Wednesday, August 03, 2005

சினிமாவுக்குப் போன எழுத்தாளர்கள்....

தலைப்பை படித்தவுடன் ஜெயமோகனும் எஸ்.ராமகிருஷ்ணனும் ஒருத்தர் தோள் மேல் ஒருத்தர் கை போட்டுக் கொண்டு காலை 11.30 மணி காட்சிக்கு 'கிச்சா வயது 16' என்கிற படத்திற்கு செல்வதாக கற்பனை செய்து பார்க்க வேண்டாம். பல பத்து வருடங்களை கடந்து வந்திருக்கிற தமிழ் சினிமா, நம் தமிழ் எழுத்தாளர்களை எவ்வாறு பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என்று வெட்டியாக யோசித்துக் கொண்டிருக்கும் போது, மேற்குறிப்பிட்ட இரண்டு எழுத்தாளர்களும் தற்போது தமிழ் சினிமாப் படங்களில் கதை-வசனகர்த்தாக்களாக பணியாற்றிக் கொண்டிருக்கும் செய்தியை படித்த நினைவு வந்தது. இதில் எஸ்.ராமகிருஷ்ணனை தொடர்ந்து படித்திருப்பவர்களுக்கு, அவர் ஏற்கெனவே பணியாற்றின படமான 'பாபா'வில் எந்த இடத்தில் வசனம் எழுதியிருக்கிறார் என்று குழப்பமாக இருக்கும். 'பாபா கவுண்ட்டிங் ஸ்டார்ட் ....' என்றெல்லாம் எஸ்.ரா வசனம் எழுதியிருப்பார் என்று நான் நம்பத்தயாராக இல்லை, அவர் எழுதிய கட்டுரை ஒன்றில் வார்த்தைக்கு வார்த்தை 'ரஜினி சார்' என்று குறிப்பிட்டிருந்திருந்தாலும் கூட.

இன்னும் வேறெந்த எழுத்தாளர்களெல்லாம் தமிழ்ச் சினிமாவில் குப்பை கொட்டியிருக்கிறார்கள்.... மன்னிக்கவும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று (ஏற்கெனவே அது குப்பையாய்த்தான் இருக்கிறது) யோசித்திருக்கும் வேளையில் 'அம்பலம்' இணைய ஆண்டு மலரில் இரா.முருகன் எழுதியிருந்த, அபூர்வமான விவரங்களடங்கிய ஹாஸ்யம் பொங்கும் கட்டுரை ஒன்றை படிக்க நேர்ந்தது. சுவாரசியம் கருதி அந்தக் கட்டுரையை இங்கே தட்டச்சி போட்டிருக்கிறேன். (நன்றி: அம்பலம் மற்றும் இரா.முருகன்). இந்தக் கட்டுரைக்கு பின்னால் என்னளவில் நினைவுக்கு வருகிற சினிமாவில் தொடர்பு கொண்ட எழுத்தாளர்களைப் பற்றிக் குறிப்பிட்டு இருக்கிறேன்.

***************
சினிமாவுக்குப் போன எழுத்தாளர்கள்.... - இரா.முருகன்

ஒரு சினிமாப் பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்த போது டைரக்டர் கோல்டி ஆனந்தின் பேட்டி கண்ணில் பட்டது. இந்தோ ஆங்கில எழுத்தாளர் ஆர்.கே.நாராயணின் 'தி கைடு' நாவலைப் படமாக டைரக்ட் செய்த அனுபவத்தைச் சொல்லும் போது மனுஷர் படு காஷீவலாகக் குறிப்பிடுகிறார்.... "நாவல்ல கதையம்சம் குறைவு. நான் ரொம்பக் கஷ்டப்பட்டுப் படத்தில் ஈடுகட்டினேன்.."

சிறந்த கதாசிரியரான ஆர்.கே.நாராயணனுக்கே கதை சொல்லத் தெரியவில்லை என்கிற பாலிவுட்டில் குப்பை கொட்ட கே.ஏ.அப்பாஸ் போன்ற முற்போக்கு எழுத்தாளர்களும் 'பாபி' திரைக்கதை எழுதிப் பாபத்திலும் பணத்திலும் பங்குபெற்றது உலகம் அறிந்த சங்கதி.

