Wednesday, December 31, 2008

கற்பிதங்கள் உடைந்த சிரிப்பு

மாறுதலாக, இம்மாதிரியான தருணங்களில் சாருநிவேதிதாவை ரொம்பவே பிடித்துப் போய் விடுகிறது.

()

நேற்று ஒரு வாடிக்கையாளரின் விளம்பர வடிவமைப்பு ஒப்புதலுக்காக நிறையவே களைத்துப் போயிருந்தேன். பொறுமையை இழக்க வேண்டியிருந்த தருணங்களை பல்லைக்கடித்துக் கொண்டு சகிக்க வேண்டியதாயிருந்தது. இறுதிக் கட்ட ஒப்புதலின் போது ஒரு மிகச்சிறிய திருத்தத்திற்காக அரைமணி நேரம் காத்திருக்க வேண்டிய நொந்து போயிருந்த கணத்தில் கிடைத்த இடைவெளியில் இணையத்தில் மேயும் போது சாருவின் வலைத்தளத்தில் அவரின் பத்து புத்தகங்களுக்கான அறிவிப்பில் இருந்த இந்த வரிகளை படித்த போது எல்லா உளைச்சலும் மறைந்து போய் சிரிப்பு பீறிட்டுக் கொண்டு வந்தது.

இந்த உலகில் எந்த விஷயத்தையுமே நாம் ஓசியில் வாங்க முடியாது. (அம்மாவின் அன்பு என்றெல்லாம் சொல்லி டார்ச்சர் பண்ணாதீர்கள்).

படித்து முடித்து விட்டு வேறு சில பதிவுகளை படித்த பிறகும் குறிப்பிட்ட வரிகள் நினைவில் வந்து சிரிப்பை வாரியடித்துக் கொண்டே இருந்தன. கணினி முன் அமர்ந்து கொண்டு தனியாக சிரித்துக் கொண்டிருந்தால் அலுவலகத்தில் உள்ளவர்கள் மனநல மருத்துவனைக்கு தொலைபேசும் அபாயம் இருந்ததால் தேநீர் அருந்தும் சாக்கில் வெளியே சென்றேன். கடலலை போல் அப்போதும் சிரிப்பு தேநீருடன் வழிந்து கொண்டே இருந்தது. உறங்கப் போகும் வரை இந்த மனநிலையே நீடித்தது.

மறுநாள் பல் துலக்கிக் கொண்டிருந்த கணத்தில் எங்கிருந்தோ நினைவகத்தில் இருந்து பாய்ந்து வந்த வரிகள் குபீர் சிரிப்பை மூட்டின. பற்பசையை உடனே துப்ப வேண்டியதாயிருந்தது.

()

தேசபக்தி, தாயன்பு, தெய்வீகக் காதல், விழாக்கள், பிறந்த நாட்கள் போன்ற மாதிரியான கற்பிதங்களையும் புனிதமாக கட்டமைக்கப்பட்ட பிம்பங்களையும் வைத்துக் கொண்டு நாம் படும் பாடு இருக்கிறதே, அப்பப்பா! எவ்வளவு போலித்தனமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நல்லவேளையாக செய்தித்தாள்களில் குற்றவியல் சார்ந்த உண்மை நிகழ்வுகள் இந்தக் கற்பிதங்களை நாம் உணராமலேயே அவ்வப்போது சேதப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. நம்முன்னேயே உலவிக் கொண்டிருக்கும் உண்மையின் யதார்த்தத்தின் வெளிச்சத்தை கண்கொண்டு காண முடியாத கூச்சத்துடன் போலி இருட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பெற்றோர்களும், ஆசிரியர்களும், முன்னோர்களும், வரலாற்றாசிரியர்களும், எழுத்தாளர்களும் அமைத்துக் கொடுத்த கடிவாளங்கள் வேறு.

இன்னும் விரித்து எழுத ஆசைதான்... ஆனால்..

சாருவின் பதிவை முழுக்கப்படித்துப் பாருங்கள். பதிவின் இறுதியிலும் சில சிரிப்பு வெடிகள் உள்ளன.

[பின்குறிப்பு: புத்தாண்டு வாழ்த்துகள் என்று சொல்லாமலிருக்கப் போகும் நண்பர்களுக்கு முன்கூட்டிய நன்றிகள். :-) ]

suresh kannan

Monday, December 29, 2008

திமுக: இளவரசருக்கு முடிசூட்டு விழா

தி.மு.க.ராஜ்யத்தில் மகாராஜாவின் பிரியமான இளவரசருக்கு நடந்த முடிசூட்டுவிழா கலைஞர் மற்றும் சன் தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பாகும் பாக்கியத்தைப் பெற்றேன். நான் முன்பே சொல்லியிருப்பதைப் போல 'காமெடி திரை' என்றெல்லாம் தனி சானல் தொடங்காமல் எல்லா கட்சிகளின் அரசியல் கூட்டங்களையும் நேரடியாக ஒளிபரப்புகிறாற் போல் ஒரு சானல் ஆரம்பித்தால் வடிவேலு, விவேக் எல்லாம் எடுபடாமலே போய்விடுவார்கள். அவ்வளவு காமெடியாக இருக்கும். அதை நிரூபிக்கிறாற் போல்தான் இருந்தது இந்த நிகழ்வுகளும்.

சந்தைக்கடை மாதிரி ஒலித்த கூச்சலின் பின்னணியில் கழக உடன்பிறப்புகளின் மத்தியில் பரிதாபமான தோற்றத்தில் அமர்ந்திருந்தார் கருணாநிதி. அவர் விரும்பியோ விரும்பாமலோ மாலைகளும் பொன்னாடைகளும் மேலே விழுந்து கொண்டே இருந்தன. இதே மாதிரியானதொரு காட்சியை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்று யோசித்தேன். காஞ்சி மட சீனியரின் நூற்றாண்டு விழாவிலும் இதே போல் அவர் மலங்க மலங்க விழித்து அமர்ந்திருக்க மாலைகளும் தங்க நாணயங்களும் அவர் தலை மேல் கொட்டப்பட்டது நினைவுக்கு வந்தது.

Photobucket

ஸ்டாலினை வாழ்த்த வந்தவர்கள் (அதாவது அட்டெண்டென்ஸ் போட வந்தவர்கள்) தாங்கள் வந்திருக்கிறோம் என்பதை எப்படியாவது நிறுவ முயற்சி செய்தது காமெடியாக இருந்தது. ஸ்டாலினுக்கு மற்ற நிறங்களில் பொன்னாடை போர்த்தியவர்கள் கருணாநிதிக்கு மாத்திரம் ஞாபகமாக மஞ்சள் நிற பொன்னாடைகளை சமர்ப்பித்து காலில் விழுந்து அவரின் ஆசிகளைப் பெற்றனர். நேரம் ஆக ஆக பொன்னாடைகள் போர்த்தப்படுவது தவிர்க்கப்பட்டு செக்யூரிட்டிகளால் பிடுங்கி பின்னால் வீசப்பட்டன. ரோஜாப்பூவாக இருந்தாலும் தொடர்ந்து அடித்தால் வலிக்காதா என்ன?. இலவு காத்த கிளி போல் எழவு காத்த கிளியாக அமர்ந்திருந்த 'அன்பழகனை' பாவம், கண்டு கொள்ள ஆளே இல்லை. மூக்கை நெருடியவாறு அமர்ந்திருந்தார். கருணாநிதியின் நிழல் இருக்கிறதோ இல்லையோ, அதற்கு பதிலாக அமர்ந்து வந்த சண்முகநாதனை காணவில்லை. அதற்குப்பதிலாக ஒருவர் பெரியவாளிடம் பேசும் சிஷ்யகேடிகள் மாதிரி.. மன்னிக்கவும் சிஷ்யகோடி மாதிரி வாயைப் பொத்திக் கொண்டு கருணாநிதியிடம் பேசினார்.

இனி அரசு விழாக்களில் பொன்னாடைகள் போர்த்தப்படுவது தவிர்க்கப்பட்டு அதற்கு பதில் புத்தகங்கள் வழங்கவேண்டும் என்று கருணாநிதி எப்பவோ கூறிய நினைவு. காந்தி சொன்னதை அவர் இருக்கும் போதே பின்பற்றாதது மாதிரி உடன்பிறப்புகளும் கருணாநிதி சொல்லியிருந்ததை ஞாபகமாக பின்பற்ற விரும்பவில்லை. (காந்தியுடன் கருணாநிதியை ஒப்பிட்டது குறித்து திமுக காரர்கள், வீட்டிற்கு ஆட்டோ அனுப்பாமல் என்னை பாராட்ட வேண்டும். காங்கிரஸ்காரர்களுக்கு காந்தியை திட்டினாலும் பரவாயில்லை. சோனியா காந்தியை திட்டக்கூடாது).

ஒரு ஆச்சரியமும் நடந்தது. யாரோ ஒரு கலகவாதி பொன்னாடைக்கு பதில் புத்தகத்தை அளிக்க அதுவரை அசையாமல் அமாந்திருந்த கருணாநிதி சலனமடைந்து அந்தப் பரபரப்பிற்கிடையிலும் 'அது என்ன புத்தகம்?' என்று மெனக்கெட்டு கவனித்ததை புத்தகப்பிரியனான நான் நெகிழ்ச்சியுடன் பார்த்தேன்.

கூச்சலின் இடையே யாரோ ஒருவர் பலத்த சத்தத்துடன் சண்டையிடும் குரல் கேட்டது. கலைஞர் டிவியில் உடனே ஒலியை அமுக்கி பின்னணி இசையை ஓடவிட்டனர். ஆனால் சன்டிவியில் இதை தொடர்ந்து கேட்டு ரசிக்க முடிந்தது.

பத்திரிகையாளர்கள்தான் பாவம். ஒவ்வொரு முக்கியமான தலைவர்கள் பொன்னாடை அணிவிக்கும் போதெல்லாம் இலவச தொலைக்காட்சி பெட்டி வாங்க வந்தவர்கள் போல் முண்டியடித்துக் கொண்டு "அண்ணே, அண்ணே... சார்... சார்.... " என்று புகைப்படம் எடுக்க இறைஞ்சிக் கொண்டிருந்ததைக் காண பரிதாபமாக இருந்தது.

'இந்தப் பதவியை யாரும் என்னிடமிருந்து பிடுங்கவில்லை. நானாகத்தான் முன்வந்து தம்பி ஸ்டாலினை பொருளாளராக ஆக்கும் யோசனையை தலைவருக்கு அளித்தேன்' என்று ஆற்காடு வீராசாமி ஒரு பரிதாப சுயவாக்குமூலம் அளித்துக் கொண்டிருந்தார். 'நான் கைது செய்யப்பட்டால் தொண்டர்கள் பொறுமை காக்க வேண்டும்' என்று திராவிட தலைவர் சொன்னால் அதற்கு என்ன அர்த்தம் என்று ஆக்கப்பூர்வமான தொண்டர்களுக்கு தெரியாதா? அதே போன்ற அர்த்தத்தில்தான் இதையும் எடுத்துக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது.

எப்படியோ கருணாதிக்குப் பின் ஸ்டாலின் என்று நெடுங்காலமாக உலவிக் கொண்டிருந்த உண்மையான வதந்தி, அதிகாரபூர்வமாக நிறுவப்பட்டு விட்டது.

மன்னராட்சி முறை ஒழிந்து மக்களாட்சி முறை நடப்பதுதான் ஜனநாயகம் என்று ஐந்தாங் கிளாஸ் வரலாற்று பாடப்புத்தகத்தில் படித்த ஞாபகம். அப்போது இந்திராகாந்தி பிரதமர் என்றும் ஞாபகம். என் மகள் படிக்கும் போது ராகுல் காந்தி பிரதமராக இருக்கலாம்.

ஜெய்ஹிந்த்.

சொல்ல மறந்தது: கலைஞர் மற்றும் சன் தொலைக்காட்சிகளின் நேரடி ஒளிபரப்பில் சில மைக்ரோ செகண்டுகள் வித்தியாசத்தில் சன்னே முதலில் ஒளிபரப்பியது. என்ன இருந்தாலும் சீனியரல்லவா! ஜெயா டிவியில் மைனாரிட்டி திமுக அரசு.... என்று லட்சத்தி பன்னிரெண்டாயிரத்தி முந்நூற்று ஐந்தாவது தடவையாக சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்க பரிதாபமாக இருந்தது. 2011-ல் முதல்வராகும் வரிசையில் நிற்கும் விஜய்காந்த்,சரத்குமார் போன்றவர்கள் கதி என்னவாகும் என்று யூகிக்க முடியவில்லை.

