Thursday, December 30, 2004

அவர்களுக்குள் என்ன ஆகியிருக்கக்கூடும்?

அந்த தம்பதியரை, அலுவலகத்திற்கு கிளம்புகிற பரபரப்பான காலை வேளைகளில் ஏறக்குறைய தினமும் பேருந்து நிறுத்தத்தில் காண நேரும்.

அவருக்கு ஐம்பத்து இரண்டிலிருந்து ஐம்பத்து ஐந்து வயதிருக்கலாம். தலை ஏறக்குறைய வழுக்கையாகி பளபளவென்று இருந்தாலும், ஆள் மிக கட்டுமஸ்தாக எந்தவொரு இளைஞனுக்கும் குறையாத மிடுக்கோடு இருப்பார். சில சமயங்களில் அவர் வயதுக்கு பொருந்தாத ஜீன்ஸ் பேண்ட் அணிந்து சட்டையை இன் செய்து கொண்டு கேன்வாஸ் ஷீ போட்டுக் கொண்டு வருவார். 'நான் இன்னும் இளமையோடுதான் இருக்கிறேன்' என்று உலகத்திற்கு அறைகூவல் விடுக்கிறாற் போலிருக்கும் அது. முகத்தை கடுகடுவென்றுதான் வைத்திருப்பார். எப்பவாவது அபூர்வமாக புன்னகைப்பார்.

ஏதோ ஒரு அரசு அதிகாரியாக முக்கியப் பணியிலிருக்கிறார் என்று என்னால் ஊகிக்க முடிந்தது. பேருந்தில் அவர் ஏறிய பின்னால், நடத்துநர் அவரை மரியாதையாக வணங்கிவிட்டு, உட்கார இருக்கை இல்லாத பட்சத்தில் தன் இருக்கையிலேயே அமரச் செய்வார். அவர் எந்நாளும் பயணச்சீட்டு எடுத்தும் நான் பார்த்ததில்லை. பேருந்து துறையிலேயே கூட பணிபுரியலாம் என்று நான் எண்ணிக் கொள்வதுண்டு.

அந்த பெண்மணிக்கு நாற்பத்து ஐந்திலிருந்து ஐம்பது வயது வரை இருக்கலாம். தலைமுழுகியதால் ஏற்பட்ட ஈரதலைமுடியோடு, நெற்றியில் ஒரு பெரிய குங்குமப்பொட்டோடு, தலையில் கதம்பமோ, மல்லிகையோ அழகான முறையில் சூடியிருப்பார். பட்டுப்புடவையை ஒத்த அதே மாதிரி தோற்றந்தருகிற விதவிதமான புடவையோடு தினமும் வருவார். தினமும் அவரை பார்க்க நேர்வதாலும், எப்பவோ ஒரு முறை அவர் அமர என் இருக்கையை நான் தந்ததாலும் சில சமயங்களில் என்னைப் பார்த்து புன்னகைப்பதுண்டு. எப்பவும் சிரித்த முகமாகவும், தன் சக பெண் பயணிகளோடு கலகலப்பாகவும் பேசிக் கொண்டிருப்பார்.

எத்தனையோ பேர் திருமணம் செய்து கொண்டு சாலைகளில் உலவினாலும், சில ஜோடிகளைப் பார்க்கும் போதுதான் கண்ணுக்கும் மனதுக்கும் நிறைவாக நம்மால் உணர முடியும். அவர்கள் இருவரும் அழகாக இருக்கவேண்டுமென்று கூட அவசியமில்லை. அவர்கள் உடல்மொழிகளினாலும், அறிமுகமில்லாதவர்களிடம் கூட சகஜமாக பழகும் விதத்தினாலும் இதை உணர இயலும். மேற்சொன்ன தம்பதியரும் இந்த வகையில் அடங்குவர். அதுவரை வெறிச்சோடி அழுது வடிந்து கொண்டிருக்கிற அந்த பேருந்து நிறுத்தம், இவர்கள் வந்த பின்னால் ஏதோ பளிச்சென்ற விளக்கு போட்டாற்போல் களைகட்டிவிடும். அவர்களை முன்பின் பார்த்திராதவர்கள் கூட வியப்புடனும் மரியாதையுடனும் அவர்களை காணுவதை பார்க்க முடியும். இருவரும் சேர்ந்து நடந்து கொண்டு வருகிற காட்சி என்னுள் எப்போதும் பரவசத்தை ஏற்படுத்தும்.

அவர்கள் இருவரும் ஒரு குறிப்பிட்ட பேருந்துகளுக்காக காத்திருப்பார்கள். பெரும்பாலும் சென்னை, கோட்டைக்கு செல்லும் பேருந்தாகத்தான் இருக்கும் அது. நானும் பெரும்பாலும் அந்த பேருந்தில்தான் செல்வேன். மற்ற பேருந்துகள் நிறைமாத கர்ப்பிணி போல் சென்று கொண்டிருக்க, இந்த பேருந்துகளில் மட்டும்தான் மூச்சு முட்டாமல் சுவாசிக்கவும், கால்களை குறுக்கிக் கொண்டு நிற்க வேண்டிய அவசியமில்லாமலும், அதிர்ஷமிருந்தால் உட்கார இருக்கை கூட கிடைக்கும்.

சில சமயங்களில் இந்த பேருந்துகள் வராத சமயங்களில், அந்த பெண்மணி கூட்டமான பேருந்தில் ஏற முயற்சிக்கும் போது அவரோ மிக கடுகடுப்புடன் "கொஞ்சம் வெயிட் பண்ணலாம். வந்துடும். இவ்வளவு கூட்டத்துலயா போகப் போறே?" என்று அந்த பெண்மணியை தடுத்துவிடுவார். இருவரும் பேருந்தில் ஏறிவிட்ட பிறகு, அவர் செய்யும் முதல் காரியம் தன் மனைவி உட்கார இடம் இருக்கிறதா என்று நோட்டமிடுவதுதான். அந்த பெண்மணி வந்து இருக்கையில் உட்காரும் வரை அவர் பதைபதைத்துப் போய்விடுவார். மனைவி உட்கார இடம் கிடைக்காத வரை ஏதோ நெருப்பில் நின்றிருப்பவர் போல் தவிப்புடன் காணப்படுவார். சில சமயங்களில் உட்கார இடமிருக்காத போது, அவர் நின்றிருக்கும் இடமருகில் மகளிர் இருக்கை காலியாகும் பட்சத்தில், அதில் அமரப் போகிறவர்களை கெஞ்சலுடன் தடுத்துவிட்டு சற்று தூரத்தில் நின்றிருக்கும் மனைவியை மிக அவசரமாக கூப்பிடுவார். அவர் வருவதற்கு சற்று தாமதமானாலும் எரிச்சலோடு ஏதோ கூறுவார். அந்த பெண்மணியும் மிக கூச்சத்தோடு அந்த இருக்கையில் வந்தமர்வார்.

மேலோட்டமாக பார்ப்பதற்கு அந்த கணவர் கோபக்காரராக தென்பட்டாலும், தன் மனைவியின் மீது மிக உள்ளார்நத அன்பை வைத்திருக்கிறார் என்பதை அவர் செய்கின்ற ஒவ்வொரு செயலும் சொல்லும்.

ஒரு ஆதர்ச தம்பதிக்கு இவர்களை தாராளமாக உதாரணம் காட்டலாம் என்று எனக்குள் நான் சொல்லிக் கொள்வேன். ஏதோ சில காரணங்களினால் சமயங்களில் என் மனைவி மீது எரிச்சல் வர நேரும் போதெல்லாம், இந்த தம்பதியரை மனதில் நினைத்துக் கொண்டு எனக்குள் அமைதியாகி பிறகு மனைவியிடம் மன்னிப்பு கேட்பேன்.

நடிகர் அஜீத்குமார் நடித்த ஏதோவொரு திரைப்படப்பாடலில்

'முதுமையின் முத்தங்கள்கூட இனிப்பென்று வாழ்ந்திடுவோம்'

என்கிற பாடல்வரிகள் இவர்களைப் பார்க்கும் போதெல்லாம் என் மனதில் வந்தடங்கும்.

O

ஆனால் அவர்களுக்குள் என்ன நடந்ததோ தெரியவில்லை.

சமீப காலங்களில் அவர்களின் நடவடிக்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இருவரும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தனித்தனியாகத்தான் வருகிறார்கள். சில சமயம் அந்த கணவரோ, அல்லது மனைவியோ மட்டும்தான் வருகிறார்கள். மற்றவரை காணமுடிவதில்லை. அரிதாக இருவரும் ஒரே நேரத்தில் பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்க நேரும் போது ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதில்லை. அந்த பெண்மணி உட்காரும் இருக்கைக்காக அவர் எந்தவொரு முயற்சியும் எடுப்பதில்லை. எப்போதும் கலகலப்பாக இருக்கும் அந்த பெண்மணி கூட சற்று - சற்றுத்தான் - வருத்தமாக இருப்பதாக எனக்குப்படும். அல்லது என் பிரமையோ?

கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக இந்த காட்சியை வேதனையுடன் காண வேண்டியிருக்கிறது. ஏதோ பிணக்கு போல, இரண்டொரு நாட்களில் சரியாகிவிடும் என்று காத்துக் கொண்டிருக்கிற என் பொறுமை காணாமல் போயக்கொண்டிருக்கிறது. அவர்கள் இருவரும் பழையபடி இணைந்து பேசிக் கொண்டே வரமாட்டார்களா என்று என் மனம் ஏங்கத் தொடங்கியிருக்கிறது.
தன் துணையுடன் ஒன்றாக சுற்றி இன்பமாக பறந்துக் கொண்டிருந்த பறவை, தன் துணையை இழந்து வருத்தத்துடன் கூவுகிற ஓலம் எனக்கு நினைவுக்கு வருவதை தவிர்க்க இயலவில்லை. அந்த பெண்மணி தனியாக வரும் நேரங்களில், இதைப்பற்றி அவரிடம் விசாரிக்கலாமென்றாலும், முறையான அறிமுகமில்லாததாலும், அவர் தவறாக எடுத்துக்கொள்வாரோ என்கிற பயமும், இயல்பாக இருக்கிற என் கூச்ச சுபாவமும் இந்த காரியத்தை செய்யவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது.

அலுவலக நேரங்களிலோ, இல்லத்தில் ஓய்வாக அமர்ந்திருக்கும் நேரங்களிலோ இவர்களைப் பற்றிய நினைவு எனக்குள் எழுந்து ஒரு பெருமூச்சுடன் அடங்கி விடும்.

அவர்களுக்குள் அப்படி என்னதான் ஆகியிருக்கும்?

suresh kannan

Wednesday, December 29, 2004

புத்தகப்பிரியர்களுக்கான ஒரு மாத இதழ்



பாரதி புத்தகலாயம் சார்பில் 'புதிய புத்தகம் பேசுது' என்கிற மாதஇதழ் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த இதழில் பல்வேறு பிரசுரர்களின் புதிய வெளியீடுகளைப் பற்றிய தகவல்கள் அடங்கியிருக்கின்றன. இதனால் என்னென்ன புத்தகங்கள் சமீபத்தில் வெளிவந்திருக்கின்றன என்பதைப் பற்றிய தகவல்களை ஒரே புத்தகத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

புதிய படைப்பாக்கங்களைப் பற்றியும், மறுபிரசுரங்கள் பற்றியும் பிரபல படைப்பாளிகள் தங்களுடைய பார்வைகளை பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்களுடைய நேர்காணல்களும் வெளியாகியிருக்கின்றது.

டிசம்பர் 2004 இதழில் கீழ்க்கண்ட புத்தகங்களைப் பற்றின விமர்சனங்கள் பிரசுரமாகியுள்ளன.

முனைவர் கே. வசந்தி தேவியின் நேர்காணலின் தொகுப்பான (சுந்தரராமசாமி இவருடன் உரையாடியிருக்கிறார்) 'தமிழகத்தில் கல்வி' என்கிற நூலைப்பற்றி 'முகில்' எழுதியிருக்கிறார்.

புகழ்பெற்ற புதினமான மாக்சிம் கார்க்கியின் 'தாய்' நாவலைப் பற்றி எஸ்.ஏ.பெருமாள் எழுதியிருக்கிறார்.I

வீரப்பன் தேடுதல் வேட்டையில் அதிரடிப்படையினரின் கொடூர வன்முறைகளால் பெரிதும் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களைப்பற்றி ச.பாலமுருகன் எழுதிய 'சோளகர் தொட்டி' என்கிற உண்மைச்சம்பவங்களின் மீது எழுதப்பட்ட நாவலைப்பற்றி ஜெ.முனுசாமி தன்னுடைய பார்வையைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

காமராஜரின் எளிமையான அரசியலைப்பற்றி வீரபாண்டியன் எழுதியிருக்கிற 'ஆகட்டும் பார்க்கலாம்' என்கிற நூலைப்பற்றி திலீபன் எழுதியிருக்கிறார்.

சென்னையில் வருடாவருடம் நடைபெறுகிற புத்தககண்காட்சிக்கு மூலகாரணமாயிருந்த பி.ஐ. நிறுவனத்தின் பொதுமேலாளரான கே.வி.மேத்யூயைப் பற்றி இரா.முத்துக்குமாரசுவாமி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

இந்துத்வா கட்சிகளின் மதவெறிகளைப் பற்றி கே.அசோகன் பல்வேறு காலகட்டங்களில் எழுதியிருக்கும் கட்டுரைகளின் தொகுப்பு 'நரபலியும் நரவேட்டையும்'. இந்த நூலைப் பற்றி ஆதவன் தீட்சண்யா மிகவும் செறிவானதொரு கட்டுரையை எழுதியிருக்கிறார்.

O

இந்த இதழின் சிறப்பம்சமாக சோலை சுந்தரபெருமாளின் நேர்காணலை குறிப்பிடலாம். அரைப்படி நெல் கூலி உயர்த்திக் கேட்டதற்காக நிலவுடமையாளர்களால் விவசாயிகள் தீ வைத்துக்கொளுத்தப்பட்ட கீழ்வெண்மணி சம்பவத்தை அடிப்படையாக கொண்டு 'செந்நெல்' என்கிற நாவலை எழுதின இவரை சூரியசந்திரன் சந்தித்து உரையாடியிருக்கிறார்.

இந்தப் பேட்டியின் ஒரு பகுதி:

எழுத்தாளராவது என்று முடிவு எடுத்த பிறகு நீங்கள் எழுதிய முதல் படைப்பு எது?

1987-ம் ஆண்டு 'கலைமகள்' இதழில் ஒரு குறுநாவல் போட்டி அறிவித்திருந்தார்கள். அதற்கு ஒரு குறுநாவல் எழுதி அனுப்பலாம் என்று முடிவு செய்தேன். கலைமகள் இதழைப் பொறுத்தவரை, மூத்த தஞ்சைப் படைப்பாளிகளின் உள்ளடக்கமே அதன் உள்ளடக்கமாகவும் இருந்தது. நான் அப்படியான ஒரு குறுநாவலை எழுதி பரிசு வாங்கிவிடமுடியும். ஆனால், ஒடுக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கையை - அவர்களிலும் பெண்கள் ஒடுக்கப்படுவதை கருவாக வைத்து 'மனசு' என்றொரு குறுநாவலை எழுதி அனுப்பினேன். அதற்கு இரண்டாம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. அதுதான் பத்திரிகையில் பிரசுரமான முதல் படைப்பு. 'கலைமகள்' ஆசிரியர் கி.வா. ஜகந்நாதன், 'சென்னை வந்தால் சந்திக்கவும்' என்று ·பார்மாலிட்டிக்காக ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.

எழுத்தாளனாகணும் என்கிற ஆர்வலத்திருந்த நான், உடனே சென்னைக்குப் போய் அவரை சந்தித்தேன். அவரின் அணுகுமுறைலிருந்தே அவர் என்னை மேட்டுக்குடிக்காரனாய் இருப்பேனே¦ன்று எதிர்பார்த்திருக்கிறார் என்பதை அறிய முடிந்தது. நான் தலித்தாக பிறக்காவிட்டாலும் தலித்தோடு தலித்தாக வாழ்ந்து கொண்டிருப்பவன். அவர், 'இது போன்ற படைப்பை கலைமகள் வெளியிடுவது இதுதான் முதலும் கடைசியுமாக இருக்கும். உங்களுக்கு ஏற்ற பத்திரிகைகளிலே இனி எழுதிக் கொள்ளுங்கள்' என்று கூறிவிட்டார். அப்படி அவர் கூறியதும் எனக்கு ஏற்ற பத்திரிக்கை 'தாமரை'தான் என்கிற எண்ணம் வந்துவிட்டது. அதன் பிறகு தாமரையில் எழுத ஆரம்பித்தேன்.

O

இன்னும் பல புத்தகங்களைப்பற்றின பல்வேறு இலக்கிய திறனாய்வாளர்ளின் சீரிய விமர்சனங்கள். அடுத்த இதழ் 27-வது புத்தக கண்காட்சியைப் பற்றின சிறப்பிதழாகவும் எழுத்தாளர் ஜெயகாந்தனின் நேர்காணலுடனும் வரவிருப்பதாக ஒர் அறிவிப்பு கூறுகிறது.

தனி இதழ் - 10ரூ

ரூ.250/- செலுத்தினால் வாழ்நாள் முழுவதும் இந்த இதழை இலவசமாக பெறுவதுடன் சம்பந்தப்பட்ட பதிப்பகத்தின் நூல்களுக்கு சிறப்பு தள்ளுபடியும் அளிக்கப்படுகிறது.

தொடர்புக்கு:
பாரதி புத்தகாலயம்2, குயவர் வீதி, ஜோன்ஸ் சாலை, சைதை, சென்னை-600 015. போன்: 24332424இணையத்தளம்: www.tamizhbooks.com மின்னஞ்சல்: info@tamizhbooks.com

suresh kannan

Monday, December 27, 2004

இயற்கையின் அதிர்ச்சி தாலாட்டு

ஞாயிற்றுக்கிழமை என்றால் வழக்கமாக எட்டு மணிக்கு குறையாமல் தூங்கிக்கொண்டிருக்கிற சென்னைவாசியான என்னை காலை ஆறரை மணிக்கே என் மனைவி பதட்டமான குரலுடன், என்னை உலுக்கி எழுப்பினாள். "என்னங்க, என்னங்க, வீடு ஆடுது".

"மும்தாஜ் ஆடினா பாக்கலாம். வீடு ஆடுறத என்னாத்த பாக்கறது" என்று தூக்ககலக்கத்தில் உளறிய என்னை அவள் அன்பாக ஓங்கி அடித்து எழுப்பி, உட்கார்த்தி வைத்தவுடன்தான் அந்த விபரீதத்தை உணர்ந்தேன்.

அட! ஆமாம். நிஜமாகவே நானிருந்த பிளாட் லேசாக ஆடிக் கொண்டிருந்தது. ஐன்னல் கண்ணாடிகள் குளிர்சுரம் வந்தது போல் தடதடத்துக் கொண்டிருந்தன. மூன்றாண்டுகளுக்கு முன்னால் ஏற்கெனவே இதே மாதிரியானதொரு அனுபவத்திற்கு ஆட்பட்டிருந்தமையால் அவ்வளவு பயமாக இல்லை. என் மனைவி தூங்கிக் கொண்டிருந்த மகளை வாரிச்சுருட்டிக் கொண்டு, "வாங்க! கீழே போயிடலாம். ஏற்கெனவே சிலபேர் கீழே போயிட்டாங்க"

'ஓரேயடியாக மேலே போவதை' தவிர்க்க இப்போதைக்கு கீழே போனால்தான் தப்பிக்க முடியும் என்பது மாதிரி பதட்டத்துடன் நின்றிருந்த அவளை அமைதிப்படுத்திவிட்டு சூழ்நிலையை ஆராய்ந்தேன். பால்கனி வழியாக கீழே எட்டிப்பார்க்க சில 'முன்ஜாக்கிரதை முத்தண்ணாக்கள்' கையில் பர்ஸோடு பதட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். இந்த மாதிரி சமயத்தில்தான் அசட்டுத்துணிச்சலோடு கூடிய நகைச்சுவை உணர்வு எனக்கு அதிகம்வரும். நகையை எடுத்துக்கலாமா? வீட்டு டாக்குமெண்டுகள் அடங்கிய முக்கிய போல்டரை எடுத்துக்கலாமா என்று அலைமோதிக் கொண்டிருந்த மனைவியிடம், ஒரு சுவாரசிய கொட்டாவியுடன் 'பால் வந்துடுச்சுன்னா காப்பி போடேன். சாப்பிட்டு வேணா கீழே போகலாம்' என்று சொல்ல அவள் என்னைப் பார்த்த பார்வை பூகம்பத்தை விட மோசமாக இருந்தது.

தொலைக்காட்சியில் ஏதாவது செய்தி வருகிறதா என்று ஆவலாக தொலைக்காட்சியை இயக்க, அட! நிஜமாகவே மும்தாஜ் ஒரு 'செமகுத்து' பாடலுக்கு 'கெட்ட ஆட்டம்' போட்டுக் கொண்டிருந்தார். அவர் ஆவேசமாக ஆடுவதினால்தான் ஒரு வேளை பிளாட் அதிர்கிறதோ என்று கூட பைத்தியக்காரத்தனமாக தோன்றிற்று. அக்கம்பக்கத்தில் விசாரிக்க மனைவி கிளம்பிய போதுதான் வயிற்றில் பாலை வார்க்கிறாற் போல் சன் டி.வியில் அந்த ஸ்கராலிங் செய்தி வந்தது. 'சென்னையில் பல இடங்களில் நிலநடுக்கம். பொதுமக்கள் பீதி'.

அப்பாடா! சென்னை முழுக்கவே நில அதிர்வு ஏற்பட்டிருக்கிறது. நம் அபார்ட்மெண்ட்டில் மட்டும் இல்லை, எனகிறமாதிரியான சுயநல ஆறுதலாக ஏற்பட்ட அந்த உணர்வை எவ்வாறு வகைப்படுத்துவது என்றே தெரியவில்லை. சென்னையில் இதர பகுதிகளில் இருக்கிற நண்பர்களுக்கு தொலைபேசியில் பேசி செய்தியை உறுதிப்படுத்திக் கொண்டேன். இன்னும் அரைமணி அல்லது ஒரு மணி நேரத்தில் இந்தபதட்டம் அடங்கிவிடும் என்று தோன்றிற்று.