எழுத்தாளர்களுக்கும் சினிமாவுக்கும் பெரும்பாலும் ஏழாம் பொருத்தம்தான். அதுவும் தமிழில் எழுத்தும் திரையும் ஒரே நேர்கோட்டில் வருவது அபூர்வம்.
தி.ஜானகிராமன் எழுதிய 'கரும்பு' திரைக்கதை நிலையிலேயே நின்று போனதாகத் தெரிகிறது. இந்தப் படத்துக்காக சலீல் சவுத்ரி இசையில் ஜேசுதாஸ் பாடிய 'திங்கள் மாலை வெண்குடையான்' என்ற சிலப்பதிகாரக் கானல்வரியை முன்பெல்லாம் சிலோன் ரேடியோவில் நாள்தவறாமல் ஒலிபரப்புவார்கள். ஜானகிராமனின் 'மோகமுள்' ஞான.ராஜசேகரன் இயக்கத்தில் மனதில் தைக்காமல் போனாலும் நேர்மையான முயற்சிதான்.

'செம்மீன்' நாவலை தகழியின் எழுத்தில் விரிந்தது போலவே திரைக்குக் கொண்டுவர ஒரு ராமு காரியத் கிடைத்தது போல, யூ.ஆர். அனந்தமூர்த்தியின் 'சம்ஸ்காரா'வின் தட்சிண கன்னட கிராமப் பிராமணர்கள் வெள்ளித் திரையில் உயிர் பெற ஒரு கிரீஷ் கர்னாட் வந்தது போல, வைக்கம் முகம்மது பஷீரின் 'மதிளுகள்' மலையாளத் திரையில் உயர அடூர் கோபால கிருஷ்ணன் முயற்சி எடுத்தது போல, தமிழில் என்ன நடந்திருக்கிறது?

யோசித்ததில், கல்கியின் 'தியாக பூமியை' அந்தக் காலத்திலேயே ஒளியில் வடித்த கே.எஸ்.சுப்ரமண்யமும், பொன்னீலனின் 'உறவுகள்' குறுநாவலை, 'பூட்டாத பூட்டுக்களாக' நிலைக்க வைத்த மகேந்திரனும், து.ராமமூர்த்தியின் 'குடிசை'யைத் திரையில் வேய்ந்த ஜெயபாரதியும் நினைவுக்கு வருகிறார்கள். (இந்தப் படம் எல்லாம் வியாபார ரீதியாக வெற்றி பெற்றனவா என்பது வேறு ஒரு விஷயம்!) அப்புறம் ஜெயகாந்தனின் 'உன்னைப் போல் ஒருவனை' எழுதியதைப் போல் படமாக்கிய ஜெயகாந்தன்.

நாலு சிறுகதைகளை உள்ளடக்கிய கறுப்பு வெள்ளைப் படமான ஜெயகாந்தனின் 'புதுச் செருப்பு' யாராலோ ரொம்ப நாளாக ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது. பேன் வாரத்திலிருந்து பெருமாள் வாரம் வரை தேர்ந்தெடுத்து சினிமாப்படம் போடும் கேபிள் டிவிக்காரர்கள் இலக்கிய வாரம் வைத்து இது போன்ற படங்களையும் காட்டலாமே! கதை திரைப்படமாகிறதோ இல்லையோ, எழுத்தாளர்கள் திரைக்குப் போனது அசை போட, சுவாரஸ்யமான விஷயம்தான்.

நாற்பதுகளில் புதுக்கவி¨தியின் பிதாமகர் ந.பிச்சமூர்த்தியும், கு.ப.ராவும் 'ராமானுஜர்' படத்தில் நடித்ததாகத் தெரிகிறது. அறுபதுகளில் எடுத்த படத்தில் தேவிகாவின் கனவுக்காட்சியில் மன்மதனாக வந்தவர் 'கிணற்றில் விழுந்த நிலவைக் கீழிறங்கித் தூக்கிவிட'ச் சொல்லிக் கவிதை எழுதிய சோ.வைத்தீஸ்வரன். எண்பதுகளில் அமுதவன் கதை எழுதிய படத்தில் ஒரே ஒரு காட்சியில் சுஜாதா சங்கோஜத்தோடு தலைகாட்டி விட்டு ஆளை விட்டால் போதும் என்று திரைக்குப் பின்னால் ஓடிவிட்டார். பாளை சண்முகத்தின் 'காணி நிலம்' படத்தில் சட்டசபைக் காட்சியில் சபாநாயகராக சா.கந்தசாமி நடித்திருக்கிறார்.

