது பாலபாடமென்றாலும் மரியான் திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகளை (டிரைய்லர்) பார்த்த போது சமீபத்திய தமிழ் திரைப்பட வரவுகளில் இதுவொரு முக்கியமான திரைப்படமாக இருக்கும் என உள்ளுணர்வு காரணமாக கருதினேன். ஆனால் படம் வெளிவந்து பார்த்து முடித்த பிறகு அந்த டிரைய்லரை தொகுத்த எடிட்டரை நிச்சயம் பாராட்டியேயாக வேண்டும் என்று  தோன்றியது. ஏனெனில் படத்தில் சிறிதளவே இருக்கும்  சிறப்பான காட்சித் துணுக்குகளை தொகுத்து முழுப்படமும் சிறந்தபடம் என்கிற தோற்றத்தை ஏற்படுத்துவதில் வெற்றி கண்டு விட்டார்.

சிறந்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், பெரிய பட்ஜெட், வெளிநாட்டுக் காட்சிகளின் மாய்மாலங்கள், இலக்கியவாதிகளின் பங்களிப்புகள், உண்மைச் சம்பவம் அடிப்படையில் உருவான கதை போன்றவற்றை மாத்திரம் வைத்துக் கொண்டு ஒரு சிறந்த திரைப்படத்தை தந்து விட முடியாது என்பதற்கான சமீபத்திய உதாரணம் 'மரியான்'.  எவ்வித முன்திட்டங்களுமல்லாமல் படப்பிடிப்புத் தளத்திற்கு சென்ற பிறகுதான் 'சீன்' யோசிக்கும் அதிசய இயக்குநர்களுக்கு மத்தியில் bounded script வைத்து கறாராக திட்டமிட்டாலும் இயக்குநர் நினைத்தபடியான இறுதி வடிவம் வருவது என்பது மாத்திரமல்லாமல் அதுவொரு சிறந்த சினிமாவுமாக ஆவதும் கூட ஒரு தற்செயலான விஷயமாக அமைவதில் ஏதோ ஒரு மாயமிருக்கிறது. சினிமா என்பது பல கலைஞர்களின் கூட்டு உழைப்பால் நிகழ்வது என்பதால் இயக்குநரின் முழுக் கட்டுப்பாட்டில் அந்தக் குழுவே ஒத்த அலைவரிசையில் இயங்கினால்தான் ஒரு நல்ல சினிமா உருவாக முடியும்.

மரியானில் துண்டு துண்டாக சில அற்புதமான கணங்கள் உள்ளன. ஆனால் முழுமையான வடிவத்தில், பொருளுக்காக குடும்பத்தை துறந்து புலம் பெயர்ந்துள்ளவர்களின் துயரங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சிறந்த சினிமாவாக மலரும் வாய்ப்பை தவற விட்டு விட்டதில் எல்லாமே வீண். மரியானின் மிகப் பெரிய பலவீனம்  திரைக்கதை. ஒரே நிலையில் தேங்கிக் கொண்டிருந்தால் அது சிறந்த திரைக்கதையல்ல. பல்வேறு கிளையாக பிரிந்து ஒரு மைய இழையை நோக்கி நகர்ந்து கொண்டேயிருப்பதே சுவாரசியமான திரைக்கதையின் அடிப்படையாக இருக்கும். சாவகாசமான டைம்லைனில் எடுக்கப்படுவதுதான் மாற்று சினிமா என்பது ஒரு மாயை. வேகமாக நகரும் திரைக்கதையின் மூலமும் ஒரு நல்ல திரைப்படத்தை உருவாக்கலாம். இரானிய திரைப்படமான A Separation - ஓர் உதாரணம். இன்னொரு பலவீனம் அழுத்தமேயில்லாத பாத்திரங்களின் வடிவமைப்பு. இப்படியாக பலவற்றைச் சொல்லலாம். 