மூன்றாண்டுகளுக்கு முன்னர் இரவு எட்டரை மணிக்கு இதே மாதிரியானதொரு நிலையில் சிக்கிய போது, நாங்கள் குடியிருந்த வீட்டின் சொந்தக்காரர் உடனே எங்களை கீழே வரச் சொல்லி கட்டாயப்படுத்தினார். எல்லோரும் தெருக்களில் நின்று பதட்டமாக பேசிக்கொண்டிருந்த போது நான்சொன்னேன்:

"இதோ 9 மணிக்கு சித்தி சீரியல் ஆரம்பிக்கட்டும். எல்லோரும் உள்ளே போயிடுவாங்க"

நான் சொன்னபடியே ஆயிற்று.

அதே போல்தான் இப்பவும் ஆகும் என்று நம்பி, தொலைக்காட்சியை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்த போதுதான் அந்த அதிர்ச்சியான செய்தி வந்தது.
திடீரென்று ஏற்பட்ட கடல் கொந்தளிப்பினால் மெரினாவில் கடல்நீர் சாலைவரை புகுந்துவிட்டதாகவும் நடைபயிற்சிக்காக சென்றிருந்தவர்களும், விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளும் அலைகளில் சிக்கி இறந்து போனதாகவும் சடலங்களை பொதுமக்களின் துணையுடன் அப்புறப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் வந்துக் கொண்டிருந்த செய்திகளை என்னால் நம்பவே முடியவில்லை. இயற்கைச்சீற்றங்களினால் பாதிக்கப்படாத பத்திரமான இடத்தில் தமிழகப்பகுதி அமைந்திருப்பதாக நிலவியலாளர்கள் முன்னர் எழுதியுள்ள கட்டுரைகளும், தமிழ்நாட்டின் கரையோரங்களில் மையங்கொள்ளும் புயல்சின்னங்கள் வழக்கமாக ஆந்திராவை நோக்கி வழக்கமாக திசைமாறுவதும் என்னை இந்தச் செய்தியை நம்பவிடாமல் செய்தன.

இதுசம்பந்தமாக அதிர்ச்சிகரமான ஒளித்துணுக்குகளை முதன்முதலில் காட்டி அசத்தியது, வழக்கமாக ஆமை வேகத்தில் செயல்படும் தூர்தர்ஷன்தான். அம்பாசிடர் கார் ஒன்று 'காகித ஓடம் கடலலை மேலே' என்கிற மாதிரி நீச்சல் கற்றுக் கொண்டிருந்தது. என்றாலும் சன் நியூஸ் தொலைக்காட்சிதான் இதைப்பற்றியான தொடர்ச்சியான செய்திகளை (பெஸ்டு கண்ணா பெஸ்டு, விளம்பர இடைவேளைக்கிடையில்) வழங்கிக் கொண்டிருந்தது.

தேர்தல் நேர ஓட்டு எண்ணிக்கை போல இறந்தவர்களின் எண்ணிக்கை மாவட்டவாரியாக நிமிடத்திற்கு நிமிடம் ஏறிக் கொண்டே போக வேதனையாக இருந்தது. தமிழகத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதியாக நாகப்பட்டிணம் விளங்குகிறது.

இதற்கிடையில் முன்னர் இந்தியாவில் நிகழ்ந்த நிலஅதிர்வுகள் எல்லாம் 26-ந் தேதிகளில் நடப்பதில் ஏதோ மர்மம் அடங்கியிருப்பதாக தெரிவிக்கின்றனர்.

குஜராத்தில் நிலஅதிர்வு ஏற்பட்ட தேதி: 26.01.2001
சென்னையில் கடந்த முறை நிலஅதிர்வு ஏற்பட்ட தேதி: 26.09.2001
சமீபத்திய நிலஅதிர்வு ஏற்பட்ட தேதி: 26.12.2004

இது யதேச்சையான ஒன்றா, அல்லது இதில் ஏதாவது செய்தி அடங்கியிருக்கிறதா என்று தெரியவில்லை. உலகெங்கிலும் நடந்த பூகம்ப சம்பவங்களை ஒப்புநோக்கினால் ஏதாவது தெரியலாம்.

O

எதிர் பிளாட் நண்பர் ஒருவரிடம் இதைப்பற்றி பேசிக் கொண்டிருந்த போது, அவர் சொன்ன காமெடி செய்தி ஒன்று:

'மடத்து பெரியவாள போலீஸ்காரா தொந்தரவு பண்றாளோன்னோ, அதான் தெய்வக்குத்தம் ஆகி கடலே பொங்கிடுத்து.'

அடப்பாவிகளா!

suresh kannan

Wednesday, December 22, 2004

பிரபல நேர்மையானவர்களின் மற்றொரு முகங்கள்

எல்லா மனிதர்களிடமும் கடவுள் குணமும் மிருக குணமும் நிர்ணயிக்கவியலா சதவீதத்தில் கலந்துள்ளது. எந்த சதவீதம் அதிகமோ அதைப் பொறுத்தே அவரைப்பற்றிய பிம்பமும், அனுமானங்களும் அவரைப்பற்றி மற்றவர்களிடம் ஏற்படுகின்றது.

கடவுளுக்கு அடுத்தபடியாக ஜெயேந்திரரை நினைத்திருந்த பல அப்பாவி இந்துக்கள் (மற்ற மதத்தினர் கூட) அவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட செய்தி கேட்டதும் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். ஏற்கெனவே அவரின் அணுகுமுறைகள் குறித்தான பல விமர்சனங்கள் எழுந்திருந்தாலும் அதையெல்லாம் ஒதுக்கித்தள்ளிவிட்டு அவரை பூஜித்தவர்கள் இப்போது தங்கள் எண்ணங்களை மறுபரிசீலனைக்குள்ளாக்க விரும்புகின்றனர். இன்னும் குற்றம் நிருபிக்கப்படவில்லையே என்று வாதிடுவோரும் உண்டு. சந்தேகத்தின் பிடியில் சிக்குமாறு தன் செயல்பாடுகளை அமைத்ததே ஒரு துறவிக்கு களங்கம் என்பதை ஏற்க மறுக்கின்றனர் இவர்.

இவ்வாறு பல பெரிய மனிதர்களைப் பற்றின மற்றொரு முகத்தை தரிசிக்க நேரும் போது அதிர்ச்சி ஏற்படுகிறது.

O

1950-ல் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக சில வருடங்கள் தன்னுடைய பயணத்தை நடத்திய சரஸ்வதி இதழை சிற்றிதழ் பிரியர்கள் அறியக்கூடும். இடதுசாரி இயக்கத்தை சா¡ந்த வ.விஜயபாஸ்கரன் இதை தொடங்கி 1962 வரை இதை மிகுந்த சிரமத்திற்கிடையில் நடத்தியிருக்கிறார். இவர் கம்யூனிஸ்டாக இருந்தாலும் இதை ஒரு நல்ல இலக்கியப்பத்திரிகையாகவே நடத்த முயன்றிருக்கிறார். எஸ்.ராமகிருஷ்ணன், ரகுநாதன், சுந்தரராமசாமி, ஆர்.கே.கண்ணன் ஆகியோர் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

இந்த இதழின் முக்கியமான படைப்புகள் விஜயபாஸ்கரனாலேயே தொகுக்கப்பட்டு பிரசுரமாயிருக்கிற சரஸ்வதி களஞ்சியம் என்கிற நூலை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. தனது உரையில், அந்த இதழ் ஆரம்பிக்கப்பட்ட சூழ்நிலைகளையும், இடர்ப்பாடுகளையும் விவரித்திருக்கிறார்.தான் ஒரு இடதுசாரியாக இருந்ததினால், கம்யூனிஸ்ட் பிரஸ்ஸான ஜனசக்தி அச்சகத்திலேயே இதையும் பிரசுரிக்க ஆரம்பித்திருக்கிறார், இதனால் கட்சிக்கு வருமானம் வரட்டுமே என்ற நல்லெண்ணத்தினால்.

குறுகிய காலத்திலேயே விற்பனையில் வெற்றிகரமாக விளங்கிய சரஸ்வதியின் வளர்ச்சியை 'தோழர் ஜீவா'வால் பொறுக்க இயலவில்லை. மேலும் அவர்களின் பத்திரிகையான 'ஜனசக்தி' விற்பனையில் பின்தங்கிக்கிடந்தது. இனி ஆசிரியரின் வார்த்தைகளிலேயே கவனிப்போம்.

..... முற்போக்கு இலக்கிய வாதிகளோ, இடதுசாரி இயக்கங்களோ தொடங்கிய எந்த இலக்கியப் பத்திரிகையும் ஆயிரம், இரண்டாயிரம் பிரதிகளுக்கு மேல் விற்பனையை எட்டவில்லை என்பது வரலாற்று உண்மை. சரஸ்வதியின் வளர்ச்சியைக் கவனித்து வந்த பெருமதிப்புக்குரிய மூத்த தலைவர் தோழர் ப.ஜீவானந்தம் அவர்கள் சரஸ்வதியைக் கட்சிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும் என்று நினைத்துவிட்டார்.

சரஸ்வதியில் வெளியிடப்படும் கதை, கட்டுரைகளையெல்லாம் கட்சி தலைமையிடம் காட்டி முன்னனுமதி பெற்றுத்தான் - அதாவது அவரிடம் அனுமதி பெற்று - வெளியட வேண்டும் என்று முதலில் ஆலோசனையாகக் கூறினார். அதற்கு நான் உடன்படாததால் கட்சிக் கட்டளை என்ற ரீதியிலும் கூறினார். கட்சி அங்கத்தினர் கட்சிக் கட்டுப்பாட்டுக்குள் இயங்க வேண்டும் என்றார். 'சரஸ்வதி' அரசியல் பத்திரிகையல்ல, இலக்கியப் பத்திரிகை. இலக்கிய வழிகாட்டுதல்கள் என்று கட்சி ஏதும் வகுக்கவில்லை. தவிரவும் நான் முழு நேர கட்சி ஊழியரும் அல்ல. ஆகவே கட்சிக் கட்டுப்பாட்டுக்கு இங்கே இடமில்லை என்று வாதிட்டேன். சரஸ்வதியில் வெளியிடப்படும் எந்த ஒரு கட்டுரைக்கோ, கதைக்கோ மாற்றுக்கருத்து அவருக்கு இருக்குமானால் அதையும் நான் வெளியிடத் தயாராக இருப்பதாகக்கூறி அவரது ஆலோசனையை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டேன். அது அவருக்கு ஒரு கவுரவப் பிரச்சினையாகிவிட்டது என்பது போகப் போகத் தெரிந்தது. ........

கம்யூனிஸ்டு கட்சிக்காரர்களின் ஆதரவு இந்தப்பத்திரிகைக்கு இருக்கக்கூடாது என்பதற்காக 'கட்சி உறுப்பினர்கள் இந்தப்பத்திரிகையை ஆதரிக்க வேண்டிய அவசியமில்லை' என்று வார்த்தைகளைப் பரவவிட்டதாக விஜயபாஸ்கரனுக்கு தகவல்கள் கிட்டியிருக்கிறது. இதன் விற்பனையை தடுக்க, இதற்குப் போட்டியாக ஆரம்பிக்கப்பட்டதுதான் 'தாமரை' என்றும் இந்த தொகுப்பில் தெரிவிக்கப்படுகிறது.

O

தோழர் ஜீவாவின் நேர்மையை அனைவரும் அறிவர். ஏதோ ஒரு ஊருக்கு கட்சி நிதி வசூலிக்க சென்றவர், தன்னிடம் காசில்லாமை காரணமாக பசியால் அவதிப்பட்டும் கூட நிதியிலிருந்து ஒரு பைசா கூட எடுக்காமல் பசியை பொறுத்துக் கொண்டு, கட்சி நிதியை பத்திரமாக கொண்டுவந்து சேர்த்தார் என்று அறிகிற போது மனது நெகிழத்தான் செய்கிறது. இன்னும் பல நிகழ்ச்சிகள் அவரின் பெருமையை நமக்கு தெரிவிக்கிறது.

ஆனால் மேற்குறிப்பிட்ட கட்டுரையைப் படித்தபிறகு ஜீவாவின் பிம்பத்தில் சற்றே சலனமெழுவதை தவிர்க்க முடியவில்லை.

O

முன்னாள் தமிழக அமைச்சர் கக்கனைப் பற்றி பலர் அறிவார்கள். நேர்மையின் மறுஉருவம் என்று அவரைப்பற்றி வர்ணிக்கப்படுவதுண்டு. அமைச்சராக விளங்கிய போது கூட சைக்கிள் ரிக்ஷாவில்தான் பயணமேற்கொள்ளுவார் என்று கூறப்படுவதுண்டு. தன் இறுதிக்காலத்தில் மருத்துவ உதவி கிடைக்கப்படாமல் அரசு மருத்துவமனையின் வராண்டாவில் தன் இறுதி மூச்சை விட்டவர் என்னும் போது இப்போதையை அரசியல்வாதிகளோடு இதை ஒப்பிடும் போது பெருமூச்சே விடநேர்கின்றது.

இவரைப் பற்றி முன்னாள் தேர்தல் ஆணையர் சேஷன் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறிய சர்ச்சைக்குண்டான சம்பவம் என்னை திகைக்க வைத்தது.

கக்கன் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் சேஷன் வருவாய்துறையில் உயர் அதிகாரியாக இருந்திருக்கிறார். இருவரும் கிராமப்பணி ஆய்வுக்காக குக்கிராமம் ஒன்றை நோக்கி காரில் சென்று கொண்டிருந்த போது, கக்கன் சேஷனிடம் அவர் கட்சிக்காரர் ஒருவருக்கு ஒரு வேலையை முடித்துதரும் படி பணித்ததாகவும், 'விதிகளின் படி அது சாத்தியமில்லை' என்று சேஷன் மறுத்ததாகவும், இதனால் கோபமடைந்த கக்கன் அவரை அந்த செம்மண் புழுதி எழும்பும் ரோட்டில் இறக்கிவிட்டு சென்றதாகவும் அந்தப்பேட்டியில் சேஷன் கூறுகிறார்.

இம்மாதிரியான செய்திகளில் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்புவது நியாயம்தான் என்றாலும், பாதிக்கப்பட்டவர்களுடைய குரல்களையும் நிராகரிக்கப்பதற்கில்லை. காந்தியைப் பற்றியும் இம்மாதிரியான பல சர்ச்சைகள் உண்டு. நம் நாட்டின் முதல் பிரதம மந்திரிக்கும் ஆங்கிலேயே அரசின் கடைசி ஜனாதிபதியின் மனைவிக்கும் உள்ள தொடர்பைப் பற்றி சிலர் கூறும் போது நம்பமுடியாமல் போகிறது.

எல்லா மனிதர்களும் குறைகளும் நிறைகளும் உள்ளவர்கள்தான். எவரையும் தெய்வமென்று தலையில் தூக்கிக் கொண்டாடுவதோ தெருமலமாக கருதி கீழே போட்டு மிதிப்பதோ அறியாமையின் வெளிப்பாடுகள். அவரவர்களை அந்த நிறை, குறைகளோடு ஏற்றுக் கொள்வதே நலமாக இருக்கும் என்றும் தோன்றுகிறது.


suresh kannan

Monday, December 20, 2004

வருங்கால முதல்வர் அப்பு?



காஞ்சி சங்கரராமன் கொலைவழக்கில் தேடப்பட்டு வந்த அப்பு என்கிற முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டு காஞ்சிபுரத்திற்கு கொண்டுவரப்பட்ட போது எடுக்கப்பட்டிருக்கிற படமிது. குற்றவாளிகள், தேசத்தலைவர்கள் (இரண்டிற்கும் வித்தியாசம் அதிகமில்லையோ?) மாதிரி பத்திரிகைகாரர்களுக்கு கையசைத்து போவது நமக்கு பழக்கம்தான் என்றாலும், இவர் இந்த போஸில் என்ன பேசியிருப்பார்?

சிறந்த கமெண்டுகள் எழுதுபவர்களுக்கு குலுக்கல் முறையில் த்ரிஷாவின் ப்ளோஅப் (?!) செய்யப்பட்ட படம் அனுப்பப்படும்.

suresh kannan

Thursday, December 16, 2004

நானும் என் வலைப்பதிவும்

எந்தவித முன்தீர்மானங்களோ, முன்னேற்பாடுகளோ இல்லாமலேயே என் வலைப்பதிவை ஆரம்பித்துவிட்டேன்.

'இதோ பார்யா இந்தாள்லாம் ப்லாக் தொடங்கிட்டான்' என்று மிக டென்ஷனாகி வாந்தியெடுக்க ஆரம்பித்த நம்பியும், அதைத்தொடர்ந்து ஓங்காரமிட்டு ஒலிக்கத் தொடங்கிய (ஆசிப்) சாத்தானின் வேதமும், நிர்மலா டீச்சரின் எண்ண அலைகளும் எனக்கு மிக்க மகிழ்ச்சியை கொடுத்தன. ஆக்கப்பூர்வமாகவோ, இல்லையோ, நான் ஆரம்பித்த விஷயம் சிலரை பாதித்திருக்கிறது என்னும் வகையில் உவகையே கொள்கிறேன்.

நான் இதுநாள் வரை எழுதியதை பின்னோக்கிப் பார்க்கையில் எனக்கே திருப்திகரமாக இல்லை. சில நண்பர்கள் பெருந்தன்மையுடன் மனமுவந்து 'நன்றாக இருக்கிறது' எனும் போது குற்றஉணர்ச்சி என்னை ஆட்கொள்கிறது. நான் எழுதிய கட்டுரைகளை மீண்டும் படித்துப்பார்க்கும் போது, பிச்சைக்காரன் தன் பாத்திரத்தில் எடுத்த வாந்தி மாதிரி இருப்பதை உணர முடிகிறது. (இரண்டு வலைப்பதிவுகளின் பெயர்கள் இந்த வாக்கியத்தில் வந்துவிழுந்ததை கவனித்தீர்களா?) இன்னும் சிறப்பாக எழுத வேண்டும் என்று தோன்றினாலும் நேரமின்மை ஒரு பூதாகரமான பிரச்சினையாக இருக்கிறது.
சில எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய படைப்புகளை பலமுறை திருத்தியும், மறுமுறை எழுதுவதுமாக இருப்பார்கள் என்று படித்திருக்கிறேன். அவர்களின் பொறுமையை நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது. நான் எழுதியவற்றை ஒரு முறைக்கு மேல் என்னால் படிக்க இயலவில்லை.

சரி போகட்டும்.


இந்த நேரத்தில் சில பேருக்கு நன்றி சொல்ல வேண்டியது என் கடமையாகிறது.

1) முதலில் ப்லாக்கர்.காம்மிற்கு.

பிரபஞ்சவெளியைப் போல் பரந்துகிடக்கும் இணைய உலகில் எழுதுவோர்களுக்கு ஊக்கம் தருகிறாற் போல், அவர்களுக்கென்று ஒரு இடத்தைத் தந்ததற்கு. (ஆனால் பின்னால் காசு கேட்பார்களோ என்கிற மிடில்கிளாஸ் மனப்பான்மை உடைய கேள்வியை தவிர்க்க இயலவில்லை)

2) பா.ராகவனுக்கு

பாரா. வலைப்பூவின் ஆசிரியராக இருந்த போது, இவர்கள் ஏன் இன்னும் வலைப்பதிவு ஆரம்பிக்கவில்லை? என்கிற மாதிரி கேட்டு ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அவர் குறிப்பிட்டிருந்த சில பேரில் நானும் ஒருவன். அப்போதைக்கு அதை படித்துவிட்டு மறந்து போயிருந்தாலும், அந்த விஷயம் என் ஆழ்மனதில் போய் ஒளிந்திருந்ததோ என்று இப்போது எண்ணத் தோன்றுகிறது. சில இணைய நண்பர்களும் தொடர்ந்து இந்த விஷயத்தைப் பற்றிக் கேட்டு என் மனதிற்குள் இருந்த சாத்தானை காம்ப்ளான் ஊட்டி வளர்த்துக் கொண்டிருந்தனர்.

3) தமிழ்மணம் காசிக்கு

அவர் எழுதிய இ-சங்கம கட்டுரைகளைப் பற்றி முன்னமே குறிப்பிட்டு இருந்தேன். அதை படிக்கப் போய்தான், வலைப்பதிவு தொடங்க வேண்டும் என்கிற ஆவலே எழுந்தது. அந்த கட்டுரைத் தொடரை பூர்த்தி செய்ய வேண்டுமென்று அவரைக் கேட்டுக் கொள்கிறேன்.

4) கே.வி. ராஜாக்கும், பத்ரிக்கும்.

திருமணக்கனவுகளில் மிதந்து கொண்டிருக்கும் நண்பர் ராஜாவை சிவபூஜை கரடியாக மின்னஞ்சல் மூலம் தொந்தரவுப்படுத்தியதில், அவர் சில எழுத்துரு மாற்றங்களை ஏற்படுத்தித்தந்தார். நடைபெறவிருக்கும் அவர் திருமணத்திற்கு நான் போனால், 'இந்தாளுக்கு சாப்பாட்டை போட்டு சீக்கிரம் வெளியே அனுப்புங்கப்பா, அப்புறம் கமெண்ட் பாக்சை பத்தி ஒரு டவுட் இருக்குன்னு ஆரம்பிச்சிடப் போறார்' என்று அவர் டென்ஷனாகக்கூடிய அளவிற்கு அவரை தொந்தரவுப்படுத்தியிருக்கிறேன். :)

'சன்நீயூஸ் டி.வி. ஜெயா டிவி புகழ்' பத்ரி, தன் தொடர்ச்சியான வேலைகளுக்கிடையிலும், வருகையாளர்கள் தங்கள் எண்ணங்களை தொழில்நுட்ப இடைஞ்சல்கள் இல்லாமல் பதிய, சில மாற்றங்களை ஏற்படுத்தித்தந்தார். வலைப்பதிவென்று ஆரம்பித்தால் இவரைப் போல் (உள்ளடக்கத்தில் இல்லையென்றாலும்) தொடர்ச்சியாக எழுத வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன். அந்தவிஷயத்தில் என் ரோல்மாடல் இவர்தான்.