மேடையில் 'நாற்காலிக்காரராக'வும் சின்னத்திரையில் பனியனைத் திருப்பிப் போட்டுக் கொண்டு டென்ஷனுடன் வலம்வரும் கீழ் மத்தியதரக் குடும்பத்தலைவராகவும் வந்த அசோகமித்திரன் ஜெமினி சினிமாப் படக்கம்பெனியில் வேலை பார்த்த போதோ அப்புறமோ சினிமாவில் முகம் காட்டவில்லை.

அரவிந்தனின் 'போக்குவெயில்' படத்தில் மலையாளக் கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு போல, சையத் மிர்ஸாவின் 'மோகன் ஜோஷி ஹாசிர் ஹோ' படத்தில் இந்தி எழுத்தாளர் பீஷ்ம் சிஹானி போல (மறைந்த குணச்சித்திர நடிகர் பால்ராஜ் சஹானியின் சகோதரர் இவர்) படம் முழுக்க்க கதாநாயகனாக, தமிழ் எழுத்தாளர் யாராவது வரும் வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

***************

இதனைத் தொடர்ச்சியாக யோசிக்கும் போது புதுமைப்பித்தனும் விந்தனும் தமிழ்ச் சினிமாவில் போராடி துரதிர்ஷ்டவசமாக வெற்றி பெற முடியவில்லை என்று பழைய கட்டுரைகளில் இருந்து தெரிகிறது.

ஜெயகாந்தன் 'பாதை தெரியுது பார்' என்கிற படத்தில் கலெக்டராக வருகிற சிறுவேஷத்தில் நடித்திருக்கிறார். (பின்பு இந்தக் காட்சியை அவரே நீக்கிவிட்டார்)

எம்.ஜி.ஆர் எத்தனை முறை கையை உயர்த்துகிறார் என்று சிறுவயதில் நாங்கள் வேடிக்கையாக எண்ணிக் கொண்டிருந்த பாடலான 'புதிய வானம், புதிய பூமி' பாடலில் எழுத்தாளர் சாவி ஒரு காட்சியில் பரிதாபமாக முழித்துக் கொண்டு எம்.ஜி.ஆரை பயபக்தியுடன் பார்த்துக் கொண்டு போவார். ('நான் நடித்ததினால்தான் இந்தப் படம் வெள்ளிவிழா கண்டது' என்று நகைச்சுவையாக குறிப்பிடுவார் சாவி.)

'கேளடி கண்மணி' படத்தில் பாலகுமாரன் ஆசிரம நிர்வாகியாக ஒரு காட்சியில் வந்து போவார்.

'விருமாண்டி' படத்தின் இறுதிக் காட்சியில் மாலன் செய்தியாளராக வருவார்.

'சொல்ல மறந்த கதை' படத்தில் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் ஒரு திருமணத்தை தலைமை தாங்கி மணமக்களை வாழ்த்தி பேசுபவராக சில காட்சிகளில் வருவார்.

எழுத்தாளர் பூமணி அவருடைய 'கருவேலம் பூக்களை' என்.எப்.டி.சி. உதவியுடன் திரைப்படமாக்கினார்.

தங்கர் பச்சானை எழுத்தாளர் என்று அங்கீகரிக்க தயாராயிருந்தால், அவரது கல்வெட்டு என்கிற அபத்தமாக எழுதப்பட்ட கதையை அழகாக 'அழகி'யாக உருமாற்றம் செய்தார். நாஞ்சில் நாடனின் 'தலைகீழ் விகிதங்கள்' 'சொல்ல மறந்த கதையாக' வெளிவந்தது. தங்கர்பச்சானே ஒரு படத்தில் கதாநாயகனாக (சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி) நடித்துக் கொண்டிருக்கிறார்.

(நண்பர்கள் தாங்கள் அறிந்த விவரங்களைக் கொண்டு இந்த பதிவை முழுமைப்படுத்த முயற்சிக்க வேண்டுகிறேன்)

()
அப்புறம்..... இது முற்றிலும் நகைச்சுவைக்காக மட்டுமே. யாரையும் புண்படுத்த அல்ல.

பிரதம மந்திரியையே கா¡ட்டூன் போட்டு கேலி செய்யும் இந்த தேசத்தில் எழுத்தாளர்களையும் சற்று நகைச்சுவைப்படுத்திப் பார்ப்பது ஒன்றும் உலகமகா குற்றமில்லை என்றும் தமிழர்களின் நகைச்சுவை உணர்ச்சி இன்னும் இற்றுப் போய்விடவில்லை என்றும் நம்புகிறேன்.