நீரோடி என்கிற கற்பனையான குமரி மாவட்டத்துக் கடற்கரையின் திறமைசாலியான மீனவன் மரியான்.(தனுஷ்).  தன்னை விழுந்து விழுந்து காதலிக்கும் பனிமலரை (பார்வதி) புறக்கணிக்கும் அவன் பின்னர் ஏற்றுக் கொள்ள முடிவு செய்கிறான். பணம் இருந்தால்தான் அவளை திருமணம் செய்ய முடியும் என்கிற சிக்கலான சூழலில் அதற்காக இரண்டு வருட பணி ஒப்பந்தத்தில் சூடான் நாட்டிற்கு  செல்கிறான். பணிக்காலம் முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது அங்குள்ள இளம் தீவிரவாதிகளால் பணத்திற்காக கடத்தப்படுகிறான். மரியான் மீண்டானா, பனிமலருடன் இணைந்தானா என்பது இறுதிப்பகுதி. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

காதல்+ தீவிரவாதம் என்பது மணிரத்னம் கண்டுபிடித்த அற்புதமான வணிக ஃபார்முலா. தமிழ் சினிமாவின் தீராத வெற்றிகரமான சலி்த்துப் போன கச்சாப் பொருளாகிய காதலை, மார்பகங்கள் குலுங்கும் காட்சிகளுடன் நைசாக சொல்லி விடலாம். தீவிரவாத எதிர்ப்பு என்பதையும் மிகையுணர்ச்சியுடன்  சொல்லி தேசிய நீரோட்டத்தில் இணைந்து பிரகாசிக்கலாம். மணிரத்னம் 'ரோஜா' விலிருந்து இதை துவங்கியதால், விளம்பரப் பட இயக்குநரான பரத்பாலாவும் இந்த ஃபார்முலாவை பின்பற்றியிருக்கிறார் என்று நம்பத் தோன்றுகிறது. ஆனால் மணிரத்னமிடமுள்ள சுவாரசியமாக கதை சொல்லும் திறன் என்கிற திறன் கூட இவரிடமில்லை. சில நிமிடங்களுக்குள் ஒரு செய்தியை மிக சுவாரசியமாகவும் அழுத்தமாகவும் சொல்ல வேண்டுமென்பது விளம்பரப் படங்களுக்குள்ள நியதி. அந்தப் பின்னணியிலிருந்து திரைப்படம் இயக்க வந்த பரத்பாலா, இத்தனை மேலோட்டமாக ஒரு திரைப்படத்தை உருவாக்கியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

முதல் பகுதி பெரும்பான்மையும் பனிமலர் தன் காதலை மரியானிடம் தெரிவிக்க விழையும் காட்சிகளில் மிக சாவகாசமாக நகர்கிறது.  ஆனால் இது பலவீனமான திரைக்கதையுடன் எவ்வித நம்பகத்தன்மையும் நுண்ணுணர்வுகளுடனான காட்சிகளுடன் இல்லாமலிருப்பதால் இவற்றுடன் உணர்வுரீதியாக ஒன்ற முடியாமல் விலகியே நிற்க வேண்டியிருக்கிறது. இதனாலேயே இரண்டாவது பகுதியில் மரியான் தனிமையில் துன்புறும் போதும் பனிமலர் இவனுக்காக ஏங்கி காத்திருக்கும் போதும் காட்சிகளுக்கு உணர்வு ரீதியாக போதுமான அழுத்தம் கிடைக்கவில்லை. வெறும் பாடலாக  கேட்ட போது அற்புதமான உணர்வுகளைக் கிளறின 'எங்க போன ராசா' கூட காட்சிகளின் பின்னணியில் வெறுமையாக நகர்கிறது.

