Saturday, February 24, 2007

சாருநிவேதிதா, நாளை, traffic signal

சாருவின் பாசாங்கற்ற வெளிப்படையான எழுத்துக்களை விரும்பிப் படிப்பவன் நான். அவருடைய முதல் "நாவலான எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ·பேன்சி பனியனும்" படித்த போது நாவலின் மரபை அநாயசமாக தாண்டிச் சென்றதோடு மற்றவர்கள் "தப்பு தப்பு" என்று கன்னத்தில் போட்டுக் கொள்கிற விஷயங்களை அங்கதத்துடன் பதிவு செய்திருந்ததால் மிகவும் பிடித்திருந்தது.
அவர் தொடர்ந்து எழுதிவரும் கோணல் பக்கங்களின் சமீபத்திய பதிவை பார்த்த போது சற்றே விநோதமாக இருந்தது. அவர், உயிர்மையில் பாகவதைரைப் பற்றியும் சின்னப்பாவைப் பற்றியும் எழுதி வரும் போதே எனக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது, பிலிம் நியூஸ் ஆனந்தனுடன் போட்டி போட முயல்கிறாரா என்று. ஏனெனில் இந்த மாதிரி கட்டுரைகளை எழுத நிறைய பேர் இருக்கிறார்கள். பிரத்யேகமான அயல்மொழி எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி (ப.சிங்காரம் என்கிற அற்புதமாக எழுத்தாளரை சாருவின் மூலமாகத்தான் கண்டு கொண்டேன்) அவர் எழுதியிருந்த கட்டுரைகளை தொடர்ந்து படித்திருந்தவன் என்கிற முறையில் இந்த சினிமாக் கட்டுரைகள் எனக்கு சாதாரணமாகவே பட்டது.

இப்போது சமீபத்திய கட்டுரைக்கு வருவோம். பாபாவின் படத்திலிருந்து விபூதி கொட்டுவதாகவும், பாபாவை காணச் சென்ற நண்பருக்கு தங்கச் சங்கிலி கிடைத்ததாகவும், இன்னும் பல பாபா... மகிமைகளை எழுதியிருந்தார். தங்கச் சங்கிலி வாங்க வேண்டுமென்றால் ஜி.ஆர்.டி.தங்கமாளிகைக்கு போனால் போதுமே, எதற்கு நள்ளிரவிலிருந்து கால் கடுக்க சிறுநீர் கூட கழிக்காமல் காத்திருக்க வேண்டுமென்று எனக்குப் புரியவில்லை. (ஜி.ஆர்.டியில் நகைக்கு காசு கேட்பார்களே, அதனால் இருக்குமோ?)
பொதுவாகவே தீவிரமாக நாத்திகம் பேசுபவர்கள், நாடி தளர்ந்த காலத்தில் ஆத்திகத்தின் பக்கம் சாய்ந்து விடுவதை காண முடிகிறது. சாருவும் அந்த திசையை நோக்கி போகிறாரோ என்னமோ? கடவுள் இருக்கிறாரா இல்லையா என்கிற கேள்விக்கு "இருக்கட்டும்" என்று யாரோ சொன்னார்கள். நானும் அந்தக் கட்சிதான்.

()

விஜய் டி.வியில் 25.02.07 (ஞாயிறு) காலை 11.00 மணிக்கு (இந்திய நேரப்படி) "நாளை" என்றொரு படம் திரையிடுகிறார்கள். இதுவரை பா¡க்கதாவர்கள், மனைவிக்கு சப்பாத்தி பிசைந்து கொடுத்து, துணிதுவைத்து, வீடு மெழுகி இன்னும் நேரம் மிச்சமிருக்கிற கனவான்கள் இந்தப் படத்தை முயற்சிக்கலாம். புதுமுக இயக்குநர் என்று அலட்சியமாக பார்த்த போது படத்தின் "டிரீட்மெண்ட்" என்னை கவர்ந்தது. இதில் நட்ராஜ் என்கிற ஆரம்ப கால ரஜினிகாந்த்தை நினைவுப்படுத்துகிற நடிகர், திறமையாக நடித்திருக்கிறார். பிறகு ஏன் காணாமற் போனார் என்று தெரியவில்லை.

நாளை, "நாளை" பாருங்கள்.

இந்தப் படத்தைப் பற்றிய பிரகாஷின் பழைய பதிவு.