5) வருகையாளர்களுக்கு

வலைப்பதிவுகள் பற்றி சுஜாதா ஆனந்தவிகடன் கட்டுரையில் முன்பு குறிப்பிட்டிருந்தது வலைப்பதிவுலகில் பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. நான் இந்த விஷயத்தில் வெட்கமே இல்லாமல் ஒப்புக்கொள்வேன். நான் அந்த 15 நிமிஷப் புகழ் கிடைக்குமா என்றுதான் எழுதுகிறேன். நல்லதோ, கெட்டதோ எதிர்வினையே இல்லாமல் தொடர்ந்து எழுதுவது என்னால் இயலாத காரியம். எந்தவொரு பதிவுக்கும் எதிர்வினைகள் வராத பட்சத்தில் சோர்ந்து போகிறேன். அதைக்குறைக்கும் வகையில் வருகை தந்த, தரப்போகிற அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

யாராவது விடுபட்டுப் போயிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன். இதெல்லாம் தேவையா என்று சிலர் கருதலாம். அழைத்த நேரத்தில் உதவியவர்களுக்கு நன்றி சொல்வதை என் கடமையாகவே நான் நினைக்கிறேன்.

எந்நன்றி கொன்றார்க்கும்.....

வேண்டாம் விட்டுவிடுகிறேன். நீங்கள் டென்ஷனாவது தெரிகிறது.

() () ()

இவர்கள் வலைப்பதிவு ஆரம்பித்தால் நன்றாக இருக்கும் என்று பாரா என் போன்றவர்களை குறிப்பிட்டு சொன்னது போல் நான் சில பேரை குறிப்பிட்டு சொல்ல ஆசைப்படுகிறேன்.

1) திருமலை

ராயர் காப்பி கிளப்பில் எழுதும் நண்பர். அங்கே நானொருமுறை 'எழுதுகிற விஷயங்களுக்கு யாரும் எதிர்வினை செய்ய மாட்டேன்கிறீர்களே' என்று அழுதுபுலம்பி மூக்கைச் சிந்திப் போட, அதை காணச் சகியாமல் எழுத வந்தவர். மணிரத்னம் படத்திற்கு ஒருவேளை இவர் வசனம் எழுதப் போனால் மிகச் சிரமப்படுவார் என்று எண்ணுமளவிற்கு நீ.......ளமான பதில்கள் எழுதி பிரமிக்க வைப்பவர். அவரின் கடிதங்களைப் படிக்கும் போது பழைய விஷயங்களையெல்லாம் எப்படி மறக்காமல் ஞாபகம் வைத்திருக்கிறார் என்று ஆச்சரியமாக இருக்கும். வெளியூரில் இருந்தாலும் தமிழ்நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை மிக உன்னிப்பாக கவனிப்பவர்.

2) ஆனந்த்ராகவ்

நான் இணையத்தில் நுழைந்த போது ஒரவிற்கு தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருந்தார். நானாக இருந்தால் பாங்காக்கில் இருக்கும் முக்கியமான 'அயிட்டங்களை' கவனித்துக் கொண்டிருப்பேன். ரசனையில்லாத இந்த மனிதரோ வெகுஜன இதழ்களுக்கு தன் சிறுகதைகளை அனுப்பி, முதற்பரிசுகள் பெறும் வேண்டாத பழக்கத்தை கொண்டிருக்கிறார். இவர் எழுதின நீச்சல்குளம் என்கிற நகைச்சுவை படைப்பை அலுவலகத்து தரையில் உருண்டு சிரித்து படித்தேன். வெளிநாட்டில் இருந்தாலும் தமிழ் மீது பற்று மாறாத இவரைப் போன்றவர்களைக் கண்டால் உற்சாகமாக இருக்கிறது.

3) மஸ்கட் சுந்தர்.

'ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே' என்று சைக்கிளை உருட்டிக் கொண்டு செல்வதற்கு மிகச் சரியான மனிதர். இவர் எழுதுகிற நினைவலைகள் மரத்தடியில் மிக பிரசித்தம். பாடல் பெற்ற ஸ்தலம் போல, சுஜாதா தன் கட்டுரையில் குறிப்பிடும் அளவிற்கு சுஜாதா ரசிகர். சமாதானப் புறா.

4) ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்

மடற்குழுக்களுக்கு எழுதுவதை முழுநேரமாகவும் குடும்பத்தலைவியாக இருப்பதை பகுதிநேரமாகவும் வைத்திருப்பவர். மரத்தடியின் சீத்தலைச்சாத்தனார் என்பது இவருக்கு நான் வைத்திருக்கும் செல்லப்பெயர். தமிழில் பிழை கண்டால் தன் தலையில் குட்டிக் கொள்ளாமல், தனி மின்னஞ்சல் அனுப்பி மற்றவர்கள் தலையில் குட்டுபவர்.

பட்டியலிட்டால் பதிவு இன்னும் நீண்டுக் கொண்டே போகும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். சந்தர்ப்பம் வாய்க்கும் பட்சத்தில் தொடர்வேன்.

மேற்குறிப்பிட்டவர்களையும் வலைப்பதிவர்கள் உலகத்தில் வந்து ஐக்கியமாகுமாறு அன்புடன் அழைக்கிறேன்.

(நட்புடனான உரிமை எடுத்துக் கொண்டு சிலரை கிண்டலடித்திருக்கிறேன். ஏதேனும் தவறிருந்தால் பொறுத்தருளவும்.)

suresh kannan

Wednesday, December 15, 2004

அவள் அப்படித்தான் - திரைப்படத்தைப் பற்றிய என் பார்வை

சில மாதங்களுக்கு முன்னால் நண்பர் ரஜினிராம்கி 'மூன்று முடிச்சு' போன்ற பழைய படங்களை தூசுதட்டி எடுத்து அவருடைய பார்வையை எழுத ஆரம்பித்தார். அப்போதே இந்தப்படத்தைப் பற்றிய பேச்சு வந்த போது எழுத நினைத்ததை இப்போது எழுதுகிறேன். மேலும் வண்ணநிலவனைப் பற்றிய கடந்த பதிவிலும் இந்தப் படத்தைப் பற்றி எழுதுகிறேன் என்று குறிப்பிட்டு இருந்தேன். இந்தப்படத்தை சன் டி.வியில் இரண்டொரு முறை பார்த்திருந்ததாலும் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டபடியாலும் நினைவிலிருப்பதை எழுதுகிறேன்.

() () ()

எனக்குப் பிடித்த தமிழ்த் திரைப்படங்களை மிகவும் வடிகட்டி பட்டியலிட்டால் அதில் இந்தப்படம் நிச்சயமிருக்கும். ருத்ரைய்யா என்பவர் இயக்கிய படமிது. இதற்கு முன்னால் 'கிராமத்து அத்தியாயம்' என்கிற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். என்னை அவ்வளவாக கவராத அந்தப்படத்தில், கமலின் சகோதரர் சந்திராசன் நடித்திருக்கிறார்.

அவள் அப்படித்தான் ஒரு அபூர்வமான படம். இந்தப் படத்தின் மையக்களன் மிக நுண்ணியமானது. தன்னுடன் பழகும் ஆண்களின் தொடர்ச்சியான துரோகத்தினால் பாதிக்கப்பட்டு எல்லா ஆண்களின் மீதும் வெறுப்பை உமிழும் ஒரு பெண், தன்னை அணுகும் ஒரு யோக்கியமான ஆணையும் அவ்வாறே தன் ஒவ்வாத பார்வையினால் ஒதுக்கி பின்னர் தன் தவறை உணருகின்ற கதை. இதை இயக்குநர் சொல்லியிருக்கும் விதம் நம்மை அயர வைக்கிறது.

இந்தக் கதாபாத்திரத்திற்கு அப்போதிருந்த கதாநாயகிகளில் ஸ்ரீப்ரியாவைத் தவிர வேறு யாரையும் பொருத்திப் பார்க்கமுடியவில்லை. வணிகபடங்களில் கவர்ச்சியாக வந்து போகும் இவர், இந்தப்படத்தில் இயல்பான தன் நடிப்பால் அந்த வேடத்தை நிறைவாக செய்திருந்தார். மனோரீதியாக பாதிக்கப்பட்ட நிலையில் மூர்க்கத்தனமாக தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சிகளை யதார்த்தத்திற்கு மிக அருகில் கொண்டு சென்றிருந்தார்.

கமல்தான் இந்தப் பாத்திரத்திற்கு ஸ்ரீப்ரியாதான் சரியாக இருக்கும் என்று இயக்குநருக்கு சிபாரிசு செய்ததாக அவரது பேட்டிகளின் மூலம் அறிகிறேன். ஸ்ரீப்ரியாவும் இதற்காக கமலுக்கு தன் இன்னொரு பேட்டியில் நன்றி தெரிவித்திருந்தார்.

() () ()

கமலுக்கு ஒரு ஜென்டில்மேன் கதாபாத்திரம். அந்த பெண்ணின் இறந்தகால நிகழ்வுகளை அவளின் மூலமே அறிந்தபின்னால் அவள் மீது அனுதாபம் கலந்த தன் காதலை வெளிப்படுத்துகிறார். ஆனால் ஒரு சிக்கலான சூழ்நிலையில் ப்ரியா அதை மூர்க்கமாக நிராகரிக்க, மனம் உடைந்துபோய் தன் பெற்றோர் நிச்சயித்த பெண்ணை (இதயம் நல்லெண்ணெய் சித்ரா) திருமணம் செய்து கொள்கிறார்.

ப்ரியாவிற்கு மேலதிகாரியாகவும், கமலுக்கு நண்பராக வரும் ரஜினிகாந்தின் பாத்திரம் மிக சுவாரசியமானது. நெற்றியில் விபூதி பட்டையும், கையில் மது கிளாஸீமாக "நான் என்ன சொல்றேன் மச்சான்" என்று வரும் காட்சிகள் களை கட்டுகிறது. பெண்களின் மீது ஒரு ஆணாக்கியவாதியின் பார்வையை வைத்திருக்கும் இவர் பெண்களை வெறும் போகப் பொருகளாக மட்டுமே பார்க்கிறார்.

இவ்வளவு திறமையுள்ள நடிகர், சூப்பர் ஸ்டார் என்கிற அந்தஸ்துடன் வணிக
சூழலில் சிக்கிக் கொண்டது துரதிர்ஷவசமானது.

இந்தப்படங்களின் வசனகர்த்தாக்களில் ஒருவர் எழுத்தாளர் வண்ணநிலவன் என அறிகிறேன். பெரும்பான்மையான இடங்களில் வசனங்கள் புது சவரக்கத்தி போல் மிக கூர்மையாக இருக்கிறது.

நான் மிகவும் ரசித்த ஒரு காட்சியை விளக்க முயல்கிறேன்.

கமல் தன் மீது அபிமானம் காட்டுவதை வெறுக்கும் ஸ்ரீப்ரியா, அவரை வெறுப்பேற்றும் விதமாக ரஜினியுடன் ஒரு பார்ட்டிக்கு செல்வார். அங்கே இருவரும் தனியாக இருக்கும் சூழ்நிலையில், ரஜினி தவறாக அவரை அணுக முயல, ரஜினியின் கன்னத்தில் அறைந்துவிடுவார்.

மறுநாள் ஸ்ரீப்ரியாவை சந்திக்கும் ரஜினி முந்தின நாள் நடந்த நிகழ்வைப்பற்றிய எந்தவித சலனமும் இல்லாமல் உரையாடத்துவங்க, திகைத்துப் போய் நிற்கும் ஸ்ரீப்ரியாவிடம் இவ்வாறு கூறுவார்.

"ஒரு ஆம்பளை, தனியா இருக்கற பொண்ணு கிட்ட எப்படி நடந்துகனமோ அப்படித்தான் நான் நடந்துகிட்டேன். ஒரு துணிச்சலான பொம்பள எப்படி நடந்துகனமோ அப்படித்தான் நீயும் நடந்துகிட்ட. லீவ் இட்."

() () ()

இளையராஜாவின் இசைக்கு இதில் பெரும்பங்கு உண்டு. வித்தியாசமான படமென்றாலே ராஜாவிற்கு பயங்கர மூடு வந்துவிடுமோ என்னமோ. மனிதர் பின்னியிருந்தார்.

உறவுகள் தொடர்கதை ....
பன்னீர் புஷ்பங்களே.... (கமலின் குரலில்)
அங்குமிங்கும் பாதை உண்டு, இதில் நீ எந்தப்பக்கம்...

போன்ற பாடல்கள் ராஜாவின் சிறந்த இசை வெளிப்பாடுகளில் சில.
வழக்கமான இரண்டரை மணி நேர படங்களோடு ஒப்பிடுகையில் இதன் கால அளவு சிறிது குறைவானது.

மீண்டுமொருமுறை பார்த்தால் இன்னும் சிறப்பாக எழுத இயலும் என நினைக்கிறேன்.

() () ()

இந்தப்படத்தின் இயக்குநர் ருத்ரைய்யா, சமீபத்தில் ஆனந்தவிகடன் இதழுக்கு பேட்டி அளித்திருந்தார்.

'சரியான கதை கிடைக்கவில்லை' என்று இப்போதைய தமிழ் இயக்குநர்கள் கூறுகிறார்களே? என்கிற கேள்விக்கு இப்படியாக பதிலளித்திருந்தார்.

'சிவகாசியில் இருந்து கொண்டு, தீப்பெட்டியை தேடுபவர்கள் இவர்கள்'

suresh kannan

ஒரு கற்பனை



காஞ்சி மடத்திற்கு ஏற்பட்டிருக்கிற சமீபத்திய பின்னடைவுகளைப் பார்க்கும் போது அந்த மடத்தின் 68வது பீடாதிபதியாக இருந்த சந்திரசேகர சுவாமிகள் இப்போது இருந்திருந்தால் இவ்வாறு நினைத்திருக்கக்கூடுமோ?


suresh kannan

Tuesday, December 14, 2004

பார்த்திபன், நீங்க இப்படி செஞ்சிருக்க வேண்டாம்.....

என்னமோ ஏதோன்னு சூடான மேட்டரான்னு பதறியடிச்சிட்டு ஓடி வந்தவங்களுக்கு என் அனுதாபங்கள். நீங்க இப்பவே அடுத்த பதிவுக்கு போகலாம். இது சூடான மேட்டர் இல்ல. ரொம்ப ஆறிப்போனது. ஆனா என்ன ரொம்ப பாதிச்சதுன்றதால, எப்பவோ யோசிச்சத இப்ப எழுதணும்னு தோணுச்சு.



பொதுவாகவே நடிகர், நடிகையர் சம்பந்தப்பட்ட விவாகரத்து செய்தி என்றால் அன்றைய நாள் பத்திரிகைகளின் சர்க்குலேஷன் கூடிவிடும். நான் இந்தமாதிரியான செய்திகளை கண்டவுடனே கவனம் செலுத்தாமல் அடுத்த பக்கத்திற்கு போய்விடுவேன். தினசரி நூற்றுக்கணக்கான விவாகரத்து வழக்குகள் சம்பந்தப்பட்ட செய்திகளை என் அலுவலகத்திற்கு எதிரே உள்ள உயர்நீதிமன்றத்திற்கு போகும் போது பார்க்க வாய்ப்பு கிடைப்பதாலோ என்னவோ இதில் அதிக ஆர்வமிருப்பதில்லை. நடிக, நடிகையர் லைம்லைட்டில் இருப்பதால் அவர்கள் சம்பந்தப்பட்ட செய்தி மட்டும் உடனே முச்சந்திக்கு வந்துவிடுகிறது.

என்றாலும் என்னை அதிர வைத்தது, பார்த்திபன் - சீதா விவாகரத்து செய்தி.

() () ()

பார்த்திபனை ஆரம்ப கட்டத்தில் இருந்தே கவனித்துவந்திருக்கிறேன். 'பகவதிபுரம் ரயில்வேகேட்' என்றொரு கார்த்திக் நடித்த திரைப்படம் என்று ஞாபகம். அதில் பார்த்திபன், பாகவதர் கிராப்புடன் டிராமா ஆர்டிஸ்டுகளில் ஒருவராக அப்பிராணியாக வருவார். பின்னர் தாவணிக்கனவுகள் திரைப்படத்தில் இரண்டொரு காட்சிகளில் போஸ்ட்மேன் பாத்திரம்.

(இந்தப்படத்தில் நடித்ததை பற்றி பிற்காலங்களில் அவர் பேட்டிகளில் நகைச்சுவையாக சொன்னது: இந்தப்படம் வெளிவந்தவுடன் தியேட்டரில் பார்க்க அவர் டென்ஷனாக உணர்ந்ததால் தன் தம்பியை அனுப்பி, தான் வரும் காட்சிகள் எப்படி இருக்கின்றன, மக்கள் எவ்வாறு ரசிக்கிறார்கள் என்று பார்த்துவர அனுப்பினாராம். தம்பி வந்து சொன்ன பதில்: "மேட்னி ஷோவுக்கு போனேன். நீ எந்த சீன்லயும் வரலே. ஒருவேளை ஈவினிங் ஷோவுலதான் வர்றியோ என்னமோ")

அவரின் முதல்படமான 'புதியபாதை'யை வெளிவந்த சில நாட்களிலேயே பார்த்தேன். கதாநாயகர்கள் பொறுக்கி பாத்திரத்தில் நடித்தாலும் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று ஆரம்பித்தது இந்தப்படத்திலிருந்துதான் என்று யூகிக்கிறேன். அவர் பேசின மறைமுக ஆபாச வசனங்களை பெண்கள் மேலுக்கு திட்டினாலும் உள்ளுக்குள் ரசித்தார்கள் என்றே தோன்றுகிறது.

எனக்கு அந்தப்படத்தின் டீரிட்மெண்ட் பிடித்திருந்தது. இழுத்து கட்டப்பட்ட கம்பியை போல திரைக்கதை படு ஸ்டராங்காக இருந்தது. முக்கியமாக அவரின் dialouge modulation. இப்போது வரும் நடிகர்கள் இந்த விஷயத்தில் அவரிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றே நினைக்கிறேன். கற்பழித்தவனை தேடிப் போய்க் கல்யாணம் செய்துக் கொள்கிற பிற்போக்குத்தனமான சிந்தனையை படம் உள்ளடக்கியிருந்தது என்றாலும் தன் சாமர்த்தியமாக திரைக்கதை, வசனத்தால் அந்தக்குறை தெரியாதவாறு செய்திருந்தார் பார்த்திபன். பெரும்பாலும் தனது முதல் திரைப்படத்தை ரொம்ப வருஷம் யோசித்து செய்வதினால் வெற்றி பெற்று விடும் இயக்குநர்கள், தன் இரண்டாவது படத்தில் மாட்டிக் கொள்கிறார்கள்.

டிராக் மாறி விட்டேன் என்று நினைக்கிறேன்...

சொல்லவந்த விஷயத்திற்கு வருகிறேன்.

புதியபாதை படம் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போதே இருவருக்கும் காதல் மலர்ந்தது. ஆனால் பத்திரிகைகளில் இருவரும் அதை தொடர்ந்து மறுத்துவந்தனர். சீதாவின் அப்பா (இவரும் புதியபாதையில் சீதாவிற்கு அப்பாவாக நடித்திருக்கிறார்) இந்தக் காதலை மறுத்த காரணத்தினால் இருவரும்
இதை ரகசியமாக வைத்துக் கொண்டிருக்க முடிவு செய்தனர்.
பின்பு இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டது தெரிந்த சங்கதிதான். தான் அடிக்கும் பேட்டிகளில் தன் காதல் புராணத்தை பார்த்திபன் சுவைபடக்கூறுவார். சீதாவை 'அம்மு' என்றுதான் அழைப்பதாகவும், அவர் பார்த்திபனை 'கறுப்பா' என்று அழைப்பதாகவும் கூறுவார். இது அந்தரங்கமான விஷயமாக இருந்தாலும் அவர் சொல்லுகின்ற தொனியில் இருவருக்குமிடையேயான அன்பு முழுமையாக வெளிப்பட்டிருக்கும்.

திருமணமாகி சில வருடங்கள் கழிந்தும், 'இப்போதும் என் மனைவிக்கு காதல் கடிதங்கள் எழுதிக் கொண்டிருக்கிறேன்' என்று அவர் கூறியது என்னைக் கவர்ந்தது. ஆதர்ச தம்பதிகள் என்றால் இவர்களைப் போலத்தான் இருக்க வேண்டும் என நினைத்தேன். எனக்கு திருமணமாக புதிதில் என் மனைவியிடம் கூட இந்த செய்கையை வியந்து பாராட்டி கூறினேன். இரு மகள்கள் இருந்தும், அவர் மூன்றாதவாக ஒரு அனாதைச்சிறுவனை தத்தெடுத்துக் கொண்டது என்னை நெகிழ வைத்தது. எல்லோரும் இவ்வாறாக ஒரு குழந்தையை தங்கள் வீட்டில் தத்தெடுத்துக் கொண்டால் அனாதை இல்லங்களே இருக்காது என்று அவர் கூறியது எனக்கு நியாயமாகவே பட்டது.

() () ()

அவர் படங்களின் விளம்பரங்களில் இருந்து அவர் மற்றவர்களுக்கு பரிசளிப்பது முதல் எல்லாமே வித்தியாகமாக இருக்கும். கலைஞர் பிறந்தநாள் விழாவில் அனைத்து திரைக்கலைஞர்களும் பங்கு கொண்ட போது, நேரமின்மை காரணமாக அனைவரும் ஒரு நிமிடம் மட்டுமே பேச வேண்டும் என்று அறிவிப்பாளர் தெரிவிக்க, இரண்டு, மூன்று மைக்கள் இருக்கும் அந்த பேச்சாளர் மேடைக்கு வந்த பார்த்திபன்,

'நான் ஒரு நிமிஷம்தான் பேசப் போறேன். ஆனா... ஒவ்வொரு மைக்லயும்'
என்று கூறி அரங்கத்தை அதிர வைத்தார்.