தனுஷ் - ஆடுகளம் மூலமாக தேசிய விருதின் வெளிச்சம் இவர் மீது விழுந்த பிறகு தேசிய சினிமாவிற்கு நகர்ந்திருப்பது மகிழ்ச்சி. ஆஸ்கர் விருதை நோக்கி சிறந்த நடிகராகவே ஆவது என்கிற வெறித்தனத்துடன் இருக்கிறார் என்பது தெரிகிறது. சில காட்சிகளில் இவரது உடல்மொழியும் வசனமும் அற்புதமாக இருந்தாலும் (ஆரம்பக் காட்சியில் தொலைபேசிக் கட்டணத்தை பார்த்துக் கொண்டே காதல் பொங்க பேசுவது உதாரணம்) பல காட்சிகளில் செயற்கையாகத் தோன்றுவதற்கு திரைக்கதையின் பலவீனமே காரணம். கமல் தேசிய விருது பெற்று சிறந்த நடிகர் என்று நிறுவப்பட்ட பிறகு நாயகனில் அவர் வாந்தியெடுப்பது போல் அழுவதையே ஒரு கிளிஷேவாக தொடர்ந்து தொலைக்காட்சிகளில் காட்டி வெறுப்பேற்றுவார்கள். அப்படியே தனுஷூக்குமான காட்சிகளும் இதிலுண்டு.

பார்வதியும் அப்படியே. கலைடாஸ்கோப்பின் வழியாக பார்ப்பது போல் இவர் முகத்தில் பல்வேறு உணர்ச்சிகள் மின்னல் இடைவெளியில் மாறி மாறி  தோற்றமளிக்கின்றன. எனவேதான் ஒளிப்பதிவாளர், மிக தைரியமாக இருவருக்கும் மிக நெருக்கமான அண்மைக் கோண காட்சிகளை பயன்படுத்தியுள்ளார் என்று தோன்றுகிறது. அழுகின்ற காட்சிகளில் எம்.ஜி.ஆர் ஏன் முகத்தை மூடிக் கொள்கிறார் என்று யோசிக்கும் போதுதான் குளோசப் காட்சிகளில் நடிக்கும் சிரமமும் அதன் தகுதியும் தெரியும். பார்வதி தன்னுடைய சிறப்பான நடிப்பை வழங்கியிருந்தாலும் இதுவும் வெற்றாய் ஆனதற்கு இயக்குநர்தான் காரணம்.  'பூ' திரைப்படத்தின் மாரிக்கும் 'மரியானின்' பனிமலருக்கும் உள்ள வித்தியாசத்தை உணருவதின் மூலம் இதைப் புரிந்து கொள்ள முடியும்.

தேசிய விருது பெற்றிருக்கும் இன்னொரு மலையாள நடிகரான சலிம் குமார், மொழிப் பிரச்சினையினாலோ என்னவோ இத்திரைப்படத்தில் மைதானத்தில் விரட்டப்படும் எலி போலவே தவித்திருக்கிறார். திரைக்கதை மாத்திரமல்ல, எந்தவொரு பாத்திரத்தின் பின்னணியுமே அதனதன் தனித்தன்மையோடு அழுத்தமாகவும் நம்பகத்தன்மையுடன் உருவாக்கப்படாததினாலேயே எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் போகிறது. இதனாலேயே பாலைவனத்தில் அலைந்து திரிந்து பித்தநிலைக்கு சென்று சிறுத்தைகளின் பிம்பங்களைக் காணும் மரியானின் உழைப்பும் கடலுக்கும் அவனுக்குள்ள உறவும் எவ்வித அனுதாபத்தையும் உணர்வையும் ஏற்படுத்தவில்லை.