நம் எழுத்தாளர்கள் வருங்காலத்தில் சினிமாவில் நடிப்பார்களாயின் அவர்களுக்கு இந்த பாத்திரங்கள் பொருத்தமாயிருக்கும் என்று சிபாரிசு செய்கிறேன்.

ஜெயமோகன் - கோயில் பூசாரி
எஸ்.ராமகிருஷ்ணன் - போலீஸ் கான்ஸ்டபிள்
சுஜாதா - தலைப்பாகை அணிந்த தமிழ் வாத்தியார்
சல்மா - மகப்பேறு மருத்துவர்
அ.முத்துலிங்கம் - பேங்க் மானேஜர்
சாருநிவேதிதா - காமெடி ரவுடி
அசோகமித்திரன் - கிரிக்கெட் அம்பயர்
பிரபஞ்சன் - மேஜிக் நிபுணர்
பெருமாள் முருகன் - நூலகப் பணியாளர்
வண்ணதாசன் - விளம்பர பட அப்பா
கி.ராஜநாராயணன் - கிராமத்து கதாநாயகியின் அப்பா
சிவசங்கரி - சமூக சேவகி
ஞாநி - பிரதான வில்லனுக்கு பின்னால் நிற்பவர்
..................

Monday, August 01, 2005

காலச்சுவடு, ஆகஸ்டு 2005 - ஓர் அவசரப் பார்வை

இந்த மாத காலச்சுவடை ஒரு பருந்துப் பார்¨வியில் வாசித்த போது என்னைக் கவர்ந்த சில பகுதிகளை மட்டும் இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஆகஸ்டு மாத காலச்சுவடில் இரண்டு தலையங்கள்: குடும்பம் என்கிற அமைப்பின் பெயரால் பெண்களின் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளும், அவற்றிலிருந்து மீள்வதற்கான சட்ட வழிவகைகளைப் பற்றியும் முதல் தலையங்கம் அலசுகிறது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரே நிறுவனம் பல்வேறு ஊடக அமைப்புகளை தன்வசமாக்கிக் கொள்வதனால் ஏற்படும் சமூக அபாயத்தை குறித்து இரண்டாவது தலையங்கம் அலசுகிறது.

()

ராஜேஷ் என்கிற புதிய கவிஞரின் படைப்புகள் பிரசுரமாகியுள்ளன. இவை காலச்சுவடு அறக்கட்டளை நடத்திய போட்டியில் முதற்பரிசு பெற்றவையாம். அதில் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று:

நாள்காட்டி முருகன்
===============

முருகன் படம் அச்சிட்ட நாள்காட்டி
இனாமாய் தெரிந்தவர் கொடுத்தார்

இடக்கையில் வேலும் வலக்கையில் ஆசியுமாக
கம்பீரமாகப் புன்னகைத்து நின்றார்

செவ்வாய் வெள்ளிகளில் சாம்பிராணித் தூபம்
சிரித்துக் கொண்டே அவரும் பிடிப்பார்

தேதிகள் கழிய தாள்கள் கிழிய
முருகன் மேனி மெருகு குறைந்தார்

வருடம் முடிந்தும் மச்சு வீட்டில்
இன்னும் அருள்பாலிக்கிறார் நாள்காட்டி
முருகன்.

()

தமிழின் சிறந்த நாவல்கள் என்று என்னளவில் நான் பட்டியிலிடும் போது அதில் தவறாமல் இடம்பெறக்கூடிய நாவலான 'புலிநகக்கொன்றை' நாவலை எழுதின பி.ஏ.கிருஷ்ணனுக்கு இவ்வளவு நகைச்சுவை உணர்ச்சி உள்ளது என்பது இத்தனை நாள் தெரியாமல் போனது. தொலைக்காட்சி தொடர்கள் சமூகத்தில் ஏற்படும் சீரழிவுகளை பற்றின அவரின் கட்டுரையை ஒரு வையாவது வாய்விட்டு சிரிக்காமல் உங்களால் படித்து முடிக்க முடியாது. சிரிக்க வைப்பது மட்டுமல்ல, கட்டுரையை படித்து முடித்ததும் சற்று நேரம் தனிமையில் சிந்திக்க வைப்பதுமாயும் இருக்கிறது, அந்தக்கட்டுரை. தொலைக்காட்சி தொடர்களை உருவாக்குபவர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை இது.