இவரது கிறுக்கல்கள் கவிதைத் தொகுதி கலைஞரால்தான் வெளியிடப்பட வேண்டும் என்று காத்திருந்து, அந்த விழாவை நடத்தினார். மேடைப் பின்னணியாக ஆயிரக்கணக்கான புத்தகங்களைக் கொண்டு ஒரு நூல்நிலையம் போல் அமைத்திருந்தது பிரமிப்பாக இருந்தது.

பாரதி திரைப்படம் வெளிவந்த போது கூட, இவருக்கு அதில் சம்பந்தமில்லாவிட்டாலும், அனைத்து தமிழர்களும் அந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்று ஒரு அறிவிப்பு விளம்பரம் இவர் செலவில் வெளியிட்டு திரையுலகினரின் ஆச்சரியம் கலந்த பாராட்டைப் பெற்றார். திருட்டு வி.சி.டி சம்பந்தமாக, தன் சமீபத்திய படமான குடைக்குள் மழை திரைப்பட வெளியீட்டு அன்று உண்ணாவிரதம் இருக்க, அதன் மூலம் அது தீயாகப் பெருகி, எல்லா திரைப்பட சங்கங்களும் அதை தொடர்ந்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு போக, அதற்கொரு தீர்வு காணப்பட, ஆனால் அதற்கான திரையுலகினரின் நன்றியறிவிப்பு விழாவில் மூலகாரணமாக இருந்த இவரை மேடையேற்றாமல் ஒதுக்க, இவர் திரைப்பட சங்க கமிட்டி உறுப்பினர் பதவியில் இருந்து விலகியது ஒரு வருத்தமான செய்தி.

மறுபடியும் டிராக் மாறி விட்டேன் என்று நினைக்கிறேன்.

இவ்வாறான ஆதர்ச தம்பதிகள் விவாகரத்து செய்கிறார்கள் என்கிற பத்திரிகை செய்தியை படித்தவுடன் மிக அதிர்ச்சியடைந்து விட்டேன். இது பொய்யான செய்தியாக இருக்கும் எனப்பட்டது. ஆனால் இருவரும் கோர்ட்டுக்கு வந்த புகைப்படத்தை பார்த்ததும் மிக வேதனைப்பட்டேன். என்ன காரணமாக இருக்கும் என்று தெரியவில்லை என்றாலும், இவ்வளவு முற்போக்காக சிந்திக்கக்கூடிய மனிதர் இதை பேசி தீர்த்துக் கொண்டிருக்கலாம் என்று பட்டது. ஏதோ என்னுடைய குடும்ப உறவினருக்கே இவ்வாறாக ஆகிப் போனது போல் பதறிப் போனேன். ஒருபக்கம், யாரோ ஒரு நடிகருக்காக இவ்வளவு வேதனைப்படணுமா என்றும் தோன்றியது. அடுத்தவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் உனக்கு ஏன் இவ்வளவு அக்கறை என்றும் கேள்வி என்னுள் எழுந்தது.

() () ()

சமீபத்தில் உயிர்மை பதிப்பகத்தினர் நடத்தின சுஜாதாவின் நூல்கள் வெளியீட்டு விழாவில் அவரை மிக அருகில் சந்தித்தேன். இதைப் பற்றி கேட்டுவிட வேண்டும் என்று மனது துடித்தது. ஆனாலும் பரஸ்பர அறிமுகமே இல்லாமல் எடுத்தவுடனே ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி கேட்பது நாகரிகமாக இருக்காது என்று விலகிவிட்டேன்.

சில காதல்கள் முறிந்து போகும் போது மனதுக்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது.

suresh kannan

Monday, December 13, 2004

புகழ்பெற்ற சாமியாராக ஆக பத்து சிறப்பு குறுக்கு வழிகள்

புகழ்பெற்ற சாமியாராக ஆக பத்து சிறப்பு குறுக்கு வழிகள்

இன்றைய தேதியில் குறுகிய காலத்தில் நிறைய செல்வம் சேர்க்க நம் சமூகத்தில் பல வழிகள் உள்ளன. கள்ளச்சாராயம் தயாரித்தல், கள்ளக்கடத்தல் பொருட்களை விற்பனை செய்வது, ரவுடியாக மாமூல் வாங்குவது, கட்டப் பஞ்சாயத்து செய்வது, போதைப் பொருட்கள் விற்பது போன்ற சமூகவிரோத செயல்களினால் பணம் சம்பாதிக்கலாம்தான் என்றாலும் அதில் உடல் மற்றும் மன பலமும், காவல் துறையினரை சமாளிக்கக்கூடிய சாமர்த்தியமும், சில சமயங்களில் பல ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டியதும், மக்களிடம் வெறுப்பையும் சம்பாதிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமிருப்பதால் அதை தவிர்ப்போம்.

மற்றபடி அரசியல், சினிமா போன்ற துறைகள் இருக்கிறதுதானென்றாலும் அரசியலுக்கு மேற்கூறிய தகுதிகள் அனைத்தும், சினிமாவுக்கு கொஞ்சம் அழகும், நாக்கு குழறுகிறாற் போல் தமிழை பேச தெரிய வேண்டியிருப்பதாலும் அதையும் தவிர்ப்போம்.

எந்தவொரு தகுதியும் இல்லாமல், அதே சமயத்தில் நிறைய பணமும் சம்பாதிக்க வேண்டும் என்று பார்த்தால்....

சாமியாராகிவிடுவது மிகச்சிறந்த வழி.

எனக்கு ஒன்றும் தெரியாதே என்கிறீர்களா? அதுதானய்யா சாமியாராக சிறப்பு தகுதி.

கீழ்க்கண்ட வழிகளை பின்பற்றுங்கள். வெற்றி நிச்சயம்.

O

1) முதலில் உங்களுக்கு வேண்டியது ஒரு புனைப்பெயர். உங்களின் இயற்பெயர் முனுசாமியோ, மண்ணாங்கட்டியோ எதுவாக இருந்தாலும் பரவாயில்லை, சாமியாரின் லட்சணத்துக்கேற்றவாறு ஒரு நீளமான பெயரை சுட்டிக் கொள்வது மிக அவசியம். அதில், யக்ஷதிக்ஷமோக்ஷானந்தா என்பது போன்ற சம்ஸ்கிருத வாசனை அடிக்கிற பெயராக பார்த்து வைத்துக் கொள்வது மிகுந்த பயனளிக்கும். பல்லங்குடிஜில்லாங்கடி சாமியார் என்பது மாதிரி வைத்துக்கொண்டால் கிராமத்து மக்களை கவரலாம். முடிவெட்டிக் கொள்ளாமல் தாடியையும், மீசையையும் மழிக்காமல் வளர்த்துக் கொண்டால் சலூனுக்கு செய்யும் செலவும் மிச்சமாகும்.

2) நீங்களே உங்களை சக்தி வாய்ந்த சாமியார் என்று சொல்லிக் கொண்டால் மக்களை நம்பவைப்பது சற்று - கவனிக்கவும், சற்றுதான் - சிரமம். எனவே ஒரு கம்பெனியில் குமாஸ்தா வேலைக்கு வைத்துக் கொள்வது போல நீங்களும் சம்பளத்திற்கு இரண்டு அல்லது மூன்று ஆட்களை வேலைக்கு வைத்துக் கொள்வது அவசியம். இது ஆரம்ப நிலையில்தான் தேவைப்படும். உங்கள் புகழ் அகிலமெங்கும் பரவிவிட்ட பிறகு நிறைய பேர் தானாகவே வந்து உங்களுக்கு சீடர்களாக விழுவார்கள். உங்கள் ஆட்களின் முக்கிய வேலை, மக்களிடையே உங்கள் புகழைப் பரப்புவது, பேருந்துகளில் செல்லும் போது, உங்களின் பேரை உரக்க குறிப்பிட்டு, தீராத வியாதி ஒன்று அவருக்கு இருந்து உங்களிடம் வந்தபிறகு முழுக்க குணமாகிவிட்டதாக பல பேர் காதில் விழுமாறு சொல்ல வைக்கலாம்.

தப்பித்தவறி எந்த ஏமாந்த சோணாகிரியாவது உங்களை சந்திக்க வந்துவிட்டால், நீங்கள் உடனே அவரைப் பார்த்து விடக்கூடாது. சுவாமிஜி தியானத்தில் இருக்கிறார் என்று உங்கள் சீடர்களை சொல்ல வைக்க வேண்டும். நீங்களே பத்து, பதினைந்து ஆட்களை வரிசையில் நிற்க வைத்து கூட்டமா வராதீங்க, வரிசையா நில்லுங்க என்று உங்கள் அல்லக்கைகளை வைத்து சத்தம் போட வைக்கலாம். கூட்டம் பெருகிவரும் நிலையில் 100ரூ டிக்கெட் என்று நுழைவுச்சீட்டு கூட அளிக்கலாம். நீங்கள் பக்தர்களை சந்திக்க வரும் போது.. மன்னிக்கவும் காட்சி அளிக்கும் போது.... வழிவிடுங்க... வழிவிடுங்க என்று இரண்டு, மூன்று பேர் உங்கள் அருகில் கத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

3) நகருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் உங்களுக்கென்று ஓர் ஆசிரமம் வேண்டும். பொறம்போக்கு இடமாக இருந்தால் கூட பரவாயில்லை. ஓலைக்குடிசை போட்டு அமர்ந்து கொண்டால், உங்கள் புகழ் பெருகி பக்தர்கள் கூடும் வேளையில் உங்களை காலி செய்ய வைக்க பயப்படுவார்கள். பிறகு உங்களின் பணக்கார பக்தர்களே உங்களை பங்களா வாங்கி அமரவைப்பார்கள். அவர்கள் செய்த பாவங்களின் குற்ற உணர்ச்சியால் அவைகளை டெட்டால் போட்டு கழுவ உங்களை நாடுவார்கள், நீங்கள் ஏதோ தேவதூதர்கள் என்று.

ஜாக்கிரதை. நீங்களே ஒரு பழைய குற்றவாளி என்று தெரிந்தால், உங்களை போட்டு மொத்திவிடக்கூடிய சாத்தியக்கூறுகளும் உண்டு. ஆனால் பழகுகிற வரைக்கும்தான் இதெல்லாம். ஒருவரையருவர் நன்கு அறிந்து கொண்டபிறகு இருவரும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவிக் கொள்ளலாம்.

4) "டேய் கய்த, நம்ம காதர் கடையில போயி பரோட்டாவும் சால்னாவும் வாங்கிகினு ரெண்டு காஜா பீடியும் வாங்கிகினு சல்தியா வாடா பேமானி" என்ற உங்கள் பழைய பாஷையையெல்லாம் ஏறக்கட்டி பரணையில் போட்டுவிட வேண்டும். இப்போது நீங்கள் சுவாமிஜி என்பதால் அதற்குரிய ஜபர்தஸ்துடன் பேச வேண்டும். 'சொல் மகனே' என்றோ 'நீ யார் என்று உனக்குத் தெரியுமா?' என்றோ 'உலகமே மாயை எனும் போது பிரச்சினைகளும் மாயைதானே' என்று மையமாக பேச வேண்டும். மேலோட்டமாக கேட்கும் போது எதுவும் புரியக்கூடாது. அப்போதுதான் நீங்கள் ஏதோ செய்தி (?!) சொல்கிறீர்கள் என்று பக்தர்கள் புரிந்துகொள்வார்கள்.

எதற்கும் ஜெயகாந்தனின் 'குருபீடம்' என்கிற சிறுகதையை படித்துவைத்துவிடுவது நல்லது. பின்பு பிராக்டிகலாக செய்ய பயனுள்ளதாக இருக்கும்.

5) மருத்துவர்களையும், வழக்கறிஞர்களையும், சாமியார்களையும் தேடிப் போகிறவர்கள் பிரச்சினை என்று ஏதாவது இருந்தால்தான் போவார்கள் என்று அடிப்படை உளவியல் சமாச்சாரம். எனவே வருகிற பக்தர்களிடம் "உன் பிரச்சினையை நான் அறிவேன்" என்று குத்துமதிப்பாக ஆரம்பிக்க வேண்டும். 'அட நமக்கு பிரச்சினை இருப்பது சாமியாருக்கு எப்படி தெரியும்' என்று வருபவன் ஆடிப் போய்விடுவான். ஆனால் உண்மையாக உங்களுக்கு எதுவும் தெரியாது என்பதால் 'எனக்குத் தெரியும்தான் என்றாலும் அதை உன் வாயாலேயே சொன்னால்தான் இறைவனிடம் நானும் முறையிடுவேன்' என்று டகுல்பாஜி வேலை ஏதாவது செய்ய வேண்டும்.

6) பி.சி.சர்க்கார், ஜதுகர் ஆனந்த் போன்ற மாஜிக் நிபுணர்களிடம் ஒரு வருடம் உதவியாளராக வேலை செய்திருத்தல் இந்த தொழிலுக்கு நல்லது. இல்லையென்றாலும் பரவாயில்லை, இப்போது நீச்சல் அடிப்பது எப்படி? என்பது வரைக்கும் சொல்லிக்கெ(¡)டுக்க நிறைய புத்தகங்கள் உள்ளன. மாஜிக் கற்றுக் கொடுக்கிற புத்தகங்களை உருப்படியாக பின்பற்றினால் ஒரளவிற்கு கற்றுக் கொள்ளலாம்.

கையில் விபூதி வரவழைப்பது, வாயில் லிங்கம் வரவழைப்பது எல்லாம் நம் முன்னோர்கள் முயற்சித்து வெற்றி பெற்று விட்டதினால் நாமும் அதை பின்பற்ற வேண்டாம். இயக்குனர் ஷங்கர் தம் படங்களில் கிராபிக்ஸில் கலக்குவது போல நீங்களும் காலத்திற்கேற்றவாறு அப்-டேட் செய்து கொண்டால்தான் பிழைக்கலாம். நீங்கள் லிங்கத்தை வாயில் இருந்து வரவழைப்பதற்கு பதிலாக, பின்பக்கமாக..... இருங்கள் அவசரப்படாதீர்கள்..

பின்புறமாக சிஷ்யகே(¡)டிகளில் ஒருவனை சிவப்பு நிற ஒளியை வீசச் செய்து உங்கள் தலையின் பின்புறம் அது பிரதிபலிக்குமாறு செய்து இறைவனிடம் பேசிக் கொண்டிருப்பதாக பாவ்லா செய்யலாம். இதையெல்லாம் நம்புவார்களா? என்று பைத்தியக்காரத்தனமாக கேட்கக்கூடாது. இதைவிட பைத்தியக்காரத்தனங்களையெல்லாம் நம் மக்கள் ஏற்கெனவே நம்பியிருக்கிறார்கள் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது.

7) சாமியார் என்று ஆகிவிட்ட பிறகு உங்களுக்கென்று ஒரு தனித்தன்மை இருக்க வேண்டும். இதற்கு உங்கள் முன்னோர்களின் ஆசிரமங்களுக்கு ஒருமுறை டிரெயினிங் விசிட்செய்து விட்டு வருவது நல்லது. பிராந்திச் சாமியார், கோழி ரத்தத்தை குடித்துவிட்டு குறிசொல்லும் சாமியார், கோழி இறகு மூலம் கடவுளிடம் ISD லிங்க் மூலம் நேரடியாக பேசும் சாமியார், வருகிறவர்களை எல்லாம் ஆலிங்கனம் செய்யும் சாமியார், தேங்காயை உங்கள் மண்டையிலேயே மொட்டென உடைத்து உங்கள் மூளைக்கோளாறை ஏற்படுத்தும்..மன்னிக்கவும் சரிசெய்யும் சாமியார், உங்களை மண்ணில் புதைத்துவிட்டு பதினைந்து நிமிடம் கழித்து உங்களை மண்ணிலிருந்து எழுப்பி உங்கள் பிரச்சினைகளை நிரந்தரமாக (?!) சரிசெய்யும் சாமியார் என்று பலவிதமான சாமியார்களைப் போல நீங்களும் ஒரு முறையை பின்பற்றுவது பயனளிக்கும்.

கணினியின் உதவியைக் கொண்டு கடவுளிடம் மின்னஞ்சல் மூலமாகவோ அவசரமென்றால் சாட்டிங் மூலமாகவோ தொடர்பு கொள்ள முடியும் என்று சொல்லிப்பார்க்கலாம். நம்புவார்கள். கணினி தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் வந்தால் என்ன செய்வதென்று கேட்கிறீர்களா? பயப்படாதீர்கள்.. உயர்நீதிமன்ற நீதிபதிகள் முதற்கொண்டு காவல்துறை அதிகாரிகள், முன்னாள் ஜனாதிபதிகள் போன்ற மெத்தப்படித்த அறிவாளிகளே சாமியார்களின் கால்களில் விழுந்து எழுந்திருப்பதால் இந்த மாதிரியான அற்பத்தனமான சந்தேகமெல்லாம் உங்களுக்கு வரக்கூடாது.

8) நான்கைந்து வெளிநாட்டுக்கார வெள்ளைக்காரர்களை வாடகைக்கு வரவழைத்து உங்கள் ஆசிரமத்தில் தங்கவைப்பது நல்லது. திரைப்பட புரொடக்ஷன் மேனேஜர்களிடம் கேட்டால் இந்த மாதிரியான வெளிநாட்டவர்களை ஏற்பாடு செய்து தருவார்கள். இப்போது திரைப்படங்களில் பாடப்படும் டூயட்களில் பின்னால் ஆடுபவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டவர்களாக இருப்பதால் அவர்களுக்கு பஞ்சமிருக்காது. நீங்கள் பக்தர்களுக்கு காட்சிதரும் போது அவர்கள் முன்வரிசையில் உட்கார்ந்து கொண்டு கைகளை உயர்த்தி கோஷம் போட வேண்டும். இதையெல்லாம் அவர்களுக்கு எப்படி சொல்லித்தருவது என்று சஞ்சலப்படாதீர்கள். அவர்கள் டிஸ்கொதே போன்ற கூட்டங்களில் பாப் இசைக்கு ஏற்ப நடனமாடி பழக்கமாகி இருப்பதால், அவற்றையே நம் வசதிக்கு மாற்றிக் கொள்ளலாம்.

9) உங்களிடம் பிரச்சினைக்கு வருபவர்களிடம் எவ்வளவு காணிக்கை வாங்குகின்றீர்களோ அது உங்கள் சாமர்த்தியம். ஆனால் பிரச்சினை தீர பரிகாரம் என்று சொல்லும் போது மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நகருக்கு வெகு தொலைவில் உள்ள ஒரு கோவிலை குறிப்பிட்டு 60 சனிக்கிழமைகள் தவறாமல் சென்று பெட்ரோல் விட்டு... மன்னிக்கவும் நல்லெண்ணைய் விட்டு விளக்கேற்றி வைத்தால் உங்கள் பிரச்சினைகள் அகன்று சுபிட்சம் ஏற்படும் என்று அளந்துவிடலாம். ஏன் இவ்வளவு நீள காலக்கெடு என்றால்...

பெரும்பாலும் இத்தனை வாரமும் சென்று வர நம் மக்களுக்கு பொறுமை இருக்காது. அவர்களுக்குத்தேவை உடனடி சுலபமான தீர்வு. அதற்காகத்தானே உங்களிடம் வருகிறார்கள். எனவே அவ்வாறு செல்ல இயலாதவர்கள் 'நம்மால் பரிகாரத்தை செய்ய முடியவில்லை. அதனால்தான் சுவாமிகளின் ஆசி பலிக்கவில்லை' என்று தங்களைத் தேற்றிக் கொள்வார்கள். குருட்டாம் போக்கில் அவர்கள் பிரச்சினை பலித்துவிட்டதென்றால் உங்களுக்கு கொண்டாட்டம்தான். உங்களுக்கு மேலும் காணிக்கை வருவதோடு, அவர்களே உங்களுக்கான பி.ஆர்.ஓக்களாக மாறி மற்றவர்களிடம் உங்கள் புகழ்பரப்பி விடுவார்கள்.

இவ்வளவு நீளமான கால பரிகாரம் சொல்வது இன்னொரு வகையிலும் நல்லது. ஏதாவது பிரச்சினையெனில் உங்களுக்கு முன்ஜாமீன் எடுக்கவோ, ஊரை விட்டு ஓடிப் போகவோ இந்த கால இடைவெளி தேவைப்படும்.

10) நாம்தான் சாமியாராற்றே, லெளதீக வாழ்க்கையில் நமக்கென்ன வேலை என்று ஆசிரமத்திலேயே உட்கார்ந்து விடக்கூடாது. சாப்பிட்டது செரிக்க, சற்று வெளியுலகிற்கும் போய்வருவது நல்லது. உங்கள் புகழ் ஓங்கிவிட்டதால், பெரிய அரசியல்வாதிகளும் உங்களுக்கு பக்தர்களாகிவிடுவதால், அப்போதைய அரசியல் சமாச்சாரத்தில் மூக்கை விட்டுப் பார்க்கலாம். உங்கள் நேரம், அது சரியாகிவிட்டால், ஐ.நா. சபைக்கு கூட உங்களை கூப்பிட வாய்ப்புகள் வரலாம். ஆனால் அரசியல்வாதிகளிடம் பழகும் போது ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. சந்தர்ப்பம் சரியில்லையென்றால் உங்களையே போட்த்தள்ளி விடுவார்கள். எப்போதும் ஊரைவிட்டு ஓடத்தயாரான நிலையிலேயே இருப்பது நல்லது.

இதெல்லாம் பிரச்சினையாக இருக்கும் போல போலிருக்கிறதே என்று தயங்குகிறீர்களா? கவலையை விடுங்கள். இதிலேயே பல டிபார்ட்மெண்ட்கள் உள்ளன. அதில் பார்த்துக் கொள்ளலாம்.