()

மதூர் பண்டார்க்கரின் படங்கள் சில பார்த்திருக்கிறேன். சாந்தினிபார், page3, (கார்ப்பரேட் இன்னும் பார்க்கவில்லை) என்று எல்லாப் படங்களுமே ஜகஜ்ஜோதியான இந்தி சினிமாக்களிலிருந்து விலகி மாற்று முயற்சிகளில் இறங்கியிருப்பது போல் படும். இவரின் சமீபத்திய படமான Traffif Signal-ஐ இந்தி தெரியாததாலும் நேரம் கிடைக்காததாலும் பார்க்க முயற்சிக்கவில்லை. பார்த்தவர்கள் எப்படியிருக்கிறது என்று பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

Wednesday, February 21, 2007

சமீபத்தில் படித்த சில புத்தகங்கள்

காலச்சுமை - ராஜ்கெளதன்
தமிழனி பதிப்பகம், 332 பக்கங்கள், ரூ.120.

நவீன தமிழ் இலக்கியத்தில் சில முக்கியமான விமர்சன நூல்களை எழுதியிருக்கும் ராஜ்கெளதமனின் புனைவு இது. தன் சுய சரிதத்தையே புனைவாக மாற்றி பதிந்திருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. என்றாலும் புனைவுக்குரிய சுவாரசியம் குன்றாமல் அமைத்திருப்பது நன்று.
சிலுவைராஜூக்கு பாண்டிச்சேரி கல்லூரியில் உதவி பேராசிரியராக பணி நியமன உத்தரவு வருவதிலிருந்து இந்த நாவல் துவங்குகிறது.

பாண்டிச்சேரியின் சூழல், சிலுவைராஜின் திருமணம், உறவுகளுடன் அவனுக்கான மோதல்கள், பறையர் சாதி என்பதால் எதிர்கொள்ள நேரும் சமூக முரண்கள், கல்லூரி மாணவ அனுபவங்கள், வாடகை வீட்டுப் பிரச்சினைகள், இடமாற்றங்கள், குடிப்பழக்கம், இலக்கியம் மற்றும் நண்பர்கள், முனைவர் பட்டத்திற்காக அ.மாதவையா படைப்புகளின் மீதான ஆய்வு, வாழ்க்கையை எதிர்கொள்ள நேருகின்ற ஆயாசங்களில் நினைவு கூர்கிற தத்துவங்கள் என்று கலந்து கட்டி இந்த புனைவு அமைகிறது. பெரும்பாலும் பேச்சுத்தமிழிலேயும் அவ்வப்போது உரைநடையிலேயும் அமைந்திருக்கிறபடியால் வாசகனோடு நெருக்கமாக உறவாடுகிறது இந்த நாவல்.

"சிலுவைராஜ் சரித்திரம்" என்று முன்னமே வெளியாகியிருக்கிற புதினம், கல்லூரி வாழ்க்கையின் முன்பிருந்த பகுதிகளை சொல்கிறது என்று யூகிக்கிறேன். இந்த நாவலை படித்தவுடன் முதல் பகுதியை படிக்கிற ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

()

ஆல்·பா - டி.டி. ராமகிருஷ்ணன் (தமிழில் குறிஞ்சி வேலன்)
கிழக்கு பதிப்பகம், 136 பக்கங்கள், ரூ.50.

சாருநிவேதிதாவின் எழுத்துக்களை மலையாளத்தில் மொழி பெயர்த்து வழங்கிக் கொண்டிருக்கும் ராமகிருஷ்ணனின் மலையாள நாவல் குறிஞ்சிவேலனால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.
நாகரிகத்தின் உச்சியை அடைந்து விட்டதாக கூறிக் கொள்ளும் மனித இனம், மீண்டும் தன் வாழ்க்கையிலிருந்து பூஜ்யத்திலிருந்து, அதாவது கற்கால மனிதனாக, காட்டுவாசியாக ஆரம்பித்தால் எப்படியிருக்கும்? இப்படியான ஒரு கேள்வி மனிதவியல் ஆய்வாளரான உபலேந்து சட்டர்ஜிக்கு ஏற்பட, மிகுந்த திட்டமிடலுடன் ஒரு குழுவை ஏற்படுத்தி மனித வாடையே இல்லாத ஒரு தீவிற்கு செல்கிறார். தான் வந்த படகு உள்பட அனைத்துப் பொருட்களையும் அழித்து விட்டு நிர்வாணமாக காட்டுக்குள் நுழைகிறது அந்தக் குழு. உபலேந்துவின் திட்டப்படி, சரியாக 25 வருடங்கள் கழித்து ஒரு ஆராய்ச்சி மாணவர் அந்தக் காட்டை அணுகி, அவர்களிடம் எவ்வாறான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்று ஆராய்வதற்கான முன்னேற்பாட்டையும் செய்து வைத்திருக்கிறார்.