()

நான் ஏற்கெனவே வாங்கி வைத்து படிக்காமலிருக்கும், பெருமாள் முருகனின் "பீக்கதைகள்" என்கிற சிறுகதைத் தொகுப்பிற்கு மதிப்புரை எழுதியிருக்கிறார் பாவண்ணன். பாவண்ணனின் அற்புதமான எளிமையான மொழியில் அமைந்திருக்கும் இந்த விமர்சனம் நூலை வாங்கிப்படிக்கத் தூண்டுகிறது.

()

சுஜாதா மறுபடியும் ஒரு சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறார். அவர் ஆனந்தவிகடனில் எழுதிவரும் கட்டுரைத் தொடரில் 'கோயில் ஓழுகு' என்கிற நூலைப்பற்றி குறிப்பிடும் போது கி.பி. 1323-ல் முகமதியர் படையெடுப்பின் போது 13,000 ஸ்ரீவைஷ்ணவர்கள் கொல்லப்பட்ட நிகழ்ச்சி..... என்று எழுதியிருப்பதை இரண்டு இசுலாமிய வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக மறுப்பு தெரிவித்து ஆனந்த விகடனுக்கு அனுப்பியிருக்கின்றனர். பிற்பாடு இதையும் தனது கட்டுரைத் தொகுதியில் இதைக்குறிப்பிட்ட சுஜாதா இதனாலேயே இசுலாமியத்தை பற்றி எழுத தயக்கமாக இருக்கிறது எனத் தெரிவித்திருக்கிறார்.

அந்த இரண்டு கடிதத்தின் முழுப்பகுதியையும் காலச்சுவடு வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம் உண்மையான வரலாற்று விவரங்கள் நமக்கு தெரிய வந்தால் மகிழ்ச்சியே. ஆனால் செய்தித்தாளில் வெளியாகும் ஒரு சம்பவத்தை புலனாய்வுப் பத்திரிகைகள் இன்னும் கொஞ்சம் விஸ்தாரமாக ஆராய்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி தனது வியாபாரத்தை பெருக்கிக் கொள்ளும் அதே பாணியைத்தான் காலச்சுவடும் பின்பற்ற முயல்கிறது என்று தெரியவந்தால் சிற்றிதழ்களின் மீதான நம்பிக்கை இன்னும் இறங்கிவிடும்.

()

'பிள்ளை கெடுத்தாள் விளை' என்கிற சிறுகதையை ஜாதி என்னும் கண்ணாடியை மாட்டிக் கொண்டு படித்து அதனை தனக்கு சாதகமாக திரித்து, இந்தக்கதை ஜாதி வெறியின் வெளிப்பாடு என்று அபத்தமாக நிறுவ முயல்பவர்கள், அம்பை எழுதியிருக்கும் 'பெண்ணின் தலை மேல் தொங்கும் கத்தி' என்கிற கட்டுரையை அவசியம் படித்தாக வேண்டும். கல்வி என்கிற விஷயம் சில குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்த பெண்களுக்கு ஆயுதமாக விளங்காமல், அவர்களையே திருப்பித்தாக்குகிற ஒரு எதிர் ஆயுதமாக மாறிவிடும் அபாயத்தையும் அதற்கு காரணமாக இருக்கும் அதே இனத்தவர்களையும் யதார்தத உதாரணங்களைக் கொண்டு ஆராய்கிறது இந்தக் கட்டுரை.

()

சிற்றிதழ்களிலும் அபூர்வமாக சிரிக்கக்கூடிய வகையில் சில வரிகள் இடம் பெறுகின்றன. நீரோட்டம் என்கிற தலைப்பில் கடைசிப்பகுதியை இந்த மாதம் பெருமாள் முருகன் எழுதியிருக்கிறார். அதில் சில வரிகள்.