ஸ்டாலினின் blog

suresh kannan

Friday, December 26, 2008

காமம் பொங்கி வழியும் புதினம்

பழைய ஆனந்த விகடன் கட்டுரைத் தொடர் ஒன்றில், கிராமத்தில் ஓடும் தகர டப்பா பஸ்ஸைப் பற்றி எழுதும் போது "ஏதோ ஒர் தர்மத்துக்கு கட்டுப்பட்டு அது தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தது' என்று எழுதியிருப்பார் பாஸ்கர் சக்தி. ஏறக்குறைய இந்தியாவையும் அந்த பஸ்ஸ¥டன் ஒப்பிட்டால் தேச பக்தர்கள் மேலே விழுந்து பிடுங்குவார்களோ என்னமோ. எங்காவது குண்டு வெடிக்கும் போதும் கிரிக்கெட்டின் போதுதான் இவர்களின் தேசபக்தி பொங்கி வழியும். வல்லபாய் பட்டேல் சாம, பேத, தான, தண்ட.. என அனைத்து முறைகளையும் உபயோகித்து கட்டிப் போட்ட தேசத்தின் கயிறு ஏதோ ஒர் தர்மத்திற்கு கட்டுப்பட்டு பிய்ந்து விடாமல் இருக்கிறது. உயர்நீதி மன்றம் அறிவுறுத்தியும் தனது அண்டை மாநிலத்தின் விவசாய பயன்பாட்டிற்கு நீர் தராத மாநிலங்களை வைத்துக் கொண்டு 'இந்தியா எனது தாய்நாடு; இந்தியர்கள் அனைவரும் என் உடன்பிறந்தவர்கள்' (நமீதாவை சகோதரியாக நினைக்க எந்த கேணையன் இருக்கிறான்?) என்று சொல்வதுதான் எவ்வளவு அபத்தமாக இருக்கிறது? சரி அரசியல் வேண்டாம். இலக்கியத்தின் பக்கம் வருவோம். தமிழ்நாட்டிலேயே பல பேருக்கு - தமிழ்த்துறை பேராசிரியர்கள் உட்பட- அது பாரதி, பாரதிதாசனோடு முடிந்து போய் விடுகிறது. இந்த லட்சணத்தில் அண்டை மாநிலத்தின் இலக்கிய வரலாற்றைப் பற்றிக் கேட்டால் அவனை எதால் அடிப்பது?. ஹிப்ரூ மொழியில் எழுதும் படைப்பாளியைக் கூட தெரிந்து வைத்திருக்கும் நவீன இலக்கிய உலகம் பக்கத்து மாநிலத்து எழுத்தாளனைப் பற்றிக் கேட்டால் பேய் முழி முழிக்கிறது. சாகித்ய அகாடமி என்றொரு அமைப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள். அரசியல் சக்திகளின் அருளாசிகளின் வட்டத்தில் இருப்பவர்களுக்குத்தான் சம்பந்தப்பட்ட விருது கிடைக்கும் என்கிறார்கள். அவர்கள் வெளியிட்ட நூல்களில் உருப்படியாக நான் படித்தது சிவராம காரந்தின் 'அழிந்த பிறகு' மட்டும்தான். பத்தாங்கிளாஸ் பாடப்புத்தகம் ஸ்டைலில் இலக்கிய ஆளுமைகளைப் பற்றின நூல்களும் வெளியிடுகிறார்கள். யார் படிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

Photobucket

'மனிதனின் பெரும்பாலான அகப் பிரச்சினைகளுக்கு அடிப்படைக்காரணியாய் இருப்பது காமம்தான்' என்று சொன்ன உளவியலின் தந்தையான சிக்மண்ட் ·பிராய்டின் வாயில் சர்க்கரை மூட்டையையே போடலாம். 'யார் இந்த பிராடு? எப்போது இதை உன்னிடம் டெலிபோனில் சொன்னார்?' என்று கேட்பவர்கள் இணையத்தில் தேடிக் கண்டடையுங்கள். ஸி.வி. பாலகிருஷ்ணனின் மலையாள நாவலான 'ஆயுஸ்ஸிண்டே புத்தகம்' (தமிழில்: வை. கிருஷ்ணமூர்த்தி) இதைத்தான் புனைவு மொழியில் சொல்கிறது. இந்தப் புனைவெங்கும் காமம் கண்ணுக்குத் தெரியாத ஒரு மலைப்பாம்பைப் போல ஊர்ந்து செல்கிறது. காமத்தை இன்னும் கண்ணாமூச்சி ஆட்டம் போல வைத்திருக்கும் நம் பாசாங்கான சமூகத்தில் அடித்தட்டு மக்கள் இதை மிக எளிதாக கடந்து செல்கிறார்கள்.

மாடு மேய்க்கும் மேரி நைநானுடன் காதல் என்கிற பெயரில் உறவு கொள்கிறாள். அவனோ வேறு பெண்ணைத் திருமணம் செய்துக் கொள்கிறான். ஐம்பது வயதாகும் கிழவனை விரும்பியே பிடிவாதம் செய்து திருமணம் செய்து கொள்ளப் போவதாக சொல்லும் மேரியிடம் ஆனி கேட்கிறாள். ".. அந்த மனுஷனுக்கு உங்கப்பாவ விட வயசு ஜாஸ்தி, தெரியுமில்ல?".

"அது பரவாயில்ல. அவனுக்குப் பதினேழு வயசிலே ஒரு மகன் இருக்கானே? அவன் அப்பாவுக்குத் தெரியாம நாங்க ரெண்டு பேரும் ஜாலியா இருக்கலாமே!".

()

பெளலோவின் மகன் தோமோ. தோமோவின் மகள் ஆனி, மகன் யோஹன்னான்.

இந்த நாவல் குறிப்பாக காற்றில் பறக்கும் காகிதம் போல் அலைக்கழியும் யோஹன்னானைச் சுற்றியே அலைகிறது.

தாத்தா பெளலோ பக்கத்து வீட்டு பெண்ணான ராஹேலிடம் இறந்து போன தன்னுடைய மனைவியின் ஞாபகம் பொங்கிப் பெருகும் நினைவுகளின் ஒரு கணத்தில் முறைதவறி நடந்து விடுகிறார். தாத்தா தடவலின் வித்தியாசத்தை அறிந்த ராஹேல் அழுது கொண்டே ஓடுவதில் நாவல் துவங்குகிறது. இதைப் பார்த்து விடும் பெளலோவின் மகன் தோமோ தன் தந்தையாரை அடிஅடியென அடிக்கிறான். பின்பு முட்ட முட்டக் குடித்துவிட்டு தன் மனைவியின் கல்லறையை நோக்கி ஓடுகிறான். அவமானத்தில் புழுங்கித் தவிக்கும் பெளலோ தூக்கிட்டுச் சாகிறார். அவரின் பழைய செருப்புகள் வீட்டின் கூரையிலிருந்து அனைத்தையும் கவனிக்கிறது. (மேஜிக்கல் ரியலிசமாம்!).

அந்த ஊரின் அழகியான 'ஸாரா'வின் கணவன் ஸக்ரியா ஒரு நோயாளி. ஸாராவையே நினைத்து ஏங்கும் யாகேப் சுயமாக சாராயம் காய்ச்சிக் குடிக்கிறவன். தன்னுடைய காதலை அவளிடம் சொல்கிறான். ஆனால் அவளின் சம்மதம் கிடைக்காமல் போகவே அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டுச் சாகிறான்.

யோஹன்னானின் சகோதரி ஆனிக்கும் அந்த ஊர் சர்ச்சின் பாதிரி மாத்யூவிற்கும் காதல் ஏற்படுகிறது. தன்னுடைய 'வெள்ளை அங்கி' தடுக்கும் நிலையை நினைத்து பரிதவிக்கும் பாதிரிக்கு 'விழிப்பை' ஏற்படுத்துபவன் குடிகார யாகேப்தான்.

... இந்த உலகத்துல அன்பும் நட்பும் நிலவணும்கறதுதான் என்னோட ஆசை, கையாலாகத்தனம், யாருக்கும் தெரியாம, தனக்குள்ளேயே துக்கப்பட்டு இருக்கிறது, தைரியமில்லாமே, கோழையா வாழறது, பயந்தாங்குளித்தனம். இது ஒண்ணுமே இல்லாம இந்த உலகம் அன்பு நிறைஞ்சதா இருக்கணும்கறதுதான் என்னோட விருப்பம்...

தெளிவடைந்த பாதிரி மாத்யூ இது குறித்து மூத்த பாதிரியுடன் நிகழ்த்தும் விவாதம் இந்த நாவலின் முக்கியமான பகுதி. பாதிரி வாழ்க்கையை தேர்ந்தெடுத்து பிரம்மச்சரியத்துடன் வாழ நேர்பவர்கள் எதிர்கொள்ள நேரும் பிரச்சினைகளைப் பற்றி செய்தித்தாளில் வந்திருக்கும் ஒரு கட்டுரையின் துணையோடு விவாதிக்கிறார் மாத்யூ.

... மாத்யூ தொடர்ந்தார். 'செக்ஸ் வேண்டும் என்றல்ல நான் வாதிப்பது. அதில்லாமல் என்னால் வாழ முடியும். ஆனால் தனிமையை நம்மால் பொறுத்துக் கொள்ள முடியாது. ஒரு பெரிய கட்டிடடத்தில் என்னை விட வயதில் மூத்தவர்களுடனும் இளையவர்களுடனும் நான் சேர்ந்து வாழ்கிறேன். ஆனால் மிக அபூர்வமாகவே நாங்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்கிறோம். மனம் திறந்து பேச யாராவது இருக்க மாட்டார்களா என்று நான் பல தடவை ஏங்கியிருக்கிறேன். ...

என்பவர், உலகத்தில் நல்வழிகள் ஏற்கெனவே சொல்லப்பட்டிருந்தாலும் பிரச்சினைகளும் வன்முறைகளும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன. எனவே பிரம்மச்சரியத்தோடு செய்வதை திருமணம் செய்து கொண்டும் செய்யலாம் என்று விவாதிக்கிறார்.

.. சொர்க்கத்தில் செய்யப்படுவதையெல்லாம் நாம் பூமியில் செய்ய நினைப்பது சரியல்ல என்று கருதுகிறேன். பூமியின் சட்ட திட்டங்கள் வித்தியாசமானவை. அதனால்தானே யேசு கிறிஸ்துவே அவருடைய சிஷ்யர்களிடையே பிரம்மச்சரியத்தைக் கட்டாயமாக்கவில்லை.! யோவானையும் பவுலையும் தவிர மற்ற எல்லோரும் திருமணம் செய்து கொண்டவர்கள்தானே?"...

இதற்கு மூத்த பாதிரி சொல்லும் பதில் மிகவும் convince- ஆக எனக்குத் தோன்றியது.

... நாம் திருமணத்துக்குப் பிறகு ஏற்படும் நூற்றுக்கணக்கான பிரச்சினைகளைப் பற்றியும் பேச வேண்டும். பாதிரியாகப் பணிபுரியும் கணவன், தன் மனைவியுடன் தினமும் சண்டை பிடித்துக் கொண்டிருந்தால் அது அந்த சர்ச்காரர்களுக்குப் பிடிக்குமா? தனது துக்கத்திலிருந்து விடுதலை பெற விரும்பும் யாராவது அந்தப் புரோகிதனிடம் வருவார்களா?..

என்றாலும் மாத்யூவும் ஆனியும் ஊரை விட்டு ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டு நிறைவான வாழ்க்கையை வாழ்கிறார்கள். ஆனியைப் பற்றிய தகவல் நாவலில் பிறகு சொற்பமாகவே வருகிறது.

()

யோஹன்னான் தனது நண்பன் ஜோஷியுடன் ஒரினப்புணர்ச்சி கொள்கிறான். ஜோஷி இறையியில் படிப்பிற்காக ஊருக்குச் சென்றவுடன் நாவலின் ஆரம்பத்தில் வரும் ராஹேலுடன் உறவு கொள்கிறான். மறுநாள் அவளை பார்க்கச் சென்ற போது அவள் 'கன்யா மடத்தில்' சேருவதற்காக சென்றிருப்பதை அறிகிறான். தனிமையின் புழுக்கத்தில் அலைந்து திரியும் அவனுக்கு விதவையான ஸாராவுடனும் உறவு ஏற்படுகிறது. இதையறியும் அவனுடைய தந்தை தோமா அவனைக் கண்டிக்கிறான். ஸாராவை தோமோவே திருமணம் செய்துக் கொள்ளலாமே என்கிற நண்பனின் யோசனையை அறிந்தவுடன் தோமோவுக்கு இன்ப அதிர்ச்சி ஏற்படுகிறது. அதுவரை இன்னொரு திருமணத்தைப் பற்றியே யோசிக்காமலிருந்தவன் இந்த யோசனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறான். ஆனால் ஸாரா தோமோவை திருமணம் செய்ய மறுத்து விடுகிறாள். தன்னுடைய மகனுடன் அவள் உறவு கொள்வதைக் காண்கிற தோமோ ஆத்திரத்தில் ஸாராவைக் கொன்று விடுகிறான்.

தனிமையில் ராஹேலின் நினைவுகளுடன் நடந்து போகும் யோஹன்னானுக்கு இறந்து போன யாகேப்பும் தாத்தா பெளலோவும் தென்படுவதோடும் அவனின் கூக்குரலுடனும் நாவல் நிறைகிறது.