1973 ஜனவரி ஒன்றில் ஆரம்பிக்கும் அத்தியாயம் சடாரென 25 வருடங்கள் தாவி நகர்கிறது. அவிநாஷ் என்பவர் இந்த திட்டத்தின் காரணகர்த்தாவான பானர்ஜியின் உத்தரவுப்படி அந்தத் தீவு மனிதர்களிடம் ஏற்பட்டிருக்கிற பரிணாம வளர்ச்சி குறித்து அறிவதற்காக புறப்படுகிறார்.

இவ்வாறு மிகச் சுவாரசியமான - ஒரு ஆங்கிலப்படத்திற்கு நிகரான - கதையுடன் துவங்குகிற படைப்பு, நாவலமைப்பு காரணமாக வாசிப்பதற்கு சோர்வை ஏற்படுத்துகிறது. பேராசிரியர் உபலேந்து சட்டர்ஜி உட்பட 13 பேர்கள் (அதில் 5 பெண்கள்) என்னவானார்கள் என்பதை நாவல் முன்னும் பின்னுமாக பல தர்க்கங்களுடனும் விவாதங்களுடன் நகர்கிறது. நகரத்திற்கு திரும்பி வருகிற மூன்று பேர் தங்கள் அனுபவங்களை விளக்கி விட்டு, பூமியின் நாராசங்களை ஏற்றுக் கொள்ள முடியாமல் திரும்பிச் செல்கின்றனர். ஒரு சுவாரசியமான ஆரம்பத்தை ஏற்படுத்தியிருக்கிற ஆசிரியர், இன்னும் கற்பனையை விரிவுபடுத்தி அந்த 13 பேருடனேயே நாவல் பயணிப்பதாக அமைத்திருந்தால் வாசிப்பனுபவத்திற்கு ஏற்புடையதாகயிருக்கும் என நம்புகிறேன்.

Tuesday, February 20, 2007

எச்சரிக்கை: விளம்பரம்

நண்பர்களுக்கு,

நீண்ட நாட்களாக எண்ணியிருந்ததை சோம்பல் முறிப்புடன் இப்போதுதான் நிறைவேற்றியிருக்கிறேன். தொட்ர்ச்சியை இங்கே பாருங்கள்.

http://pakirdal.blogspot.com/2007/02/blog-post.html

புதிய பார்வை - சினிமா சிறப்பிதழ்


புதிய பார்வை என்றொரு இடைநிலை இதழ் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? புத்தகக் கடைகளில் சினிக்கூத்து, நக்கீரன், ஜீனியர் விகடன் போன்ற குப்பைகளில் மார்பை செயற்கையாக நிமிர்த்திக் காட்டிக் கொண்டிருக்கும் நடிகைகளின் புகைப்படங்களின் மத்தியில் உற்றுப் பார்த்தீர்களேயானால் (வரிகளின் இடையில் படிக்காமலிருக்க வேண்டுகிறேன்) இந்த புத்தகம் உங்களுக்கு தெரியக்கூடும். பாவை சந்திரனை ஆசிரியராகக் கொண்டு வந்துக் கொண்டிருந்த பத்திரிகை நடுவில் நின்று போய் மீண்டும் வெளிவர ஆரம்பித்து இரு வருடங்களிருக்கும். இப்போதைய இணைஆசிரியர் மணா. (இவர் குமுதம் தீராநதியில் ஆசிரியராக இருந்தவர்) ஆசிரியரைப் பற்றி கேட்காதீர்கள்.
Photobucket - Video and Image Hosting

"இப்போது அதுக்கு என்ன?" என்பவர்களுக்கு: பிப்ரவரி 16-28 2007 இதழை தவற விடாதீர்கள். ஏனெனில் இது பல சுவாரசியமான அபூர்வமான கட்டுரைகளுடன் சினிமா சிறப்பிதழாக மலர்ந்திருக்கிறது. .
* பெரியார் படம் இயக்கிய ஞானராஜசேகரனின் நேர்காணல் சுவையாக இருக்கிறது.