..... காலச்சுவடு, கடவு ஆகியவை இணைந்து மதுரையில் நடத்திய நாவல் கருத்தரங்கில் எழுத்தாளர் 'கறிச்சோறு' சி.எம்.முத்துவும் கலந்து கொண்டார். அவரோடு பேச்சுக் கொடுத்த போது என் ஊரைக் கேட்டார். 'திருச்செங்கோடு' என்றேன். அவர் முகத்தில் அடியார்க்குரிய பரவசம் பெருகியது. "நான் கம்யூனிட்ஸ்டுதான். ஆனாலும் கடவுள் நம்பிக்கை எல்லாம் எனக்குண்டு" என்றார். ரொம்பவும் எதார்த்தமான மனிதர் முத்து. திருச்செங்கோட்டில் அவருடைய மைத்துனர் ஒருவர் வேலை பார்த்ததாகவும் அவரைப் பார்க்க அங்கே வந்தபோது மலையேறிக் கோவிலுக்குப் போனதாகவும் சொன்னார். "முதன் முறை கோவிலுக்குப் போய் வேண்டிக் கொண்ட வந்த ஒரு வருசத்திற்குள் ஆம்பளப் பிள்ளை பிறந்தான்" என்றார். அதன் பிறகு இரண்டாம் முறை வணங்கிச் சென்றார். இரண்டாவது 'ஆம்பளப் பிள்ளை". மூன்றாம் முறை வந்து போனார். மூன்றாவது ஆம்பிளைப் பிள்ளை. இதைக் கேட்டுக் கொண்டிருந்த நண்பர் ஒருவர், "இடையில் நீங்க ஏதாவது முயற்சி பண்ணினீங்களா" என்று கேட்டார். முத்து உட்பட எல்லோரும் ரசித்துச் சிரித்தோம்.

()

நன்றி: காலச்சுவடு

காக்டெயிலும் சிங்கிள் டீயும்

நேற்று மாலை நடிகை நமீதாவை சந்தித்து சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தேன் என்று 'சுஜாதா' பாணியில் நான் எழுத வேண்டுமெனில் ஒன்று, சத்யராஜ், சரத்குமார் போன்ற வயதான கதாநாயகர்களாக இருக்க வேண்டும் அல்லது எதிரில் அமர்ந்திருக்கிற நண்பரை விளையாட்டாக துப்பாக்கியால் சுட்டுப்பார்க்கிற நிறைய 'டப்பு' வைத்திருக்கிற தயாரிப்பாளராக இருக்க வேண்டும். இரண்டுமே இல்லை என்பதால், நேற்று தாஜ் கோரமண்டல் ஓட்டலின் போர்ட்டிகோவில் எனது சகாவோடு அவரது காருக்காக காத்திருக்க நேரிடுகையில், என் ஜென்மத்தை சாபல்மடைய வைக்கும் நிகழ்வான நமீதா தனது காரில் இருந்து இறங்கி உள்ளே போனதை பார்த்தேன். (ஆரம்ப வரிகளை சுவாரசியமாக எழுதி உங்களை படிக்க வைக்க ஒரு முயற்சி) :-)

மலையாள நாளிதழான 'மாத்ருபூமி' தனது போட்டியாளரான 'மலையாள மனோரமா'வை விட எவ்வாறு சர்க்குலேஷனிலும், ரீடர்ஷிப்பிலும் உயர்ந்திருக்கிறோம் என்பதை 'பிலிம் காட்ட' (Audio Visual) எங்களை தாஜ் கோரமண்டல் ஓட்டலுக்கு அழைத்திருந்தனர். இதன் மூலம் வருகிற மலையாள பண்டிகையான ஓணத்திற்கு பிராண்ட்களின் விளம்பரங்களை கவர்வதும் அவர்களது நோக்கம். நான் அதைப் பற்றியெல்லாம் எழுதி உங்களை சோதிக்க விரும்பவில்லை.

நான் இந்தப் பதிவை எழுதுவதற்கு காரணமே, அவர்கள் அந்த மூன்று மணிநேர நிகழ்ச்சிக்கு மிகவும் சிரத்தையுடன் அந்த இடத்தை அலங்கரித்திருந்தது என்னை பிரமிக்க வைத்திருந்ததால். Ball Room எனப்படும் அந்தப் பகுதியில் நுழைந்தவுடனே ஏதேர ஐயப்பன் கோவில் நுழைந்தாற் போல் பூக்கோலம் போட்டு, ஒரு சிறுவன் ஓதுவார்கள் பாடுகிறாற் போல் ஏதோ ஒன்றை மலையாளத்தில் தண்டையை அடித்துக் கொண்டு பாடி வரவேற்றான். வரவேற்பு பெண் எங்கள் நெற்றியில் சந்தனத்தை தடவி விட, சந்தனத்திற்கு இவ்வளவு குளிர்ச்சி இருக்கிறது என்பது நேற்றுதான் தெரிந்தது.

