Monday, September 10, 2012

நான் - விஜய் ஆண்டனி


 ஒரு துறையில் பிரபலமாகி விட்டவர்கள் அந்த காரணத்தினாலேயே தமக்கு சம்பந்தமில்லாத துறையிலேயும் திறமை காண்பிக்க முயல்வது பெருகி விட்டது. அதனால்தான் பிரபலமான நடன இயக்குநர்கள் திரைப்படங்களை இயக்கி நம்மைக் கொல்வதும் ரிடையர்டு ஆன நடிக,நடிகைகள் ரியாலிட்டி ஷோ தீர்ப்புகள் முதல் கூடங்குளம் அணுஆலை வரை தம்முடைய 'கமெண்ட்டுகளை' ஊடகங்களில் வாரி வழங்கும் அபத்தங்களும் நிகழ்கின்றன.

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி்  நாயகனாக நடிக்கும் 'நான்' போஸ்டர்களை பார்த்த போது, சாம் ஆண்டர்சன், பவர் ஸ்டார் சீனிவாசன் போன்ற இன்னொருவர் தமிழ்த்திரைக்கு கிடைத்து விடுவார் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் அதிர்ஷ்டவசமாக (துரதிர்ஷ்டவசமாக) விஜய் ஆண்டனி ஏதோ ஒரு இடைவெளியில் தப்பிப் பிழைத்திருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது.

பதின்ம வயது சிறுவனொருவன் தன் தாய் பிறன்மனை நோக்கும் காரணத்திற்காக கோபம் கொண்டு அவர்களை கொல்வதான கிளிஷேத்தனமாக காட்சிகளோடு படம் துவங்குகிறது. தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் காலம் காலமாக கற்பு எனும் கற்பிதத்தை திரையில் தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கும் அபத்தத்தைப் பற்றி பேசியாக வேண்டும். ஏதோ ஒரு காரணத்தினால் தம்பதியினருக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. மனைவியோ அல்லது கணவனோ இன்னொரு தொடர்பில் ஈடுபடுகிறான். இப்போது என்ன செய்ய வேண்டும். இருவரும் தத்தம் உறவுகளைப் பற்றி நிதானமாக உரையாடி சட்டப்பூர்வமாக பிரிவதற்கான வழிமுறையில் ஈடுபடுவதே ஆரோக்கியமான நாகரிகமான சமூகம் செய்ய வேண்டிய வழி.

மாறாக நம் தமிழ்த் திரைப்படங்கள் என்ன சொல்லித் தருகின்றன? திருமணமான ஒரு பெண் இன்னொரு ஆணோடு கூடி so called கற்பை இழந்து விட்டாளா? உடனே கண்கள் சிவக்க..... தூக்கு அருவாளை......  இந்தச் செய்தி கணவன்மார்களுக்கு மட்டுமல்ல, பதின்ம வயது இளம் நெஞ்சங்களுக்கும் திணிக்கப்படுகிறது. இந்த இடத்தில் ஜெயகாந்தனின் 'அந்தரங்கம் புதினமானது' என்கிற சிறுகதை நினைவுக்கு வருகிறது. தன்னுடைய தந்தை இன்னொரு பெண்ணுடன் கொண்டிருக்கிற தொடர்பு குறித்து அறிகிற இளைஞனொருவன் அது குறித்து திகைப்பும் கோபமும் கொள்கிறான். தாயிடம் இது பற்றி உரையாடுகிறான். இந்தத் தொடர்பைப் பற்றி ஏற்கெனவே அறிந்திருக்கிற தாய் அது பற்றி கோபம் கொள்ளாதிருப்பதற்காக அவளிடம் சண்டையிடுகிறான். அவனை அமர வைத்து அந்த தாய் உரையாடுவதுதான் அந்தச் சிறுகதையின் மையம். இம்மாதிரியான முதிர்ச்சியான சிந்தனைகளை நோக்கித்தான் ஒரு நாகரிகமாக சமூகம் நகர்ந்தாக வேண்டும். இன்னமும் நிலவுடைமைச் சிந்தனைகளுடன் அரிவாளைத் தூக்கும் காண்டுமிராண்டித்தனத்தை கற்றுத் தரும் தமிழ் சினிமாக்களும் முதிர்ச்சியை நோக்கி நகர வேண்டிய தருணமிது.