கோட் சூட் எல்லாம் போட்டுக் கொண்டு, பெயரியல் நிபுணராகி விடுங்கள். 'உங்கள் இனிஷியலை மாற்றி விட்டு JS என்று போட்டுக் கொண்டால் வாழ்க்கையே சுபிட்சமாகிவிடும்' என்று சொல்லிப்பாருங்கள். அப்பன் பேரையே மாற்றி வைத்தால் அசிங்கமாச்சே என்றெல்லாம் நினைக்காமல் நீங்கள் சொன்னபடி செய்வார்கள்.

நீலக்கல், பச்சைக்கல் என்று கூட வியாபாரம் செய்யலாம். பிளாட்பாரத்தில் விற்பவனே ராசிக்கல் மோதிரம் என்று பின்னும் போது நீங்கள் hi-tech லெவலில் செய்யலாம். போகிற போக்கில் பாறாங்கல்லை கூறு போட்டு கூட அதிகவிலையில் விற்கலாம். வாங்கிக்கொள்ள ஆள் இருக்கிறது.

இன்னுமென்ன தயக்கம். இப்போதே புறப்படுங்கள்.

suresh kannan

கணையாழியும் நானும்



கணையாழி என்ற பத்திரிகையின் பெயரை முதன்முதலில் சுஜாதாவின் கட்டுரைகளில்தான் பார்த்தேன். சிற்றிதழ்களில் மட்டுமே புழங்கும் பல எழுத்தாளர்களின் பெயர்கள் அவர் மூலமாகத்தான் எனக்கு அறிமுகமாயிற்று. பல சிற்றிதழ்கள் ஆரம்பமாகி நின்று போனாலும் இன்றும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் பழைய இதழ்களில், கி.கஸ்தூரி ரங்கனால் ஆரம்பிக்கப்பட்ட கணையாழி மிக முக்கியமானது. இன்றைக்கு இலக்கியகர்த்தாக்களாக்க அறியப்படும் பல எழுத்தாளர்களின் பயணம் இங்கிருந்துதான் தொடங்கியது. 'கணையாழியின் பரிணாம வளர்ச்சி' என்று அந்த பத்திரிகையிலேயே வெளியான, திரு.வே.சபாநாயகத்தால் எழுதப்பட்ட கட்டுரைத் தொடரின் மூலம் அந்த இதழைப் பற்றிய பழைய செய்திகளை அறிந்து கொள்ள முடியும்.

() () ()

1994 என்று ஞாபகம்.

வெகுஜன பத்திரிகைகள் போன்று கணையாழி சுலபத்தில் கிடைக்கக்கூடிய ஒன்றாக இல்லை. சென்னையின் சில முக்கியமான பகுதிகளில் மட்டுமே அந்த இதழ் கிடைத்துவந்தது. பழைய இதழ்களைப் பெற வேண்டி எங்கோ கிடைத்த ஒரு இதழின் மூலம் அதன் முகவரியை அறிந்து கொண்டு, அந்தப் பத்திரிகை அலுவலகமிருந்த திருவல்லிக்கேணி பகுதிக்கு சென்றேன். பெல்ஸ் ரோட்டில் உள்ள ஒரு டொக்கு வீட்டில் அது அமைந்திருந்தது. அப்போது கணையாழி, ஆனந்தவிகடன் புத்தக அளவில் வந்து கொண்டிருந்தது. இப்போது அமுதசுரபி, கலைமகள் அளவில் வந்து கொண்டிருக்கிறது. அசோகமித்திரன் தொடங்கி கவிஞர் யுகபாரதி வரை பல பேர் அந்தப்பத்திரிகையின் ஆசிரியர்களாக இருந்திருக்கிறார்கள்.

பழைய இதழ்களை வாங்கிக் கொண்டிருந்த போது உத்தம சோழன் என்கிற எழுத்தாளரை சந்தித்தேன். அவர் என்னை பத்திரிகைகளில் எழுதுமாறு ஊக்கப்படுத்தினார். அன்றிலிருந்து நானும் கணையாழியின் தொடர்ந்த வாசகனாகிப் போனேன்.

இந்த இதழின் ஆரம்ப கால கட்டங்களில் எழுத்தாளர் சுஜாதா, sriரங்கம் எஸ்.ஆர் என்ற பெயரில் கடைசி பக்கங்களில் எழுதிவந்ததை, கணையாழியின் கடைசிப்பக்கங்கள் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. வெகுஜன எழுத்தாளர் சுஜாதா போலல்லாமல் அவரின் வேறு ஒரு முகத்தை அங்கு பார்க்க முடிந்தது. அவர் படிக்கின்ற புத்தகங்களைப் பற்றியும், பார்த்த திரைப்படங்கள் பற்றியும், நல்ல கவிதைகளைப் பற்றியும், சங்கபாடல்களை ஆங்கிலத்தில் திறமையாக மொழிபெயர்த்த ஏ. ராமானுஜத்தைப் பற்றியும் அறிந்து கொள்ள முடிந்தது. அவர் எழுதின சில விஷயங்களால் மிகுந்த பரபரப்பும், சர்ச்சைகளும் எழுந்தது.உதாரணத்திற்கு ஒரு முறை சாகித்ய அகாடமி விருது பற்றி அவர் சொன்ன விமர்சனத்திற்கு துணைவேந்தர்களிமிருந்து கண்டனங்கள் வந்தன. ஒவ்வொரு மாதமும் வாசகர் கூட்டம் நடத்தி, அதில் கவிதைகளைப் பற்றியும், பல்வேறு இலக்கிய வடிவங்கள் பற்றியும் பல மூத்த எழுத்தாளர்கள் வாசகர்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.

() () ()

தி.ஐ¡னகிராமன் நினைவு குறுநாவல் பரிசுப் போட்டியின் மூலம் பல நல்ல எழுத்தாளர்களையும், படைப்புகளையும் அறிந்து கொள்ள முடிந்தது. சுப்ரமணியம் ரவிச்சந்திரன், எஸ்ஸார்சி, ஜானகி விஸ்வநாத், அழகிய சிங்கர், பொ. கருணாகர மூர்த்தி போன்றவர்களின் குறுநாவல்களை வாசிக்க முடிந்தது.
பல இலக்கிய சர்ச்சைகள், விவாதங்கள் இந்த இதழ்களில் நடந்துள்ளன.

இன்று உயிர்மை, தீராநதி போன்று பல இலக்கிய இதழ்கள் வந்துவிட்டாலும், இலக்கிய வரலாற்றில் அழிக்க முடியாத தடங்களை பதிவு செய்ததில் கணையாழிக்கும் முக்கிய பங்கு உண்டு.

suresh kannan

Friday, December 10, 2004

மரத்தடி குழும ஆண்டுவிழாப் போட்டி சிறுகதை

மரத்தடி குழும ஆண்டுவிழாப் போட்டிக்காக நான் எழுதி அனுப்பின சிறுகதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நன்றி மரத்தடி குழுமம்.

============================================


முயல்கள்


"போடா சோமாறி!"

தன் பேருந்தை உரசிப் போகும் ஆட்டோக்காரனை நோக்கி கத்துகிறார் ஓட்டுநர். சிக்னலில் சிவப்பு விளக்கு எ¡¢யாவிட்டாலும் வாகனங்கள் மெதுவாகவே நின்று செல்கிறாற் போல் குறுகலாக அமைந்திருந்தது அந்தச் சாலை. மனிதர்களால் அவ்வாறு ஆக்கப்பட்டது என்றும் சொல்லலாம்.
நான் வழக்கம் போல் முண்டியத்து ஏறி எனக்கு பிடித்தமான ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தேன். காற்று வருவது ஒரு புறம் இருந்தாலும், ஜன்னலுக்கு வெளியே கலைடாஸ்கோப் போல காட்சிகள் டக்டக்கென்று மாறுவதையும், விதவிதமான மனித முக பாவங்களையும் கவனிப்பது என் வழக்கமான பொழுதுபோக்கு.

திருமணமான புதிதில் ஜன்னல் இருக்கையை நோக்கி நகரப் போன மனைவியை தடுத்து, 'அங்க நான் உக்காந்துக்கறேனே' என்று மெலிதாக கெஞ்சிய போது, குறுஞ்சி¡¢ப்புடன் நகர்ந்து எனக்கு இடமளித்தாள் அவள். 'புதுப்பொண்டாட்டியை விட்டுட்டு என்னத்த வேடிக்கை பாக்கப் போறார்' என்று சி¡¢ப்பு வந்திருக்கக்கூடும் அவளுக்கு.

இப்போதும் அதே மாதி¡¢ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போதுதான் என்னை திடுக்கிட வைத்த அந்தக் காட்சியை சாலையில் பார்க்க நேர்ந்தது.
அதற்கு முன் அந்தப் பகுதியை சற்று விளக்கிவிடுதல் நலம். தினமும் அந்த பகுதியில் போக்குவரத்து நொ¢சலால் பேருந்து நெடுநேரம் நிற்கநோ¢டும் என்பதால் அந்தப் பகுதியை தெளிவாக நினைவில் இருத்திக் கொள்ள முடியும். தின,வார, மாத, பத்தி¡¢கை நடிகைகளின் இடைகளின் நடுவில் தொ¢யும் பெட்டிக்கடைக்காரனின் முகம். வியர்த்த உடலுடன் ஒரு ஆள் துணிகளை இஸ்தி¡¢ போட்டுக் கொண்டிருக்கும் சலவையகம், எப்போதும் பல் குத்திக் கொண்டே யாராவது வெளியே வந்துக் கொண்டிருக்கும் ஒரு மிலிட்டா¢ ஹோட்டல்........

அதற்கும் பக்கத்தில்தான் என்னை திடுக்கிட வைத்த காட்சி கொண்ட கடை.
'கவிதா கூல் ஸ்டோரேஜ்' என்று இறைச்சிகளை குளிர்பதனப் பெட்டியில் வைத்து விற்கும் கடை. வழக்கமாக வெளிநாட்டு குளிர்பானங்கள் அடுக்கி வைத்திருக்கும் அந்தக் கடையின் வெளியே ஒரு சிறிய கூண்டுக்குள் இரண்டு முயல்கள் இருந்தன. ஒரு அடி நீள அகலம் மட்டுமே கொண்ட அந்த சிறியக்கூண்டில் இரண்டு முயல்களுக்கு இடமில்லாமல் ஏறக்குறைய ஒன்றின் மீது ஒன்று படுத்திருந்தன.

நான் எப்பவோ ஒருமுறை தொலைக்காட்சியில் பார்த்த துறுதுறு, கொழுகொழு வெள்ளை நிற முயல்கள்தான் என் நினைவிற்கு வந்தன. ஆனால் இவையும் முழு வெள்ளை நிறத்திலிருந்தாலும் அவ்வளவு போஷாக்கில்லாமலும் சோங்கிப் போயுமிருந்தன. முயலை சமைத்து சாப்பிடுவார்கள் என்று நான் அறிந்திருந்தாலும் இறைச்சிக் கடையில் பார்ப்பது இதுதான் முதன்முறை என்பதால் அதிர்ச்சியாக இருந்தது.

விஷமக்கார குழந்தைகளை நினைவுப்படுத்தும் முயல்களை எப்படி வெட்டிக் கொன்று சாப்பிட மனசு வருகிறது என்று ஆதங்கமாக வருகிறது. விட்டால் ஒரு பொ¢ய தோட்டம் முழுக்க இங்குமங்கும் மருண்ட பார்வையுடன் ஓடி விளையாடும் முயல்களை ஒரு சிறிய கூண்டினுள் பார்க்க அவஸ்தையாயிருந்தது. சக மனிதனுடன் மற்ற உயி¡¢னங்கள் அனைத்தையும் அடிமைப் படுத்த நினைக்கும் மனித குலத்தை நினைத்து ஒரு கணம் ஆத்திரமாக வந்தது.

oOo

நானும் அசைவ உணவை சாப்பிடுபவன் என்றாலும் அதை நியாயப்படுத்த முயலாமல் ஒரு குற்ற உணர்ச்சியுடனே அதை ஒப்புக் கொள்வது வழக்கம். இதைப் பற்றிய விவாதங்கள் நண்பர்களிடத்தில் எழும் போது அதில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கிப் போய் விடுவேன். அசைவம் சாப்பிடும் குடும்பத்தில் பிறக்க நோ¢ட்டதால்தான் இதை சாப்பிட ஒப்புகிறது என்று என்னையே நான் சமாதானப்படுத்திக் கொள்வேன். இந்தப் பழக்கத்தை விட்டொழிக்கலாம் என்று நான் எடுக்கும் முடிவு, என் அம்மா கோழிக் கறிக்கு மசாலா அரைக்கும் வரைதான் நீடிக்கும். என்னதான் தினத்துக்கும் பருப்பு சாம்பார் வைத்தாலும் அசைவம் சமைக்கும் நாட்கள் மட்டும் ஒரு திருவிழா போலத்தானிருக்கும்.
சிறுவனாக இருந்த சமயங்களில்; என் அம்மா கோழிக்கறியோ ஆட்டுக்கறியோ வாங்கப் போகும் போது, அவள் வாங்கித்தரப்போகும் வேர்க்கடலைக்காக நானும் கூடப் போவது வழக்கம். பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமைகளில்தான் இது நிகழும். ஞாயிற்றுக் கிழமையும் அசைவமும் என்பது ஒருமித்த ஒரு விஷயமாகவே என்னுள் எழும்.

அசைவம் விற்கிற அந்த சந்தை சூழலே எனக்கு அவ்வளவாக பிடிக்காது. காற்றெங்கிலும் கவுச்சி நாற்றமும் இரத்த வாடையும் கூடைக்கா¡¢களும் கூச்சலும் ஓலமும் என்னுள் ஒரு ஒவ்வாமையையே ஏற்படுத்தி இருக்கின்றன். அந்த இடம் வந்தவுடன் என் கால்கள் தாமாகத் தயங்க என் அம்மாவின் முறைப்பில் பலியாடு போல் பின்னாலேயே செல்வேன். ஏறக்குறைய எல்லா கடைக்களிலும் மீனை கையால் தூக்கிப் பார்த்து கூடைக்கா¡¢களுக்கு சமமாக கத்தி பேரம் பேசும் அம்மாவை அந்த சில கணங்களில் பிடிக்காமல் போவதுண்டு.
"என்னடா பாப்பார புள்ள மாதி¡¢ சிணுங்குற. ஆக்கி வெக்கும் போது மட்டும் லவுக்கு லவுக்குன்னு முழுங்கத் தொ¢யுதுல்ல. இதைப்புடி." என்று இறைச்சி அடங்கிய பையை என் கையில் திணிக்கும் அம்மா, ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி எல்லாம் வாங்கிய பின் என் முகச்சுளிப்பை சி¡¢ப்புடன் பார்த்துவிட்டு காய்கறி பையை என்னிடம் கொடுத்து விட்டு, இறைச்சிப் பையை அவள் வாங்கிக் கொள்வாள். 'கவுச்சிக்கு காத்து கறுப்பு எதுவும் பின்னால் வரக்கூடாது' என்று ஞாபகமாக துடைப்பக்குச்சி ஒன்றை பையினுள் வைத்திருப்பாள்.

அவள் இறைச்சியை சுத்தம் செய்யும் வரை நீடிக்கும் இந்த நாற்றமும் அருவருப்பும் குழம்புக்குள் போடப்பட்ட பிறகு எவ்வளவு இவ்வளவு வாசனையாக மாறுகிறது என்பது எனக்கு ஆச்சா¢யமாகவே இருக்கும். நாக்கில் குத்தி விடக் கூடாதென்று முள்ளையெல்லாம் நீக்கி விட்டு எனக்காக மீனை எடுத்து வைத்திருக்கும் அம்மாவை பழைய படி பிடிக்க ஆரம்பிக்கும்.

oOo

பேருந்து ஹாரன் ஒலியில் என் பழைய நினைவுகளில் இருந்து மீண்டெழுந்தேன்.
பேருந்து இன்னும் அதே இடத்தில்தான் நின்று கொண்டிருந்தது. எதிரே அந்த முயல்களை மறுபடியும் திரும்பிப் பார்க்க மனமில்லாவிட்டாலும் அனிச்சையாக திரும்பிப் பார்க்கவே நேர்ந்தது. அந்த முயல்கள் என்னையே பா¢தாபத்துடன் பார்க்கிற மாதி¡¢ உணர்ந்தேன். பிரமையோ? ஒரு கதாநாயகனை போல் பஸ்ஸில் இருந்து இறங்கி ஓடி, அந்தக் கூண்டை உடைத்தெறிந்து முயல்களை வெளியேற்ற ஆசை இருந்தாலும், கையாலாகதவனாய் பத்தி¡¢கைக் கடை போஸ்டர் நடிகைளை வெறிக்க ஆரம்பித்தேன். பேருந்து நகர்ந்து சென்று அந்த முயல்கள் என் கண்ணிலிருந்து மறையும் வரை அதைகளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

வீட்டிற்கு சென்ற பின்னரும் மனம் அந்த முயல்களையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. மனைவி, மகளுடன் கூட உரையாட விருப்பமின்றி சாப்பிட்டவுடன் ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு சாய்ந்தேன். 'என்னங்க தலைவலிக்குதா?' என்று பா¢வுடன் கேட்ட மனைவிக்கு மெளனத்தையே பதிலாக தந்தேன். இவளிடம் இதைப் பற்றி சொன்னால் பைத்தியக்காரனை பார்ப்பது போல் பார்ப்பாளா என்று பயமாக இருந்தது. நாளைக்கு இதையே சொல்லி கிண்டல் செய்து சி¡¢க்க கூட நேரலாம். எதற்கு வம்பு?

ஏதோ என்னை கேட்க வந்த மகளை கூட என் மனைவி வாயில் உதட்டை வைத்து அமைதியாக இருக்கும்படி சைகை செய்ய, சின்ன வி~யத்துக்காக ரொம்பவும் உணர்ச்சிவயப்படுகிறோமோ என்ற சந்தேகம் எழுந்தது. வழக்கமாக காக்கா, நா¢ கதை சொல்லச் சொல்லி தூங்கும் மகள், அன்றைக்கு பார்த்து அம்மாவிடம் ஓரு முயல் கதை சொல்லும்மா என்று கேட்டது, தற்செயலா அல்லது எனக்கு மறைமுகமாக கடவுள் சொல்லுகிற செய்தியா என்று குழப்பமாக இருந்தது.

ஆயிரக்கணக்கான முயல்கள் என்னை துரத்திவர, ஒன்றை நான் ஆத்திரத்துடன் தூக்கியடிக்க, ஒன்று ஆவேசத்துடன் என்னை கடிக்க வர, அதன் ரோஜா நிற ஈறுகளை நான் ஆச்சா¢யத்துடன் பார்க்க, திடீரென்று பலத்த இடி சப்தம் கேட்க......

திடுக்கிட்டு விழித்துக் கொண்டேன்.

வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. அந்த முயல்கள் நனைந்து கொண்டிருக்குமா? சேசே இருக்காது. கடைக்காரன் உள்ளே எடுத்து வைத்திருப்பான்.

oOo

மறுநாள் அந்த வழியாக செல்லும் பேருந்தில் ஏறாமல் வேறு மார்க்கமாக செல்லும் பேருந்தில் ஏறினேன். பைத்தியக்காரத்தனமாக இருந்தது. யா¡¢டம் இருந்து தப்பித்துக் கொள்ள இப்படி செய்கிறேன்? அந்த வாயில்லா ஜீவன்களிடமிருந்தா? அதை காப்பாற்ற இயலாமல் குற்ற உணர்ச்சியில் தவிக்கும் என் மனச்சாட்சியிடமிருந்தா?

அலுவலகத்தில், தானாக படங்கள் மாறும் கணினியின் ஸ்கீ¡¢ன் சேவா¢ல் முயல்கள் படமும் ஒன்று வா¢சையில் வர, இதுவரை கண்ணில் படாத அந்தப் படம் இன்று என்னை ரொம்பவே உறுத்தியது. இதைப்பற்றி யா¡¢டமாவது சொல்லாவிட்டால் தலைவெடித்துவிடும் போலிருக்க, சீனியர் ஊழியரான சீனிவாசனை நெருங்கினேன்.

சீனிவாசனை பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஒரு மனிதனின் ஞாபகமே வராது. அந்த அலுவலகத்தில் உள்ள டைப்ரைட்டர், வாட்டர்கூலர், இன்னபிற அ·றிணைப் பொருட்களை பார்க்கிறாற் போலவே இருக்கும். 30 ஆண்டுகளாக யார் வம்புக்கும் போகாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கும் ஜடம். உள்ளே கழட்டிப் பார்த்தால் பல்சக்கரமும், இரும்புமாக இருக்குமோ என்று கூடத் தோன்றுவது உண்டு.

அவா¢டம் உள்ள ஒரே கெட்ட வழக்கமான வெற்றிலை வாயுடன் 'இடிஇடி' யென சி¡¢க்க ஆரம்பித்தார்.

"இங்க மனுஷன் குண்டி கழுவக் கூடத் தண்ணியில்லாம் இருக்கான். நீரு என்னடான்னா........ முயலுக்கு போய்...................... சா¢யான ஆளுய்யா ....."

என்று விட்ட இடத்திலிருந்து சி¡¢க்க ஆரம்பித்துவிட்டு தன் பேரேடுகளில் தலையை நுழைத்துக் கொண்டார். அப்படியே ஒரு லெட்ஐரை எடுத்து அவர் மண்டையில் ஓங்கி அடித்து சாகடிக்கலாமா என்று ஆத்திரம் வந்தது. ஆனால் தான் கவலைப் பட்டுக் கொண்டிருப்பதே இரண்டு உயிர்களை காப்பாற்ற முடியவில்லையென்றுதானே என்று நினைக்க சி¡¢ப்பாகவும் இருந்தது.

அன்றைக்கு சாயங்காலமும் வேறு மார்க்க பேருந்தில் சென்று வீட்டை அடைந்தேன். நான் ஏதோ கவலையாகவே இருப்பதை கவனித்த மனைவி,

"என்னங்க பண்ணுது. டாக்டர் கிட்ட வேணா போலாமா?"