நிகழ்ச்சி நடக்கப் போகிற இடத்தை ஒரு டிப்பிகல் கேரள வீடு போல் ஓடுகளை அமைத்து, முற்றம் அமைத்து, நாற்புறத்தையும் சுவர் போல் ஏற்படுத்தி ஜன்ன¦ல்லாம் வைத்து அசத்தியிருந்தனர். நுழைவாயிலும் ஒரு வீட்டிற்குள் நுழைவது போல் சின்னதாக தலையை குனிந்து கொண்டு போக வேண்டியிருந்தது. கீழே வாசப்படியில் தடுக்கி விழப் போகிறீர்கள் என்று புன்னகையுடன் எச்சரிக்க ஒரு பெண்ணை வேறு நிறுத்தியிருந்தனர். உத்தரத்திற்கு அடிக்கும் பெயிண்ட் சகாய விலைக்கு கிடைக்கிறாற் போல் ஒரு ஆள் மூஞ்சியில் காரேபூரே பூசிக் கொண்டு பயமுறுத்திக் கொண்டு நிற்க, அவர் தலையில் கீரீடத்தை மாட்டிய பின்புதான் தெரிந்தது அவர் ஒரு கதகளி கலைஞர் என்பது. பக்கத்து வீட்டில் ஆணி அடிக்கிறாற் போல் ஆரம்பித்த சங்கீதத்தை போகப் போக தாளகதியுடன் ரசிக்க முடிந்தது.

பின்பு மாத்ருபூமிக்காரர்கள் அவர்களுடைய பிரதாபங்களையெல்லாம் ஆங்கிலத்தில் அளந்துவிட்டு, நாங்கள் எல்லோருமே முக்கிய வேலையாக வந்திருந்த cocktail & dinner-ருக்கு கலந்து கொள்ள அழைத்தனர். என்னைப் பொறுத்த வரை ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் சொந்த காசை செலவு செய்து சாப்பிடுவதற்கு வீட்டுப் பத்திரத்தையெல்லாம் எடுத்துப் போக வேண்டும் என்பதால் இந்த மாதிரி ஓசியில் வரும் வாய்ப்புகளை தவறவிடுவதே கிடையாது. சிலர் அவர்கள் வீட்டு குஞ்சு குளுவான்களையெல்லாம் கூட்டிக் கொண்டு வந்திருந்தனர்.

()

Cocktail & dinner-ல் கலந்து கொள்ளுங்கள் என்ற அறிவிப்பு வந்ததுதான் தாமதம், நம்மாட்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலை நிகழ்ச்சிகளையெல்லாம் பார்க்காமல் ஒதுக்கித் தள்ளிவிட்டு ஏதோ அணுகுண்டுக்கு தப்பி ஓடுபவர்கள் போல் பதறியடித்துக் கொண்டு பாட்டில்களின் பக்கம் பாயவாரம்பித்துவிட்டனர். பார்ட்டிக்கு உள்ளே வரும் போது ஆங்கிலேயர்களுக்கே நாகரிகத்தை கற்றுக் கொடுப்பவர்கள் போல் வழியில் நிற்போரை மென்மையாக Excuse me-க்களோடு வழி கேட்பவர்கள், இப்போது அவர்களா இவர்கள் என்னுமளவிற்கு ஒருத்தர் மேல் ஒருத்தர் விழுந்து கொண்டு, அம்மன் கோயிலில் கூழுக்கு நிற்பவர்கள் கூட தோற்குமளவிற்கு இடித்து தள்ளிக் கொண்டு சென்றனர். என்னதான் நாம் நாகரிகத்தின் உச்சியில் நிற்பவர்களாக சொல்லிக் கொண்டாலும் நம்முள் கற்கால மனித குணாசியங்களின் எச்சங்கள் இன்னும் ஆழ்மனதில் எந்த பாதிப்புக்குள்ளாகாமல் இருப்பதை இந்த மாதிரி நிகழ்வுகளின் மூலம் உணர முடியும்.

என்னைப் பொறுத்தவரை பியர்தான் அருந்துவேன் என்பதால் (பியர் என்பது பெண்களும் சிறுவர்களும் அருந்துவது என்று என் நண்பர்கள் கிண்டல் செய்தாலும் ஏனோ என்னால் மற்ற குடிவகைகளின் மீது நாட்டம் கொள்ள இயலவில்லை. பியர் குடிக்க ஆரம்பித்ததற்கு பின்னாலும் ஒரு காரணம் இருக்கிறது. அந்த சுவாரசியமான கதையை பின்னொரு சமயத்தில் சொல்கிறேன்) கூட்டத்தில் 2 கிளாஸ் பியர் வாங்கி சாப்பிடுவதற்குள் எரிச்சல் உச்ச அளவிற்கு சென்று விட்டது.