படத்தின் நாயகனை, நாயகி துரத்தி துரத்தி காதலிக்கும் எம்.ஜி.ஆர் காலத்து பாணி இதிலும் தொடர்கிறது. இந்தக் காதல் என்கிற விஷயத்தில் தமிழ்த் திரையின் நாயகர்கள் இருமுனைகளி்ல் இயங்குகிறார்கள்.  ஒன்று, எந்தப் பெண்ணையும் ஏறெடுத்து பார்க்காமல் மிக ஒழுக்கசீலராக செயல்படுவது. அல்லது பொறுக்கித்தனமாக பின்னாலேயே சுற்றி மிரட்டியாவது அவளிடமிருந்து காதலைப் பிடுங்கியெடுப்பது. மரியான் இதில் முதல் வகையில் செயல்படுகிறார். இவருக்குள்ளும் காதல் இருந்தாலும் வேண்டுமென்றே பனிமலரை வெறுப்பது போல் நடிக்கிறார். (அந்த சர்ச் காட்சி அற்புதம்). நாயகியே மேலே வந்து விழுந்தாலும் 'பிட்டு' படங்களில் வரும் ஆண்மைக்குறைவுள்ள பாத்திரம் போல் தள்ளி விடுகிறார். இப்படி தமிழ் சினிமா நாயகர்கள் யதார்த்தலிருந்து விலகி நின்று தங்களது கற்பைக் காக்கும் மரபை உடைத்த படமாக 'அட்ட கத்தி'யை சொல்லலாம். அதில் ஒரு பெண்ணை நினைத்து உருகும் நாயகன், பேருந்து பயணத்தின் போது தம்மை பாலியல் இச்சையுடன் நெருங்கும் ஒரு முதிர்கன்னியை மெல்லிய குற்றவுணர்வோடு உரசி இன்புறுகிறான். இதில் மரியான் தன்னுடைய காதலை வெளிப்படையாக ஒப்புக் கொள்வதற்கு ஒரு சீன் வைத்திருக்கிறாரே, இயக்குநர், அந்தக்  காரணத்தை மாத்திரம் மன்னிக்கவே முடியாது.

'மரியான்' கடற்கரையோர மீனவர்கள் தொடர்பான படமென்கிற பாவனையுடன் படம் இயங்கினாலும் செம்மீன் போல அது எவ்வகை பாதிப்பையும் ஏற்படுத்தாதது, அதிலுள்ள பிளாஸ்டிக்தனம்தான். இந்த லட்சணத்தில் சமூகப் பிரச்சினையை தொட்டுச் செல்லும் ஆசையும் இயக்குநருக்கு வந்து விடுகிறது. மரியானின் நண்பர் ஒருவர் மீன்பிடிக்கச் செல்லும் போது கடலில் சுடப்படுகிறார். 'சுட்டுட்டாங்க.. சுட்டுட்டாங்க" என்று உறவினர்கள் பொதுவாக அலறுவதும் மரியான் மிக உருக்கமாக கண்ணீர் சிந்துவதோடும் இந்தக் காட்சி கடந்து விடுகிறது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படும், பல ஆண்டுகளாக தொடரும் இந்தக் கொடுமையை சென்சார் பயத்தினாலோ என்னவோ கள்ள பாவனையுடன் கடப்பதற்குப் பதில் அதை முழுவதுமாகவே தவிர்த்து விடுவதாவது ஒருவகையில் நேர்மையாக இருக்கும். முன்னர் நீர்ப்பறவை' என்கிற திரைப்படத்திலும் இம்மாதிரியான பாவனையே பல்லிளித்தது. இந்த உள்ளூர் அரசியல் மாத்திரமல்ல, வறுமையில் வாடும் ஆப்ரிக்க மக்களின்அரசியலையும் அதன் பின்னணியையும் கூட ஒரு வரியிலேயே கடந்து விடுகிறார் இயக்குநர். அது சரி, இது தமிழ் சினிமாதானே? பனிமலர், மரியானின் உதட்டில் முத்தமிடும் காட்சியில் திரையரங்கில் இதையே பெரிய சாதனையாக நினைத்து ரகசியக் கிளர்ச்சியுட்ன் கூச்சலிடும் தமிழ் சமூகத்திற்கு இந்த தரம் போதும்தான்.