* "தமிழ் சினிமாவில் அரசியல்" என்று ஒரு கட்டுரையில் நிழல் "ப.திருநாவுக்கரசு" அபூர்வமான தகவல்களை தந்திருக்கிறார்.

* "சப்தங்களின் வழியே நிகழும் வன்முறை" என்கிற கட்டுரை, இன்றைய தமிழ்ச் சினிமாக்களின் ஒலி என்கிற கூறு பார்வையாளனை எவ்வாறு உளவியல் ரீதியாக பாதிக்கிறது என்பதை ஆழமாக ஆய்கிறது. இதை எழுதியவர் செழியன் (ஆனந்த விகடனில் உலக சினிமா பற்றி தொடர் எழுதுகிறவர்)

* "இன்றைய மலையாள சினிமா ஒர் அவசரக் காட்சி" - இந்த கட்டுரையை எழுதியவர் என்னுடைய ஆதர்ச கட்டுரையாளர்களில் ஒருவரான சுகுமாரன்.

இன்னும் சில கட்டுரைகளும், கால பைரவனின் சிறுகதையும் தவிர, காவிரி நதி நீர் பங்கீட்டு பிரச்சினை குறித்து ஆதியோடு அந்தமாக ஆராயும் ஒரு கட்டுரையும் வாசிக்க உகந்தது.

நண்பர்களுக்கு வணக்கம்.

நான் சுரேஷ் கண்ணன். ஏற்கெனவே "பிச்சைப் பாத்திரம்" என்றொரு வலைப்பதிவில் எழுதி வருவது உங்களில் யாருக்காவது தெரிந்திருக்கலாம். இன்னொரு பதிவை ஆரம்பிக்க வேண்டுமென்கிற நீண்ட நாள் எண்ணத்தை இப்போதுதான் நிறைவேற்றி இருக்கிறேன். ஆரம்பித்த பதிவிலேயே இன்னும் ஒழுங்காக எதையும் எழுதிக் கிழித்து விட வில்லையே என்கிற சிலரின் முணுமுணுப்பு பலமாகவே என்னுள் கேட்கிறது. ஏனெனில் இது எனக்குள்ளும் எழுந்த கேள்விதான்.

நூல்கள் பற்றிய சிறு அறிமுகம், திரைப்பட மற்றும் இலக்கிய விழாக்கள் பற்றிய அறிவிப்பு, சில சுவாரசியமான செய்திகள், தொலைக்காட்சி நிகழச்சிகள் என்று என்னை கடந்து செல்கிற அனைத்தையும் பற்றி எழுத வேண்டுமென்று நினைத்து இத்தனை சிறிய பத்திக்கு ஒரு பதிவு அவசியமா என்று நினைத்து பல பதிவுகளை எழுதமாலேயே விட்டிருக்கிறேன். எனவே அவ்வாறான சிறிய பதிவுகளுக்கென்று ஒரு வலைப்பதிவு அவசியம் என்று எப்பவோ தோன்றியது இப்போதுதான் சாத்திமாயிற்று. சிறுநீர் கழித்து முடித்து விடும் நேரத்தில் ஒரு வலைப்பதிவை சொந்தமாக்கிக் கொள்ள முடியும்தான் என்றாலும் இது நீண்ட அவகாசம்தான் என்று எனக்கே தெரிகிறது.

உங்களிடம் நான் பகிர்ந்து கொள்ள நினைப்பதையெல்லாம் இங்கே காண முடியும். அவற்றை வரவேற்பதும் நிராகரிப்பதும் இனி உங்கள் கையில்.

Wednesday, February 14, 2007

Jana Aranya (1976) The Middle Man

இந்திய சினிமா சர்வதேச திசையை நோக்கி பயணமளித்த ஆரம்பக்கட்டங்களை செழுமையாக்கதில் சத்யஜித்ரேவின் பங்கு பிரதானமானது. அவர் இயக்கிய ஜன ஆரண்யா என்கிற படத்தை சமீபத்தில் பார்க்க வாய்த்தது. மணி சங்கர் முகர்ஜி என்பவர் எழுதிய நாவலை (அதே தலைப்புதான்) - ரேவின் பெரும்பான்மையான படங்கள் சிறுகதைகளையும் நாவல்களையும் அடிப்படையாகக் கொண்டது. - கொண்டு இயக்கப்பட்ட படமிது.