இதே நிலைதான் சாப்பிடும் இடத்திலும். ஏதோ சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் உணவு பொட்டலங்களுக்கு பாய்கிறாற் போல்தான் பெரும்பாலோனோர் நடந்து கொண்டனர். மலையாள பத்திரிகை கொடுக்கிற விருந்து என்பதால் நிறைய கேரள உணவு வகைகள் இருந்தன. சக்கா அல்வா, பழப் பிரதாமன் (பிதாமகன் அல்ல) தேங்காய் ஐஸ்கீரீம், புட்டு, இடியாப்பம் என்று எல்லாவற்றிலும் கேரள வாடை. நான், நான்-வெஜ் பக்கம் போய் ஒரு பிடிபிடித்தேன். கிளம்பும் போது ஏலக்காய், லவங்கம், பட்டை போன்ற மசாலா வகைகள் அடங்கிய பரிசுப் பொதியை கொடுத்து வழியனுப்பி வைத்தார்கள்.

இந்தக் கூட்டத்தில் பாஸ்கர் என்கிற பழைய நண்பர் ஒருவரை சந்திக்க முடிந்தது. நானும் அவரும் பத்து வருடங்களுக்கு முன்னால் ஒரு நிறுவனத்தில் கிராபிக் ஆர்டிஸ்டுகளாக பணிபுரிந்து கொண்டிருந்தோம். பார்ப்பதற்கு பஞ்சத்தில் அடிபட்டவர் போல் மிக ஒல்லியாக இருப்பார் அவர். எப்போதும் தனது துரதிர்ஷ்டத்தை நொந்து கொண்டு புலம்பிக் கொண்டேயிருப்பார். நான் அவ்வப்போது அவருக்கு திரைப்படப் பாடல்களையெல்லாம் சொல்லி ஆறுதல் சொல்லுவேன். இப்போது அவர் பெரிய விளம்பர நிறுவனத்தில் பணிபுரிகிறார் என்று அறிந்து கொண்டேன். ஆள் நல்ல குண்டாகி தெளிவாகவும் மலர்ச்சியாகவும் இருந்தார். பார்க்க சந்தோஷமாக இருந்தது. சற்று நேரம் பேசலாம் என்று பார்த்தால் விஸ்கி போதையில் என்னிடம் சரியாக ஒன்றரை நிமிடமே பேசிவிட்டு "அப்புறம் பாக்கலாண்டா மச்சான்" என்று அவருடைய விசிட்டிங் கார்டை என்னுடைய பாக்கெட்டில் சொருகிவிட்டு கூட்டத்தில் கரைந்து போனார்.

()

வீட்டுக்குத் திரும்பும் போது ஒரு குறிப்பிட்ட தூரம் வரையில் ஷேர் ஆட்டோவில் வந்து விட்டு அதற்குப் பின்னால் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டு நின்ற போது சில நாட்களாக சந்திக்காதிருந்த என் சமீப கால நண்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அவர் பெயர் முனுசாமி. புதுக்கல்லூரியில் தமிழ்த்துறையில் விரிவுரையாளராக இருக்கிறார். சிற்றிதழ்களில் அவ்வப் போது புத்தக விமர்சனங்கள் எழுதுவாராம். ஞாயிற்றுக்கிழமை தோறும் தேவநேயப் பாவாணர் நூலகத்தில் புத்தக விமர்சனக்கூட்டத்தில் கலந்து கொள்வாராம். நான் வேண்டாமென்று மறுத்தும் ரோட்டோர கடையில் டீ ஆர்டர் செய்து சாப்பிட வைத்தார். ஏற்கெனவே புல்கட்டில் இருந்த நான், அவர் அன்பை மறுக்கவியலாமல் சாப்பிட்டு, பிறகு மூடப்பட்டிருந்த கம்பெனி படிக்கட்டுகளில் அமர்ந்து வெட்டி இலக்கியம் பேசிவிட்டு போரடித்ததும் கிளம்பினோம். போலி நாகரிக மனிதர்கள் மத்தியில் சாப்பிட்ட அந்த அறுசுவை விருந்தை விட எளிமையான இந்த சிங்கிள் டீ சுவையாக இருந்தது என்பதை சொல்லியேயாக வேண்டும்.