()

படைப்பு நிகழும் களம் எதுவென தெளிவாகப் புலப்படவில்லை. ஏதோ சாத்தானால் சிருஷ்டிக்கப்பட்ட ஊர் போலிருக்கிறது. நாவலில் வரும் அனைவருமே கிறிஸ்துவர்களாக இருக்கிறார்கள். இடையே ஓடும் பன்றிக்குட்டியின் பெயர் 'ஜேம்ஸ்' என்றால் கூட நான் ஆச்சரியப்பட மாட்டேன். மருந்துக்குக்கூட வேற்று மதத்தவர்கள் அந்த நாவலின் உள்ளே நுழையவில்லை. ஒரு மூன்றாந்தர மோசமான இயக்குநர் படமாக்க நினைத்தால் 'மிகச் சிறந்த பாலியல் காட்சிகளை' கலைப்படம் என்ற போர்வையில் திணிக்கக்கூடிய அனைத்து சாத்தியக் கூறுகளையும் கொண்ட இந்த சிறந்த நாவல் மிக மிக வறட்சியான மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. நிகழ்வை சட்டென்று நிறுத்திவிட்டு அடுத்த அத்தியாயத்தில் வருங்கால நிகழ்வில் 'ரிவர்ஸ் கியர்' போட்டு விவரிப்பதான மொழியில் நாவலின் பல அத்தியாயங்கள் புனையப்பட்டிருக்கின்றன. கிருஷ்ணமூர்த்தி இதை சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

காமம்தான் மனிதனை தொடர்ந்து வாழ வற்புறுத்துகிறது என்பதையே இந்த நாவலின் அடிநாதமாகப் பார்க்கிறேன்.

()

சமையல், ஜோதிடம், வாழ்க்கை வரலாறு என்று பரபரப்பான புத்தகங்கள் பிரசுரித்து பணம் பண்ணிக் கொண்டிருக்கும் இன்றைய பதிப்பகங்களுக்கு மத்தியில் 'கிழக்கு பதிப்பகம்' அண்டை மாநில இலக்கியங்களின் மொழி பெயர்ப்பையும் கவனத்தில் கொண்டிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. நாவலின் ஆசிரியர் கேரள சாகித்ய அகாதமி விருதைப் பெற்றவர் என்று பின்னட்டை சொல்கிறது.

'இறைவனை நிந்திக்கவில்லை' என்கிற வார்த்தைகள் 'இறைவனை சிந்திக்கவில்லை' என்று பிரசுரமாகியிருக்கிற (பக்கம் 45) கருத்துப்பிழை மயக்கங்களை ஏற்படுத்தும் சொற்ப தவறுகளை தவிர்த்திருக்கலாம் என்பதைத் தவிர புத்தகம் மிக நன்றாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

உயிர்ப் புத்தகம், ஸி.வி. பாலகிருஷ்ணன், தமிழில்: வை. கிருஷ்ணமூர்த்தி, கிழக்கு பதிப்பகம், 224 பக்கங்கள், 120 ரூபாய்.
ஆன்லைனில் வாங்க

suresh kannan

Wednesday, December 24, 2008

நிர்வாணமாக நின்ற ஆசிரியர்கள்

மறுபடியும் ஒரு நீயா நானா நிகழ்ச்சியைப் பற்றி எழுத வேண்டுமா என்று தோன்றியது. என்றாலும் அதன் தீவிரம் காரணமாக இதை எழுதித்தான் ஆக வேண்டியிருக்கிறது. கடந்த வார நிகழச்சியில், 'ஆசிரியர்கள் தங்களின் போதிக்கும் திறனை அவ்வப்போது மேம்படுத்திக் கொள்கிறார்களா, அல்லது இருக்கிற குறைந்த பட்ச அறிவை வைத்துக் கொண்டு சமாளிக்கிறார்களா?' என்ற தலைப்பில் விவாதம் நிழந்தது. மாணவர்கள் எப்படி வகுப்பில் நிகழ்ந்து கொள்வார்கள் என்பதை ஆசிரியர்கள் சில நடித்துக் காட்டினர். மாணவர்களும் அவ்வாறே. குறைந்த பட்ச ஆங்கில அறிவு இல்லாமல் கூட சில ஆசிரியர்கள் இருப்பதை மாணவர்களில் சிலர் சுட்டிக்காட்டினர். 'எங்களிடம் இருக்கிற ஞானத்தை மாணவனிடம் வழங்குவதற்கு மொழி பெரிய தடை கிடையாது' என்று ஆசிரியர் சார்பில் ஒருவர் கூறினார்.

ஆனால் என்னை பெரிதும் அதிர்ச்சியடைய வைத்த சம்பவம் பிறகுதான் நடந்தது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கோபிநாத், இரண்டு சிறப்பு விருந்தினர்களை சபையில் அமர வைத்து ஆசிரியர் குழுவினரிடம் 'அவர்கள் யார்'? என்று அடையாளம் காட்டச் சொன்னார். நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த நானே வெட்கப்படும்படியாக அங்கிருந்த அனைத்து ஆசிரியர்களும் மெளனம் காத்தனர். இத்தனைக்கும் அந்த இரண்டு சிறப்பு விருந்தினர்களும் கல்வித்துறையை சேர்ந்தவர்கள்தான். இருந்தும் ஒரு ஆசிரியருக்கும் அவர்களைப் பற்றிய அடையாளமோ தகவலோ தெரியவில்லை.

சிறப்பு விருந்தினர்கள் வந்து அமரும் போதே அவர்களைப் பற்றி என் மகளிடம் கூறிக் கொண்டிருந்தேன்.

Photobucket

ஒருவர் ஆ.இரா. வேங்கடாசலபதி.

தமிழ்நாட்டில் உள்ள குறிப்பிடத்தகுந்த வரலாற்று ஆய்வாளர்களுள் ஒருவர். 'அந்த காலத்தில் காப்பி இல்லை', 'நாவலும் வாசிப்பும்' 'முச்சந்தி இலக்கியம்' போன்ற சில முக்கிய ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய புத்தகங்களை எழுதினவர். குறிப்பாக 'புதுமைப்பித்தனின் சிறுகதைகளை' கவனமாக தொகுத்து செம்பதிப்பை தயாரித்தவர். பாரதியின் சில அபூர்வ படைப்புகளை லண்டனிலிருந்து கொண்டு வந்தவர். பாரதியின் கட்டுரைகளை வ.உ.சியின் கடிதங்களை தொகுத்தவர், சு.ராவின் ஜே.ஜே.சில குறிப்புகள்' புதினத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டிருப்பவர்.

Photobucket

இன்னொருவர் பேராசிரியர் கல்யாணி.

மனித உரிமைப் போராளி. அரசு கல்லூரியில் பேராசிரியராக பல வருடங்கள் பணியாற்றியவர். 'மக்கள் கல்வி இயக்கத்தை நிறுவியவர். பழங்குடிகளுக்காகவும், பத்மினி, அத்தியூர் விஜயா போன்றவர்களின் மீது நிகழத்தப்பட்ட வன்முறைகளுக்காக களத்தில் இறங்கி போராடியவர், வீரப்பனால் ராஜ்குமார் கடத்தப்பட்ட போது மீட்பு தூதுவர் குழுவில் இடம்பெற்றவர்.


இவ்வளவு தகவல்கள் கூட சொல்ல வேண்டாம், அவர்கள் யார் என்பது கூட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்குத் தெரியவில்லை. பிரபலமான முகம் என்கிற வகையில் சலபதியையாவது தெரியாமலிருக்கலாம். பேராசிரியர் கல்யாணியின் முகத்தை வீரப்பன் கடத்தலின் போது பத்திரிகைகளில் நிச்சயம் பார்த்திருக்க வேண்டும்.

இது மாத்திரமல்ல, சமீபத்தில் புக்கர் பரிசு பெற்ற இந்திய நாவலாசிரியரைப் பற்றின கேள்விக்கும் யாரிடமும் பதிலில்லை. தங்கள் துறை சார்ந்த புத்தகங்களையே அதிகம் படிப்பதாக சில ஆசிரியர்கள் சமாளித்தனர். சமீபத்தில் எந்த புத்தகம் படித்தீர்கள்? என்ற கேள்விக்கு ஒருவர் காப்மேயரின் சுயமுன்னேற்ற நூலைப் பற்றிக் கூறினார். ஏழாம் வகுப்பிலேயே இதை தாம் படித்து விட்டதாகக் கூறி கோபிநாத் அவர் மூக்கை உடைத்தார்.

()

ஆசிரியர்களின் தகுதியின் போதாமை குறித்து ஏற்கெனவே சில கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்த சலபதி, 'நான் எதிர்பார்த்ததை விட நிலைமை மோசமாக இருக்கிறது' என்றார்.

பேராசிரியர் கல்யாணி தன்னுடைய மாணவப் பருவத்தில் ஆசிரியரிடம் பெற்ற ஒரு தண்டனையை நினைவு கூர்ந்த போது உணர்ச்சி மேலிட்டு தொடர முடியாமல் அழுதார். ஒரு வயோதிகரின் உருவம் மறைந்து டிரவுசர் போட்டுக் கொண்டிருந்த ஒரு சிறுவனையே அப்போது நான் பார்க்க நேர்ந்தது. இவ்வளவு வருடங்கள் கடந்தும் அதை நினைவு கூர்கிற போது அவர் அழுகிறார் எனும் போது குறிப்பிட்ட சம்பவம் அவரை மிகவும் பாதித்திருக்க வேண்டும். அடுத்த ஜென்மங்களில் நம்பிக்கையில்லை எனினும் 'அப்படியிருந்தால் எல்லா ஜென்மங்களிலும் ஆசிரியர் பணியாற்றவே விரும்புகிறேன்' என்ற போது மிகவும் நெகிழ்வாக இருந்தது.

ஊதியம் தொடர்பான போராட்டங்களில் மாத்திரம் தீவிரமாக இயங்கும் ஆசிரியர் பெருமக்கள், தங்களுடைய தேசத்தின் அடுத்த தலைமுறையை ஞானம் மிக்கவர்களாக மாற்றி சமுதாயத்திற்கு அளிக்க வேண்டும் என்கிற அடிப்படை பொறுப்புணர்ச்சியை மெல்ல மெல்ல இழந்து கொண்டிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றே நான் கருதுகிறேன்.

suresh kannan

Wednesday, December 17, 2008

கேசவனும் ஜெயமோகனும்

தினமும் உறங்கப் போவதற்கு முன்னால் ஏதாவதொரு முழு அல்லது அரைத் திரைப்படத்தைப் பார்ப்பது வழக்கம். எப்படியும் உறங்கப் போக பின்னிரவு ஒரு மணியாவது ஆகிவிடும். Quentin Tarantinoவின் இயக்கத்தின் பகுதியையும் உள்ளடக்கிய Four Rooms திரைப்படத்தை இயன்ற வரை பார்த்து விட்டு உறங்கப் போக நேற்றிரவு திட்டமிட்டேன். ஆனால் offline-ல் சேமித்து வைத்திருந்த முக்கியமான வலைப்பதிவுகளை வாசிக்காமலிருந்ததும் நினைவுக்கு வந்தது. அதை சிறிது நேரம் வாசித்து விட்டு பின்னர் திரைப்படத்தை காணலாம் என்று முடிவு செய்தேன். ஜெயமோகனின் வலைப்பதிவிலிருந்த 'மத்தகம்' குறுநாவல் கண்ணில்பட்டது. நீள நீளமான ஐந்து அத்தியாயங்கள். ஒரு அத்தியாயத்தை மாத்திரம் இன்று படித்து முடித்து விட்டு பின்னர் திரைப்படத்தை காண்போம் என்று ஆரம்பித்தேன்.

ஆனால்....

கேசவன் தன் துதிக்கையால் என்னை இழுத்து படைப்புக்குள் தள்ளிவிட்டான். ஆவல் தாங்காமல் அடுத்த அத்தியாயத்திற்குள்ளும் நுழைந்தேன். மூன்று... நான்கு... ஐந்து.... ஒரே மூச்சில் முழுவதையும் படித்த முடித்தவுடன்தான் சூழலே புலனாயிற்று. வாசித்துக் கொண்டிருக்கும் போதே உள்ளே ஏதோ ஒன்று தொடர்ந்து வாசிக்காதே.. போதும்.. என்று எச்சரித்துக் கொண்டேயிருந்தது. உடம்பெங்கும் குளிர் படர்ந்து அடங்கியது. படைப்பு முழுவதையும் தியானத்திற்கான மனநிலையுடன் வாசித்திருக்கிறேன் என்று தோன்றியது. வாசிப்பு நிறைந்தவுடன்தான் சுயநினைவிற்கு வந்து நாற்காலியின் பின்னால் ஒய்வாக சாய்ந்தேன். இறுகப்பபற்றிக் கொண்டிருந்த கைகள் தளர்வடைந்தன.

பின்னாலிருந்து யாரோ விட்ட பெருமூச்சு கழுத்தில் முட்டிற்று. யானையோ? திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தேன். பின்னால் ஒரு யானை நின்றிருந்தால் கூட பெரிய ஆச்சரியமாயிருந்திருக்காது என்று பிற்பாடு தோன்றிற்று. கேசவனின் பிளிறல் எழுத்தாக படரும் போதெல்லாம் அது ஒலியாக மாறி என் காதில் ஒலித்தது. தம்புரானும் கேசவனும் சந்திக்கும் இடங்களிலெல்லாம் மனம் மெல்ல உற்சாகமடைவதை கவனித்தேன். வாசிப்பின் ஊடே அந்தக் கட்டங்களை மனம் ஆவலுடன் எதிர்பார்த்தது.