'நான்' திரைப்படத்தை பற்றி பேச வந்து திசை மாறி விட்டது.

விஜய் ஆண்டனி தம்முடைய பலவீனங்களை தெளிவாக உணர்ந்து அதற்கேற்றவாறான திரைக்கதையை தேர்ந்தெடுந்திருப்பது நன்று. அபத்தமான பாடல் காட்சிகளோ, சண்டைக்காட்சிகளோ இல்லை. இயக்குநரின் சுவாரசியமான கதை சொல்லும் திறமையால் படம் சுவாரசியமாகவே துவங்குகிறது. ஆனால் ஒரு நிலையில் படம் அப்படியே அமர்ந்து விடுகிறது. சூழ்நிலை காரணமாக நண்பனைக் கொல்பவன், அங்கேயே தம்மைத் தொடர்வானா என்கிற கேள்வி இடையறாது நம்மைத் தொல்லை செய்கிறது. அது மாத்திரமல்ல. விஜய் ஆண்டனி தன்னை ஆள்மாறாட்டம் செய்து கொள்வதான காட்சிகள் அதீத முஸ்தீபுகளுடன்.. ஏதோ ஒரு சர்வதேச தீவிரவாத செயலை செய்யப் போகும் பில்டப்புகளுடன் தொடர்கின்றன. ஆனால் அப்படியெல்லாம் இல்லை என்று முடியும் போது ஏமாற்றமாக இருக்கிறது. 'தொடரும்' என்று வேறு போட்டு பயமுறுத்தியிருக்கிறார்கள்.

விஜய் ஆண்டனி நன்றாகவே முயற்சித்திருக்கிறார். ஆனால் பெருச்சாளியை விழுங்கின பூனை மாதிரி அவ்வப்போது விழிப்பது ஏன் என்று தெரியவில்லை. மற்றபடி இயக்குநர் ஒரு திறமையான கதை சொல்லியாக வரக்கூடிய தடயங்கள் படத்தில் இருக்கின்றன.திரைக்கதைக்காக இன்னும் உழைத்திருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும்.
 
suresh kannan

Thursday, September 06, 2012

பீட்சா - இசை வெளியீடு



மேற்கத்திய நாடுகளில் குறும்படங்களுக்கென்று பிரத்யேக ரசிகர்களும் இயக்குநர்களும் இருக்கிறார்கள். அதற்கென்று தனியான திரையிடல்களும் விழாக்களும் வணிகமும் இருக்கின்றன. ஆனால் தமிழ்ச்சூழலில் குறும்படம் என்றொரு வஸ்து இருப்பதையே நெடுங்காலமாக யாரும் சீந்தாமல் இருந்தார்கள்.  இப்போது இணைய வட்டத்தைத் தாண்டி பொது வெளியில் குறும்படங்கள் சமீபத்தில் கவனத்தைப் பெற துவங்கியிருக்கின்றன. குறும்படங்களும் முழு நீளத் திரைப்படங்களும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இயங்கிக் கொண்டிருந்த காலம் மெல்ல மறைகிறது. பாலாஜி மோகன் தன்னுடைய குறும்படமான 'காதலில் சொதப்புவது எப்படி'யை வெற்றிகரமாக முழு நீளத் திரைப்படமாக மாற்றியது பல குறும்பட இயக்குநர்களுக்கு பிரம்மாண்ட வாசலைத் திறந்திருக்கிறது. அவர்களை பல சினிமா தயாரிப்பாளர்களும் சினிமா ஆர்வலர்களும் கவனிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

பாலாஜி மோகனைத் தொடர்ந்து குறும்பட உலகிலிருந்து முழு நீளத் திரைப்பட உலகிற்கு சமீபத்தில் வந்திருப்பவர் கார்த்திக் சுப்புராஜ். 'நாளைய இயக்குநர்' நிகழ்ச்சியில் இவரது பல குறும்படங்களை அப்போதே ரசித்திருக்கிறேன். மடற்குழும காலத்தில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த கவிஞர் ராஜ்குமார் மூலமாக எனக்கு கார்த்திக் அறிமுகமானார். திறமையான இளைஞர். என்னவொன்று.. ரஜினிகாந்த்தைப் பற்றி ஏதாவது சொன்னால் மாத்திரம் 'சுருக்'கென்று கோபம் வந்துவிடும். ராஜ்குமாரும் அவ்வாறே. எனக்கும் இவருக்கும் இணைய விவாதங்களில் வாய்க்கா தகராறு ஒன்று ஏற்படுமென்றால் அது ரஜினி குறித்த சர்ச்சை மற்றும் விவாதங்களில் மாத்திரமே. மற்றபடி பழக இனிமையானவர்.