இந்தியக் கல்வி நிறுவனங்கள் தனது அபத்தமான கல்வித்திட்டங்கள் மூலம் தனது பிரஜைகளை ஆட்டு மந்தைகளாக்கி வீசும் போது, அது வரை வசந்த காலங்களில் வாழ்ந்திருந்த அவர்கள், யதார்த்த வாழ்வின் குரூரத்தை நேராக சந்திக்கும் போது ஏற்படும் அதிர்ச்சியை இந்தப்படம் சொல்லுகிறது. படிப்பை முடித்து விட்டு எந்தவிதமான பின்புலனும் இல்லாமல் சொந்த வியாபாரத்தில் இறங்கும் எவரும் இந்தப் படத்தை மிக நெருக்கமாக உணர்வார்கள்.

சோம்நாத் (பிரதீப் முகர்ஜி) திறமையான மாணவன். இருந்தும் முதல் வகுப்பை அடைய முடியாமல் தேர்வாகிறான். பல இடங்களில் முயற்சித்தும் வேலை கிடைக்கவில்லை. இவனின் தந்தை (சத்யா பானர்ஜி) புராதன மனநிலையைக் கொண்டவர். லஞ்சம், ஊழல் போன்றவைளை கேட்ட மாத்திரத்திலேயே அதிர்ச்சி அடைகிற நேர்மையாளர். காதலி திருமணப் பத்திரிகையோடு வரும் போது இன்னும் சோர்ந்து போகிறான். இவனின் நண்பன் வறுமையான குடும்பத்தைச் சேர்நத சுகுமார் என்பவனும் வேலை இல்லாமல் சிரமப்படுகிறான். தனது இரண்டு சகோதரிகளை வீட்டிற்கு வரும் சோம்நாத்திற்கு அறிமுகப்படுத்துகிறான்.

இந்நிலையில் சோம்நாத்திற்கு இடைநிலை ஊழியம் செய்யும் ஒருவரின் (உத்பல் தத்) அறிமுகம் கிடைக்கிறது. Demand-ம் Supply-ம் எங்கிருக்கிறது என்பதை புலனறிந்து தேவைப்படுகிறவர்களுக்கு மாற்றிக் கொடுத்து இடையில் சம்பாதிக்கும் வேலை. பச்சையாகச் சொன்னால் Broker. ஆரம்பத்தில் கிடைக்கும் சிறுசிறு தொகைகள் அவனை உற்சாகப்படுத்துகிறது. மிகப்பெரிய ஆர்டர் ஒன்று கிடைக்கும் போலிருந்து கிடைக்காமல் ஏதோவொரு காரணத்தினால் தடைபடுவது அவனுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. யதேச்சையாக அறிமுகமாகும் மிட்டர் என்கிற பழம் தின்று கொட்டை போட்ட சீனியர் (ரபி கோஷ்) அவனுக்கு ஆர்டர் கிடைப்பதை சாத்தியமாக்குகிறதில் உள்ள பின்னணிகளை விளக்குகிறார். வாடிக்கையாளனின் தனிமனித பலவீனங்களை கண்டுகொண்டு அதன் மூலம் வெற்றி அடைகிற வழியை காண்பித்து கொடுக்கிறார் அவர்.

இந்த வகையில் இவனுக்கு வரக்கூடிய பெரிய ஆர்டரை தருபவருக்கு பெண்கள் விஷயத்தில் நிறைய சபலம் இருப்பதை உணர்ந்து வைத்திருக்கிறார். ஒரு பெண் பாலியல் தொழிலாளியை (formerly known as prostitute) ஏற்பாடு செய்து கொடுப்பதின் மூலம் அந்த ஆர்டரை கைப்பற்ற முடியும் என்பதை சோம்நாத்திற்கு உணர்த்தி அதற்கான ஏற்பாடுகளில் இறங்குகிறார். மிகவும் கட்டுப்பாடான குடும்ப பின்னணியிலிருந்து வந்திருக்கும் சோம்நாத்திற்கு இது மிகுந்த தயக்கத்தையும் குற்ற உணர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. இந்த தயக்கங்களை உடைத்தெறியும் மிட்டல், வாடிக்கையாளனிடம் நேரத்தை குறித்துக் கொண்டு பாலியல் தொழிலாளியை ஏற்பாடு செய்ய ஆரம்பிக்கிறார். முதலில் அணுகப்படும் ஒரு குடும்பத்தலைவி alias பாலியல் தொழிலாளி சம்மதிக்கும் நேரத்தில் அவளின் குடிகார கணவன் வந்து துரத்தி விடுகிறான். இன்னொரு இடத்தில் ஓட்டலுக்கெல்லாம் வர சாத்தியப்படாது என்று மறுத்துவிடுகிறார்கள். மிகுந்த தர்மசங்கடத்தோடு சோம்நாத் மிட்டலோடு சுற்றிக் கொண்டிருக்கிறான். இன்னொரு சீப்பான இடத்தில் பிம்ப் ஒருத்தன் அழகான இளம் பெண் ஒருத்தியை ஏற்பாடு செய்வதாக உறுதியளிக்கிறான்.