Photobucket

யானையும் ரயிலும் எந்த வயதிலும் பார்க்கச் பார்க்கச் சலிப்பு ஏற்படுத்தாது என்பது உண்மையோ என்னவோ. வேண்டுதலுக்காக ஒருமுறை சபரிமலை செல்லும் போது இயற்கையாகத் திரியும் காட்டு யானைகள் எங்காவது தூரத்தில் தட்டுப்படுமா என்று மனம் அலைபாய்ந்தது. நாங்கள் கடந்தவொரு இடத்தில் யானையின் சாணத்தை கண்டேன். சாணம் இளஞ்சூடாக இருந்தால் இப்போதுதான் அந்த இடத்தை கடந்திருக்கும் என்று ஒருவர் துப்பறிந்து திகிலுடன் சொன்னார். என்னை விட குருசாமிக்குத்தான் மிக ஆவலாக இருந்தது. இருபத்தைந்து வருடங்களில் அவர் ஒரு முறை கூட யானைகளைப் பார்த்ததில்லை என்றா¡ர். சீசன் சமயங்களில் யானைகள் அங்கு வராது என்றார்கள் கடைக்காரர்கள். ஏதோவொரு வருடத்தின் சீசனின் இறுதிக் கட்டத்தில் மனித நடமாட்டம் குறைந்து போய் பெருத்த பிளிறல் ஒன்று கேட்டதையும் கடைக்காரர்கள் அலறியடித்து ஒன்று கூடி கையிலிருந்த டப்பாக்களை அடித்து ஒலி எழுப்பியதில் அது காணாமற் போனதையுடன் அவர் விவரிக்க சுவாரசியமாய் கேட்டுக் கொண்டிருந்தோம்.

ஜெயமோகனின் முந்ததைய சிறுகதைகளிலும் யானைகளும் பாகன்களும் உலவியிருக்கிறார்கள். 'காடு' நாவலில் ஒரு கொம்பன் புத்தகம் முழுக்க உலவிக் கொண்டிருப்பான். குட்டப்பன் ஒரு முறை சொல்வான். (நினைவிலிருந்து தோராயமாக) "காட்டுக்கு ராஜா என்று சிங்கத்தை தெரியாத்தனமா சொல்லிப் போட்டான்கள். சே..என்ன ஒரு மிருகம் அது. கிண்ணத்தை களவாண்டவன் மாதிரி எப்பவும் ஒரு தாழ்ந்த பார்வை. ராஜ கம்பீரம்னா அது யானையல்லோ"... களவாணி மாதிரி பதுங்கிப் போகும் சிங்கத்தின் பிம்பம் மனதில் வந்து வாசிக்கும் போதெல்லாம் சிரிப்பை வரவழைக்கும் பகுதி அது.

ஆனால் 'மத்தகம்' போன்றதொரு பெருத்த அதிர்வை அவை ஏற்படுத்தினதில்லை. குறுநாவலை வாசித்து முடித்து சில கணங்களுக்கு எதுவும் செய்யத் தோன்றாமல் அமர்ந்திருந்தேன். உறங்கச் செல்வதற்கு முன் பல் துலக்கும் செயலையும் நேற்று தவிர்த்து விட்டிருந்தேன். மனம் முழுக்க கேசவனே நிரம்பியிருந்தான். வழக்கத்திற்கு மாறாக உடனே உறங்க முடியாமல் குறுநாவலின் பல வரிகள் மனதிற்குள் ஓடிக் கொண்டேயிருந்தன. பக்கத்தில் படுத்திருந்த மகள் தூக்கத்தில் காலை தூக்கி என் மீது போட்டாள். யானையின் தும்பிக்கை மேலே விழுந்தாற் போல் தோன்றியது. சிரிப்புடன் எண்ணங்களை வேகமாக கலைத்தபடி உறங்கப் போனேன்.

()

என்னால் இதைப் போன்றதொரு படைப்பை எழுத முடிந்திருக்குமா என்று நப்பாசையுடன் யோசித்துப் பார்த்தேன். மனம் ஒரு கணம் பதறி அடங்கியது. ஒருவேளை முடியலாம்தான். ஆனால் அதற்குப் பின்னால் தேவைப்படும் பிரம்மாண்டமான உழைப்பும் காலமும் மலைக்க வைத்தது. நூறு வருடங்கள் பின்னோக்கிய மலையாள தேசத்தின் கலாச்சாரத்தையும், தம்புரான்களின் சடங்கு, சம்பிரதாயங்களையும் பற்றின தரவுகள் தேவை. யானைகளையும் பாகன்களையும் அருகிலிருந்து குறைந்தது ஒரு வருடத்திற்காவது கூர்ந்து அவதானித்திருக்க வேண்டும். யானையின் சாணத்தை அதன் வெதுவெதுப்புடன் அள்ளி முகர்ந்திருக்க வேண்டும். தமிழின் வார்த்தைகளை அதனுடைய அழகியல் உணர்வுடன் நுட்பமாக பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். அதற்கும் மேலாக ஏதோ ஒன்று நிச்சயம் இருக்க வேண்டும். அதைக் கண்டுபிடித்துவிட்டால்....

ஜெயமோகனின் 'ஏழாம் உலகம்' படித்து விட்டு இடிந்து போய் உட்கார்ந்திருந்தது நினைவுக்கு வந்தது. அவர் மற்ற எழுத்துகளின் மீது எனக்கும் விமர்சனங்கள் உண்டு. 'எனது இந்தியா' கட்டுரை குறித்து சொல்ல என்னிடமும் சில வார்த்தைகள் உண்டுதான். ஆனால் இலக்கியம் என்று வருகிற போது அவருக்குள் ஒரு பிரம்ம ராட்சஸம் ஏறி அமர்ந்து கொள்ளும் போல. அவரின் சமீபத்திய பெருங்கதையான 'ஊமைச் செந்நாய்' கூட என்னை பெரிதாக கவரவில்லை. ஆனால் இந்த 'மத்தகம்'தான்...

யானை குறித்த பல நுட்பமான சங்கதிகள் இந்தக் குறுநாவலில் பொதிந்துள்ளன. சில பெருத்த வியப்பை ஏற்படுத்தினாலும் சில விஷயங்கள் அதீதமானதோ என்று எண்ண வைக்கிறது. யானை தன்னுடன் கூடவே உள்ள பாகன்களை விட எப்பவோ ஒரு முறை சந்திக்கிற தம்புரானைத்தான் மேலே அமர வைக்க சம்மதிக்கும் என்பது என் அறிவுக்கெட்டிய வரையில் ஒப்புக் கொள்கிறாற் போல் இல்லை. ஒருவேளை சொல்ல முடியாது. கேசவன் அப்படிப்பட்டவனாக இருக்கக்கூடும். ஜெயமோகன் மிக சுவாரசியமாக கட்டமைத்திருக்கும் கேசவனின் ஆளுமையில் இம்மாதிரியான நெருடல்களை பொருட்படுத்த தேவையில்லை என்றுதான் தோன்றுகிறது.

இப்போதைக்கு இதை எவற்றையும் ஆராய்வதாய் இல்லை. இன்னும் அந்த வாசிப்பனுபவம் தந்த பிரமிப்பிலிருந்து விலகாமலேயே இருக்க விரும்புகிறேன்.

()

எந்தவொரு சர்வதேச இலக்கியப் படைப்பாளியின் தரத்திற்கு சற்றும் குறைவில்லாமல் நம்முடைய தமிழிலும் படைப்பாளிகள் இருக்கிறார்கள் என்கிற பெருமித உணர்வு சாத்தியப்படுவதற்கு ஜெயமோகன் போன்ற ஆளுமைகள் காரணமாய் இருக்கிறார்கள். 'ஜெயமோகன் என்னுடைய ஆசான்' என்றார் ஜெயகாந்தன் ஒருமுறை. வயதான காலத்தில் ஏன் இப்படி அலட்டிக் கொள்கிறார் என்று அப்போது தோன்றியது. உணர்ந்துதான் சொல்லியிருக்கிறார் என்று இப்போது தோன்றுகிறது.

மத்தகம் - குறுநாவல் - ஜெயமோகன்

அத்தியாயம் 1,2 | அத்தியாயம் 3 | அத்தியாயம் 4 | அத்தியாயம் 5

suresh kannan

Friday, December 12, 2008

சாரு வீட்டு கழிவறை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'நீயா நானா' நிகழ்ச்சியை ஒவ்வொரு ஞாயிறும் தொடர்ந்து பார்ப்பது வழக்கம். கடந்த வார நிகழ்ச்சியில் 'நவீன தீண்டாமை' என்கிற புதிய சொல்லாடலை முன்வைத்து கோபிநாத் நிகழ்ச்சியை நடத்தினார். திரைத்துறையினர், அரவாணிகள், திருமண/நில தரகர்கள், மதுக்கடை பணியாளர்கள், விதவைகள், விவாகரத்து பெற்றவர்கள்/ அரசியல்வாதிகள், காவல்துறையினர் போன்றவர்களை நம் சமூகம் எந்தவித காரணங்களுமின்றி கற்பிதங்கள் காரணமாக முன்தீர்மானத்துடன் தேவையற்ற வெறுப்பை/அருவெறுப்பை/ஒதுக்குதலை அவர்கள் மீது காட்டுகிறது. இவ்வாறாக ஒதுக்கப்படுபவர்கள் ஒரு குழுவாக தங்களின் கசப்பான அனுபவங்களை தங்கள் முன் வைத்தனர். சமூகத்தின் பிரதிநிதிகளாக அமர்ந்திருந்த எதிர்க்குழுவினர் எந்த காரணங்களுக்காக தாங்கள் அவர்களை ஒதுக்குகிறோம் அல்லது ஒதுங்குகிறோம் என்பதை கூறினர்.

ஒதுக்கப்படுபவர்களின் குரல்கள் சில:

(1) நான் டாஸ்மாக்கில் சூப்பர்வைசராக பணிபுரிகிறேன். இதனாலேயே என்னை "ஊத்திக்குடுக்கற வேலைய செய்யறவன்" என்கிற அருவெறுப்போடும் கிண்டலோடும் என் பணியை நோக்குகின்றனர்.

(2) நான் ஒரு துணை நடிகை. இதனாலேயே எனக்கு பலர் வாடகைக்கு வீடு தர மறுக்கின்றனர். ஒரு படப்பிடிப்பில் வெயிலாக இருக்கிறதே என்று அருகிலிருந்த வீட்டில் நிழலுக்காக ஒதுங்கப் போகும் போது அந்த வீட்டினர் அருவெறுப்புடன் என்னை துரத்தியடித்தனர். நான் செய்த பாவம் என்ன?

(3) நான் ஒரு அரசியல்வாதி (கவுன்சிலர்). இந்த காரணத்திற்காகவே எனக்கு பெண் தர மறுத்தனர்.

(4) நான் ஒரு விவாகரத்து பெற்ற பெண். இதனால் என் பிறந்த வீட்டிலேயே என்னை துரத்தியடித்தனர். அலுவலகத்தில் சக ஆண் பணியாளர்கள் என்னை பாலியல் நோக்கில் அணுகினர். உறவினர்கள் அவர்கள் வீட்டு விசேசங்களுக்கு என்னை கூப்பிடுவதில்லை.

(5) நான் ஒரு உதவி இயக்குனன். திரைத்துறையை சேர்ந்தவன் என்ற காரணத்தினாலேயே எனக்கு வீடு தர மறுக்கின்றனர்.

(6) நான் ஒரு திருமண அமைப்பாளர். சுமார் 300 திருமணங்களை நடத்தியுள்ளேன். ஆனால் எங்களை புரோக்கர் என்கிற இழிவான நோக்கிலேயே பார்க்கின்றனர்.

(7) நான் gay, lesbian, transgender போன்றவர்களின் உரிமைகளுக்காக போராடுகிறவன். ஆனால் என்னையும் ஒரு gayவாகவே இந்தச் சமூகம் பார்க்கிறது.

பொதுச் சமூகத்தின் குரல்கள் சில:

(1) திரைத்துறையினர் அனைவரையும் நாங்கள் குற்றம் சொல்லவில்லை. ஆனால் அவர்களைப் பற்றி கேள்விப்படுகிற பெரும்பான்மையான செய்திகள் அவ்வளவு சிலாக்கியமாக இல்லை. எனவே அவர்களுக்கு வாடகைக்கு வீடு தர மாட்டோம்.

(2) திருமண தரகர் சொன்ன பொய்யால் என் திருமண வாழ்க்கையே பாதித்து மிகவும் சிரமப்பட்டேன்.

(3) பொது இடங்களில் அரவாணிகளின் அடாவடித்தனத்தால் அவர்களைப் பார்த்தாலே எரிச்சலும், கோபமும், அருவெறுப்பும் வருகிறது. ஒருபால் உறவை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அருவெறுப்பாக இருக்கிறது.

(4) போலீஸ்காரர்கள், வழக்கறிஞர்கள் போன்றவர்களுக்கு வாடகைக்கு வீடு தருவதில்லை. பின்னால் அவர்களால் பிரச்சினை வரும் என்று பயப்படுகிறோம்.