கார்த்திக்கின் நீர், ப்ளாக் அண்ட் வொயிட் போன்ற குறும்படங்களை தொலைக்காட்சி ஒளிபரப்பின் போதே ரசித்துப் பார்த்திருக்கிறேன். இணையத்தில் இவரது குறும்படங்களுக்கென்று பெரிய ரசிக வட்டம் இருக்கிறது என்று அறிகிறேன். நீர் குறும்படம் தொடர்பாக தொலைபேசியில் அவரோடு உரையாடினது நினைவிருக்கிறது.. கேமரா வைத்திருக்கிற எவரும் குறும்படம் எடுத்து விட முடியும். ஆனால் திரைக்கென்று உள்ள பிரத்யேக மொழியை அது குறித்தான பிரக்ஞையோடு பதிவு செய்பவர்கள் குறைவே. கார்த்திக்கின் குறும்படங்களில் அதற்கான தடயங்கள் தெரிகின்றன.

பீட்சா இசை வெளியீட்டிற்கு அழைத்திருந்தார் கார்த்திக். சத்யம் திரையரங்கம். நான் சற்று தாமதமாக அதற்கான படபடப்புடன் சென்றிருந்தேன். ஆனால் அப்போதுதான் நிகழ்ச்சி துவங்கியது ஆசுவாசமாக இருந்தது.  சினிமாவிற்குரிய பிரத்யேக அலட்டல்கள் அல்லாமல் நிகழ்ச்சி இயல்பாக இயங்குவதற்கு பிரதானமான காரணமாயிருந்தவர் தொகுப்பாளர் பாலாஜி. சமயங்களில் அதீதமாய் பேசினாலும் இவரது டைமிங்கான கமெண்ட்டுகள் சுவாரசியமாக இருந்தன. 


 
பீட்சாவின் டீசர் வெளியிடப்பட்டது. முதலில் கவர்ந்தது அதன் ஒளிப்பதிவு. ரொமாண்டிக் திரில்லர் என்று போஸ்டர்களில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் திரில்லர் தொடர்பான காட்சிகளை விட ரொமாண்ட்டிக் காட்சிகள் சிறப்பாக வந்திருந்தன. குறிப்பாக ஹீரோவும் -யினும் கொட்டும் மழையில் பிளாஸ்டிக் படுதாவினுள் இருக்கும் பிரேம் கண்ணிலேயே நிற்கிறது. படுதாவினுள்.... யினுக்கு...ரோ.. நெயில் பாலிஷ் வைத்துக் கொண்டிருக்கிறார். இயக்குநருக்கு நல்ல ரசனை. எடிட்டிங்கும் குறிப்பிடத்தக்கதாய் இருந்தது பின்னணி இசையும் திரில்லர் வகைப்படங்களுக்கான தேவையை பூர்த்தி செய்யும் விதமாக அமைந்திருந்தது.

இது போன்ற திரில்லர் வகை படங்களுக்கு பாடல்கள் தேவையில்லையெனினும் இந்தியச் சினிமாவின் சில சம்பிரதாயங்களை அத்தனை எளிதில் மீறி விட முடியாது. அட்டகத்தியில் பரபரப்பை ஏற்படுத்தின அதே இசை இயக்குநர் சந்தோஷ் நாராயணன். மூன்று பாடல்கள். முதல் மெலடியான பாடலை இசை இயக்குநரே பாடினார். 'ஆசை ஓர் புல்வெளி'... சாயலில் அற்புதமாக இருந்தது. மாண்டேஜ் பாடலாக இருக்கக்கூடும். பாடல் முழுக்க கிடாரின் ஆதிக்கம். அடுத்த பாடலை ஹரிசரணும்.. இன்னொரு இளைஞரும் பாடினார்கள். ஹரி ராக் ஸ்டைலில் உச்சஸ்தாயியில் பாட (அவரது குரல் எவ்வித சிரமுமுமில்லாமல் இலகுவாக மேலே பறக்கிறது). இன்னொரு இளைஞர் ராப் பாணியில் இணைந்து பாடினார். படத்தில், பரபரப்பான காட்சிகளின் பின்னணியில் இந்தப் பாடல் ஒலிக்கும் என யூகிக்கிறேன்.