"இப்ப சும்மா இருக்கப் போறியா, இல்லியா" என்று நான் போட்ட காட்டுத்தனமான கூச்சலில் குடித்துக் கொண்டிருந்த வாட்டர் பாட்டலை நழுவ விட்ட மகள் மருண்டு போய் பார்க்க, மனைவி ஒன்றும் பேசாமல் சமைலறைக்குள் செல்ல என் மேலேயே ஆத்திரமாக இருந்தது. இவ்வளவு படித்தும் இரு வாயில்லா ஜீவன்களை காப்பாற்ற இயலாத குற்ற உணர்ச்சி என்னுள் நிரம்பி வழிந்தது.

அட! இப்படி செய்தால் என்ன?

திடீரென்று மண்டைக்குள் லூசாக ஆடிக் கொண்டிருந்த ஒயர் இணைப்பு பெற்றது போல் ஒரு யோசனை வந்தது.

அந்த முயல்களை நாமே விலை கொடுத்து வாங்கி விட்டால் என்ன?
வாங்கி?...... என்று என் இன்னொரு மனம் இன்னொரு உடுப்புடன் எதிரே நின்று கேட்க, திடீர் யோசனையின் மகிழ்ச்சி நீடிக்காமல் அபத்தமாக உணர்ந்தேன்.

நான் இருக்கும் அபார்ட்மெண்டில் நாய் வளர்க்கவே அனுமதி கிடையாது. சங்க செயலாளா¢டம் வேண்டுமானால் கேட்டுப் பார்க்கலாமா? அவர் ஒரு வேளை அனுமதித்தாலும் முயல்களை நம் வீட்டில் வைத்து சமாளிக்க முடியுமா? சமயத்தில் ஒரு நபர் அதிகமாக விருந்தாளியாக வந்து விட்டாலே படுக்க தர்மசங்கடமாக இருக்கிறது. அதற்கு ஆகும் செலவுகள்.... மகள் ஸ்கூல் கட்டுவதற்கே வங்கியில் இருக்கும் சொச்ச பணத்தையே நம்பியிருக்கிறேன்.
அன்று இரவு தூங்க நெடுநேரம் ஆயிற்று.

oOo

அதிகாலையில் மனைவி என்னை சந்தோஷப்படுத்தும் முயற்சியில் "என்னங்க, சாயந்திரம் உங்களுக்கு ரொம்ப பிடிச்ச சில்லி சிக்கன் வேணும்னா பண்ணட்டுமா?" என்று சமயா சந்தர்ப்பம் இல்லாமல் கேட்க

"போய் ஒழுங்கு மா¢யாதையா காப்பி எடுத்துட்டு வா."

'என்ன ஆச்சு இவருக்கு?' என்ற முணுமுணுப்புடன் அவள் விலக, நான் முயல்களை வாங்கி நாம் வளர்க்க என்னென்ன சாத்தியங்கள் உண்டு என்று யோசிக்க ஆரம்பித்தேன். சடாரென்று என் நண்பன் நாகராஜன் நினைவு வந்தது. அவர் வீடு தாம்பரம் வண்டலூர் ஜீ உள்ளே கொலப்பாக்கம் என்கிற இடத்தில் இருக்கிறது. கிட்டத்தட்ட இரண்டரை கிரவுண்டில் பொ¢ய வீடாக கட்டியிருக்கிறார். பின்பக்கம் பொ¢ய தோட்டம் இருக்கிறது. காய்கறி பயி¡¢ட்டு அவர் தேவைக்கு போக சமயத்தில் எனக்கு கூட ஒரு மூட்டையில் அனுப்பி வைப்பார், அவர் வாகனம் இந்த பக்கம் வரும் வேளையில்.
முயல்களை வாங்கி அவா¢டம் கொடுத்து வளர்க்கச் சொன்னால் என்ன? ஏற்னெவே சில வாத்துக்களையும், கோழிகளையும், கூண்டில் சில கிளிகளையும் வளர்க்கிறார். ஆனால் முயல் வளர்ப்பாரா? கேட்டுப்பார்க்கலாமா? அவர் மனைவி ஏதாவது சொல்லுவாரோ?

மனைவி குளியலறை செல்லும் வரை காத்திருந்து தொலைபேசியை எடுத்து சுழற்ற ஆரம்பித்தேன்.

விஷயத்தை கேள்விப்பட்ட அவர் "என்னங்க இதுக்கு போயி.... இதுக்கெல்லாம் கவலைப்பட்டிங்கன்னா உலகத்துல கவலைப்படறதுக்கு ஆயிரம் விஷயமாயிடும்." என்று இலவச புத்திமதி தர ஆரம்பிக்க "இல்லங்க. ரொம்ப உறுத்தலா இருக்கு" என்று பா¢தாபமாக ஆரம்பித்து "உங்களால முடியலன்னா சொல்லுங்க. நான் வேற இடத்துல விசா¡¢க்கிறேன்." என்று அதட்டலுடன் முடித்தேன்.

"சேச்சே. உங்களுக்கில்லாமயா. தாராளமா செய்யுங்க. அதுபாட்டுக்கு தோட்டத்துல ஒரு மூலைல இருந்துட்டுப் போவுது. முயல காதை புடிச்சு தூக்கணும். தொ¢யுமில்ல. இல்ல நான் வேணா அடுத்த வாரம் ஒரு ஆள அனுப்பவா?"
அடுத்த வாரம் வரை தாங்காமல் நான் செத்துப் போய்விடுவேன் என்று தோன்றியதால் "இல்லங்க. இன்னிக்கே கொண்டு வரேன். எனக்கு அங்க ஒரு வேலை இருக்குது."

முயல்களை காப்பாற்ற ஒரு வழி கிடைத்ததில் மிக சந்தோஷமாகி உடனே வாயில் விசில் புறப்பட்டது. ஆச்சா¢யமாக கவனித்த மனைவியின் பார்வையை தவிர்க்க முயன்றேன்.

oOo

இன்று அந்த கடை இருக்கும் பக்கம் செல்லும் பேருந்திலேயே ஏறி, அந்தக் கடை தொ¢யும் வகையில் நின்று கொண்டேன். மெதுவாக சென்ற பேருந்தின் வழியாக அந்தக் கடை தொ¢ய ஆரம்பிக்க இருதயம் ஒரு முறை நின்று துடித்தது. முயல்கள் இன்னும் சோகப் பார்வையில் ஒன்றோடு ஒன்று பேசிக் கொண்டிருக்க, பக்கத்தில் ஏதோ கோஸ் இலைகள் மாதி¡¢ தூவப்பட்டிருக்க, ஆறுதலாய் உணர்ந்தேன்.

முயல்களே! கவலைப்படாதீர்கள். உங்கள் சிறைவாசம் இன்னும் சில மணிநேரம்தான். இன்று மாலைக்குள் உங்களை மீட்டு விடுவேன். அதுவரை சற்று பொறுத்திருங்கள்.

அலுவலகத்தை அடைந்ததும் பக்கத்து சீட்டில் சொல்லி விட்டு வங்கியை நோக்கி நடந்தேன். ஆமாம். இரண்டு முயல்களின் விலை எவ்வளவு இருக்கும்.? குழப்பமாக இருந்தது. நூறு ரூபாய்? இருநூறு? அட ஐந்நூறு ரூபாயே இருக்கட்டுமே. என்ன இப்ப? இந்த குற்ற உணர்ச்சியில் இருந்து தப்பித்தால் போதும். வங்கியில் என்னுடைய இருப்புக் கணக்கை விசா¡¢த்த போது குறைந்த பட்ச இருப்புத் தொகை போக சா¢யாக ஐந்நூறு மட்டுமே இருந்தது, எனக்கு ஏதோ செய்தி சொன்னாற் போல் இருந்தது. நான் சா¢யான திசையில்தான் போயக்கொண்டிருக்கிறேன்.

மகளுக்கு கட்ட வேண்டிய பள்ளி கட்டணம் நினைவுக்கு வர, அடுத்த மாதம் பைனுடன் கட்டி விட்டால் போயிற்று என்று என்னையே நான் சமாதானம் சொல்லிக் கொண்டேன். ஒரு மகத்தான கா¡¢யம் செய்யும் போது இம்மாதி¡¢யான இடைஞ்சல்கள் வரத்தான் செய்யும்.

இந்தக் கா¡¢யத்தை அலுவலகத்தில் யா¡¢டமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் போலிருந்தது. கேனப் பயல்கள். சி¡¢ப்பார்கள். 'என்ன சார். சாயந்திரம் போய் ஒரு புல்லு வாங்கினோமோ, ஐ¡லியா இருந்தோமான்னு இல்லாம... ஐந்நுர்று ரூபாய வேஸ்ட் பண்றீங்களே' என்று இந்த குடிகார பீட்டர் சி¡¢ப்பான். வேண்டாம். இடது கை செய்கிற தானம் வலது கைக்கு கூட தொ¢ய வேண்டாம்.

மாலை மேனேஜா¢டம் சிறப்பு அனுமதி வாங்கிக் கொண்டு (மச்சினிக்கு சீமந்தம் வெச்சிருக்காங்க, சார். - மச்சினிக்கு இன்னும் திருமணமே ஆகவில்லை) படபடப்பான இதயத்துடன் பேருந்து ஏறினேன். நண்பர் வீட்டிற்கு சென்று முயல்களை கொடுத்துவிட்டு நான் வீடு திரும்ப எப்படியும் இரவு 11 ஆகிவிடும்.
முயல்களை எப்படி எடுத்துச் செல்வது? அவன் கூண்டோடு கொடுப்பானா? இல்லையா? குழப்பமாக இருந்தது. சா¢. அங்கே சென்று பார்த்துக் கொள்ளலாம் என்று என்னை அடக்கிக் கொண்டேன். பேருந்தில் என் வீட்டருகே உள்ள நண்பரும் (என்ன சார் சீக்கிரம் வீட்டுக்கு கிளம்பிட்டிங்க) ஏறி என் பக்கத்தில் அமர்ந்து அவர் வீட்டில் தண்ணீர் இல்லாத குறையை புலம்பிக் கொண்டே வர, நானோ அதில் கவனமின்றி அந்த முயல்கள் ஞாபகமாகவே இருந்தேன்.

"என்னங்க. இங்கேயே இறங்கறீஙக?" என்று அறுத்த நண்பா¢டம் "இங்க கொஞ்சம் வேலை இருக்கு" என்று அந்த பேருந்து நிறுத்தம் வருவதற்கு முன்னாலேயே இறங்கிக் கொண்டேன். அந்தக் கடை எதி¡¢லேயே கூட இறங்கலாம். பேருந்து மெதுவாகத்தான் போகும். இன்று பார்த்து விரைவாக போய்விட்டால் என்ன செய்வது? சாலை வேறு காலியாகவே இருந்தது.

அந்தக் கடையை நோக்கி நகர நகர, மனம் இது வரை யோசித்ததையெல்லாம் ஒரு முறை ரீவைண்ட் செய்து பார்த்தது.

இது போல ஊ¡¢ல் உள்ள முயல்களை எல்லாம் காப்பாற்ற இயலுமா? என்னமோ ஊ¡¢ல் நீதான் ஜீவகாருண்யம் மிக்கவன் போல் நடந்து கொள்கிறாயே? இதுவரை எத்தனை கோழி, ஆடுகளை விழுங்கியிருப்பாய், அதெல்லாம் உயிர்கள் இல்லையா? மகள் பிறந்த நாளைக்கு இருநூறு ரூபாய்க்கு கவுன் வாங்க மூக்கால் அழுதவன், இதுக்கு ஐநூறு ரூபாய் செலவு செய்வாயா?

என்று பல்லாயிரம் கேள்விகள் கேட்ட மனதை

இல்லை. இதுதான் முதலும், கடைசியும். இதுவரை எப்பவாவது இப்படி தோணியிருக்குதா? இனிமேல் அசைவம் சாப்பிடுவதை கூட விட்டுவிடுவேன். ஒரு உயிரை உருவாக்க முடியாத மனிதனுக்கு கொல்ல எந்த உ¡¢மையும் கிடையாது.

என்றெல்லாம் இரட்டைநிலையில் யோசித்தபடி, மோதியிருக்க வேண்டிய பைக்காரனை மயி¡¢ழையில் தவிர்த்தேன்.

"பாத்துப் போங்க சார்."

அந்த கடையை நெருங்க நெருங்க ஒரு நல்ல கா¡¢யம் செய்யப் போகும் மகிழ்ச்சியில் மனது நிறைந்தது. இதுவரை செய்த பாவத்திற்கெல்லாம் இந்த கா¡¢யம் ஒரு வடிகாலாக இருக்கப் போகிறது.

அந்த கடையை மிகவும் நெருங்கி விட்டேன்.

ஆனால் என்னை திடுக்கிட வைக்கும் வகையில் அந்த முயல் கூண்டு காலியாக இருந்தது.

suresh kannan

Thursday, December 09, 2004

எனக்குப் பிடித்த சிறுகதைகள் - 1

வண்ணநிலவன் - உள்ளும் புறமும்

வண்ணநிலவனைப் பற்றின அறிமுகம் தேவையில்லை என்றாலும் அறியாதவர்களுக்காக:

தமிழில் நிறைய சிறுகதைகளும், சில நாவல்களும், சில கவிதைத் தொகுதிகளும் எழுதியிருக்கிறார். கடல்புரத்தில் என்கிற இவரது சிறந்து நாவல் தொலைக்காட்சியில் படமாக்கி ஒளிபரப்பப்பட்டது. 'அவள் அப்படித்தான்' என்கிற திரைப்படத்தின் வசனகர்த்தா. (இந்தப் படத்தைப் பற்றிய என் பார்வையை பிறகு எழுதுகிறேன்) துர்வாசர் என்கிற பெயரில் இவர் துக்ளக்கில் எழுதிய பல கட்டுரைகள் ஆக்ரோஷமானவை. திருநெல்வேலி மண்ணின் மணம் இவரது படைப்புகளில் இயல்பாக கமழ்வதை நுகர இயலும்.

இவர் படைத்ததில் எனக்குப் பிடித்த சிறுகதைகளில் ஒன்று

உள்ளும் புறமும்

O

ஓரு குடும்பத்தலைவி தன் கணவனை சரமாரியாக திட்டுகிற மங்கலகரமான ஓசையுடன் (?!) இந்தக் கதை ஆரம்பிக்கிறது.

'என்ன, நான் சொல்லுறது காதுல விழுந்திச்சா என்ன? .... ஒங்களுக்குப் பொழுது விடிஞ்சா பேப்பருக்குள்ள தலையைப் பூத்துக்கிடதுக்குத்தான் நேரம் சரியா இருக்குது. ... ரெண்டு நாளா பிள்ளை கண்ணு முழிக்க முடியாமக் கெடக்குது......
.... நான் என்னத்தக் கத்தி என்ன பண்ண? ஒங்க காதுல விழவா போகுது? பொழுதன்னிக்கும் பேப்பரு! பேப்பரு! அந்த மாயப் பேப்பருல என்னதான் இருக்கோ?..

என்று அந்த மனைவியின் ஆற்றாமையுடன் கூடிய வசவு ஒரு பெரிய பத்தி அளவிற்கு நீள்கிறது. ஆனால் இதுவே இந்த சிறுகதைக்கு ஒரு சுவாரசியமான ஆரம்பத்தைக் கொடுப்பதை பார்க்கலாம். யார் அவள், எதற்காக தன் கணவனை திட்டுகிறாள் என்கிற ஆர்வத்தை நமக்குள் ஏற்படுத்துகிறது.

ஆனால் அந்த உரையாடலை தொடர்ந்து கவனிக்கும் போது நமக்குள் அந்த கணவரைப் பற்றிய ஒரு பிம்பம் மனதிற்குள் உருவாகிறது. இந்த மாதிரிப் பிரகஸ்பதிகளை பல வீடுகளில் பார்க்க முடியும். வெங்காயம் என்று சொல்லி முடிப்பதற்குள், உப்புமாக்கு அரியணுமா? குழம்புக்கா? என்று அருவாள்மனையுடன் ரெடியாகும் கணவன்மார்களுக்கு மாறாக, வீட்டில் பிரளயமே நடந்தாலும், ஜப்பானில் நடந்த பூகம்பத்தைப் பற்றி பேப்பருக்குள் தலையை நுழைத்துக் கொண்டு படிப்பவர்கள் இவர்கள். ஜார்ஜ் புஷ்ஷின் பெட்ரோல் ஆசையை கண்டித்து பக்கத்து வீட்டுக்காரருடன் காரசாரமாக பேசும் இவர்களுக்கு வீட்டில் மண்¦ண்ணைய் தீர்ந்து போய் இரண்டு நாட்களாகியிருக்கும் விஷயம் தெரியாது.

அதையும் கதாசிரியரே தன் கதையின் ஊடாக சொல்கிறார்.

......யோசித்துப் பார்த்தால் நீலா கோபப்படுவதிலும் தவறு இல்லையென்றுதான் அவனுக்குத் தோன்றியது. அவன் பொறுப்பில்லாமல்தான் இருக்கிறான். வீட்டில் என்ன நடக்கிறது என்றே அவனுக்குத் தெரியாது. கடைக்குப் போய் ஒரு சாமான் வாங்கி அறிய மாட்டான். சம்பளத்தை அவள் கையில் கொடுப்பதோடு சரி. அவனுக்கு முன்னாள் பிரதமரின் தவறுகளைப் பற்றித் தெரியும். இந்நாள் பிரதமரின் அரசியல் பலமின்மையைப் பற்றித் தெரியும். சத்யஜித்ரேயின் படங்களை ரசிக்கத் தெரியும். எவ்வளவு காலமானாலும் கு.பா.ரா.வின் 'அகலிகையை' மறக்க முடியாதிருக்க முடிகிறது. ஆனால் வீட்டைத்தான் கவனிக்க முடியாமல் போய்விட்டது. குடும்பப் பொறுப்பு தெரியாமல் போய்விட்டது. தான் ஏன் இப்படியானோம் என்று அவனுக்கே புரியவில்லை. சமயங்களில், தான் ரொம்பச் சுயநலமானவனோ என்று தோன்றும். ......

கதையின் போக்கிலேயே அவன் ஒரு பத்திரிகையாளன் என்று வாசகனுக்கு தெரிவிக்கப்படுகிறது. சாயந்திரம் குழந்தையை டாக்டரிடம் அழைத்துச் செல்வான் என்று எதிர்பார்க்கிற அவளுக்கு, வீட்டுக்காரரின் தொலைபேசி மூலம், ஒரு ரிப்போர்டிங்குக்காக அவன் வெளியூருக்கு போக வேண்டிய செய்தி சொல்லப்படுகிறது.

எப்பவும் நடப்பதுதான் என்று அவளுக்குப் புரிந்தாலும், தன் எதிர்ப்பை தெரிவிக்க அவனுடன் பேசாதிருக்க முயல்கிறாள். சமையலுக்கு நடுவில் அழுகிற குழந்தையை அவன் சமாதானப் படுத்தவரும் போது கூட அந்த உதவியை உதாசீனப்படுத்துகிறாள்.

ஊடல் இல்லாவிட்டால் என்ன அது கணவன், மனைவி உறவு? அந்த நிலையிலும் அவளை ரசித்துப் பார்க்கிறான்.

..... குழந்தையைத் தூக்கி கொண்டு அவள் நின்ற விதம் ரொம்பப்பிடித்திருந்தது. அவளுடைய பின்புற பிடரி மயிர்ச் சுருள் ஜன்னல் பக்கமிருந்து வீசிய காற்றில் சுருண்டு பார்க்க அழகாக இருந்தது. அவள் நின்றிருந்த விதம் ஏதோ ஒரு ஓவியம் போலிருந்தது. ....

O

பத்திரிகை வேலை அவனுக்குப் பிடிக்கவில்லை. தானே சரியில்லாத போது வேறு எவனையோ விமர்சனம் செய்ய என்ன உரிமை இருக்கிறது என்று அலுத்துக் கொள்கிறான். என்றாலும் போயாகணுமே? அலுவலகத்திற்கு நேரமாக, குளிக்க கிளம்புகிறான். லோயர் மிடில்கிளாஸ் வீடுகளின் குளியலறைகளும், அவர்களும் மனோபாவங்களும் தனிதான்.

.... பாத்ரூம் கதவைச சாத்திக் கொண்டு போட நேரமாகியது. அந்தக் கொண்டி தகரக் கதவோடு சேர்ந்து சுற்றிக் கொண்டே இருக்கும். பல மாதங்களாக இப்படித்தான் இருக்கிறது. பாத்ரூமில் குளிக்கிற எல்லோருமே இந்தக் கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள். அந்த நட்டை முறுக்கினால் போதும். அது அசையாமல் நின்றுவிடும். தானே அதைச் செய்ய வேண்டுமென்று பல நாள் நினைத்திருக்கிறான். ஆனால், செய்ததில்லை. அவனிடம் ஒருவிதமான கூச்சம் உண்டு. அவன் அந்த நட்டை முறுக்குவதை அகெளவரமாக நினைக்கவில்லை. அவன் அதைச் செய்யும் போது யாரும் பார்க்கக்கூடாது என்று நினைத்தான். குறிப்பாகப் பெண்கள் பார்த்துவிடக்கூடாது. ஞாயிற்றுக் கிழமை சாயந்தரம் எல்லோரும் டி.வி. பார்க்கிற நேரத்தில் அந்தக் கொண்டியைக் கதவோடு சேர்த்து முறுக்கி விடலாம் என்று அதற்கு ஒரு மார்க்கங்கூட கண்டுபிடித்து வைத்திருந்தான். ஆனால் காரணம் சொல்ல முடியாமலே அந்தக் காரியம் நழுவிக் கொண்டிருந்தது.......