(5) அசைவம் சாப்பிடுபவர்களை, மது குடிப்பவர்களை பிடிப்பதில்லை. அவர்களை நாங்கள் ஒதுக்குவதில்லை. நாங்கள் 'ஒதுங்கிப் போகிறோம்'. அவ்வளவுதான் விஷயம்.

()

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எழுத்தாளர் சாருநிவேதிதா இவ்வாறாக சமூகத்தின் சில பிரிவினரை பொதுச் சமூகம் ஒதுக்குவதை cultural fascism என்று வர்ணித்தார்.

.." பெரும்பாலும் விளிம்புநிலையில் உள்ள மக்களே இவ்வாறான புறக்கணிப்பை சந்திக்க நேரிடுகிறது. திரைத்துறையில் இருக்கும் டைரக்டர் ஷங்கரையோ, ரஜினிகாந்த்தையோ இச்சமூகம் ஒதுக்குவதில்லை. ஆனால் துணை நடிகர் என்றால் ஒதுக்குகிறோம். ஒரு அரவாணியை நம்மால் ஒரு நண்பராக ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. இப்படிக்கு ரோஸ் நிகழ்ச்சியை நடத்தும் ரோஸ், அந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு முன்பிருந்தே என்னுடைய நண்பர். அவருடன் நண்பராக பல இடங்களுக்கு சென்றிருக்கிறேன். ஒரு முறை எங்கள் வீட்டிற்கு வந்த அவரிடம் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசினோம். ரோஸ் கிளம்பும் போது அவரிடம் 'rest room உபயோகித்து விட்டுப் போங்கள்' என்று நான் சொன்னதற்கு மிகவும் நெகிழ்ந்து போனார். இதுவரை தன்னிடம் யாரும் அவ்வாறு கேட்டதில்லை என்று'

... விவாகரத்திற்குப் பிறகு என்னுடைய எட்டு வயது மகளோடு வாடகைக்கு வீடு தேடி போகும் போது பெரும்பாலோனோர் வீடு தர மறுத்தனர். டெல்லியில் இருந்த போது 'ரவி' என்கிற பெயர் 'ரபி' என்று உச்சரிப்புடன் கேட்டு அதற்காகவே வீடு கிடைக்கவில்லை. அசைவம் சாப்பிடுபவர்களுக்கு வீடு தர மறுக்கின்றனர்.

...இவ்வாறான சில மனத்தடைகள் நம்மிடம் இருக்கின்றன. அவற்றிலிருந்து இந்த சமூகம் வெளிவர வேண்டும்.

()

சமூகக் குரல்களின் சார்பில் சிறப்பு விருந்தினராக வந்திருந்தவர் (பெயரைக் கவனிக்கவில்லை. கோயில் குருக்கள் தோற்றத்தில் இருந்தார்) கூறியது.

.. திரைத்துறையினர் தாங்கள் செய்யும் தொழில் குறித்து அவர்களுக்கே ஒரு பெருமிதமும் பெருமையும் இருக்க வேண்டும். அவர்களே அவர்களின் தொழிலை இழிவாக பார்க்கக்கூடாது. (நான் என் தொழில் குறித்து பெருமையே கொள்கிறேன் என்று துணை நடிகை தொழில் புரிபவர் பதிலளித்தது உரையாடலின் கூச்சலில் பெரும்பாலோரின் கவனத்திற்கு வராமல் போய் விட்டது). மதுக்கடைகளில் பெரும்பாலும் கெட்டவர்களின் நடமாட்டமும் அதிர்வுகளும் இருக்கும். எனவே அவர்களுக்கு வீடு தர மறுப்பதில் தவறில்லை.

ஒதுக்கப்படுபவர்களின் குழுவில் இருந்த அரவாணி ஒருவர் "எங்களை இந்தச் சமூகம் எல்லாவிதத்திலும் ஒதுக்கி வைக்கிறது. வீட்டிலிருந்தும் துரத்துகிறார்கள். இந்தச் சமூகமும் எங்களை அருவெறுப்புடன் பார்க்கிறது. எந்த வேலை வாய்ப்பும் எங்களுக்கு கிடையாது. இப்படி எல்லா இடங்களிலும் ஒதுக்கப்படும் அரவாணிகள் செய்யக்கூடியது பிச்சை எடுப்பதும், பாலியல் தொழில் புரிவதும்தான். சமயங்களில் வன்முறையையும் அடாவடித்தனத்தையும் சில அரவாணிகள் கையில் எடுப்பது தவிர்க்க முடியாமல் போகிறது. அதற்கு இந்தச் சமூகம்தான் காரணம் என்றார்.

நிகழ்வின் உச்சமாக, அரவாணிகளைப் பற்றி வெறுப்பாக பேசிக் கொண்டிருந்த பெண், நல்ல பண்புகளுடன் உள்ள ஒரு அரவாணியை நண்பராக ஏற்றுக் கொள்ள தமக்கு ஏதும் தடையில்லை என்று கூறி எதிர் குழுவில் இருந்த அரவாணியை கட்டித்தழுவிக் கொண்டார். இந்தச் செய்கையால் மிகவும் நெகிழ்ச்சியடைந்த நிகழ்ச்சியின் நடத்துநர் கோபிநாத் அந்தப் பெண்ணுக்கு சபையை standing ovation அளிக்கச் செய்தார்.

()

எல்லா முற்போக்கு பாசாங்கு முகமூடிகளையும் கழற்றி விட்டு இந்தத் தலைப்பினுள் என்னை நான் பொறுத்திப் பார்த்தேன். நிச்சயம் காவல்துறையினர் என்றால் எனக்கு அலர்ஜி. நான் சந்தித்தவர்களில் பெரும்பான்மையோர் தன்னிடமிருந்த அதிகார மமதையோடுதான் இருந்தார்கள். தன் கடமையை உணர்ந்து பொறுப்புடனும் மிருதுவாகவும் அணுகியவர்கள் சொற்பமானவர்களே. நிலத்தரகர்களில் பெரும்பான்மையோர் ஏமாற்றுக்காரர்களாய்த்தான் இருக்கிறார்கள். brokers excuse. திருமண தரகர்கள் பற்றிய அனுபவமில்லை.

குடிப் பழக்கம் உள்ளவர்கள் வேறு; குடிகாரர்கள் வேறு. குடியை ஒரு விடுதலையாக, மிதமோடு நாகரிகமாக அருந்துபவர்களுடன் பிரச்சினையிலலை. ஆனால் அளவுக்கதிகமாக குடித்து விட்டு ரோட்டில் விழுந்து கிடப்பவர்கள், வாந்தியெடுப்பவர்கள், மற்றவர்களுடன் தகராறு செய்பவர்கள் போன்றவர்களைக் கண்டால் நிச்சயம் எரிச்சலாக இருக்கும். அதற்காக மதுக்கடைகளில் பணிபுரிபவர்களையும் குடிகாரர்களாக நினைத்து அருவெறுப்பது முட்டாள்தனம். அதே போல்தான் விவாகரத்து பெற்றவர்களையும், திரைத் துறையில் பணிபுரிபவர்களையும் ஒதுக்குவது.

ஒருபால் உறவு கொள்பவர்கள் குறித்து ஒரு காலத்தில் எனக்கு மிகுந்த வெறுப்பும் அருவெறுப்பும் இருந்தது. ஒருபால் உறவு நாட்டமுடையவர்கள் குறித்து ராயர் காப்பி கிளப் குழுமத்தில் நடந்த விவாதத்தில் என்னுடைய அருவெறுப்பை வெளிப்படுத்திய போது 'அவர்களின் பார்வையில் நீங்கள் அருவெறுப்பாய் தெரியக்கூடும் அல்லவா?' என்று எழுதினார் பத்ரி. விரல்கள் அழுகிக் கிடக்கும் தொழுநோயாளிக்கு ஆரோக்கியமானவனின் விரல்கள் அருவெறுப்பைத்தான் தரும் என்று நாகூர் ரூமி அதற்கு எதிர்வினையாக எழுதியது ஞாபகமிருக்கிறது.

ஆனால் நாளடைவில் ஏற்பட்ட சிந்தனை வளர்ச்சியின் போக்கில் புரிதலின் பேரில் இன்று அது மட்டுப்பட்டிருக்கிறது எனலாம். இடது கை பழக்கம் போல் ஒருபால் உணர்வும் ஒருவகையான இயற்கை உணர்வே என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் ஒருபால் உறவு நாட்டமுடையவர்கள் சட்டபூர்வமாக திருமணம் செய்ய வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. என்றாலும் எரிச்சலான பேருந்து பயணங்களில் எப்பவாவது ஆண்குறிகள் மேலே உரசும் போது 'அட நாய்களா, இதில் விருப்பமுள்ளவர்களுடன் கூடித் தொலைங்களேன். ஏன் மற்றவர்களை தொந்தரவு செய்கிறீர்கள்' என்று கத்தத் தோன்றுகிறது.

அரவாணிகள் குறித்து பார்க்கும் போது விளிம்பு நிலையிலும் உள்ள அவர்களிடம் பொதுச்சமூகம் எல்லாக் கதவுகளையும் அடைத்து அவ்வாறு ஒதுக்குவது தவறுதான் என்று தோன்றினாலும் சிந்தனை ரீதியில்சில நடைமுறை அனுபவங்களின் போது நாம் அறிவைத் துறந்து அவற்றை உணர்ச்சியின் வழிதான் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. நான் பார்த்தவரை எங்கள் அலுவலகத்தில் வரும் அரவாணிகள் மிகவும் மோசமாகத்தான் நடந்து கொண்டிருக்கின்றனர். ஆண்களில் சிலரும் எளியவழியில் காசுபெற பெண் வேடமிட்டு வந்து தகராறு செய்து அரவாணிகளின் மீதான வெறுப்பை அதிகரிக்கச் செய்கின்றனர் என்று அரவாணிகள் தரப்பிலிருந்து குற்றச்சாட்டு எழுகிறது. என்றாலும் அவர்களின் உள்ளார்ந்த சமூக கோபத்தின் வெளிப்பாட்டை பொதுச் சமூகம் தன்னை மாற்றிக் கொள்ளும் சூழல் ஏற்படும் வரை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என நினைக்கிறேன்.

(பரபரப்பாக கவனிக்கப்பட வேண்டும் என்கிற உள்நோக்கத்துடனே பதிவின் தலைப்பு அமைக்கப்பட்டது. உள்ளடக்கத்திற்கும் அதற்கும் பெரிதான தொடர்பில்லை).

suresh kannan

Wednesday, December 10, 2008

உருப்படியாக ஒரு தமிழ் சினிமா

எப்போதுமே அது அப்படித்தான் நிகழ்கிறது. வருடம் பூராவும் சேற்றில் இறங்கி வேலை செய்து அரிசியை உற்பத்தி செய்யும் விவசாயக் கூலிகளால் வருடத்திற்கு ஒருமுறைதான் நெல்லுச் சோறு சாப்பிட முடிகிறது. செங்கற்களையும் சிமெண்ட்டையும் மூச்சு வாங்க மேலே சுமந்துச் சென்று அண்ணாந்து பார்க்க வைக்கும் கட்டிடங்களை உருவாக்கும் தொழிலாளர்கள் தங்க ஒழுகும் குடிசைதான் வாய்த்திருக்கிறது. பளபளப்பான வணிக வளாகத்தின் தங்க நகைக் கடையில் வேலை செய்யும் சிறுமியின் காதில் ஆறு ரூபாய்க்கு வாங்கிய ஜிமிக்கிதான் தொங்குகிறது.

மற்றவர்களுக்கெல்லாம் பட்டுச் சேலை நெய்து தரும் நெசவாளர்கள் தங்களுக்கென ஒரு பட்டுச் சேலையை சொந்தமாக்கிக் கொள்வது என்பது எவ்வளவு சாத்தியமற்றதாக இருக்கிறது என்கிற யதார்த்தக் கொடுமையை நம்முன் வைக்கிறது பிரியதர்ஷனின் திரைப்படம் - 'காஞ்சிவரம்' .

1920 - 1948-களின் காலகட்டத்தில் பயணிக்கும் இந்தப் படம் சிறையிலிருந்து இரண்டு நாள் சிறப்பு அனுமதியின் பேரில் செல்லும் வேங்கடத்தின் நினைவலைகளின் மூலம் பார்வையாளர்களுக்கு சொல்லப்படுகிறது.

Photobucket

வேங்கடம் (பிரகாஷ் ராஜ்) ஓர் சிறந்த பட்டு நெசவாளன். நெசவாளியான தன் தந்தையின் மரணத்திற்குக் கூட அவர் மீது போர்த்த பட்டுத்துணி இல்லாத வறுமை. பட்டுப் புடவைகள் மூலம் கிடைக்கும் லாபத்தின் பெரும்பான்மையும் முதலாளிகளுக்கே போகிறது. நெசவாளர்களுக்கு சொற்ப கூலிதான் தரப்படுகிறது. தனக்கு வரப்போகும் மணமகள் பட்டுப்புடவையுடன் வரவேண்டும் என்பது வேங்கடத்தின் கனவு. ஆனால் யதார்த்தமான சூழல் அதற்கும் ஒத்துழைக்கவில்லை.