அவளைப் பார்க்கும் சோம்நாத் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகிறான். அவள் கல்லூரி நண்பன் சுகுமாரனின் தங்கை. பணம் கொடுத்து திரும்பிப் போகச் சொல்லும் சோம்நாத்தை மறுக்கிறாள் அவள். வேறுவழியின்றி தன்னுடைய வாடிக்கையாளனிடம் விட்டுவிட்டு வருகிறான். "காண்டிராக்ட் கிடைத்துவிட்டது அப்பா" என்று குற்ற உணர்ச்சியுடன் சொல்லிவிட்டு வீட்டிற்கு வரும் மகனைப் பற்றி - அதன் பின்புலம் தெரியாமல் - சந்தோஷப் பெருமூச்சு விடுகிறார் அப்பா.

()

பிடித்த சில பாத்திரங்கள், காட்சியமைப்புகள்:

புத்தகங்களை, கிழிக்கப்பட்ட தாள்களை வைத்துக் கொண்டு ஜாலியாக தேர்வெழுதும் மாணவர்களோடு படம் துவங்குகிறது. இவர்களுக்கு மத்தியில் நேர்மையாக எழுதிக் கொண்டிருக்கும் சோம்நாத் அப்பாவியாக தோற்றமளிக்கிறான். சோம்நாத் இண்டர்வியூ செய்யப்படும் காட்சிகள் திறமையான எடிட்டிங் மூலம் பிரகாசிக்கிறது. What, When, Where போன்று தொடங்கும் கேள்விகள் கேட்பவர்களின் முகங்கள் வேறு வேறு முகங்களில் சடார் சடாரென்று மாறி, திகைப்பை ஏற்படுத்துகிறது.

நண்பன் சுகுமாரின் வீட்டிற்கு செல்லும் போது அவனுடன் பேசிக் கொண்டே வெளியே வர, சுகுமார் திடீரென்று வீட்டிற்குள் ஓடி தங்கையை திட்டுகிறான். அவள் உடை மாற்றுவதை ஜன்னல் வழியே சில இளைஞர்கள் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சோம்நாத் போஸ்டல் ஆர்டர் ஒட்டி விண்ணப்பிக்கும் கடிதம் தபால் பெட்டியில் போடப்படுவதில் தொடங்கி, போஸ்ட்மேன் வழியாக சா¡ட்டிங் அலுவலகத்திற்கு சென்று லட்சக்கணக்கான விண்ணப்பங்களோடு நிறையும் காட்சி திறமையாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

Mr.மிட்டல்-ஆக வரும் ரபி கோஷ்-ன் நடிப்பு இந்தப்படத்தின் மிகப்பெரிய பலம் என்பேன். ஒரு தந்திரமான, எந்த குறுக்குவழியையும் கையாளும் ஒருவனின் சித்திரத்தை மனிதர் மிகத் திறமையாக நம் முன் நிறுத்துகிறார். சம்பந்தப்பட்ட வருடத்தின் சிறந்த நடிகர் விருதை எனக்கு தரும் அதிகாரம் ஒருவேளை எனக்கு வழங்கப்பட்டிருந்தால், இவருக்குத்தான் அதை தயக்கமின்றி தருவேன். அப்படி ஒரு அபார நடிப்பு. ஒரு வாடிக்கையாளனை பின்தொடர்ந்து சாமியார் அருளுரை கூட்டத்திற்கு சோம்நாத்தை அழைத்துச் செல்லும் மிட்டல் ஒரு பணக்காரனை காட்டி கூறுகிறார். "இன்னும் சற்று நேரத்தில் பார், கண்ணீரை துடைத்துக் கொள்வான்".

ரேவின் சிறந்த படங்களில் ஒன்றான இது, 1975-க்கான சிறந்த பட மற்றும் இயக்குநர் விருதை பெற்றிருக்கிறது.