காதல், பிரிவு, உயிர்த்தெழுதல் போன்ற உணர்வுகளைப் பற்றின படம் என்று படத்தின் அறி்விப்புகள் முழங்கினாலும் சில விடுபடல்களைத் தவிர்த்து அதில் எவ்வித அசலான தன்மையையும் காண முடியவில்லை. தமிழ் சினிமாவில் வழக்கமான கழிவுகளைத் தவிர, உருப்படியாக படம் எடுப்பவர்கள் என்று அறியப்படுபவர்களின் திரைப்படங்கள் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கின்றன. துண்டு துண்டாக சில மின்னல் கீற்றுகள் இருந்தாலும் ஒட்டு மொத்த சினிமாவாக பார்க்கும் போது அது தரும் உன்னதத்தை இழந்து விடுகின்றன. இங்குதான் சர்வதேச தரத்திலான படைப்புகளுக்கும் தமிழ் சினிமாவின் தரத்திற்குமான விலகலையும் தூரத்தையும் உணர முடிகிறது. தீவிரவாதிகளால் ஒரு குழியில்  தள்ளப்பட்டு சில நாட்களைக் கடந்து தலை நிறைய முடியுடன் காட்சியளிக்கும் மரியான், அதிலிருந்து தூக்கப்படும் போது வெட்டப்பட்ட குறைந்த முடியுடன் வருகிறான். Continuity -என்றொரு விஷயம் இருக்கிறதா இல்லையா? இப்படி அடிப்படையான விஷயத்தில் கூட அலட்சியத்துடன் இருக்கும் வரை தமிழ் சினிமா, உண்மையான சர்வதேச விருதுகளை நினைத்து கூட பார்க்க முடியாது.

 

பரதவர்களின் வாழ்வியலை 'ஆழி சூழ் உலகு' புதினத்தில் பதிவு செய்த ஜோ.டி. குரூஸ் இதில் வசனகர்த்தாவாக பணியாற்றியுள்ளார். (ஒரு காட்சியில் வந்தும் போகிறார்) கவிஞர் குட்டி ரேவதியும் இணை இயக்குநராக பணியாற்றியதோடு ஒரு பாடலையும் எழுதியுள்ளார். இலக்கியத்தில் தொடர்புள்ளவர்கள் இப்படியாக தமிழ் சினிமாக்களில் தொடர்ச்சியாக பணியாற்றுவது சமீப காலத்தில் அதிகரித்துள்ளது மகிழ்சசி என்றாலும் வணிக சினிமா எனும் இயந்திரம், அவர்களின் திறமையை தன் வார்ப்பிற்கேற்றவாறு உபயோகப்படுத்திக் கொண்டு சக்கையாக மென்று துப்புவதுதான் துரதிர்ஷ்டமானது. ரஹ்மான் பாடல்களை சிறப்பாக உருவாக்குவதில் வழக்கம் போல் வெற்றி பெற்றுள்ளார். இவற்றை தனி ஆல்பமாக கேட்கும் வரைதான் சிறப்பு. படத்தோடு பொருத்திப் பார்க்கும் போது நரகம். அதிலும் தாய் மண்ணே.. ஞாபகத்தில் 'நெஞ்சே எழு...' என்று பாடும் போது திரையரங்கில் பார்வையாளர்கள் இருக்கையிலிருந்து எழுத் தயாராகின்றனர்.  இத்தனை வருடங்களுக்குப் பிறகும் பின்னணி இசையில் மெளனத்திற்கும் பங்குள்ளது என்பதை இன்னமும் புரிந்து கொள்ளவேயில்லை. குமரி கடற்கரை மாவட்டத்தின் குளிர்ச்சியையும்  பாலைவனக் காட்சிகளின் வெம்மையையும் ஒளிப்பதிவாளர் Marc Koninckx சிறப்பாக பதிவு செய்துள்ளார். பெல்ஜிய ஒளிப்பதிவாளரான இவர் பெர்னார்டோ பெட்ரோலூசி உள்ளிட்ட பல சர்வதேச இயக்குநர்களின் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். பத்திருபது பேர் பின்னணியில் ஆடும் டூயட் காட்சிகளை நிச்சயம் உள்ளூர ஒரு நகைப்புடன் பதிவு செய்திருப்பார் என்று தோன்றுகிறது.

மரியான் என்றால் மரணமில்லாதவன் என பொருள். அப்படியே இதில் மரியான் சாவதில்லை. பார்வையாளர்கள்தான். 


- உயிர்மை - ஆகஸ்ட் 2013-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)   

suresh kannan