வேங்கடத்திற்கும் (பட்டுப்புடவை இல்லாத) அன்னத்திற்கும் (ஷ்ரேயா ரெட்டி) நடக்கும் திருமணத்தினால் பெண் குழந்தை பிறக்கிறது. தன்னுடைய பெண்ணின் திருமணத்தை பட்டுப்புடவையுடன்தான் நடத்துவேன் என்கிற வாக்குறுதியை குழந்தையின் பெயர் வைக்கும் விழாவில் ஊரார் முன்னிலையில் வெளிப்படுத்துகிறான் வேங்கடம். சாத்தியப்படாத வாக்குறுதியாக இருக்கிறதே என்கிற அவநம்பிக்கையை அவன் மனைவி உட்பட மற்றவர்கள் வெளிப்படுத்துகின்றனர். இதற்கென தான் பல வருடங்களாக சேர்த்து வைத்துக் கொண்டிருக்கும் சில்லறைக் காசுகளை மனைவியிடம் காட்டி அவளை சமாதானப்படுத்துகிறான். ஆனால் அந்தப் பணத்தை ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தனது தங்கைக்காக செலவு செய்ய வேண்டியிருக்கிறது.

தனது மகளுக்கு எப்படியாவது ஒரு பட்டுச் சேலையை சம்பாதித்து விட வேண்டுமென்பது வேங்கடத்தின் ஆசை. வெறி எனக்கூடச் சொல்லலாம். இதற்காகத்தான் அந்தத் தவறைச் செய்கிறான். தன்னுடைய வேலையிடத்தில் இருந்து திரும்பும் போதெல்லாம் பட்டு நூற்கற்றை ஒன்றை வாயில் போட்டுக் கொண்டு திருடி வருகிறான். சிறிது சிறிதாக தன் மகளுக்கான கனவுச் சேலையை ரகசியமாக நெய்கிறான். நோய்வாய்ப்படும் மனைவி இடையில் இறந்து போகிறாள். அந்த ஊருக்கு வரும் ஒரு எழுத்தாளனின் மூலம் கம்யூனிசத்தின் அறிமுகம் கிடைக்கிறது. இந்த விழிப்புணர்வின் மூலம் வைக்கப்படும் கோரிக்கைகளினால் முதலாளியுடன் முரண் ஏற்படுகிறது. வேலை நிறுத்தம் செய்ய வேண்டிய சூழ்நிலை. தன்னுடைய நண்பனின் மகனுக்கே தன் மகளை நிச்சயம் செய்யும் சூழல் ஏற்படுகிறது. ஏற்கெனவே தீர்மானித்திருந்த படி மகளுக்கு சீதனமாக பட்டுச் சேலை ஒன்றை தருவதாக வாக்களிக்கிறார் வேங்கடம். ஆனால் சேலை முக்கால்வாசிதான் நிறைவடைந்திருக்கிறது.

பிறகு?....

வேங்கடம் தன் மகளுக்கான பட்டுச் சேலையை நெய்து அளித்தாரா? அவர் ஏன் சிறைக்கு செல்ல நேர்கிறது என்பதோடு மனத்தை உலுக்கிப் போடும் அந்த கிளைமாக்சையும் அறிய படத்தை நீங்கள் காணவேண்டும்.

()

வட இந்தியாவில் நானா படேகர், நஸ்ரூதீன் ஷா போன்றவர்கள் இருப்பது போல நமக்கு ஒரு பிரகாஷ் ராஜ் இருப்பது குறித்து நாம் நிச்சயம் பெருமை கொள்ள வேண்டும். ஆனால் திரைப்பட விழாக்களில் சிறந்த படைப்புகளைப் பார்க்கும் நம் இயக்குநர்கள் அதை செயல்படுத்தாமல் இந்த மாதிரியான நடிகர்களை typical பாத்திரங்களில் மாத்திரம் பயன்படுத்தி மாற்றுச் சிந்தனையை, கதைப் போக்கை முழுவதுமாக நிராகரிக்கிறார்கள் என்பது வேதனையை ஏற்படுத்தக் கூடியது. இவ்வளவு சிறந்த நடிகர் ஒரு சோதா கதாநாயகனிடம் வில்லனாக மல்லுக்கட்டும் படங்களைப் பார்க்க சங்கடமாக இருக்கிறது.

இந்தப் படம் முழுவதையும் தன் தோள்களில் சுமந்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். திருமண வயது மகள் கொண்ட தந்தையின் தோற்றத்தையும் உடல் மொழியையும் திருமணமான புதிதில் இருக்கிற இளமையையும் குறிப்பிடத்தக்க அளவில் வித்தியாசப்படுத்தியிருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சிகளில் அவரின் நுட்பமான பாவங்கள் நம்மை கலங்கடிக்கிறது. கிழட்டு வயதிலும் தம்மை இளமையான கதாநாயகன்களாக முன்நிறுத்திக் கொள்ளும் காமெடியர்களுக்கு மத்தியில் கதையின் போக்கிற்கு தம்மை ஒப்படைத்துக் கொள்ளும் பிரகாஷ் போன்ற நடிகர்கள் நிறையத் தேவைப்படுகிறார்கள். இயக்குநர்களும் அம்மாதிரியான நடிகர்களை நிறையப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கவர்ச்சி பிம்பமாக ஆரம்பத்தில் அறியப்பட்ட ஷ்ரேயா ரெட்டி சிறந்த பாத்திரங்களை மாத்திரம் தேர்ந்தெடுத்து நடிக்க முன்வருவது பாராட்டப்பட வேண்டிய விஷயம். வெயில், பள்ளிக்கூடம் போன்ற படங்களைப் போலவே இதிலும் சிறிது நேரத்திற்கே வந்து போனாலும் தான் தோன்றுகிற காட்சிகளில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். வேங்கடத்தின் மகளாக வரும் பெண்ணும் (ஷம்மு) நண்பராக வரும் நடிகரும் (கூத்துப்பட்டறை நடிகர்) தம் பங்களிப்பை சிறப்பாக நிகழ்த்தியிருக்கின்றனர்.

()

சாபு சிரிலின் art direction குறித்து நிச்சயம் சொல்லியேயாக வேண்டும். இதே பிரியதர்ஷனின் கூட்டணியில் உருவான 'சிறைச்சாலை' படத்திலேயே தன்னுடைய முத்திரையை அழுத்தமாக பதித்து விட்டவர் இதிலும் அதைத் தொடர்கிறார். 1900-களில் புழங்கியிருக்கும் பொருட்களை நிறைய உருவாக்கி பயன்படுத்தியிருக்கிறார். அந்த ஊருக்கே முதன் முதலாக வரும் மோட்டார் கார், ஒரு ரூபாய் நோட்டு, பழைய அணா நாணயங்கள், கிணற்று ராட்டினம், சைக்கிள் விளக்கு, கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் பட்சண விற்பனையாளனின் கூடை, பித்தளை பாத்திரங்கள் போன்றவை செயற்கையாக பார்வையாளனின் முன்வைக்கப்படாமல் காட்சிகளின் போகிற போக்கில் கண்ணில் தெரிகின்றன.

இசையைப் பற்றின அடிப்படை ஞானம் எனக்கில்லா விட்டாலும் இளைய ராஜாவின் பின்னணி இசையை என்னால் நுட்பமாக உணர முடியும். சமீபத்தில் பார்த்த 'சேது' படத்தில் சில விநாடிகளே தோன்றும் ஒரு மயிற்தோகைக்கு அவர் அளித்திருக்கும் அந்த இசை அவருக்கு மாத்திரமே சாத்தியம். இந்தப் படத்திற்கு M.G. ஸ்ரீகுமார் இசையமைத்திருக்கிறார். பின்னணி இசை பல காட்சிளுக்கு மிகப் பொருத்தமாக இழையோடியிருக்கிறது. குழந்தை பிறந்திருக்கும் விழாவில் பாடப்படும் அதே பாடலை கிளைமாக்ஸ் காட்சியிலும் பயன்படுத்தியிருப்பது நம்மை கலங்க வைக்கிறது. திருவின் காமிரா 40-களின் காலகட்டத்திற்கு ஒத்திசைவான ஒளியைப் பயன்படுத்தி எந்த வித gimmics-ம் இல்லாமல் இயல்பாக பயணிக்கிறது.

அடிப்படையில் இந்தப்படம் இந்திய சுதந்திரத்திற்கு முந்தைய நெசவாளர்களின் வறுமையைப் பற்றியும் தென்னிந்திய உழைப்பாளர்களிடையே கம்யூனிசம் முதன்முதலில் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் அதன் வீழ்ச்சி குறித்தும் மெல்லிய குரலில் பேசுகிறது. தங்களின் கோரிக்கைகளுக்காக முதலாளியிடம் விடாப்பிடியாக போராடும் வேங்கடம், தன்னுடைய மகளுடைய திருமண நாள் நெருங்கியவுடன் பட்டுச்சேலை கனவு நிறைவேறி விடாமல் போய்விடுமோ என்ற கலக்கத்தில் குறைந்த பட்ச கோரிக்கைகளை ஏற்று சில தோழர்களின் பகைமையைப் பெறுகிறான். கம்யூனிசம் என்கிற சித்தாந்தத்தை அன்றைய அரசு எவ்வாறு மூர்க்கத்தனமாக எதிர்கொண்டது என்பதையும் இந்தப்படம் பேசுகிறது.

நாள் முழுக்க தறியில் அவர்கள் அவதிப்பட்டு பட்டுச்சேலையை உருவாக்கி மற்றவர்களை மகிழ்வித்தாலும் அவர்களின் வாழ்க்கை பட்டுச்சேலை மாதிரி வழுவழுப்பாக இல்லாமல் மிக்க வறுமையுடன் கரடுமுரடாகத்தான் இருக்கிறது என்பதை இந்தப்படம் எந்தவித பிரச்சாரத்தொனியுமின்றி இயல்பாகச் சொல்கிறது. பிரியதர்ஷன் இந்தப்படத்தை மிகச் சிரத்தையாக உருவாக்கியிருக்கிறார். காலவாக்கில் முன்னும் பின்னுமாக நகரும் திரைக்கதையை அமைத்திருக்கும் இயக்குநர் இரண்டையும் இணைக்கும் காட்சிகளை மிக நுட்பமாக பயன்படுத்தியிருக்கிறார். வணிக நோக்கத்துக்கோ அல்லது விருது வாங்கும் நோக்கத்கோ அல்லாமல் தன்னுடைய 9 வருட கனவை நிறைவேற்றும் விதமாக தன்னுடைய ஆத்ம திருப்திக்கு இந்தப்படத்தை உருவாக்கியதாக கூறுகிறார்.

IFFI, Toronto உள்ளிட்ட பல திரைப்பட விழாக்களில் இந்தப்படம் திரையிடப்பட்டு பார்வையாளர்களிடமிருந்து பெருவாரியான வரவேற்பைப் பெற்றுள்ளது.

()

அடுத்த முறை ஒரு பட்டுப்புடவையை வாங்கும் போதோ அல்லது உடுத்தும் போதோ அதற்காக அழிக்கப்பட்ட பல உயிரினங்களோடு அதை உருவாக்கினவனின் வியர்வையையும் சற்று நினைவு கூர்வது நலம்.

(பண்புடன் குழுமத்தின் ஆண்டுநிறைவையொட்டி அதில் பிரசுரமான இந்தப் பதிவு இங்கே மீள்பிரசுரம் செய்யப்படுகிறது. நன்றி: பண்புடன்)

suresh kannan

Wednesday, December 03, 2008

மலத்தின் நாற்றம் வீசும் கதை

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தன்னுடைய சமீபத்திய பதிவில் தமிழ் நவீன இலக்கியத்தில் பரவலாக அறியப்படாத ஆனால் குறிப்பிடத்தக்க படைப்புகளை எழுதியவர்களைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். நானும் இதே போன்றதொரு முயற்சியை ஜுன் 2006-ல் 'அறியப்படாத எழுத்தாளர்களின் வரிசையில்...' என்றொரு தொடராக எழுத ஆரம்பித்தேன். ஆனால் அதை தொடர இயலவில்லை. எழுத்தாளர்கள் மாத்திரமல்ல, சிறிது காலமே பரிமளித்த திரைப்பாடகர்கள், நடிகர்கள், (குணா படத்தின் நாயகி எங்கே போனார்?), இயக்குநர்கள் (ருத்ரைய்யா) போன்றவர்களைப் பற்றி எழுதும் விருப்பமுண்டு.