குளித்து முடித்து தன் போர்ஷனுக்குள் நுழைபவனுக்கு, டிபன் பரிமாறப்பட்டு தயாராக வைத்திருப்பதை காண முடிகிறது. குழந்தை தொட்டிலில் தூங்கிக்கொண்டிருக்கிறது. மனைவியை கூப்பிட்டுப் பார்த்தவன் அவள் இல்லாததை உணரவே, எப்பவாவது வரும் அந்தப் பயம் வருகிறது. கோபித்துக் கொண்டு பிறந்த வீட்டிற்கு போய்விட்டாளா என்று அசட்டுத்தனமாக யோசிக்கிறான். பிறகுதான் கீழ்வீட்டுக்காரர் மூலம் தெரியவருகிறது, இட்லிக்கு தொட்டுக் கொள்ள மிளகாய்பொடிக்கு எண்ணைய் இல்லாததால் அவசரமாக வாங்கிவரப் போயிருக்கிறாள் என்று.

கதை இவ்வாறு முடிகிறது.

... உள்ளே வந்து சாப்பிடுவதற்காகப் பெஞ்சில் உட்கார்ந்தான். அப்போதுதான் தட்டின் ஒரு ஒரத்தில் எண்ணெய் விடுவதற்குத் தயாராக, நீலா மிளகாய்ப் பொடியைக் குழித்து வைத்திருப்பதைப் பார்த்தான். எதிரே எண்ணெய் பாட்டிலுடன் நீலா அவசர அவசரமாக வந்து கொண்டிருந்தாள்.

O

முணுக்கென்றால் விவாகரத்துக்கு விண்ணப்பிக்கும் மேலை நாடுகளைப் போலலல்லாமல் இந்தியக் குடும்பங்கள் காலங்காலமாக வெற்றிகரமாக விளங்குவதற்கு இந்தமாதிரியான சகிப்புத்தன்மை உடைய பெண்களின் மனோபாவமே காரணம். ஆண்கள் நெஞ்சை நிமிர்த்துக் கொண்டு வெளியில் உலாவருவது, பெண்கள் தலையைக் குனிந்து கொண்டு செல்வதால்தான் சாத்தியமாகிறது. ஆனால் இதைச் சொல்லியே பல காலம் அவர்களை அடிமைப்படுத்தி வைத்துவிட்டோம் என்கிற குற்ற உணர்வையும் தவிர்க்க இயலவில்லை.

இந்தக் கதையின் ஆதாரமே அந்த கணவன், மனைவியின் அடிப்படை காதல்தான். எந்த சச்சரவுகள் இருந்தாலும் இந்த இழை அறுந்து போகாமலிருக்கும் வரை குடும்ப அமைப்பின் அஸ்திவாரம் மிக பலமாகவே இருக்கும். ஆனால் நாம் அந்த அன்பை வெளிப்படையாக தெரிவிக்கிறோமா என்றால் இல்லை. அன்போ, பாசமோ, ஆண்களின் அழுகையோ மனதிற்குள்ளேயே பூட்டிக் கொண்டு வைத்திருப்பதே நம் மரபாக இருக்கிறது. பெற்றோருக்கு பயந்து கொண்டு, மனைவியின் முகத்தை சரியாக பார்க்காமலேயே எட்டுப்பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டிருப்பவர்கள் பலர் அக்காலத்தில் இருந்துள்ளனர்.

மனைவியின் மீது அன்பை வெளிப்படுத்தினால், அவள் தனக்கு பணிந்து நடக்கமாட்டாள் என்றுகூட சில பிற்போக்குவாதிகள் யோசிக்கிறார்கள்.

மேற்கூறியவற்றின் ஆதார கருத்தை எந்த சேதமுமில்லாமல் இந்தக் கதை வெளிப்படுத்துவதினாலேயே இது எனக்கு பிடித்த கதைகளின் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது.


suresh kannan

Wednesday, December 08, 2004

ஜெயேந்திரரும் 'உண்மை'யும்

இப்போது ஜெயேந்திரர் கைது பற்றிய பரபரப்பு சற்றே அடங்கியிருக்கிறது. ஆனால் இது நீறுபூத்த நெருப்புதான். அவரின் ஜாமீன் மனு மீதான விசாரணையின் போதோ, வேறு யாராவது அவர் மீது பரபரப்பு புகார் கொடுத்தாலே இது மறுபடியும் பற்றிக் கொண்டுவிடும். வீரப்பன் என்கிற பெரிய சுறாமீனை இழந்துவிட்ட பத்திரிகைகாரர்களுக்கு ஜெயேந்திரர் என்கிற திமிங்கலம் அவர்களின் தீராப்பசியை தணிக்கக்கூடும்.

O

இந்த நிலையில் நண்பரொருவர் ஒருவர், திராவிட கழகத்தால் நடத்தப்படுகின்ற 'உண்மை' என்கிற இதழை படிக்கக் கொடுத்தார். நான் எப்போதுமே இந்த மாதிரியான சார்பு நிலைப் பத்திரிகைகளையும், புலனாய்வுப் பத்திரிகைகளையும் படிப்பதில்லை. செய்திகள் உண்மைக்கு மாறாகவும், மிகைப்படுத்தப்பட்டும், திரித்து எழுதப்பட்டுமிருக்கும் என்பது என் அனுமானம்.

என்றாலும் இந்த பரபரப்பான நிலையில், திராவிட கழகப்பத்திரிகையில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்கிற ஆவலில் வாங்கிப் படித்தேன். இப்போதுதான் இந்தப் பத்திரிகையை பார்க்கிறேன். வழக்கமான பகுதிகள் எல்லாம் ஒரு அறிவிப்பின் மூலம் ஒத்திப் போடப்பட்டு, முழுக்க முழுக்க ஜெயேந்திரரைப் பற்றின செய்திகளும், காஞ்சி மடத்தைப் பற்றிய காரசாரமான விமர்சனங்களும் அடங்கியிருக்கிறது.

ஆதிசங்கரரால் தோற்றுவிக்கப்பட்டது இந்தியாவின் நான்கு திசைகளிலும் நான்கு மடங்கள்தான் என்றும் சிருங்கேரி மடத்தின் கிளையாக (?!) தோற்றுவிக்கப்பட்டதுதான் காஞ்சிமடம் என்றும் ஆதாரங்களுடன் நிறுவப்பட்டிருக்கிறது.

எல்லாவற்றையும் விட எனக்கு, கொலை செய்யப்பட்ட சங்கரராமன் ஜெயேந்திரருக்கு எழுதிய பல கடிதங்களில் ஒரு கடிதம் மறுபிரசுரம் செய்யப்பட்டிருப்பது, சுவாரசியமானதாக இருந்தது. ஜெயேந்திரர் போன இடமெல்லாம் எவ்வாறு பாழானது ஒரு பட்டியல் போடப்பட்டிருக்கிறது.

O

1) தாங்கள் தலைக்காவேரிக்கு தலைதெறிக்க ஓடீனீர்கள். காவேரி தமிழ்நாட்டில் மட்டுமல்ல கர்நாடகத்திலும் வறண்டது.

2) ஒரே இந்து சாம்ராஜ்யம் நேபாளத்திற்கு சென்றீர்கள். இராஜ வம்சமே பூண்டற்றுப் போனது.

3) எல்லா நதிகளும் மகாமகத்து கும்பகோணம் வருவதாக ஐதீகம். தங்கள் இருவரின் திருப்பாதம் பட்ட விசேஷம் கும்பகோணத்தில் கோர தீ விபத்தில் ஒரு பாவமும் செய்யாத பக்தர்கள் மரணம்.

4) கொலைப்பாதகம், குரு துரோகம் புரிந்த சைவமட இளவரசுகளுக்கு ஆதரவு தந்து அடைக்கலம் கொடுத்தீர்கள். இன்றைக்கு ஒருவர் சிறையில். ஒருவர் நடுத்தெருவில்.

5) தங்களுடன் கைலாச யாத்திரை செய்த ராஜகோபால் காரக்`த்தில்

6) தற்போது துந்த கிணற்றில் தூர்வாரும் வேலையாக நஷ்டத்தில் இயங்கும் 'தமிழ்நாடு ஆஸ்பத்திரி' ஸ்வீகாரம் செய்துள்ளீர்கள். ஏற்கெனவே குழந்தைகள் ஆஸ்பத்திரியில் 'நல்ல' (அவ) பெயர்' நிர்வாகிகளுக்குள் கருத்து வேறுபாடு.

7) வைஷ்ணவத் தல திருப்பதியில் தலையிட்டு குளறுபடி செய்து அவப்பெயர்.

8) சைவத்தில் தங்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை.

9) கெளமாரத்தில் பழனியில் நூதன பிரதிஷ்டை செய்த விக்ரகம் தற்போது கேட்பாரற்று கிடக்கிறது.

10) தங்கள் முயற்சியால் கொண்டு வரப்பட்ட மதமாற்றச் தடைச்சட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இதற்கெல்லாம் என்ன காரணம்? தங்களிடம் ஆன்ம பலம் அறவே இல்லை. ராவணன், அர்ச்சுனன் போல் காஷாயம் தங்களுக்கு ஓர் வேடம். தங்களின் தவறான செயல்பாடுகள் ஸ்தாபனத்தை பாதிக்கிறது. ஸ்தாபனத்தின் நன்மைக்காக தனிமனிதர்களைப் பலியிடுவதில் தவறில்லை.
.... என்று அந்தக்கடிதம் நீள்கிறது.

O

மேற்கண்ட பத்திரிகையை படிக்கக் கொடுத்த நண்பரே பேசத்துவங்கினார்.

"என்ன இருந்தாலும் ஜெயேந்திரர் மகான்தான். எவ்வளவு ஆச்சாரமாக இருந்திருக்கிறார்?..."

மனிதர் ஏதோ வில்லங்கமாக சொல்லப் போகிறார் என்பதால் ஏதும் பேசாமல் அமைதி காத்தேன்.

"அவர் மீது பாலியல் புகார் கொடுத்திருக்கிற மற்றும் சம்பந்தப்பட்டிருக்கிற பெண்மணிகளையும் பாருங்கள். மனிதர் அவருடைய இனத்தவர்களை சேர்ந்தவர்களையே தேர்ந்தெடுத்திருக்கிறார். என்ன ஆசாரம்... என்ன ஆசாரம்?"

நான் திகைப்புடன் அவரைப்பார்த்துக் கொண்டு நின்றேன்.

"ஆனாலும் சொல்ல முடியாது. சுவாமிகள் தலித் மக்களையும் மேம்படுத்துகிறேன் என்று அந்தப் பகுதி மக்கள் இருக்கும் பகுதிகளிலும் சென்றிருக்கிறார். இன்னும் அங்கிருந்து கூட பாலியல் புகார்கள் வரலாம்...

என்று அவர் தொடரவே, இதற்கு மேல் இங்கு இருந்தால் வம்பு என்று நான் நடையைக் கட்டினேன்.

suresh kannan

இரண்டு ரொட்டிகளும், ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலும்

தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்
இந்த ஜகத்தினை அழித்திடுவோம்.

பசி என்கிற உணர்ச்சியை உக்கிரமாக உணர்ந்தவனால்தான் இவ்வாறு எழுத முடியும். தன்னைவிடவும் மற்றவனுக்காக அதிகம் கவலைப்பட்டிருக்கிறான் பாரதி. அதனால்தான் அவனால் இவ்வாறு எழுத முடிந்தது. ஆனால் இந்த வரிகள் பல தடவை கட்டுரைகளிலும், பட்டிமன்ற மேடைகளிலும் மறுமறுபடி சொல்லப்பட்டு, இந்த வரிகளின் வீரியம் இழந்துவிட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது. எத்தனை பேரால் இதனை அதன் முழுஅர்த்தத்துடன் விளங்கிக் கொள்ள இயலும்? 'என்னது, ஒருத்தன் பட்டினியா இருந்தா ஜகத்தை அழிக்கணுமா? வன்முறையா இருக்குதே?' என்று யோசிக்கும் மேல்தட்டு குடிமக்களால் இதை நிச்சயம் புரிந்து கொள்ள முடியாது.

சமீபத்தில் பசிப்பிணியின் கொடுமையை முழு தீவிரத்துடன் உணரக்கூடிய சம்பவம் நிகழ்ந்தது.
O

இரண்டு நாட்களுக்கு முன் ஒரு வாடிக்கையாளரை சந்திக்க அண்ணாசாலையில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலின் லாபியில் காத்திருக்க நேர்ந்தது. கொடுமையான வெயிலைக்கூடிய மதிய நேரம். மணி இரண்டு இருக்கும். காலை நேர அவசரத்தில் இரண்டு ரொட்டிகளை மட்டுமே விழுங்கி விட்டு அலுவலகத்திற்கு கிளம்பி இருந்ததால் பயங்கர பசி. பணிஅழுத்தத்தின் காரணமாக நடுவில் வேறு எந்த உணவையும் சாப்பிட நேரமில்லை. இந்த நிலையில்தான் அங்கே காத்திருந்தேன்.

உள்ளே எனது வாடிக்கையாளர் கலந்து கொண்டிருந்த ரோட்டரி மீட்டிங் முடியும் தறுவாயில் மதிய உணவு பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த உணவுகளின் மசாலா வாசனை பசியுடன் வெளியே உட்கார்ந்திருந்த என்னை வெறுப்பேற்றியது. பக்கத்தில் எங்கேயும் வெளியில் போய் தேநீர் கூட அருந்த முடியாத நிலைமை. அவர் எந்த நேரமும் வெளியே வரலாம். அப்போது விட்டுவிட்டால் விளம்பர வடிவமைப்பு தொடர்பாக அவரின் ஒப்புதலை பெற முடியாமல் போய்விடும். மனிதர் சாயங்காலமே ஜெர்மனி போய் விடுவார். அப்படி ஏதும் நடந்தால் அலுவலகத்தில் என்னைக் காய்ச்சி விடுவார்கள். விருந்து நடந்துக் கொண்டிருந்த அரங்கின் வாசலையே கண்கொத்தி பாம்பாக பார்த்துக் கொண்டிருந்தேன்.

இந்த ஐந்து நட்சத்திர ஓட்டல்களுக்குள் நுழைந்தவுடனே இயல்பாக ஏற்படும் அந்த மெல்லிய தாழ்வுமனப்பான்மையை தவிர்க்க முடிவதில்லை. என்னமோ ஆக்ஸ்போர்டில் டிகிரி முடித்தவன் மாதிரி 'மூத்ரம் போற எடம் எங்கப்பா?' என்று கேட்பதற்கு கூட ஆங்கிலம்தான் கேட்க முடிகிறது. நாமே தப்பித்தவறி தமிழில் பேசினால் கூட, தமிழ்நாட்டில் ஓட்டல் நடத்தி பிழைக்கிற அவன்கள், நம்மை வேற்று கிரகத்து மனிதர்கள் போல பார்க்கின்றனர்.

எங்கேயும் நகர முடியாத நிலையில், அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் செடியின் தொட்டியில் சிறுநீர் கழிக்கலாமா என்று ஒரு சர்லியசத்தனமான யோசனை வந்தது. யாராவது கேட்டால்கூட 'செடிக்கு தண்ணி ஊத்தாம காயவெச்சிருக்கீங்களே?' என்று சத்தாய்க்கலாம் போலவும் இருந்தது. ஆனால் இதெல்லாம் டீக்கடையில்தான் செல்லுபடியாகும் என்பதாலும், திடகாத்திரமான வாயிற்காப்போன் பின்னால் கூட்டிக் கொண்டு போய் கும்மி விடுவான் என்பதாலும் மூடிக் கொண்டு அமர்ந்திருந்தேன்.

பசி... பசி.... பசி....

கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் கழித்து வாயில் பீடா உப்பலுடன் மனிதர் வந்தார். வெளியே வந்தபிறகும் யாரிடமோ மிக தோழமையாக சிரித்து பேசிக் கொண்டு இருந்தார். பல்லைக்கடித்துக் கொண்டு காத்திருந்தேன். ஆனால் மனதிற்குள் அவரின் பத்து தலைமுறையை திட்டித் தீர்த்தேன். அசுவாரசியமாக என்னைப் பார்த்தவரிடம் வந்த விஷயத்தை விளக்குவதற்கு பத்துநிமிடம் ஆனது. 'நீங்க சாப்டீங்களா?' என்று ஒரு பேச்சுக்காவாவது கேட்பார் என்று எதிர்பார்த்தேன். பெரிய மனுஷன் பெரிய மனுஷன்தான்; கேட்கவில்லை. வெளியில் வந்து ஒரு ரோட்டோர டீக்கடையில் பிஸ்கட்டை கடித்துக் கொண்டு டீயை குடிக்கும் போதுதான் கொஞ்சம் உயிர் வந்தது.

O

நான் சிறுவயதில் ஒரளவு வறுமையில் வாடியவன்தான் என்றாலும் தீவிரமான பசியுடன் சில வேளைகளில் மட்டுமே இருக்க நேர்ந்தது. அந்த சில வேளைகளும் நானாகத் தேடிக் கொண்டதுதான். 15 வயதிருக்கும் போது, வீட்டில் உள்ளவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அந்த வயதிற்கேயுரிய அசட்டு வேகத்துடன் வெளியேறி, இரண்டு, மூன்று நாட்கள் ஒரு வேளை தேநீர் மட்டுமே பருகி பசியால் துடித்திருக்கிறேன். நண்பர்கள் உதவுவார்கள்தான் என்றாலும், ஏனோ அந்த சமயத்தில் கால் போன போக்கில் போகத் தோன்றியது.

வெற்றிகரமான நான்காவது நாள் பசியுடன், ஏதோ ஒரு காய்கறி மார்க்கெட்டை கடக்கும் போது, ஒரு முழு சாத்துக்குடி பழம் கீழே கிடந்ததை காண முடிந்தது. கடந்து போனவர்கள் யாரும் அதை கவனிக்கவில்லை. யாராவது தவறுதலாக விட்டுவிட்டார்கள் போலிருக்கிறது என்று எண்ணினேன். பசியை உக்கிரமாக உணர்ந்த அந்த கணத்தில் வெட்கத்தை எல்லாம் உதறிவிட்டு, சுற்றும் முற்றும் யாராவது பார்க்கிறார்களா என்று நோட்டம் விட்டுவிட்டு சடக்கென்று அதை எடுத்த வேளையில் எங்கிருந்தோ நமுட்டுச் சிரிப்பு சத்தம் கேட்டது.

எவன் என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும் என்று அருகிலிருந்த குழாயில் கழுவிவிட்டு (இன்னும் இரண்டுநாள் பசி நீடித்திருந்தால் இந்த ஆச்சாரம் கூட பறந்து போயிருக்கும்) தோலை உரிக்க முற்பட்ட போதுதான் அது முழுவதும் கெட்டுப்போன பழம் என்பதை அந்த அழுகின நெடி உணர்த்தியது. பின்னால் யாரோ நமுட்டுச்சிரிப்பு சிரித்த காரணத்தை உணர்ந்து கொள்ள முடிந்தது.

பின்னர் பசி பொறுக்க முடியாமல், திருட்டு பஸ் ஏறி வீடு சேர்ந்ததும், என்னைக் காணாமல் வீட்டில் உள்ளோர் துடித்துக் கொண்டிருந்ததை காண நேர்ந்ததும், என்னைக் காணாத துக்கத்தில் வீட்டில் சமையலே செய்யாத துக்கத்தில் இருந்ததால், அவசரமாக ஓட்டலில் இருந்து வாங்கி வந்த உணவை, நான்கு நாட்கள் உணவருந்தாத காரணத்தால், விழுங்க முடியாமல் அவஸ்தைப்பட்டதும் மிச்சகதை. அந்த வயசுக்குரிய முரட்டுத்தனத்தையும் மீறி குடும்பம் என்கிற அமைப்பின் மீது மரியாதையும், அன்பு நரம்புகளால் பிணைக்கப்பட்டுள்ளதையும் உணர முடிந்தது. மேலும், அந்த சமயத்தில்தான் என்னால் பசியின் கொடுமையையும், இதன்மூலம் பசியினால் அவதிப்படுகிற மற்றவர்களின் உணர்வையும் புரிந்துகொள்ள முடிந்தது.

இப்போது கூட, தெருக்களில் பிச்சையெடுப்பவர்களில், கைகால் இழந்த பிச்சைக்காரர்களை கூட அவசரத்தில் கவனிக்காமல் போகமுடிகிற எனக்கு, 'பசிக்குது' என்று முறையிடும் பிச்சைக்காரர்களை தாண்டிப் போக முடிவதில்லை.

இந்த கடைசிப்பத்தியை எழுதியதின் மூலம் இந்த வலைப்பதிவின் தலைப்பை நியாயப்படுத்தி விட்டேன் என்று நினைக்கிறேன். :-))

suresh kannan

Tuesday, December 07, 2004

இதுவரை வெளிவராத பாரதியின் படைப்புகள் கண்டுபிடிப்பு

மகாகவி பாரதியார் ஆங்கிலேய அரசை எதிர்த்து நடத்திய 'விஜயா' என்கிற மாலை நாளேட்டின் சில பிரதிகள் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீசில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய பாரதியார் 1909 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 1910 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை எட்டு மாத காலம் 'விஜயா' என்கிற தமிழ் மாலை நாளேட்டை பாண்டிச்சேரியிலிருந்து நடத்தினார். நான்கு பக்கம் கொண்டு இந்த நாளேட்டின் முதல் இதழ் கிருஷ்ண ஜெயந்தி அன்று வெளியானது. இந்த நாளிதழை நடத்தும் போது பாரதியாரின் வயது 28தான்.

ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் இந்த நாளிதழ் வெளிவரவில்லை. மொத்தம் 160 நாட்கள் இந்த நாளிதழ் வெளியிடப்பட்டுள்ளது. நாளிதழின் பெயர் தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மேலே சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற வார்த்தைகள் தமிழிலும், பிரெஞ்சு மொழியிலும் அச்சிடப்பட்டுள்ளது. முதல் பக்கத்திலும், நான்காம் பக்கத்திலும் விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளன. இரண்டாம் பக்கத்தில் தலையங்கமும், கட்டுரையும் காணப்படுகிறது. மூன்றாம் பக்கத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக பாரதிக்கேயுரிய நடையில் அமைந்த செய்திகள் இடம் பெற்றன.