மூன்றாவது பாடல் பிரத்யேகமாக குறிப்பிட வேண்டியது. கானா பாலா பாடியிருக்கிறார். அவரது வழக்கமான கானா இசைக்காக அவரைப் பயன்படுத்தாமல் இன்னொரு பாணியில் அவரைப் பாட வைத்தது இசை இயக்குநரின் பரிசோதனை ஆர்வத்தைக் காட்டுகிறது. ஜாஸ் பாணி (Jazz) இசையொலிக்க, கானா பாலா ஓர் ஆப்ரிக்க -அமெரி்க்க பாடகருக்கான தேர்ச்சியுடன் அதைப் பாடியிருக்கிறார். இயக்குநர் காட்சிக் கோர்வைகளில் இந்தப் பாடலை எப்படி பயன்படுத்தியிருக்கிறார் என்று அறிய ஆவலாக இருக்கிறது.

பாடல் மாத்திரமல்ல. நிகழ்ச்சியில் பேசியவர்களிலும் கானா பாலாவின் பேச்சுதான் சிறப்பாக இருந்தது. "என்னமோ ஜாஸ் ங்கறாங்க.. ப்ளூஸ் -ங்கறாங்க. எனக்கொன்னும் அதெல்லாம் தெரியாது்ங்க. என்னமோ பாடச் சொன்னாங்க. பாடிட்டேன்"... ரெக்கார்டிங் தியேட்டரில் விளக்குகளை எல்லாம் அணைக்கச் சொல்லி இவர் பாடின அனுபவத்தை மேடையில் பகிர்ந்து கொண்ட போது அரங்கில் ஒரே ஆரவாரம். ஆனால் மனிதர் எளிமையாக, அப்பாவித்தனமாக பேசினாலும்... "பேமெண்ட் எல்லாம் செக் வேண்டாம். கிழிஞ்சு போன நோட்டாக இருந்தாலும் பரவாயில்லை. ரிசர்வ் பாங்கில் மாத்திக்கறேன். கேஷாவே கொடுங்க'.... என்று விவரமாகவே இருக்கிறார்.


கார்த்திக் சுப்பராஜின் 'பீட்சா' நல்லதொரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திரைப்படமும் அந்த எதிர்பார்ப்பை சிறப்பாக பூர்த்தி செய்யும் விதத்தில் அமைந்திருக்கும் என எதிர்பார்க்கிறேன். அவருக்கு என் வாழ்த்துகள்.

()

பரவை முனியம்மா தவிர அனைத்து நடிகைகளுடன் இணைந்து இதுவரை புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும் உண்மைத் தமிழன் அண்ணாச்சியை ஒரு பத்திரிகையாளராக நிகழ்ச்சியில் சந்தித்தது சந்தோஷமாக இருந்தது. நிகழ்ச்சியை அத்தனை ஆர்வமாக கவனிக்காமல் மொபைல் இணையததில் எதையோ நோண்டிக் கொண்டேயிருக்கிறார். ஆனால் அப்படியும் பக்கம் பக்கமாக எழுதுவது எப்படி என்று ஆச்சரியம். நீஎபொவ - இசை வெளியீட்டு நிகழ்ச்சியைப் பற்றி சுமார் முப்பது பக்கம் எழுதி வெளியிட வைத்திருக்கிறாராம். மூச்சைப் பிடித்துக் கொண்டு வாசிக்க காத்திருங்கள். கவிஞர் ராஜ்குமாரையும் சந்தித்து சில நிமிடங்கள் உரையாட முடிந்தது.

suresh kannan

Sunday, September 02, 2012

'நீதானே என் பொன் வசந்தம்' - இசை.



'நீதானே என் பொன் வசந்தம்' - பாடல்கள் இசை.