ராமகிருஷ்ணன் தன்னுடைய பதிவில் எக்பர்ட் சச்சிதானந்தம் என்கிற சிறுகதை எழுத்தாளரைப் பற்றியும் அவருடைய சிறுகதைகளைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். நானும் அந்த சிறுகதைத் தொகுதியைப் பற்றி முன்னர் மரத்தடிக் குழுமத்தில் எழுதியிருக்கிறேன். அதை இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்ள உத்தேசம். (பாதுகாத்து வைத்திருந்த மரத்தடி.காம்.-க்கு நன்றி.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
"நுகம்" சிறுகதைகள்- அ.எக்பர்ட் சச்சிதானந்தம்
- தமிழினி பதிப்பகம், சென்னை-14. விலை ரூ.60
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

எக்பர்டின் கதைகள் கிறிஸ்துவர்கள் அல்லாதவர்களுக்கு அவ்வளவு பரிச்சயமல்லாத சர்ச் என்னும் கிறிஸ்துவ தேவாலயங்களைச் சுற்றியே வருகிறது. ஆனால் மதப்பிரசாரக் கதைகள் அல்ல. மாறாக அங்கே நடக்கும் அரசியல்களையும், போதர்களின் சுயநலத்தின் அசிங்கங்களையும், ஆலயப் பணம் வசூலிக்கப்பட்ட நோக்கத்திற்கு மாறாக செலவழிக்கப்படுவதையும், கோயில் ஊழியர்களின் குறைகள் கவனிக்கப்படாமல் நிராகரிக்கப்படுவதையும் எந்தவித பிரசாரக் குரலுமின்றி இயல்பான தொனியில் சொல்லிக் கொண்டு போகிறார் ஆசிரியர்.

மூச்சுத்திணறும் வார்த்தைக் கட்டமைப்புகளால் வாசகனைத் திணற வைக்காமல், ஓடும் பேருந்தில் தன் நண்பனுடன் முந்தாநாள் நடந்த சம்பவத்தைப் பற்றி சுவையாக விவாதித்துக் கொண்டு போகும் சிநேகமான எழுத்து இவருடையது. இவர் ஒர் பள்ளி ஆசிரியராக இருப்பதால், அவர்களுக்குள் இருக்கும் போட்டிப் பொறாமைகளையும் இயல்பாக எழுத முடிகிறது.

சில கதைகளைப் படிக்கும் போது, 'பரலோகத்திருக்கிற எங்கள் பிதாவே' என் நான் ஜெபித்து மறந்து போன என் சிறுவயது பள்ளிக்கூடம் ஞாபகத்திற்கு வருகிறது.

தேவாலயக் கல்லறையில் பணிபுரியும் ஏழை ஊழியரின் மகன் இறந்து போகும் போது அவனே சோகத்துடன் அந்தக் காரியங்களைச் செய்யும் சம்பவங்களை ஆசிரியர் விவாதிக்கும் போது வாசகர்களும் கையாலாகத்தனத்துடன் வேடிக்கை பார்க்க நேரிடுகிறது. இன்னொரு கதையில் தன் மகளுக்காக கிறிஸ்துவப் பள்ளியில் ஆசிரியை வேலைக்காக சேர்க்க அந்தத் தந்தை எல்லா வழிகளையும் முயன்று பார்ப்பதும், இறுதியில் அங்கு நடக்கும் அரசியல் காரணமாக வேறு ஒருவருக்கு அந்த வேலை அளிக்கப்படும் போது, தன் தோழி உதவியுடன் தானே ஒரு சிறிய பள்ளியை ஆரம்பிக்க அந்த மகள் முடிவெடுக்கும் அந்த கணத்தில் இளைய தலைமுறையினரை சோர்வடைய விடாமல் ஒரு புது வழியை காண்பிக்கிறார் ஆசிரியர்.

=o=

இந்தச் சூழலைத் தாண்டியும் சில கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. அதில் என்னை கவனிக்க வைத்தது, 'மலம்' என்னும் தலைப்பில் எழுதப்பட்ட கதை.

மலம் அள்ளுபவளாக இருந்தாலும், திடகாத்திரமாக, கவர்ச்சியாக இருப்பதால் அவளுடன் உறவு கொள்ள ஆசைப்படும் அவன், மனைவி ஊருக்குப் போயிருக்கும் இதை அவளிடம் வெளிப்படுத்த, அவள் ஒரு நிபந்தனை விதிக்கிறாள். ஒரு நாள் தனக்குப் பதிலாக அவனை எல்லா வீட்டு மலங்களையும் அள்ளச் சொல்கிறாள். அவள் மீதுள்ள வெறியால் இதற்கு சம்மதிக்கும் அவன் மிகுந்த அருவருப்புடன் மலம் அள்ளுவதும் ஒரு நிலையில் தாக்குபிடிக்க முடியாமல் மூச்சடைத்து, வாந்தியெடுத்து நீரெடுத்து கழுவப் போக எல்லா இடமும் மலமாக அவனுக்குள் தெரிகிறது. 'இப்ப என்னா சொல்ற' என்கிறவளை 'வெளியே போ' என்று அவன் கத்துவதுடன் கதை நிறைகிறது.

அவன் மலம் அள்ளும் போது தமக்குள் பேசிக் கொள்வதை இரக்கமே இல்லாமல் வர்ணிக்கிறார் ஆசிரியர்.

.................. 'கட்டி கட்டியா இருந்தாலும் பரவா இல்ல. களி மாதிரி இப்படியா. எந்த குண்டியோ. பயங்கர நாற்றம். என்ன இது வெள்ளைப்புழுவா தொ¢யுது. ஆஸ்கரிஸ், டீனியா... என்ன எளவோ.. சனியன் பூச்சி மாத்திரை சாப்பிட்டா என்ன? என்னத்தை தின்னாளுகளோ இவ்ளோ கெடக்கு. கடவுளே கைல ஏறிடுச்சே புழு.... தரைல தேய்ச்சா கூட இன்னும் நெளியுது. தலைதான் நசுங்கி கிடக்கு. கட்டை விரல் நகத்துல மஞ்சளா எப்போ ஒட்டிச்சி? நக இடுக்குல வேற.' ...................

படிக்கும் நமக்கே குமட்டுகிற போது இதையே வேலையாய் வைத்துள்ள அந்தத் தொழிலாளர்களை நினைக்கும் போது பரிதாபமாக இருக்கிறது.

=o=

பள்ளி ஆசிரியரரான எக்பர்ட் சச்சிதானந்தம் தற்போது காஞ்சிபுரத்தில் வசிப்பதாகக் குறிப்பு இருக்கிறது


suresh kannan

Monday, December 01, 2008

பா.ராகவனும் காக்டெய்ல் பரோட்டாவும்

தமிழ்ப் புத்தக வாசிப்பாளர்களின் பொற்காலம் என்று இப்போதைய காலகட்டத்தை அழைக்கலாமோ (பதிப்பகங்களுக்கு பொற்காசுகளின் காலம் என்றும்) என்னுமளவிற்கு நவீன அச்சு நுட்பத்தின் உதவியோடு பல்வேறு தலைப்புகளில் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் அச்சிடப்பட்டு வெளிவந்து கொண்டிருக்கின்றன. முன்பெல்லாம் நான் ஓர் எழுத்தாளரின் குறிப்பிட்ட ஒரு சிறுகதைக்காக எங்கெங்கோ அலைந்து தேடியிருக்கிறேன். புதையல் போன்று காக்கும் நண்பரிடமிருந்து சிரமப்பட்டு அதனுடைய பிரதியை எடுத்து வந்திருக்கிறேன். ஆனால் இன்று அந்த எழுத்தாளரின் அனைத்து சிறுகதைகளும் கட்டுரைகளும் தொகுக்கப்பட்டு 'உரித்த வாழைப்பழம்' போல் வாசகர்களுக்கு கிடைக்கும் செளகரியம் வாய்த்திருக்கிறது.

மோகன்தாஸ் காந்தி பற்றிய தலைப்பில் தேடினால் குறுக்கும் நெடுக்குமாக முன்பெல்லாம் பல வகைகளில் புத்தகங்கள் கிடைக்கும். ஆனால் கோட்சேவைப் பற்றி? கஷ்டம். காக்கி அரை நிஜார் போட்டுக் கொண்டு RSS முகாம்களில் தேடினால் ஒருவேளை கிடைக்கலாம். ஆனால் சந்தனக் கடத்தல் வீரப்பனும் புனித பிம்பாகி விட்ட இன்றைய நிலைமை வேறு. எதிர்மறையான ஆளுமைகளைப் பற்றிய புத்தகங்களும் சுலபமாக நிறைய கிடைக்கின்றன. அப்படிப்பட்டதோர் எதிர்மறை ஆளுமையான கொலம்பிய போதைக் கடத்தலின் முன்னோடியாக இருந்த Pablo Emilio Escobar Gaviria (1949 - 1993) என்பவரைப் பற்றின புத்தகம் பா.ராகவன் எழுதிய 'என் பெயர் எஸ்கோபர்'. (தில் திகில் திடுக்கிடல்)

Photobucket

ஒரு நாட்டின் அதிபயங்கர குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கிறவரே தான் கைது செய்து நடத்தப்படும் விதம் குறித்து அந்த நாட்டு அரசாங்கத்துடன் ஓர் ஒப்பந்தத்தைப் போட்டு அதை நிறைவேற்றிக் கொண்டிருக்க முடியுமா?

கொலம்பியாவில் இது நடந்திருக்கிறது. பெரிய மனது வைத்து 5 வருடங்கள் மாத்திரமே சிறைப்பட 'விரும்பிய' அவருக்கென்றே நவீன வசதிகளுடன் ஒரு சிறையைக் கட்டி அதில் அவரை 'தங்க' வைத்திருக்கிறது கொலம்பிய அரசு. விருப்பப்பட்ட நேரத்தில் அவர் வெளியே போய் தனக்கு பிடித்தமான கால்பந்து விளையாட்டை ரசித்து திரும்பலாம். (ஒரு முன்னாள் முதல்வரின் மீதுள்ள வழக்குகளை பிரத்யேகமாக விசாரிப்பதற்கென்றே தனி நீதிமன்றங்கள் சென்னையில் கட்டப்பட்டதை இச் சமயத்தில் பெருமையுடன் நினைவு கூரலாம்). கொலம்பியாவின் அப்படிப்பட்ட சிறப்பு வி.ஐ.பி. குடிமகனைப் பற்றித் தெரிந்து கொள்ள இந்தப் புத்தகத்தினுள் பயணம் செய்வது அவசியம்.

பல வருடங்கள் காலனியாதிக்கத்தின் சுரண்டலில் அவதிப்பட்ட நாடு கொலம்பியா. பல்வேறு புரட்சி இயக்கங்களின் முயற்சி மூலம் சுதந்திரம் அடைந்தாலும் உள்நாட்டு அரசியல் கலவரங்களாலும் போர்களாலும் மக்களுக்கு நிம்மதியில்லை. இரு வல்லரசுகளின் போட்டியில் அமெரிக்காவின் சி.ஐ.ஏ. ஏற்படுத்தும் குழப்பங்கள் வேறு. இயக்கங்களுக்கு ஆயுதம் வாங்கப் பணம் வேண்டும். என்ன வழியென்று யோசித்தில் கோகெய்ன் என்ற போதைப் பொருளை தயாரிக்க உதவும் கோகோ பயிர் தென்படுகிறது. அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் கொலம்பிய சரக்கு என்றால் நிச்சயம் உன்னதமாக இருக்கும் என்றொரு நம்பிக்கை இருந்ததால் பணம் டாலர்களில் கொட்டுகிறது. கொலம்பியாவின் குடிசைத் தொழிலாக இந்த போதைப் பொருள் தயாரிப்பு இருந்ததால் பல்வேறு சிறு குழுக்கள் இந்த சர்வதேச வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.

()

சில்லறை கார் திருடராக இருந்த எஸ்கோபர், (அதற்கு முன் கல்லறைகளில் உள்ள நினைவுக்கற்களை திருடி விற்றவர் என்று சொல்லப்படுகிறது) தன்னுடைய பணக்காரக் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள இந்த போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட ஆரம்பிக்கிறார். சாதுர்யத்தாலும் தைரியத்தாலும் குறுகிய காலத்திலேயே தன்னுடைய தொழிலில் முன்னேறுகிறார். ஒரு முறை காவல்துறையினரிடம் மாட்டிக் கொண்டு நீதிபதியை மிரட்டியும் பலனளிக்காமல் சிறிது காலம் சிறையில் இருந்த எரிச்சலில் அவருக்கு தோன்றுவதுதான் 'தன்னைப் போன்ற போதை வியாபாரிகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து ஒரு அமைப்பை ஏற்படுத்துவது (மெடேலின் கார்ட்டல்); அதன் மூலம் இந்த தொழிலை ஒழுங்குபடுத்துவது'; அரசியலில் இணைந்து தனக்கொரு பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்வது.

இதற்கு முன்னால் இதை யாரும் யோசிக்கவோ முயற்சிக்கவோ இல்லாமலிருந்ததால் எஸ்கோபர் போட்டுக் கொடுத்த தார் ரோட்டின் மேலே போதைப் பொருள் வியாபாரம் தள்ளாடாமல் சுகமாக பயணித்தது.