'விஜயா' நாளேட்டை பாரதியார் நடத்தினார் என்பது தெரிந்த போதிலும், முழுமையான நாளிதழின் பிரதிகள் கைக்கு கிடைக்காமல் இருந்தது. சில பகுதிகள் மட்டுமே கிடைத்து, அவை பாண்டிச்சேரியில் உள்ள அரசு அருங்காட்சியகம் மற்றும் பாரதி நினைவகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. பாரதியாரின் படைப்புகள் குறித்து ஆய்வு செய்து வரும் சென்னை மேம்பாட்டு கல்வி நிறுவன இணை பேராசிரியர் ஏ.ஆர். வேங்கடாசலபதி மேற்கொண்ட தீவர முயற்சியின் விளைவாக இந்த பிரதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 160 நாட்கள் வெளியான இந்த நாளிதழின் 20 நாட்களுக்கான பிரதிகள் மட்டுமே மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நாளிதழின் தொகுப்புகள் விரைவில் காலச்சுவடு வெளியீடாக வரவிருக்கிறது. மற்ற பிரதிகளும் கிடைக்கும் பட்சத்தில் பாரதியின் போராட்ட ஆளுமையை இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ள இயலும்.

O

பல அரிய சங்க நூல்களை அரும்பாடுபட்டு தேடியளித்த உ.வே.சாவைப் போல சலபதியின் இந்த சீரிய முயற்சி பாராட்டத்தக்கது. காலச்சுவடு வெளியிட்டுள்ள புதுமைப்பித்தன் கட்டுரைகளின் மொத்த தொகுப்பாக வந்துள்ள நூலின் அவர் எழுதியிருக்கும் முன்னுரையின் மூலமும் அவர் பட்டிருக்கிற சிரமங்கள் தெரியவருகிறது. உதாரணமாக புதுமைப்பித்தனின் கட்டுரை ஏதாவது கிடைக்குமா என்று அவர் இலங்கையிலுள்ள வீரகேசரி அலுவலகத்திற்கு சென்று பழைய இதழ்களை இரண்டு நாட்கள் ஆராய்ந்துள்ளார். எதுவுமில்லை என்று அறிந்தவுடன் அவர் சோர்வையடையவில்லை. இங்கு எந்த பழைய கட்டுரைகளும் இல்லை என்று நிச்சயித்துக் கொண்டதால் மனமகிழ்ச்சியே ஏற்பட்டிருக்கிறது என்கிறிருக்கிறார்.

suresh kannan

Monday, December 06, 2004

ஒரு மென்மையான திரைப்படம்

ஒரு ஏகாந்தமான மனநிலையில், வீட்டின் யாருமற்ற தனிமையில், திரைப்படம் ஒன்றை பார்க்க நேரிட்டது.

இருங்கள்... நீங்கள் பாட்டுக்கு நீலக்கலரில் உள்ள படங்களை அர்த்தம் செய்துக் கொள்ளப் போகிறீர்கள்.

அது மணிரத்னம் இயக்கிய மெளனராகம்.

எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத அந்தப் படத்தை, அதன் சாமர்த்தியமான திரைக்கதைக்காகவும், இளையராஜாவின் பிரமிக்க வைக்கும் பின்னணி இசை மற்றும் பாடல்களுக்காகவும் மீண்டுமொரு முறை பார்த்தேன். இத்தனைக்கும் இது மணியின் இரண்டாவது படம். மேலும் அவர் எந்த இயக்குநரிடம் உதவியாளராக கூட இருந்ததில்லை. ஆனால் இந்தப் படத்தின் எந்தவொரு இயக்குநரின் பாணியின் சாயலுமில்லாத காரணத்திற்கு அதுவே ஒரு காரணமாயிருந்திருக்கும் என்று யூகிக்கிறேன். வழக்கம் போல், இது ஒரு ஆலிவுட் படத்தின் தழுவல் என்று குற்றஞ்சாட்டுவோரும் உண்டு.

O

இன்றைய தமிழ்ப்பட கதாநாயகிகளின் உடைகள் போல கதை சின்னதுதான். ஏற்கெனவே காதலித்தவனை, அவன் இறந்து போன நிலையிலும் மறக்க முடியாமல் மனதில் சுமந்திருப்பவள், தன்னை திருமணம் செய்து கொண்டவனை முதலில் ஏற்க மறுப்பதும், பின்பு மெல்ல மனசு மாறுவதும்தான் கதை.
முக்கியமான இரண்டே (மோகன், ரேவதி) கதாபாத்திரங்களை வைத்து, சுவாரசியமாக தமிழில் திரைக்கதை அமைப்பது சிரமமான விஷயம். அந்த இரண்டு பாத்திரங்களுக்கு மிகப் பொருத்தமானவர்களை அமைத்தது, இயக்குநரின் தீர்க்க தரிசனத்தை காட்டுகிறது. ரேவதியின் சிறுவயது புகைப்படங்களோடு படத்தை தொடங்கியது, நல்லதொரு தொடக்கமாக இருக்கிறது.

ஆனால் மிக குறும்புத்தனமான பெண்ணாக ரேவதி காட்டப்படும் போது, அவளின் உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது என்றாலும், தன்னைக்காதலித்தவன் காவல் துறையினரால் கொலை செய்யப்பட்டதை பார்த்த பெண்ணால் இவ்வளவு உற்சாகமாக இருக்க முடியுமா என்ற கேள்வியையும் தவிர்க்க இயலவில்லை. என்றாலும் கல்லூரிப் பெண்ணாக நடிக்கும் போது உற்சாகத்தையும், திருமணமான பிறகு சோகத்தையும், பின்னர் ஏற்படும் மாற்றங்களையும் தன் சிறப்பான முகபாவங்களால் வெளிப்படுத்தியிருந்தார் ரேவதி.

அடுத்து மோகன். 'இவ்வளவு பெருந்தன்மையான புருஷன் மாதிரி தனக்கும் அமைய வேண்டும்' என்று ஒவ்வொரு பெண்ணும் ஆசைப்படுகிறமாதிரியான ஒரு கதாபாத்திரம். பொதுவாகவே மோகனை எனக்குப் பிடிக்கும். மென்மையான, இயலாமையுடன் கூடிய அசட்டுத்தனமான மிடில்கிளாஸ் கதாநாயகன் என்றால் அவரை நம்பிப் போடலாம். இந்தப் படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருப்பதுடன், அந்த வெள்ளை சுரிதார் உடையும் அவருக்கு மிகப் பாந்தமாக பொருந்தியிருக்கிறது.

மிக முக்கியமான சிறப்பம்சமாக குறிப்பிட வேண்டியது இளையராஜாவின் இசை. ஒரு நல்ல இசையமைப்பாளருக்கு எங்கே பின்னணி இசை அமைக்க வேண்டும் என்பதை விட, எங்கே அமைக்காமல் மெளனமாக விட வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும். அது ராஜாவிற்கு தெளிவாகத் தெரிந்திருக்கிறது. பல இடங்களில் காட்சிகளுடன் இழையும் அவரின் இசை பார்வையாளனின் மனதை வருடுகிறது. தமிழின் மெலடி பாட்டுக்களின் வரிசையில் 'நிலாவே வா' என்றும் இருக்கும்.

இதன் ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம். இருட்டில் படமெடுப்பவர் என்று மணியின் மீது ஒரு பொதுவான குற்றச்சாட்டு உண்டு. அஞ்சலியில், மதுஅம்பாட்டின் ஒளிப்பதிவின் மூலம் சில காட்சிகளில் இருண்மை அதிகமிருக்கிறதென்றால், அந்த மனவளர்ச்சியற்ற குழந்தையும் முகபாவங்களுக்கு அந்த லைட்டிங்தான் சிறப்பாக இருந்திருக்கும் என்பதை அவர் யூகித்திருக்க வேண்டும். கற்பனை செய்து பாருங்கள். பல்லாயிரக்கணக்கான வாட்ஸ் திறனுடைய விளக்கொளியில் ஒரு இரண்டரை வயது குழந்தையை மனவளர்ச்சியற்ற குழந்தையாக காட்ட முடியுமா?

என்னைப் பொருத்தவரைக்கும் ஒளிப்பதிவில் ஒரு புதிய பாணியையே கையாண்டவர் ஸ்ரீராம். இயக்குநரின் புதுமையான சிந்தனையும், ஒத்துழைப்பும் இல்லாமல் அது சாத்தியமாகியிருக்காது. ஆக்ராவில் தாஜ்மகாலை பார்வையாளருக்கு எதிர்பாராத ஒரு கணத்தில், கோணத்தில் இவர் அறிமுகப்படுத்தும் போது ரேவதியைப் போலவே நாமும் அந்தப் பிரமிப்பில் அயர்ந்து போய் உட்கார்ந்து விடுகிறோம்.

O

இந்தப்படத்தின் வசனகர்த்தா மணிரத்னத்தையும் நான் மிக ரசித்தேன். மிக கூர்மையான, அதே சமயத்தில் நாடகத்தனமில்லாத மிக இயல்பான வசனங்கள்.

நினைவில் இருந்து சில:

(ஆரம்பத்தில் ரேவதியை பெண் பார்த்துவிட்டு மாப்பிள்ளை வீட்டார் சென்று விட்ட பிறகு)

எனக்கு கல்யாணம் வேணாம். நான் படிக்கணும்.

சின்னக்குழந்த மாதிரி பேசாதம்மா.

அப்ப என்ன சின்னக்குழந்த மாதிரி நடத்தாதீங்க

(திருமணமாகி விட்டு டெல்லியில் மோகன் வீட்டில் முதல் உரையாடல்)

இது செங்கல்யும் சிமெண்ட்டினாலும் கட்டப்பட்ட ஒரு இடம். அவ்வளவுதான். இத வீடா மாத்த வேண்டியது உன் கிட்டதான் இருக்கு

எனக்கு சிமெண்ட்டும் செங்கல்லும் போதும்.

(கார்த்திக் ரேவதியிடம்)

உனக்குப் பயம். என் மேல பயம். எங்க என் அழகில மயங்கிடுவியோன்னு பயம்.

அதெல்லாம் கிடையாது.

அப்ப நிரூபி

எப்படி?

என்கூட ஒரு கப் காப்பி சாப்பிடு

O

வி.கே.ராமசாமி சம்பந்தப்பட்ட அந்த அசட்டு காமெடி காட்சிகளை நீக்கிவிட்டால் இது எங்கள் தமிழ்ப்படம் எந்த சர்வதேச அரங்கிலும் தைரியமாக திரையிடலாம் என்றே தோன்றுகிறது. இது திரைப்படமாக வெளியாகி வெற்றிகரமாக ஓடியும், சில பல முறைகள் தொலைக்காட்சிகளில் திரையிடப்பட்டும் கூட, சமீபத்தில் இது சென்னை பிலிம் சேம்பரில் திரையிடப்பட்ட போது நூற்றுக்கணக்கானவர்கள் அமைதியாக உட்கார்ந்து ரசித்ததே இந்தப்படத்தின் சாகாவரத்திற்கு சாட்சி.

தமிழ்ச்சினிமா தொடங்கி இதுவரை ஆயிரக்கணக்கான திரைபடங்கள் வெளியாகியும் கூட, இதுபோன்ற மென்மையான, தரமான திரைப்படங்கள் எவை என்று பட்டியலிட்டால், அது சொற்ப அளவிலே இருப்பது வருத்தத்துக்குரியது.



suresh kannan

வலைப்பதிவர்கள் சந்திப்பு

அண்மையில் நேசமுடன் வெங்கடேஷ் வலைப்பதிவில் நடிகர் கமல்ஹாசனைப் பற்றின கட்டுரை ஒன்றிற்கு வந்திருந்த பின்னூட்டங்கள் என்னை முகஞ்சுளிக்க வைத்தன. நண்பர்கள் கிட்டத்தட்ட ஒரு குழாயடிச் சண்டையையே போட்டிருந்தார்கள். இன்று சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்திய திரைப்பட படைப்பாளிகள் சொற்பமானவர்களே. அதில் மணிரத்னமும் கமலஹாசனும் முக்கியமானவர்கள். அவரின் நடிப்புத்திறனையும், நாயகன் முதல் அவர் எடுத்திருக்கிற பல பரிமாணங்களையும் பற்றி விவாதித்திருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும். அதைவிட்டு அவர் சட்டைக்குள் பூணூல் தெரிகிறதாவென்று ஆராய்ந்திருப்பது தேவையற்றது.

இன்றைக்கு இணையத்தின் மூலம் நான் பல நண்பர்களை பெற்றிருக்கிறேன். மடற்குழுக்களில் அவர்களிடம் என் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளவதும் ஆரோக்கியமான விவாதங்களை எடுத்துச் செல்வதும் இணையம் மூலமாகத்தான் சாத்தியமாகியிருக்கிறது.

ஆனால் இதற்கு முன்னர் என் நிலைமையே வேறு.
கிட்டத்தட்ட பதினைந்து காலமாக, நான் படித்ததையும், என் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளவும், என் அலைவரிசையிலேயே இயங்குகிற நண்பர்களை தேடிப் போய் தோற்றிருக்கிறேன். பியர் சாப்பிடுவதும், ஷகீலா படங்களுக்கு போவதும், படிக்கிறதென்று பார்த்தால் மிஞ்சிப்போனால் குழுதம் பத்திரிகை படிக்கிற நண்பர்களையே நான் பெற்றிருந்தேன். ஜெயகாந்தனைப் பற்றி பேசலாம் என்றால், "ஜெயலலிதாவைப் பற்றி வேண்டுமானால் பேசலாம். இல்லன்னா நீ இடத்தக் காலி பண்ணு" என்கிறவர்களே துரதிர்ஷ்டவசமாக என் நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களை மட்டும் சொல்லி மட்டும் குற்றமில்லை. அதற்கு முன்னால் நானும் அவர்களில் ஒருவனாகவே இருந்திருக்கிறேன். எனவே அவர்களின் நிறை, குறைகளை தாண்டியே அவர்களை நான் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிருந்தது.

O

இணையம் மூலம் பல நண்பர்களைப் பெற்றபின் என் வாசிப்பு அனுபவம் கூடியிருக்கிறது. நண்பர்களின் விவாதங்களின் மூலம் பல படைப்புகளும், படைப்பாளிகளும் எனக்கு அறிமுகமாயிருக்கின்றார்கள். "பரிட்சைக்கு கூட இப்படி படிச்சிருக்க மாட்டீங்க போலிருக்கே?" என்று என் மனைவி என்னை கிண்டல் செய்யுமளவிற்கு தீவிரமாக படிக்கவாரம்பித்திருக்கின்றேன். என்னுள் இருந்த குறுகிய உலகம் விரிந்து பல ஜன்னல்கள் திறந்து கொண்டன. இன்று ஒரு சக மனிதனை எந்தவித அடையாளங்களுமின்றி ஒரு பரந்துபட்ட பார்வையில் பார்க்க கற்றுத்தந்தவை புத்தகங்களே.

எனவே இவ்வாறான ஒரு புனிதமான அனுபவத்தை வழங்குகிற இணையத்தில் நாம் ஏன் வீண் சர்ச்சைகளில் இறங்கி நம்மை பாழ்படுத்திக் கொள்ள வேண்டும்?

இதைத்தவிர்க்க எனக்கொரு யோசனை தோன்றுகிறது. ஒருவருக்கொருவர் நேரடி தொடர்பு இல்லாததும், புரிதல் இல்லாததும்தான் இதற்கெல்லாம் காரணம் என்று யூகிக்கிறேன். இணையத்திற்கு வந்த புதிதில் சிலரின் எழுத்துக்களை படித்து நான் அவர்களைப் பற்றி என்னுள் உருவாக்கி வைத்திருந்த எதிர்மறையான பிமபங்கள், நான் அவர்களை நான் நேரில் சந்தித்தபிறகு இடம் வலமாக மாறிப் போயிற்று. இவர்களையா நாம் தவறாகப் புரிந்து கொண்டிருந்தோம் என்கிற குற்ற உணர்ச்சி ஏற்படலாயிற்று.

எனவே இவ்வாறான தனிமனித குரோத ஆபத்தை தவிர்க்க, எல்லா வலைப்பதிவர்களும், மடற்குழுவர்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் (மாதமொருமுறையோ, இரண்டு மாதங்களுக்கொரு முறையோ) நேரில் சந்தித்து விவாதித்தால் நட்புணர்ச்சி பலப்படும் என நான் உறுதியாகவே நம்புகிறேன். அந்தந்த நகரங்களில் இருப்பவர்கள் அனைவரும் சந்தித்து இந்த ஏற்பாட்டை செய்து கொள்ளலாம். வருடமொருமுறை எல்லா வலைப்பதிவர்களும் ஒரு பொதுவான இடத்தை தேர்ந்தெடுத்து அங்கே ஒரு சந்திப்பு விழா எடுக்கலாம். இதற்காகின்ற செலவை அனைவருமே பகிர்ந்து கொள்ளலாம்.

மரத்தடி குழுமத்தில், பெங்களுரில் இருக்கின்ற உறுப்பினர்கள் இவ்வாறு சந்திக்கின்றார்கள் என்று அவர்களின் மடல்களின் மூலம் நான் யூகிக்கின்றேன். ஒருவரின் தனிப்பட்ட குணநலன்களை புரிந்து கொள்ள இயலுவதால், விவாதங்களின் போது கூட எதிரான கருத்துக்களை தனிமனித கோபமில்லாமல் மென்மையாக சொல்ல முடிகிறது. (இந்த மாதிரி ஏற்கெனவே பலர் செய்துக் கொண்டிருக்கும் அல்லது முயன்றிருக்கும் பட்சத்தில் இன்னும் இதை விரிவுபடுத்தலாம் என்பதே என் யோசனை)

இப்போதுதான் வலைப்பதிவு உலகிற்குள் நுழைந்திருக்கிறேன். ஆனால் நீண்ட நாட்களாக இந்த மாதிரியான பின்னூட்ட போர்களை கவலையோடு கவனிப்பதால் ஏற்பட்ட ஆதங்கத்தினால் இதைப் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது. இது சரியா அல்லது நடைமுறையில் சாத்தியமா என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. ஆனால் முயன்றால் எதுவும் சாத்தியமே.

உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

suresh kannan

Sunday, December 05, 2004

எனக்குப் பிடித்த சிறுகதைகள்

சிறுகதை என்கிற இலக்கிய வடிவம் நமக்கு மேற்கிலிருந்து கிடைத்தாலும், இன்று அதனுடைய பங்கு தமிழ் இலக்கியத்தில் ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. சிறுகதை இல்லாத தமிழ் இலக்கியத்தை நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.

சரி. சிறுகதையின் வரையறைதான் என்ன?

ஒரு நிகழ்வு அல்லது துணுக்குச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு நறுக்குத் தெரித்த மாதிரியான விவரிப்பில் ஒரு உச்சத்தைத் தொட்டு, சில நூறுகளிலிருந்து சுமார் எட்டாயிரம் வார்த்தைகள் வரை எழுதப்படும் உரைநடைதான் சிறுகதை. கையாளும் கருப்பொருளோடு தேவையான உணர்ச்சிகளை இரண்டு, மூன்று நிகழ்ச்சிகளில் சித்தரித்து, கருவுக்கு ஏற்ற விதத்தில் உச்சத்தைப் பளீரென்றோ அல்லது பூடகமாக மென்மையாகவோ எழுதி சிறுகதையை முடிப்பது - பல வருஷங்களாக எல்லா நாட்டுப் படைப்பாளிகளாலும் பின்பற்றப்பட்டு வரும் ஒரு வழக்கம்.

என்று சொல்லப்படுகிறது.

அல்லது

ஆரம்பம், முடிவு, உச்சம் என்ற எதுவும் அறுதியிடப்படாமல், ஏன்.. எந்தக் குறிப்பிட்ட நிகழ்வும் கூட இல்லாமல், ஒரு சிறந்த சிறுகதை சாத்தியம்தான்

என்றும் சொல்லப்படுகிறது.

இதில் நான் இரண்டாவது கட்சி.

O

தமிழின் முதல் சிறுகதை, வ.வே.சு ஐயர் எழுதிய (1915) குளத்தங்கரை அரசமரம் என்று சொல்லப்படுகிறது. அதிலிருந்து புதுமைப்பித்தன், கு.ப.ரா, தி.ஐ¡னகிராமன், அசோகமித்திரன், லா.ச.ரா., சா.கந்தசாமி, ¦ஐயகாந்தன், ஆதவன், சுஜாதா, நாஞ்சில் நாடன், பிரபஞ்சன், பூமணி, வண்ணதாசன், வண்ணநிலவன், ஜெயந்தன், இந்திரா பார்த்தசாரதி, பாலகுமாரன், மாலன், இரா.முருகன், எஸ்.ராமகிருஷ்ணன், கோபி கிருஷ்ணன், இன்றைய படைப்பாளிகளான அழகிய பெரியவன், பெருமாள் முருகன், ஜே.பி. சாணக்யா, ஆதவன் தீட்சண்யா போன்ற பல இலக்கிய ஜாம்பவான்களால் சிறுகதை என்கிற தேர் மெல்ல மெல்ல இழுத்து வரப்பட்டிருக்கிறது.

இதில் எனக்குப் பிடித்த சிறுகதைகளைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் 'எனக்குப் பிடித்த சிறுகதைகள்' என்கிறதொரு தொடர் எழுதலாமென்றிருக்கிறேன்.

இதில் படைப்பாளிகளின் எந்த கால, தர வரிசையோ இருக்காது. மூத்த படைப்பாளியா, இளைய படைப்பாளியா, பிரசுரமானது சிற்றிதழ்களிலா, வெகுஜன இதழ்களிலா? இணையத்தளங்களிலா என்கிற எந்த பாகுபாடும் கிடையாது. எனக்குப் பிடித்த சிறுகதை என்கிற ஒரே தகுதிதான்.

இது உங்களுக்குப் பயனுள்ளதாகவும், சுவாரசியமானதாகவுமிருக்கும் என நம்புகிறேன். காத்திருங்கள்.

suresh kannan