கொஞ்சம் ஓவராத்தான் பில்டப் கொடுத்துட்டாங்களோ?...ஏதோ பீத்தோவனின் 18 வது சிம்பொனி வரப்போகிறது என்பது போல் பீற்றிக் கொண்டதில் நானும் புது ஸ்பீக்கர் செட்அப் எல்லாம் வைத்துக் கொண்டு காத்துக் கொண்டிருந்தேன்.ஆனால்...

1992-ல் ரோஜாவில் ரகுமான் புயல் போல் நுழைந்து பின்பு தமிழ்சினிமாவை மெள்ள...ஆக்ரமித்துக் கொண்டதில் .. அவ்வளவுதான் .. இனி ராஜா காலி என்று பேசிக் கொண்டார்கள். அன்னக்கிளி காலத்திற்குப் பிறகு எம்.எஸ்.வி.. என்கிற மகத்தான கலைஞன் அவுட் ஆஃப் போகஸிற்கு போனது போல ராஜாவும் அப்போது சற்று காணாமற்தான் போய் விட்டார். ஆனால் ... மவனே யாரு கிட்ட...? 1994-ல் 'வீரா' மூலம் 'கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட'.. என்று அதிரடியாக திரும்பி வந்ததில் பரவசமாகவே இருந்தது. (ஆனால் எம்.எஸ்.வி-யால் இவ்வாறு வரவே இயலவில்லை என்பதுதான் வித்தியாசம்). என்றாலும் பல புதிய இளம் இசையமைப்பாளர்கள் வந்து விட்ட பிறகு தமிழ்த்திரையிசை ரெடிமேட் பிளாஸ்டிக் ட்யூன்களுக்கு மாறிவிட்ட பிறகு ராஜாவால் தனது பழைய சிம்மாசனத்தை கைப்பற்றவே முடியவில்லை.  சிங்கத்திற்கு தயிர்சாதம் திணித்த கதையாய் உளியின் ஓசை,பொன்னர் சங்கர் போன்ற மொக்கைகளையெல்லாம் ஏன் இவர் செய்கிறார் என்று வருத்தமாக இருந்தது.

ஆனால் முன்பு வீரா மூலம் நிகழ்ந்ததைப் போல நீதானே...வின் மூலம் மறுபடியும் ராஜா தனது இருப்பை அழுத்தமாக நிரூபித்திருக்கிறார் என்றுதான் சொல்லலாமே ஒழிய 'ராஜாவின் புதிய பரிமாணம், உன்னதம்' பரவசம் என்றெல்லாம் கொண்டாடும் அளவிற்கு நீதானே...வில் ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. கெளதம் வாசுதேவன் வேண்டுமானாலும் தனது படத்திற்கான பிரமோவிற்காக இந்த ஆல்பத்தை over hype செய்து கொள்ளட்டும். ஆனால் எத்தனை இசை வந்தாலும் ராஜாவின் இசையை தாய்ப்பாலை போல பூஜை செய்யும் ராஜாவின் அசலான ரசிகர்கள் அவ்வாறு ஏமாறத் தேவையில்லை என்றே தோன்றுகிறது.

'காற்றைக் கொஞ்சம்...' மாத்திரம் சில காலத்திற்காகவாவது பண்பலை வானொலிகளை ஆக்ரமிக்கப் போவது நிச்சயம்.

நிற்க... இந்த ஆல்பத்தை பத்திருபது முறை கேட்ட பிறகு ஏற்பட்ட தற்காலிக அவதானிப்பே இது. நானே பிற்பாடு இதை கொண்டாடவும் செய்யலாம். ஏன் இப்படி சொல்கிறேன் என்றால்.....ரகுமான் பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்டால்தான் பிடிக்க ஆரம்பிக்கும். ஆனால் ராஜா அப்படியல்ல. முதல் கவனிப்பிலேயே இது வேறு ஜாதி என்பது தெரிந்துவிடும். விருமாண்டியில் 'உன்ன விட' கேட்ட போதே தெரிந்து விட்டது. இது ராஜாவின் உன்னதமான பாடல்களில் ஒன்றாக இருக்கப் போகிறது என்று. ஆனால் நீதானே..வில் 'காற்றைக் கொஞ்சம்' தவிர வேறெதுவிலும் அப்படியான பரவசமேதும் நிகழவில்லை என்பதே என் பாமர இசையனுபவம்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் ராஜா திரும்ப வந்திருக்கிறார். ஆனால் மகாராஜாவாக அல்ல.
 
suresh kannan