சினிமாப்படங்களின் தலைப்புகளின் கீழொரு tag line போடுவது போல எஸ்கோபரின் வியாபாரத்தின் தாரக மந்திரம் 'செய் அல்லது செத்துமடி'. தன்னுடைய போதைப் பொருள் விற்பனைக்கு உதவுகிற அத்தனை அரசு இயந்திர நட்டு போல்டுகளுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் தாராளமாக பணம் தரப்படும்; அதே சமயம் தடையாக நிற்கிற எதுவும் உடனே அப்புறப்படுத்தப்படும். பணத்திற்கு ஆசைப்பட்டு உதவியவர்கள் தவிர உயிருக்கு பயந்து உதவியவர்களும் அதிகம். உதவ மறுத்த அனைவருமே எஸ்கோபரின் ஆட்களால் கொல்லப்படுகின்றனர். எனவே எஸ்கோபரின் போதை வியாபாரம் flag கட்டிப் பறந்தது. 1989-ம் ஆண்டில் உலகின் ஏழாவது பெரிய பணக்காரர் என்று forbes பத்திரிகை எஸ்கோபர் குறித்து எழுதுமளவிற்கு பெரிய flag. இந்தப் பணம் அத்தனையையும் சுவிஸ் பேங்கில் போட்டு பதுக்காமல் தன்னுடைய பாதுகாப்பிற்காக தான் வாழும் மெடேலின் நகரின் அடித்தட்டு மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் பெரும்பான்மையை பூர்த்தி செய்ததில் ராபின் ஹ¥ட் இமேஜூம் கிடைத்தது. ஆனால்....

அந்தப் பயணம் இப்படியே சுகமாய் இருக்கவில்லை.

()

எஸ்கோபருக்கு போட்டியாய் தொடங்கப்பட்ட இன்னொரு அமைப்பான காலி கார்ட்டல், கெடுபிடிகளை தாங்க முடியாமல் கொலம்பிய அரசாங்கத்துக்கு எதிராக எஸ்கோபர் அறிவிக்கிற யுத்தம், சட்ட அமைச்சர் படுகொலை, விமான வெடிப்பு, M-19 என்கிற புரட்சிக்குழுவை உபயோகப்படுத்தி நாட்டின் தலைமை நீதிபதிகளை நீதிமன்றத்திலேயே சுட்டுக் கொன்ற பரபரப்பான சம்பவம், அமெரிக்கா தந்த அழுத்தத்தில் மிகவும் கடுப்படைந்த கொலம்பிய அரசாங்கம் கொலை வெறியுடன் தேடியவுடன் சரணடைவதாக சொல்கிற எஸ்கோபரின் நாடகம், பிறகு...

அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் நீங்கள் மேற்சொன்ன புத்தகத்தைப் படிப்பதின் மூலம் அதை சாத்தியப்படுத்திக் கொள்ளலாம்.

()

பா.ராகவன் எஸ்கோபரின் ஆரம்பத்தையும் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் மிகத் தெளிவாக படம் வரைந்து பாகங்களை குறித்திருக்கிறார். க்ரைம் நாவலின் தொடக்கம் போல ஒரு கடத்தல் சம்பவம், கொலம்பியாவின் வரலாறு குறித்த சுருக் அறிமுகம், கொகேய்னின் சுவை, எஸ்கோபரின் ஆரம்ப சாகசங்கள், மெடேலின் கார்ட்டல் உருவான விதம், அதன் அசுரத்தனமான வளர்ச்சி, அரசாங்கத்துடனான யுத்தம் என்று எஸ்கோபரைப் பற்றின ஒரு சித்திரத்தை மிகத் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது. ஆனால்..

"இல்ல மச்சான்.. இன்னா மேட்டர்னா"... என்கிற தொனியில் அவரது மொழி வாசகரது தோள் மீது கை போட்டுப் பேசுகிறது. ராணி, குமுதம் படிப்பவர்கள்தான் தன்னுடைய வாசகர்கள் என்பதை பா.ராகவன் முன்னதாக தீர்மானித்துக் கொண்டதைப் போல் எல்லாவற்றையும் மிகவும் எளிமைப்படுத்தி விடுகிறார். இது தவறில்லை என்றாலும் இந்த தொனி அதீதமாகிப் போகும் போது இந்தப் புத்தகம் "பொழுது போக்கு நாவல்' தரத்திற்கு இறங்கிப் போகிற சங்கடம் நேர்கிறது. 'சூப்பர் கில்லாடிய்யா இவன்' என்று எஸ்கோபரின் ஆளுமை மீது வாசகன் பிரமிப்பும் கிளர்ச்சியும் அடைவதோடு இந்தப் புத்தகம் முடிந்து விடுகிறதோ என்று தோன்றுகிறது. சுருங்கக் கூறின் இண்டர்நேஷனல் கொலம்பியா மைதாமாவில் லோக்கல் நாமக்கல் முட்டையை ஊற்றி அடித்து ஒரு காக்கெடயில் பரோட்டாவை தந்திருக்கிறார் ராகவன். உதாரணத்திற்கு சில (பாரா)க்களை பார்ப்போம்.

... எந்த கோயிந்து தன் சொந்தப் பெயரில் ரூம் எடுக்கும்? ஆகவே கொலம்பியப் பெயர்களில் யார் யார் அறை எடுத்திருக்கிறார்கள் என்று பார்த்தார்கள். ம்ஹ¥ம். ஒருத்தர் கூட இல்லை. எஸ்கோபர் படு ப்ரில்லியண்டாக ஈக்வடாரில் அதிகம் புழக்கத்திலுள்ள பெயர் ஒன்றையே அளித்திருந்தான். அவனது ஆள்களும் ஆவடி மருதன், தூத்துக்குடி சிவசுப்பிரமணியன், மாயவரம் முத்துக்குமார், சத்தியமங்கலம் நவநீத கிருஷ்ணன், அம்பத்தூர் சுஜாதா முத்துராமன் என்று எ·ப்.எம். ரேடியாக்களுக்கு நேயர் விருப்பம் கேட்கிறவர்கள் மாதிரியே பெயரளித்தார்கள்... (பக்கம் 40)

.. அது ஒரு ரகசிய ஆலோசனைகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படும் இடம். வெளியே இருந்து பார்த்தால் தரைக்கடியில் அப்படியொரு ரகசியப் பதுங்குதளம் இருப்பதே தெரியாது. மேலுக்கு ஒரு வேலு மிலிட்டரி ஹோட்டல். அந்த ஹோட்டலும் எஸ்கோபரின் அடியாள் ஒருவனுடையதுதான். அவன் தன்னுடைய சகலபாடியை கல்லாவில் உட்கார வைத்துவிட்டு வாசலில் காவலுக்கு நின்றபடி எப்போதும் முட்டை பரோட்டா தட்டிப் போட்டுக் கொண்டிருப்பான். .. (பக்கம் 101).

என்றாலும் ராகவனின் இந்த மொழிக்குப் பழகி விட்டால் மிகச்சுலபமாக புத்தகத்திற்குள் இறங்கி விட முடிகிறது. சுமார் இரண்டு மணி நேரத்தில் இந்த 220 பக்க நாவலை.. மன்னிக்கவும் புத்தகத்தை படித்து முடித்து விட முடிந்தது. ராகவனின் பிரத்யேகமான நகைச்சுவை கலந்த மொழி நம்மை பல இடங்களில் புன்னகைக்கவும் வாய்விட்டுச் சிரிக்கவும் வைக்கிறது. எஸ்கோபர் அரசாங்கத்தின் முன் வைக்கும் ஒப்பந்தத்திற்கு அரசாங்கம் பதில் சொல்வதாக சித்தரிக்கப்பட்டிருப்பதை 'ராகவன்' மொழியில் கவனியுங்கள்.

.. அன்புடையீர் வணக்கம், வந்தனம். சுஸ்வாகதம். நீங்கள் என்ன சொன்னாலும் கேட்கிறோம். இன்னும் பத்து நிபந்தனைகளைப் பின் இணைப்பாக அனுப்ப மறந்திருப்பீர்களானால் அதையும் காலக்ரமத்தில் அனுப்பி வையுங்கள். சேர்த்துக் கேட்கிறோம். ஆனால் கைதாகச் சம்மதம் என்று ஒரு வார்த்தை சொல்லி வயிற்றில் பீர் வார்த்தீர்களே, அது! அந்த அந்த சொல்லுக்காக உங்களுக்குக் கோயிலே கட்டுகிறோம் என்று விழுந்து சேவித்தார்கள்... (பக்கம் 174).

'போய் விட்டான்! (பக்கம் 55)' என்கிற இரண்டு வார்த்தைகளுக்கு முன்னால் இருக்கிற ஒரு அதிரடியான பத்தியை நிச்சயம் நீங்கள் படிக்க வேண்டும்.

()

பொதுவாக உலக வரலாற்றையும், சரித்திரத்தின் முக்கியமான முந்தைய, சமகால நிகழ்வுகளையும் பிற நாட்டுக் கலாசாரங்களையும், உணவுகளையும் அறிந்து கொள்ளும் ஆர்வமும் நேரமும் நம்மில் பெரும்பான்மையவர்க்கு இல்லை. பல பேருக்கு தினத்தந்தியில் ஆரம்பிக்கும் நாளின் தொடக்கம் இரவில் 'அரசி' தொலைக்காட்சி சீரியலோடு முடிந்து போய்விடுகிறது.

.. என்செபொலேடோ என்று ஒருவித கடல் பாசியையும் நாலைந்து ரக மீன்களையும் பட்டாணியையும் சேர்த்துப் போட்டு அண்டாவில் சூப் காய்ச்சி நாளெல்லாம் குடிப்பார்கள். ·ப்ரிட்டாடா என்று ஒரு பதார்த்தம் அங்கே இன்னும் ·பேமஸ். வெண்பன்றிக் கறியுடன் புதினாவைச் சேர்த்து அரைத்து சப்பாத்தி மாவு மாதிரி பதத்துக்குக் கொண்டுவந்து, இரண்டு பன்களுக்கு நடுவே வைத்து மூடி மைக்ரோவேவ் அவனில் கொஞ்சம் போல் வேகவைத்து எடுத்து தேனில் தோய்த்துச் சாப்பிடுவார்கள்.

இங்கே இதெல்லாம் என்னத்துக்கு என்று அந்தராத்மா கேள்வி கேட்டால் அடக்கி வைக்கவும். வேறு எந்த ஜென்மத்தில் நாம் ஈக்வடாரையெல்லாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்? .. (பக்கம் 38)

என்று நூலாசிரியரே இதை ஓரிடத்தில் கிண்டலடிக்கிறார்.

பல திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் எஸ்கோபரின் ஆளுமை ஒரு கதாபாத்திரமாக குறுக்காக நடந்திருக்கிறது. எஸ்போரைப் பற்றின பிரத்யேக முழுத்திரைப்படம் ஒன்று தயாரிப்பில் இருப்பதாக சொல்லப்படுகிறது. எஸ்கோபரைப் பற்றின பல நூற்கள், வீடியோக்கள் உள்ளன. Mark Bowden-ன் Killing Pablo என்கிற நூல் எஸ்கோபர் கொல்லப்பட்டதை பிரதானமாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது.
()
..காலி கார்ட்டலின் போதைப் பணத்தை வெளுக்கும் விதம் குறித்த சார்ட் ஒன்று இந்தப் பக்கங்களில் தரப்பட்டிருக்கிறது. பொழுது போகாத நேரத்தில் பூதக் கண்ணாடி வைத்து கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணிப் பாருங்கள். கண்டிப்பாக ராத்திரி தூக்கம் வராது! (பக்கம் 85).

வருங்காலத்தில் ஒருவேளை உதவுமோ என்று இந்த சார்ட்டை முழுப் புத்தகத்திலும் நான் தேடிப் பார்த்தேன். காணோம். வாசகர்கள் ராத்திரிகளில் நிம்மதியாக தூங்க வேண்டும் என்கிற பதிப்பகத்தினரின் நல்லெண்ணத்தைப் பாராட்டுகிறேன்.

'கொலம்பியாவில் போதை அடிமைகள் கிடையாது' என்று ஒரிடத்தில் எழுதப்பட்டிருக்கிறது. பெரும்பாலான கொகேய்ன் அமெரிக்காவிற்குள் கடத்தப்பட்டாலும் போதைப் பொருள் தயாரிப்பின் தாயகத்திலேயே அதற்கு வாடிக்கையாளர்கள் கிடையாது என்பது முரணாக இருக்கிறது. இந்த நூல் எந்த பத்திரிகையிலாவது தொடராக வந்ததா என்பதைப் பற்றின குறிப்பும் புத்தகத்தில் இல்லை. ஒவ்வொரு அத்தியாயமும் ஆர்வமூட்டும் பரபரப்புடன் முடிவதை வைத்து யூகித்துத்தான் இந்தக் கேள்வி எழுகிறது.

()

இந்த நூல் ஜனரஞ்சகமான முறையில் எழுதப்பட்டிருந்தாலும் கொலம்பியாவைப் பற்றியும் அங்குள்ள போதை உலகத்தைப் பற்றியும் ஒரு சுவாரசியமான அறிமுகத்தை தந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் அதன் கலாசாரம் பற்றி மேலும் அறிய ஆர்வம் கொள்கிற வாசகனுக்கு இந்நூல் நிச்சயம் ஒர் ஆரம்பப் புள்ளியாக இருக்கும்.

என் பெயர் எஸ்கோபர் (பா.ராகவன்)
224 பக்கங்கள், விலை ரூ.90/-
கிழக்கு பதிப்பகம், சென்னை-18.
ISBN 978-81-8368-579-5
கிழக்கு பதிப்பகத்தின் சம்பந்தப்பட்ட சுட்டி

suresh kannan